Sunday, July 31, 2011

எதிர்காலம் வீர வரலாறுகளையும் மறப்பதில்லை; இனத் துரோகங்களையும் மறைப்பது இல்லை!‏

‘வீசப்படும் கணைகளைக் கேடயம்கொண்டு தடுப்பதா​லேயே… நம்மிடம் வில்லும் அம்பும் இல்லை என்று அர்த்தம் அல்ல. அவற்றைப் பயன்படுத்தாமல் இருந்துவிடப்போவதும் இல்லை.

வில்லுக்கும் அம்புக்கும் வேலை கொடுத்துத்தான் தீரவேண்டும் என்றால்… உடன்பிறப்பே! அப்போது நாம் கோழையாக இருக்கப்போவதில்லை!’ என்று ‘முரசொலி’யில் 14-1-74 அன்று கடிதம் தீட்டியவர் கலைஞர்.

‘அமைப்பு ரீதியான கழகம், ஆடை அணிந்துள்ள உடலைப்போல. அதில் ஆவி நிகர்த்தது கொள்கை. பதவி என்பது அணிகலன். அணிகலன் இன்றி வாழ முடியும். கொள்கை இல்லையேல், ஆவி இல்லை. ஆடை இல்லையேல், மானம் போகும்!’ என்று 6-1-76 முரசொலியில் பொருள் பொதிந்த விளக்கம் தந்த அரசியல் வித்தகர் கலைஞர் தமிழகத்தின் முதல்வராக இருந்தபோதுதான், ஈழத்தில் எம் தமிழர் கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டனர்; வாய் திறந்து சொல்ல​வோ, ஏடெடுத்து எழுதவோ முடியாத வன்கொடுமைகளுக்கு ஆளாகி அன்றாடம் அல்லலுற்று அலைக்கழிக்கப்பட்டனர். நம் இனத்தை ஈழத்தில் அழிக்க எல்லா வகையிலும் இலங்கை ராஜபக்ஷே சகோதரர்களுக்கு இந்திய அரசு வெளிப்படையாகத் துணை நின்றது. உலகம் முழுவதும் உருக்குலைந்து விழி நீர் வழிய நின்ற தமிழர்கள், ‘கலைஞரின் சாணக்கிய வியூகத்தால் போர் நிறுத்தம் ஏற்பட்டு, இன அழிவு தடுக்கப்பட்டுவிடும்!’ என்று நம்பிக்கையுடன் கோபாலபுரத்தின் திசை நோக்கித் தவம்கிடந்தனர். கலைஞரோ காந்தியிடம் இருந்த குரங்குச் சிலைபோல், கண் மூடி, காதடைத்து, வாய் பொத்தி, மௌனத் தவத்தில் ஆழ்ந்துவிட்டார்.

மௌனத் தவம் இருந்த கலைஞரின் மனவெளியில் 27 ஏப்ரல், 2009 அன்று புலர்காலைப் பொழுதில்,

இளஞ்சூரியன் கதிர் பரப்பும் நேரத்தில் மகாத்மா காந்தி தரிசனம் தந்தார். உண்ணாவிரத ஆயுதத்தை மத்திய அரசுக்கு எதிராக ஏந்தும்படிப் பரிந்துரைத்தார். கலைஞர் காரில் ஏறி, கடற்கரையில் கண் மூடி உறங்கும் அண்ணா சமாதிக்கு அருகில் வந்து இறங்கினார். எதிரே கடலலைகள் எழுப்பிய ஆரவாரக் குரல் காற்றின் மீது அமர்ந்து கலைஞரின் காதுகளில் நுழைந்தது. ‘ஈழத் தமிழரின் கண்ணீரில்தான் கடல் நீர் உப்பானது!’ என்று அண்ணா சொன்னதை அது கலைஞருக்கு நினைவுபடுத்தியது. மகாத்மா ஒரு பக்கம், அண்ணா மறுபக்கம் கலைஞரின் நெஞ்சில் நிழலாடினர். அவ்வளவுதான். ஈழத்தில் போர் நிற்கும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கலைஞர் அறிவித்தார். வில்லுக்கும் அம்புக்கும் முதல்வர் கலைஞர் அகிம்சை வடிவில் வேலை கொடுக்க முடிவெடுத்துவிட்டார் என்ற செய்தி ஊடகங்கள் உதவியால் உலகம் முழுவதும் சென்று சேர்ந்தது. கோட்டைக்காக அல்ல, கொள்கைக்காகப் பிறந்தவர் கலைஞர் என்று தமிழினம் தாளாத மகிழ்ச்சியில் புகழ் மாலை சூட்டி, பூரித்துப்போனது. இந்து – முஸ்லிம் ரத்தப் புனலைத் தடுத்து நிறுத்த, காந்தி தன்னுடைய 78-வது வயதில் உண்ணாவிரதம் இருந்தார். எங்கள் கலைஞரோ, ஈழத் தமிழரின் குருதி குடிக்கும் சிங்கள ராணுவப் போரை நிறுத்தத் தன் 86-வது வயதில், ‘இருப்பது ஓர் உயிர். அது போகப்போவதும் ஒரு முறைதான். அந்த உயிர் என் இனம் காக்கப் போகட்டும்!’ என்ற உறுதியுடன் உண்ணாவிரதம் மேற்கொண்டுவிட்டார் என்று மக்கள் மாய்ந்து மாய்ந்து பேசியபடி மெரினா கடற்கரைக்குப் புறப்பட்டனர்.

