ஊர்கூடி என்னதான் ஒப்பாரி வைத்தாலும், தமிழினம் செத்தழிந்து மண்ணோடு மண்ணாகிப்போனாலும் தாய்மார் தாலியறுந்து சடைவிரித்துச்சன்னதமாடினாலும், குட்டிச்சுவரில் கழுதை கட்டுச்சோறு தின்றகதையாக, தமிழர் விடுதலைக்கூட்டணியிடமிருந்து, மன்னிக்கவும் தமிழர் தேசியக்கூட்டமைப்பிடமிருந்து ஈழத்தமிழினம் கௌரவமான அரசியலை அதாவது யதார்த்தமான மானம் மரியாதையுள்ள கௌரவமான அரசியலை எதிர்பார்க்க முடியாது என்பது சம்பந்தர் ஐயா மீண்டுமொருமுறை நிரூபித்துக்காட்டிருக்கிறார்,

வன்னியில் முள்ளிவாய்க்காலில், ஈழத்தமிழினத்திற்கும் தமிழீழக்கனவுக்கும். சுயநலத்தின்பால் தன் குடும்பநலனுக்காக வரலாற்றுத்தவறிழைத்து சங்கூதி சாவுமணியடித்த கருணாநிதியை, கௌரவிப்பதற்காக தமிழர் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள். தமிழினத்தின் மோசமான துரோகசக்தியான கருணாநிதியின் வீட்டுக்குச்சென்று தன்மானமிழந்து கருணாநிதியின் கால்களில் விழுந்து வணங்கி ஆசிபெற்றதாக 26,09,2010 அன்று ஒரு செய்தி வெளியாகியிருந்தது, ஈழத்தமிழர்களுக்கும், மானமுள்ள தாய்த்தமிழகமக்களுக்கும், தேசியத்தலைமையின் கொள்கைக்கும், சேர்த்து தமிழர் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் எனச்சொல்லப்படும் சம்பந்தன் சேற்றுடன் கரியும் சேர்த்து பூசி அசிங்கப்படுத்தி வைத்திருக்கிறார்,

கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா. சம்பந்தன் தமிழக முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது அவரது மனைவி லீலாதேவி, மகன் செந்தூரன் ஆகியோர் உடனிருந்தனர். என்றும் செய்தி கூறுகிறது,

கொலைக்களத்திலிருந்து தெய்வாதீனமாக உயிர்தப்பி இன்று நடைப்பிணங்களாக வன்னியில் வாழும் ஈழத்தமிழர்களாலும். போரின்போது உயிர்தப்புவதற்காக நாட்டை விட்டோடி உலகம் முழுவதும் பரந்து அகதிகளாக வாழும் புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தாலும். ஈழ இன அழிப்புப்போரின்போது இந்திய மத்திய அரசுடன் சேர்ந்து. ஈழத்தமிழினத்தை அழிக்க கண்மூடித்தனமாக கருணாநிதி உதவிபுரிந்தார் என நேரடியாக குற்றஞ்சாட்டப்படும் தருணத்தில், மரியாதை நிமித்தம் சந்தித்தேன் என சம்பந்தர் கூறியிருப்பது பெருத்த கேள்வியை தமிழ்ச்சமூகத்தில் தோற்றுவித்துள்ளது,

கருணாநிதியுடனான சந்திப்பில் இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம்?, ஈழத்தமிழர்கள் விடயத்தில் மகிந்த அரசு கடைப்பிடிக்கும் போக்கு?, இலங்கையில் தமிழர்களின் அரசியல் இருப்பு? போன்ற பல விடயங்கள் குறித்து சம்பந்தன் பேசினார் ? என்று தெரிவிக்கப்படுகிறது.
நாடு திரும்பியதும் கருணாநிதியுடனான சந்திப்பு குறித்து தனது கட்சியினருடன் இரா. சம்பந்தன் விரிவாக பேசுவார் என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. என்றும் செய்தி குறிப்பிடுகிறது.