அண்ணா சமாதிக்கு அருகில் பந்தல் விரிந்தது. மெத்தை, தலையணை, கட்டில் வந்து சேர்ந்தது. கடற்காற்றின் வெம்மையில் வியர்வை வழியாதிருக்க ஏர் கூலர்கள் குளிரூட்டத் தொடங்கின. குடும்ப உறவுகள் சோகத்துடன் சுற்றிச் சூழ்ந்தன. முதல்வர் கலைஞர் கண்களில் படுவதற்காகப் பொய்யான சோகத்தை முகத்தில் பூசியபடி அமைச்சர் குழாமும், அதிகார வர்க்கமும், பாராட்டிப் பாடுவதற்குப் பல்லவியும் சரணமும் சிந்தையில் சேர்த்தபடி கவிஞர் கூட்டமும், பாசம் பொங்கத் திரண்டு வந்த உடன்பிறப்புகளும் அணிவகுத்தனர். கழகத்தின் மூச்சே வெற்றுப் பேச்சில்தான் என்ற கூற்றைப் பொய்யாக்காமல் ஒலி பெருக்கி ஏற்பாடு செய்யப்பட்டது. கலைஞரின் ‘தியாகம்’ குறித்துக் கட்டியங்கூறும் வாய்ப்பறைகள் வரிசையாக வாழ்த்தொலித்தன. உண்ணாவிரத முடிவு குறித்துக் கலைஞர் உணர்ச்சி நரம்புகளின் மெல்லிய முனைகளைக் கிள்ளிவிடுகிறாற்போல் தழுதழுத்த குரலில் உரையாற்றினார். தமிழ் கூறும் நல்லுலகம் அளவற்ற ஆர்வத்துடன் செவிமடல்களைத் திறந்துவைத்தது. மன்மோகன் சிங்கின் மத்திய அரசுப் புலனாய்வுத் துறை மறைந்து நின்று மௌனமாய் ஒவ்வொன்றையும் பதிவு செய்தது.

‘இலங்கையில் இருந்து நல்ல செய்தி வராவிடில், என் உயிரை இலங்கைத் தமிழருக்காக அர்ப்பணிக்க முடிவு செய்துவிட்டேன். உறக்கமற்ற பல இரவு​களைக் கழித்த நான், இன்று வைகறைப் பொழுதில் என் வாழ்வை அர்ப்பணிக்க நானாகவே சிந்தித்து இந்த முடிவுக்கு வந்துவிட்டேன். என் குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்​களுக்கும்கூடத் தெரிவிக்காமல் சாகும் வரை உண்ணாவிரதத்தில் நான் ஈடுபட்டதன் மூலம், இலங்கைத் தமிழரின் இன்னல்களுக்குத் தீர்வு காண முடிந்தால் மகிழ்வேன். என் இறுதி மூச்சு உள்ள வரை, நான் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன். ‘தமிழ் நாடு’ என்று பெயர் வைக்க உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த சங்கரலிங்கனார், தமிழீழம் காண உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்த திலீபன் கல்லறைகளுக்குப் பக்கத்தில் என் கல்லறை அமையட்டும். இந்த உறுதிமொழியை என் தமிழின் பெயராலும், என் அரசியல் ஆசான்களான அண்ணா, பெரியார் இருவரின் பெயராலும் ஆணையிட்டு அறிவிக்கிறேன்’ என்று கலைஞர் உணர்வு ததும்ப உரைத்தபோது, கூடிய கூட்டம் கலங்கித் தவித்தது.