இதுதான் தமிழினத்தை திடுக்கிடவைத்திருக்கும்பேரிடியான அவமானச்செய்தியாகும், படுகொலைப்போர் முடிந்தபின் சோனியா+ மஹிந்த + கருணாநிதியின் தந்திர நிகட்சிநிரலின் திட்டப்படி. வன்னித்தடை முகாம்களுக்கு பயணஞ்செய்த தி மு க தலைமையிலான டி.ஆர். பாலு , கனிமொழி, திருமாவளவன், குழுவினர். மக்கள் வன்னியில் இராணுவக்கம்பிவேலிக்குள் மிகவும் சந்தோசமாக வாழுவதாக வெளியுலகுக்கு கூச்சமின்றி கூறியிருந்தனர், இதன்பின்னரும் பல பேச்சுவார்த்தைகள் கொடுக்கல் வாங்கல்கள் என்றெல்லாம் பேசப்பட்டது, ஆனால் வன்னியில் மக்களுக்கு உலக உதவித்திட்டத்தின் மூலம் சிங்களவனால் கொடுக்கப்பட்ட சில தளவாடங்களும் விதைநெல்லும், இந்தியாவால் கொடுக்கப்பட்ட ஐந்து கூரைத்தகரங்களும், தவிர வேறு எந்தப்பெரியபலனும் கிடைத்ததக இதுவரை செய்தியில்லை. கூட்டமைப்பினரின் அறிக்கைகள் மட்டும் ஒவ்வொரு எம்பி க்கள்மூலம் தனித்தனியாக பிரசவமாகிக்கொண்டிருக்கிறது.

சம்பந்தன் நாடு திரும்பியதும் விரிவாக எதை தமிழினத்துக்கு ஒப்புக்கொடுக்கப்போகிறார்? இற்றைக்கு 60ஆண்டுகளாக (இந்திய) தமிழ்நாட்டு சுயநல அரசியல்ச்சாக்கடைக்குள் அமிழ்ந்து கிடக்கும் அழுக்குத்தவளை கருணாநிதிபற்றி இனித்தான் தமிழர்களுக்கு விலாவாரியாக விரிவாக சம்பந்தன் புட்டு வைக்கப்போகிறாரா. கடந்தகாலங்களில் உலக மஹாக்கலைஞர்களால் சிந்திக்கக்கூட முடியாத கொடூர கபடவஞ்சக நாடக காட்சிகளை மக்கள்முன் விரித்து கருணாநிதி ஆடிய அட்டூழியத்தை புறந்தள்ளிவிட்டு. புதிய அத்தியாயத்தைப்பற்றி முன்னோட்டம் செய்யப்போகிறாரா,

இன்றைய நிலையில் சிங்கள ராஜபக்க்ஷ குடும்பத்துடன் மல்லுக்கட்டி சொற்பசலுகைகள் பெறுவதே குதிரைக்கொம்பு என்பது உலகமறிந்தவிடயம். இது தமிழினத்திற்கு தெரியாத ஒன்றல்ல, புதிதான உபாயங்களை தேடிச்சிந்திக்க வேண்டிய நிலையில்த்தான் தமிழினமும் தமிழர்களின் அரசியலும் இருக்கின்றது என்பதும் பாவப்பட்டுப்போன தமிழினம் அறியாததுமல்ல, ஆனால் மோசமான துரோகவித்தான கருணாநிதியின் வரப்போகும் தேர்தல் வெற்றிக்கு வலுச்சேர்க்க சம்பந்தர் வரிந்துகட்டி ஈழத்தின்மேல் நடத்தப்பட்ட அழிவை ஒருவினாடிக்குள் மறந்து சோரம்போயிருப்பது சம்பந்தரின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் என்பதை வருங்காலங்களில் தமிழர் தேசியக்கூட்டமைப்பு உணரவேண்டியிருக்கும்,