‘இனிமேல் என் ஒவ்வோர் அடியும் என்னுடைய கல்லறையை நோக்கியே எடுத்துவைக்கப்படும். என் ஒவ்வோர் அசைவும் என் இனத்தின் முன்னேற்றத்திற்காகவே அமையும். ஒவ்வொரு துளி வியர்வையும் என் நசுக்கப்பட்ட இனத்தின் பெருமையை வளப்படுத்தும். என் கண்ணீர், ரத்தம், மூச்சுக் காற்று, எலும்பு, தசை அனைத்தும் இந்த இனத்தின் முன்னேற்றத்திற்காக மட்டுமே அர்ப்பணிக்கப்படும்’ என்று தன் ‘நெஞ்சுக்கு நீதி’ சுயசரிதையில் கலைஞர் எழுதியதையெல்லாம் தமிழினம் நினைத்து கண்ணீரில் நனைந்தது.

ஈழத் தமிழருக்கு எதிராக 1981-ல் சிங்கள ராணுவம் நடத்திய நர வேட்டையை எதிர்த்துப் போராடிச் சிறை சென்று இரு வாரங்களுக்குப் பின்பு கலைஞர் விடுதலையானதையும், இலங்கை முழுவதும் திட்டமிட்டு 1983 ஜூலையில் தமிழினம் மிக மோசமாகத் தாக்கப்பட்டதை எதிர்த்துப் பேரணி நடத்திய கலைஞர், பேராசிரியர் அன்பழகனுடன் எம்.எல்.ஏ., பதவியைத் தூக்கியெறிந்ததையும், தன்னுடைய 62-வது பிறந்த நாளில் (3-6-1986) ஈழப் போராளிகளுக்கு நிதி திரட்டியதையும் நினைவில் கொண்டுவந்த தமிழர்கள், கலைஞர் உண்ணாவிரதத்தின் மூலம் இலங்கைப் போருக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடுவார் என்று உறுதியாக நம்பினர். உண்ணாவிரதம் எத்தனை நாட்கள் நீடிக்குமோ என்று நெஞ்சு நடுங்கினர்.

பேராசிரியர் சரசுவதி தலைமையில், ஈழத்தில் போர் நிறுத்தம் வேண்டி ம.தி.மு.க. தலைமை அலுவலகம் தாயகத்தின் வாசலில் தரையில் அமர்ந்தபடி பெண்கள் 13 நாட்கள் உடல் வருந்த, உயிர் சிதைய உண்ணா விரதம் இருந்தனர். அவர்களுக்கு ஊடக வெளிச்சம் இல்லை. ஏர் கூலர் வசதி இல்லை. அலையலையாய் மக்கள் அணி திரண்டு ஆதரவு முழக்கத்தில் ஈடுபடவில்லை. ஆனால், அவர்களிடம் உண்ணாவிரதத்தின் உண்மையான உத்வேகம் இருந்தது. கலைஞர் தொடங்கிய உண்ணா விரதத்தில் உண்மையான உணர்வைத் தவிர, மற்ற எல்லா நாடக மேடை அம்சங்களும் நிறைந்திருந்தன. ஒரு நாடகம் அதிகப்பட்சம் மூன்று மணி நேரம் நடக்கும். கலைஞர் கடைப்பிடித்த உண்ணா விரதம் சரியாக மூன்று மணி நேரத்தில் முடிந்துவிட்டது.

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் இருந்து கலைஞருக்குத் தொலைபேசியில் போர் நிறுத்தச் செய்தி வந்து சேர்ந்ததாம். சோகத்தின் சுவடு அழிந்து, மகிழ்ச்சியால் முகம் மலர, எழுந்து மெத்தையில் அமர்ந்த கலைஞர் ஒலிபெருக்கியில் போர் நிறுத்தம் குறித்துப் பிரகடனம் செய்தார். கூடியிருந்த கூட்டம் கலைஞரின் அபரிமிதமான செல்வாக்கைக் கண்டு ஆர்ப்பரித்தது. தமிழருக்காகத் தண்டவாளத்தில் தலைவைத்த தீரத்துடன், பாளையங்கோட்டைச் சிறையில் தனிமைத் தவம் இருந்த தியாகத்துடன், ஈழத் தமிழருக்காக 3 மணி நேரம் உண்ணாமல் இருந்த உயரிய தியாகமும் கலைஞரின் வீர வரலாற்றில் நீங்கா இடத்தைத் தேடிக்கொண்டது.

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு​விட்டதாக அக மகிழ்வுடன் அறிவித்து​விட்டு அண்ணா சமாதியில் இருந்து கலை​ஞர் புறப்பட்டார். கல்லறைக்குள் இருந்த அண்ணாவின் இதயம் இந்த அரசியல் நாடகம் கண்டு அதிர்ந்தது. கலங்கரை விளக்கத்துக்குப் பக்கத்தில் நின்றிருக்கும் காந்தியின் சிலை கண்ணீர் வடித்தது. ஈழத்தில் போர் முன்பைவிட உக்கிரமாக முடுக்கிவிடப்பட்டது. ‘நீங்கள் அறிவித்தபடி, போர் ஈழத்தில் இன்னும் நிற்கவில்லையே?’ என்று நிருபர்கள் கேட்டபோது, ‘மழை நின்ற பின்பும் தூவானம் தொடரும்…’ என்று கவிதை நயத்துடன் கலைஞர் குறிப்பிட்டார். கலைஞர் வருணித்த ‘தூவானம்’ ஒரே நாளில் எம் குலத் தமிழரில் 40 ஆயிரம் பேரை முள்ளி வாய்க்காலில் அழித்தொழித்து ஊழிக் கூத்தாடியது. ஒரு லட்சம் உயிர்களைப் பலிவாங்கியது. மூன்று லட்சம் தமிழர்களை முள் வேலிக்குள் முடக்கியது.

கொள்கை… ஆடை; பதவி… அணிகலன் என்று எழுதியவர் இன்று இரண்டையும் இழந்து நிற்கிறார். ‘எதிர்காலம் வீர வரலாறுகளை மறப்ப​தில்லை’ என்று 1-9-74 அன்று முரசொலியில் கலைஞர் எழுதினார். உண்மைதான். எதிர்காலம் வீர வரலாறுகளையும் மறப்பதில்லை; இனத் துரோகங்களையும் மறைப்பது இல்லை!

நன்றி: ஜுனியர் விகடன்

Wednesday, July 27, 2011

அமெரிக்க ஜனாதிபதி அவர்களுடன் இன்னும் அபூர்வ படங்கள்.

இதுவரை வெள்ளை மாளிகையை வெளியில் மட்டுமே பார்த்த எமக்கு அதன் உட்புறம் சுற்றி வந்தால் எப்படியிருக்கும் ! இந்தப்படங்கள் முதன்முறையாக இணையத்தளத்தில் வெளியிடப்பட்டவை ! ஜனாதிபதி தன் குடும்பத்துடன் இருப்பதும் , காரியாலய வேலைகளின்போது எடுக்கப்பட்டதுமான பல படங்கள் வெளியாகின !

Sunday, July 24, 2011

ராஜபக்க்ஷவுக்கு உதவிய இந்தியாவும் போர்க்குற்றவாளியே. அம்பலப்படுத்துவோம்..


ஈழத்தின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, ஸ்ரீலங்கா அரச இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை குற்றச்செயல்கள், மற்றும் மனித உரிமைமீறல்கள் தொடர்பில் விசாரணைசெய்ய, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட்டிருக்கவில்லை. எனவே இலங்கையை விசாரணைக்குட்படுத்தும் தகுதி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இல்லை என நீதிமன்றின் தலைவர் சாங் ஹியூங் சொங் தெரிவித்துள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விதிமுறைகளுக்கு புறம்பாக செயற்படக்கூடிய முகாந்திரம் எதையும் தன்னகத்தே கொண்டிருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்..