உதாரணத்துக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமான எவ்வளவோ உறுதிமிக்க தமிழர் இருந்தும். தேசியக்கூட்டமைப்பிலுள்ள ஒருசிலரின் தன்னிச்சையான முடிவால். ஒரு சிங்களவரான பொடிஹப்புஹாமி பியசேன, வுக்கு இடங்கொடுக்கப்போய். இன்று தேசியக்கூட்டமைப்பினுள் இன்னும் உடைவுகளை கட்சி எதிர்நோக்கியுள்ளதாக செய்திகள் கசிகின்றன, உறுதியான தமிழ்ப்பற்றளர்களான சிவாஜிலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரின் வெளியேற்றத்திற்கு கட்சிக்குள் உள்ள ஒருசிலரின் ஒத்துப்போகததன்மையே காரணமாகவிருந்திருக்கிறது, இந்நிலைதொடருமானால் ஆனந்தசங்கரியின் கூட்டணியின் நிலை கூட்டமைப்புக்கும் ஏற்படும் என்பதில் தமிழனுக்குச்சந்தேகமில்லை,

வேடதாரி கருணாநிதி தனது அரசியல் இருப்புக்காக எதுவும் செய்யக்கூடியவர் என்பது தமிழுலகம் அறியும், அவரது அரசியல் வரலாற்றில் ஜெயலலிதா தவிர எவரதுகாலிலும் வீழ்ந்து காரியம்பெற கருணாநிதி பின்னின்றதில்லை. அணுகமுடியாத ஒரே இடம் ஜெயலலிதாவின் காலடிதான் என்பதால் கருணாநிதி புறந்தள்ளுவதுபோல் காட்டிக்கொள்ளும் ஒரே ஒரு நபரின் இருப்பிடம் போயஸ் தோட்டம்,

ஈழத்தமிழ்ச்சமூகத்திற்கு அவலத்தையும் அனீதியையும் தொடர்ந்து தோற்றுவித்துக்கொண்டிருக்கும். காட்டு விலங்கையொத்த, படு மரத்தையொத்த மனம்படைத்த கருணாநிதியை. சம்பந்தர் மரியாதை நிமித்தம் சந்திப்பை ஏற்படுத்தி கௌரவித்திருப்பது. பகிரங்கமாக கருணாநிதியின் கடந்தகால ஈழத்தமிழின அழிப்பை சம்பந்தன் மற்றும் தமிழர் தேசியக்கூட்டமைப்பு சரியென்று ஆமோதிப்பது போல் ஆகிவிட்டிருக்கிறது,

மூத்த அரசியல்வாதியான சம்பந்தர் ஒருவினாடியேனும் சிந்தித்துச்செயற்பட்டிருக்க வேண்டாமா?? அல்லது முள்ளிவாய்க்கால் மூலைக்குள் தினந்தினம் கருணாநிதியும் கூட்டாளிகளும்சேர்ந்து கொன்றுகுவித்த என் தமிழினத்தின் அவலக்குரலையும் சவக்கும்பிகளையும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட்டாரா?? இதற்காகத்தான் முப்பது வருட தியாக வேள்வியில் இளங்குருத்துக்கள் காவுகொடுக்கப்பட்டதா?? , சம்பந்தரின் குடும்பம் தொடர்ந்து சென்னையில் வசிக்கவேண்டும் என்பதற்காக. எல்லாவற்றையும் விலைபேசி விற்றிவிட முடியுமா??, இந்தக்கொடுமைகளை மறந்து கருணாநிதியின் வீட்டில் விருந்துண்டு மரியாதை தெரிவித்துவருவதற்கு ஈழத்தமிழர்களின் அரசியலை பயன்படுத்த சிறு கூச்சமாவது வேண்டாமா, இப்படிப்பட்ட கேள்விகள் ஈழத்தமிழர்மத்தியிலும் தமிழக தமிழர்மத்தியிலும் வெட்கத்தையும் வேதனையையும் உண்டுபண்ணியிருக்கிறது.