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குறித்த ரோம் பிரகடனத்தில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் இலங்கை உள்ளிட்ட சிலநாடுகள் கைச்சாத்திடவில்லை. எனவே ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் பரிந்துரை இருந்தாலன்றி தன்னிச்சையாக விசாரணைகளை முன்னெடுக்க முடியாது என்ற நடைமுறையை அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சில நாடுகள் பிரகடனத்தில் கைச்சாத்திடாத காரணத்தினால் சில சர்வாதிகார அரசுகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில் அங்கம்வகிக்கும் நாடுகளில் வீற்றோ (நிராகரிக்கும் அதிகாரம்) அதிகாரம் உடைய நாடுகள் ஐந்தில், ரஷ்யாவும் சீனாவும், இலங்கைக்கு சாதகமாக எதிர்நிலையில் நிற்கின்றன. இதனால் போர்க்குற்ற வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாதிருக்கிறது.

சீனா, ஸ்ரீலங்காவின் நட்புச்சக்தி என்பதாலும், ரஷ்யா, இந்தியாவின் பாலிய நண்பன் என்பதாலும், கூட்டாக படுகொலை குற்றச்செயலில் ஈடுபட்ட நாடுகளான ஸ்ரீலங்காவையும், இந்தியாவையும், காப்பாற்றும் பொருட்டு அவ்விரு நாடுகளும் சர்வதேச மனிதாபிமான கருத்துக்கு எதிராக ஐநா பாதுகாப்புச்சபையில் முரண்பட்டு நிற்கின்றன.

"மாற்றம் ஒன்றுதான் மாறாதது" என்ற தத்துவத்திற்கமைய குறித்த நாடுகளின் ஆட்சி மாற்றங்கள் நிகழும்போது, வெளியுறவுக்கொள்கை ஒரே சீராக நீண்டகாலங்களுக்கு அப்படியே இருக்கப்போவதுமில்லை.

ஏற்கனவே 2009ம் ஆண்டு போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த போது, மெக்சிக்கோவும், கோஸ்டாரிக்காவும் பாதுகாப்புச் சபையில் சிறிலங்கா விவகாரத்தை விவாதிக்க எடுத்த முயற்சிகளை ரஷ்யாவும், சீனாவும் இணைந்து தடுத்திருந்தன. இப்போ 2011ல் நிபுணர்கள் குழு அறிக்கையை பாதுகாப்புச்சபையில் விவாதிப்பதற்கும் சீனா, ரஷ்யா, ஆகிய இரு நாடுகளும் தமது எதிர்ப்பை மீண்டும் வெளிப்படுத்தின. இவற்றின் உந்து சக்தியாக இந்தியா இருந்துவருவதாக நம்பகமான குற்றச்சாட்டுக்கள் உண்டு.

இவைகளில் சீனா இந்துசமுத்திர பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை ஸ்திரப்படுத்த வேண்டிய இராசதந்திரம் இருப்பதால் இலங்கையை தனது கட்டுக்குள் வைத்திருக்கவேண்டிய நலன் சார்ந்து இலங்கைக்கு ஆதரவாக நிற்கவேண்டிய தேவையிருக்கிறது. ரஷ்யாவுக்கு அந்தத்தேவை இருக்கவில்லை.

ரஷ்யாவினுடைய பலவருட பாலிய நண்பனான இந்தியாவின் தற்போதய அமெரிக்க சார்பை குறைக்கும்பொருட்டு இந்தியாவின் கோரிக்கைக்கு ரஷ்யா கட்டுப்பட்டு இலங்கைக்கு சாதகமாக செயற்படுவதை காணலாம்.

இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இலங்கைக்கான பொருளாதாரத்தடை விதிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இத்தீர்மானம் தொடர்பில் அதிபர் பாரக் ஒபாமாவின் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹவார்ட் பேர்மன், முன் மொழிந்தார். அதன் போது இலங்கை மீது போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டும் எனவும், ஊடக சுதந்திரமின்மை, அவசரகால சட்டம் அமுலில் இருத்தல் என்பன தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

இத்தீர்மானத்தின் படி இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை தவிர்ந்த ஏனைய அனைத்து நிதி உதவிகளையும் நிறுத்துவதற்கு அமெரிக்க காங்கிரஸ் வெளிநாட்டு விவகார குழு அனுமதி வழங்கியுள்ளது. இத்தீர்மானம் உடனடியாக நடைமுறைக்கு வந்தாலும், வராது விட்டாலும், யுத்தக்குற்றத்திற்கு எதிராக உலகநாடுகள் அணிவகுக்க முற்பட்டுவிட்டன என்பதை சந்தேகமில்லாமல் நம்பமுடியும்.

அமெரிக்க காங்கிரஸ் எனப்படும் அமெரிக்க நாடாளுமன்றம் எழுந்தமானத்தில் இத்தீர்மானத்தை இயற்றிவிடவில்லை, என்பதை உணர்ந்துகொள்ளலாம். பலதரப்பட்ட ஆவணங்கள் சட்ட ஆய்வுகளுக்கு பிற்பாடே உலகில் மிகப்பலம்வாய்ந்த அமெரிக்கா போன்ற ஒருநாடு இப்படியான ஒரு முடிவுக்கு வந்திருக்க முடியும்.

சனல் 4 தொலைக்காட்சியின் கொலைக்களம் இறுவட்டு ஒன்று மட்டுத்தான் அமெரிக்காவின் பொருளாதாரத்தடைக்கு காரணமாக இருக்கமுடியாது. ஏற்கெனவே நீண்டகாலமாக கிடைத்து வந்த உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஆதாரங்களுடன் இறுதியில் நம்பகத்தன்மையுடன் வெளியான சனல்4 காணொளிக்காட்சிகளும் ஆவணமாக அதிக வலுவை அமெரிக்காவுக்கு வழங்கியிருக்கிறது.

இப்படியான ஒரு நிலை ஈழத்தமிழர் தரப்பில் எதிர்பார்த்த ஒரு நிகழ்வுதான். என்றாலும், இலங்கைக்கு எதிரான பொருளாதாரத்தடை போன்ற நடவடிக்கைகள், ஒரு சிறிய நாட்டிலிருந்துதான் தொடங்கும் என எதிர்பார்த்த வேளையில். மிக உச்சத்திலுள்ள அமெரிக்கா அந்த சமிக்கையை காட்டியிருப்பது இன்னும் பல நாடுகளை இலங்கைக்கு எதிராக செயற்படவைக்கும்.

அமெரிக்காவின் தீர்மானம் இலங்கை கிரிக்கெட் விளையாட்டிலும் நிச்சியம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் அதற்கான முஸ்தீபுகளில் ஏற்கெனவே அவுஸ்ரேலிய கிறிக்கற் அணி முனைப்பாக உள்ளதாக தெரிகிறது.

இந்தியா அதைச்செய்யும் இதைச்செய்யும் என்பதெல்லாம் நடக்கப்போகும் ஒன்றல்ல. இந்திய மத்திய அரசிடம் ஈழத்தமிழரின் தீர்வுக்கான கோரிக்கை வைப்பதெல்லாம். நேர விரையமும் வீண் முயற்சியுமாகும்.

இந்த தீர்க்கதரிசனத்தை தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னே உணர்ந்திருந்தார். இருந்தும் சில இராசதந்திர நகர்வுகளுக்காக அவர் எதையும் வெளிக்காட்டி அலட்டிக்கொள்ளவில்லை.

வெளியிலிருந்து தீர்வு வாங்கித்தரும்படி கேட்டு இந்தியாவை தொழுது கையேந்தி நிற்பதாவது, இந்தியாதான் ஈழமக்களுக்கு தீர்வை ஏற்படுத்தி தரவல்ல முக்கிய பங்காளி என்று சர்வதேசத்தில் இனம் காட்டுவதற்கும், இந்தியாவின் திருட்டுத்தனமான இரட்டை வேசத்தை மறைக்க உதவுமே தவிர கால்க்காசுக்கு பலன் கிடைக்கப்போவதில்லை.

தமிழகத்தின் ஆட்சியாளர்களின் நெருக்குதல் இருந்தாலன்றி, காங்கிரஸ் அரசின் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதுமில்லை. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருப்பதால் முதல்வர் அவர்களின் நெருக்குவாரம் ஒன்று மட்டும், இந்திய மத்திய அரசுக்கு அரசியல் ரீதியான சங்கடத்தை உண்டுபண்ணக்கூடியது.