2009 பெப் ஆளுனர் மாளிகைமுன் தீக்குளித்து ஈகையான முத்துக்குமார் தொடங்கி 19 சுதேசிகள் அடுத்தடுத்து கருகியபோது, தாயகம் வாசலில் தமிழகத்து தாய்க்குலம் உண்ணா நோன்பிருந்து துவண்டபோது, கல்லூரி மாணவ இளைஞர்கள் வெகுண்டெழுந்து போராடித்துடித்து பொலிஸ் தடியடிமூலம் அடக்கப்பட்டபோது, வழக்கறிஞர்கள் கூட்டங்கூட்டமாக கொந்தளித்தபோது, அரசியல்க்கட்சிதலைவர்கள் தொண்டர்கள் உணர்ச்சி வசப்பட்டுத்துடித்தபோது, ஆள்த்தூக்கிச்சட்டங்களைப்பயன்படுத்தி. அவர்களை சிறைப்படுத்தியபோது, தமிழகம் பட்ட கொந்தளிப்பையும் உணர்வையும் கொச்சைப்படுத்திய கருணாநிதியை, மரியாதை நிமித்தம் சந்தித்ததாக கூறினால் மேற்சொன்ன தியாகங்களுக்கு காரணமான தமிழகத்து தமிழ்சமூக உறவுகளை கொச்சைப்படுத்தி அவமரியாதை செய்வதாகத்தானே பொருள்,

அந்தமக்கள் துடித்த துடிப்பையெல்லாம் ஒரு நொடியில் மறந்து அவமானப்படுத்தியதாகத்தானே அவர்கள் நொந்து வேதனைப்படுவார்கள், இவற்றை ஒரு சராசரி தமிழனாகவேனும் மதிப்பிற்குரிய சம்பந்தன் ஐயா ஒருநிமிடம் சிந்தித்திருக்க வேண்டாமா, இவற்றை இராசதந்திரம் என்றும் அவர் கற்பிதம் கூறக்கூடும். ஆனால் இப்பெர்ப்பட்ட நடவடிக்கைகளை சோரம்போதல் என்றும் குறிப்பிடுகின்றனர்.

இன்றைக்கும் சம்பந்தன் ஐயாவைவிடவும் அதிகமாக உழைக்கக்கூடிய. சினிமாத்துறையில் தொடர்ந்து கோலோச்சக்கூடிய. மானத்தமிழன் இளைஞன் சீமான், அவர்கள் இன உணர்வுகாரணமாக ரோசம்காரணமாக ஈழத்தமிழனத்தின் எழுச்சிக்காக குரல் கொடுத்து, கொடுங்கோலரின் உண்மை முகம் தமிழகமக்கள் அறியக்காரணமாக இருந்துவிட்டானே என்ற காழ்ப்புணர்ச்சி காரணமாக. பொய் வழக்குப்போட்டு, ஆள்த்தூக்கிச்சட்டத்தின் மூலம் ஒருவருடத்திற்கு வெளிவரமுடியாதபடி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சீமான் அவர்களை அவமரியாதைக்குட்படுத்தி அவமானப்படுத்தியதாக ஆகாதா, இவற்றை சாதாரணமாகவேனும் சிந்திக்கலாகாதா,

2008 ல் இந்திய பொம்மைப்பிரதமரை கூட்டமைப்பினர் சந்திக்க முற்பட்டவேளை. கோபாலபுரம், மற்றும் ஆள்வார்ப்பேட்டை, CஈD நகர், கருணாநிதியின் வீடுகளின் கேற் வாசல்களில் கூட்டமைப்பினரை காக்கவைத்து திருப்பி அனுப்பியதுரோகம் நடந்தபோதும், பின் 2010 போர்முடிவுக்கு வந்து ஒருவருடத்தின் பின்னும் கருணாநிதியை சந்திக்கப்போனவர்களை "ஏன் இங்குவருகிறார்கள் என்னத்திற்கு வருகிறார்கள்'' என அவமானப்படுத்தி கரித்துக்கொட்டி கலைக்கப்பட்டதாக ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டிருந்தது, இவ்வளவு அவமானப்பட்டபின்னும். குறிப்பிட்ட கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கருணாநிதியின் காலை நக்குவதற்கு ஆர்வம் காட்டுகிறார்களென்றால். அவர்கள் அச்சுறுத்தப்படவேண்டும். அல்லது சொந்த இலாபம் ஏதாவது இருந்தாகவேண்டும்,

ஆனால், கருணாநிதியுடனான சந்திப்பில் இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம், ஈழத்தமிழர்கள் விடயத்தில் மகிந்த அரசு கடைப்பிடிக்கும் போக்கு, இலங்கையில் தமிழர்களின் அரசியல் இருப்பு. போன்ற பல விடயங்கள் குறித்து சம்பந்தன் பேசினார் என்ற நகைச்சுவையும் தெரிவிக்கப்படுகிறது. அங்குதான் தமிழன் மிகவும் அச்சத்துடன் சந்தேகப்படுகின்றான், ஏற்கெனவே சம்பந்தர் ஐயா அவர்களின் நடவடிக்கைகளில் அவரால் முன்னெடுக்கப்படும் அரசியலில் மக்கள் அவநம்பிக்கைகொண்டு அச்சப்பட்டுக்கொண்டிருக்கும் இந்தத்தருணத்தில். மூன்றாம் கிட்லர் கருணாந்தியை சந்தித்திருப்பது. பலத்த சந்தேகங்களையும் ஐயத்தையும் கிளப்பிவிட்டிருக்கிறது, பணம் பொருள் ஏதாவதற்கு ஆசைப்பட்டு தடம்புரண்டுவிட்டாரா, குடும்பம் சென்னையில் குடியிருப்பதால் அச்சுறுத்தப்பட்டிருக்கிறாரா, என்பது புரியாத புதிராக இருக்கிறது,

இந்தியநாட்டில் சம்பந்தன் குடும்பம் தொடர்ந்து குடியிருந்து வருவதால். அவர் தனது தனிப்பட்ட (இருப்பு), குடியிருப்பு சம்பந்தமாக வேண்டுமானால் நட்பு ரீதியில் கருணாநிதியுடனோ, ஜெயலலிதாவிடமோ, சோனியாவிடமோ, பேசிவிட்டுப்போகட்டும். என்றும் விட்டுவிடமுடியாது, அவர் தமிழர்களுக்கான தனது பொறுப்பை களைந்துவிட்டு வேண்டுமானால் அவர்களுடன் கூட்டாகக்குடியிருக்கலாம், அதன்பின் அவரது தனிப்பட்ட விடயங்களில் பொதுவானவர்கள் தலையிடுவது நாகரீகமற்றது என்பதும் தமிழனுக்குத்தெரியும்,

மூத்த அரசியல்வாதி என்பதினாலும். வயதில் மூத்தவர் என்பதாலும். தேசியத்தலைவர் அவர்கள் சம்பந்தன் அவர்களுக்கு முதல் மரியாதை கொடுத்து கௌரவித்ததை தமிழர்சமுதாயம் ஏற்றுக்கொண்டிருந்தது,. ஆனாலும் சம்பந்தன் அவர்களது மந்தமான ஆளுமையற்ற அரசியல் நகர்வுகள்.சமையோசிதமாக முடிவெடுத்து நடந்துகொள்ளமுடியாத தன்மையும். பலரையும் அச்சப்படுத்தியிருந்ததை சம்பந்தர் அவர்களும் நன்கு அறிவார்,