முதல்வர் ஜெயலலிதா தவிர்ந்த மற்றய சிறிய கட்சிகள், தங்கள் முகவரியை தொலையாமல் வைத்திருப்பதற்கு மட்டும். அவர்கள் தொடர்ச்சியாக போட்டுக்கொண்டிருக்கும் மத்திய அரசிற்கு எதிரான ஈழக்கோசம் உதவக்கூடும்.

இதனால் சர்வதேச மட்டத்தில் ஈழ தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய முக்கிய சக்தி இந்தியா என்கிற பிம்பம் இருந்துகொண்டிருப்பதற்கு உதவும். இத் தந்திரத்தை இந்தியாவும் நன்கு உணர்ந்திருப்பதால் ஈழப்பிரச்சினையில் தனது பங்கு உயிர்ப்பு நிலையில் இருப்பதாகவே இந்தியா தொடர்ந்து காட்டி வந்திருக்கிறது.

இதனால் சர்வதேச மட்டத்தில்க்கூட, ஈழப்பிரச்சினையிலிருந்து இந்தியாவை தள்ளி வைக்க முடியாத இராசதந்திர சங்கடம் தொடர்ச்சியாக இருந்து வருவதைக்காணலாம்.

இந்தியாவும் சளைக்காமல் வருடத்திற்கு நான்குமுறை ஈழப்பிரச்சினையை கையிலெடுத்து ஸ்ரீலங்காவுக்கான போக்குவரத்தும், பேச்சுவார்த்தையும், என்று தனது அழுக்கு முகமூடியை புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. இதுகூட ஒருவகையான கிலிசகேடான அருவருப்பான இராசதந்திரம்தான்.

இன்றய நிலையில் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு மட்டும் ஈழப்பிரச்சினையில் நல்ல ஒரு மாற்றத்தை கொண்டுவரக்கூடிய களம் ஒன்று கிடைத்திருக்கிறது. (இதை குளப்புவதற்கு பல சக்திகள் திரைமறைவில் போட்டி போடுகின்றன.)

இச்சந்தற்ப்பத்தை பயன்படுத்தி ஈழமக்கள் பற்றிய முழுப் புரிதலை முதலமைச்சர் அவர்களுக்கு இன்னும் அதிகமாக ஏற்படுத்தி, தமிழகத்தின் சிறிய கட்சிகள். அமைப்புக்கள் அனைத்தும் தமிழக அரசுடன் இணைந்து முதலமைச்சரின் செயற்பாட்டுக்கு வலுச்சேர்த்து மத்திய அரசை இக்கட்டுக்குள் தள்ளலாமே தவிர, தனித்து நின்று எதையும் சாதிக்கப்போவதில்லை.

போர்க்குற்றம் சம்பந்தமாக ஸ்ரீலங்கா அரசு இன்று எவ்வளவு உலகநெருக்கடியில் சிக்கியுள்ளதோ, அதேயளவு நெருக்கடி இந்தியாவுக்கும் உண்டு. ராஜபக்க்ஷ எங்காவது ஒரு குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரானால், ராஜபக்க்ஷ மூலம் இந்தியாவின் முகமூடி கிழிக்கப்படும் அபாயம் இருக்கிறது. அந்தப்பயம் காரணமாகவே போர்க்குற்றத்தை பூசி மெழுகி ராஜபக்க்ஷவை காப்பாற்றிவிட இந்தியா முனைப்புக்காட்டிக்கொண்டிருப்பதை காணலாம்.

பின் விளைவுகள் எதையும் சிந்திக்காமல். காட்டுமிராண்டித்தனமாக போர்க்குற்றத்தில் பங்குபற்றி, ஸ்ரீலங்காவுக்கு இந்தியா உதவியிருந்தது. குறுமுட்டான திட்டங்களும் அதரப்பழசான சட்டங்களையும் கையாள பழக்கப்பட்ட இந்தியா இவ்வளவு விரைவில் சர்வதேசம் விழித்துக்கொள்ளுமென எதிர்பார்க்கவில்லை.

இன்று அமெரிக்காவின் பொருளாதாரத்தடை வெளிவந்திருக்கும் சமையத்தில் அதிலிருந்தும் இலங்கையை காக்க நிச்சியம் இந்தியா முயலக்கூடும். அல்லது அமெரிக்காவுக்கு மாற்றீடாக ஸ்ரீலங்காவிற்கு இந்தியா நிதியுதவியும் செய்ய முன்வரலாம். ஆனாலும் அமெரிக்கா அளவிற்கு நிதி உதவி செய்யக்கூடிய தகுதியும் இந்தியாவிடம் கிடையாது.