இந்திய அரசியல்த்தலைவர்கள் பலர், பா ஜ க. தலைவர் அத்வானி அவர்கள் உட்பட, ஈழப்படுகொலையின் சூத்திரதாரியாக கருணாநிதியை பல இடங்களில் பலமுறை குற்றஞ்சாட்டியிருந்தனர், எதிர்க்கட்சித்தலைவி ஜெயலலிதா உட்பட தமிழ்நாட்டு அரசியல்த்தலைவர்கள் அனைவரும் குற்றஞ்சுமத்தியும் சோனியாவின் செல்லப்பிள்ளையான கருணாநிதி ஈழம் அழிந்து இல்லாமல்ப்போவதற்காக இன்றுவரை துரோகியாகவே இருந்துவருகிறார்,

அது மட்டுமல்லாமல் எம்மினத்தின்மீது மிகுந்த கரிசினைகொண்ட. மானத்தமிழரான மலேசிய நாட்டின் பினாங் மானிலத்தின் துணை முதல்வர், டொக்டர் பழனியப்பன் ராமசாமி, அவர்களும் கருணாநிதி ஈழக்கொலைகளில் சூத்திரதாரியென்றும், சிங்கள அரசாங்கத்துடன் இணைந்து படுமோசமான போர்க்குற்றத்தில் ஈடுபட்டாரென்றும். அதற்கான ஆதாரங்கள் தம்மிடமுள்ளதாகவும். அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் பலருடன் இணைந்து கருணாநிதியை குற்றவாளிக்கூண்டிலேற்றி விசாரணைக்குட்படுத்தப்போவதாகவும். அதற்காக ஒரு பிரத்தியேக குழுவை அமைத்திருப்பதாகவும். வெளிப்படையாக பல ஊடகங்களுக்குத்தெரிவித்திருந்தார், இவையெல்லாவற்றையும் அவமதிக்கும் இழி நடவடிக்கையாக சம்பந்தன் கருணாநிதி சந்திப்பு தமிழர் மத்தியில் வெட்கத்துடன் வெளிச்சமாகியிருக்கிறது,

இப்பேற்பட்ட கொலை குற்றவாளிப் பின்னணியைக்கொண்ட கருணாநிதிக்கு உடந்தையாக சம்பந்தரும். அவரது ''சகாக்கள் சிலரும்'' நெருக்கமான உறவை வைத்திருப்பது. தமிழ்ச்சமூகத்தை மீழமுடியாத சிக்கலுக்குள் தள்ளியிருக்கிறது, சிங்கள் ராஜபக்க்ஷதான் உலகம்முழுவதும் ஓடியோடி போர்க்குற்றத்தை திசை திருப்ப வினோதமான வேலைத்திட்டங்களில் ஈடுபடுகிறார்களென்றால். மறுபுறத்தே உள்ளேயும் துரோகங்கள் குடிகொண்டிருப்பது தமிழினத்தின் அரசியலை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது,

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டசபைத்தேர்தலை கணக்கில்க்கொண்டு. கருணாநிதி அவ்வப்போது தனது நிறத்தையும் பாத்திரத்தையும் ஆளாளுக்கு ஏற்றவாறு மாற்றி நடிக்க ஆரம்பிப்பது ஒன்றும் புதிதல்ல. சாகும்வரை தான் பதவியிலிருக்கவேண்டுமென்பதற்காகவும். தனது குடும்பத்தைவிட்டு தமிழ்நாடு கைநழுவிவிடக்கூடாதென்பதற்காகவும். எத்தகைய நாடகத்தையும் கருணாநிதி மேடையேற்றிக் கொண்டேயிருப்பார். அந்த நாடடக்காட்சிகளில் ஏமாறுவது ஏமாறாமல் புறந்தள்ளுவது இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் மக்களின் புரிதல் சம்பந்தப்பட்டது, கவனமாக இருக்காவிடில் காற்றுப்போன பையே மிஞ்சும்,

பொது வெளியீடு கனகதரன்,

நன்றி. ஈழதேசம் இணையம்,