எது நடந்தாலும் ஒரு குறுகியகால நிவாரணமாக இருக்குமே தவிர ராஜபக்க்ஷவை காப்பாற்றி போர்க்குற்றத்தை நீண்டகாலத்திற்கு இழுத்து மூடிவிட இனி எவராலும் முடியாது.

ஈழப்போரின்போது கணிசமான ஆயுத உதவிகளை இந்தியா செய்திருந்ததென்றும், இராணுவ ரீதியான பங்களிப்பிலும் இந்தியா ஈடுபட்டதற்கான ஆதாரங்கள். செய்திகளாக சில காலங்களுக்கு முன் பரவலாக வெளிவந்தன, பின் அதுபற்றிய தரவுகள் எதோ காரணங்களினால் தமிழர் தரப்பிலிருந்துகூட இடை நிறுத்தப்பட்டதுபோல் காணப்படுகிறது. ஒரு தருணத்தில் இந்தியப்பிரதமர் மன் மோஹன் சிங், ஸ்ரீலங்காவுக்கு ஆயுதம் வழங்கியதை ஒப்புக்கொண்டுமிருந்தார்.

எனவே யுத்த குற்ற காணொளிகளில் இந்திய இராணுவ பங்கு பற்றிய ஆதாரங்களையும் தமிழ்த்தரப்பு தேடி கண்டுபிடித்து அம்பலப்படுத்தவேண்டிய தேவையும் இருக்கிறது. பல இடங்களில் ராஜபக்க்ஷவின் சகோதரர்களும் அரசின் உயர்மட்ட அமைச்சர்களும் இந்தியாவின் பங்களிப்பே போரில் வெற்றிகொள்ள முடிந்தது என்பதை பலமுறை பகிரங்கமாக தெரிவித்துமிருக்கின்றனர்.

அந்த தரவுகளின் அடிப்படையில் இந்தியாவை தோலுரிக்கவேண்டிய தேவை தமிழினத்துக்குண்டு. சூட்டோடு சூடாக காரியமாற்ற முயல வேண்டும். ஸ்ரீலங்காவின் அரச பயங்கரவாதிகளுடன், இந்திய அரசின் பயங்கரவாதிகளையும் உலகுக்கு இனங்காட்டவேண்டிய தேவை தமிழினத்துக்குண்டு.

இந்தியா ஒருபோதும் தமிழருக்கு சாதகமாக நடந்ததுமில்லை, நடக்கப்போவதுமில்லை. இறுதிக்கட்ட போரின்போது இலங்கைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்த ஒரு தமிழனை இந்தியா தெரிவு செய்திருக்கவில்லை.

பேச்சுவார்த்தை என்று ஸ்ரீலங்கா சென்று நாடகம் நடத்தியவர்கள் எவரும் தமிழர்கள் அல்லாதவர்களே. அந்த விடயத்தில்க்கூட இந்தியா மிக கவனமாக நச்சுத்தனமாக நடந்து வந்திருக்கிறது. மலையாள நாராயணன், சிவ்சங்கர் மேனன். கன்னட நிருபாமா ராவ், கிருஷ்ணா, ஹிந்தி பிரணாப் முகர்ஜி. ஆகியோரே. திருகுதாளங்களில் ஈடுபட்டிருந்தனர்.

சாதாரண தூதுவர்களாக அமர்த்துவதற்கே இந்தியா ஒரு தமிழனை நம்பத்தயாராக இல்லை. இந்த லட்சணத்தில் இந்தியா கிண்டி கிளப்பும் என்று கனவுகூட காணக்கூடாது. விரோதியை விரோதியாகவே பார்க்கவேண்டும்.

இன்றய கட்டத்தில் இந்தியாவின் குற்றச்செயல்களையெல்லாம் வெளியில் கொண்டுவந்து அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழ் ஊடகங்களுக்குண்டு. எதிரியை நம்பலாம் ஆனால் இந்தியா போன்ற குழிபறிக்கும் துரோக சக்திகளை காலத்துக்கும் தமிழன் மறக்கக்கூடாது.

ஈழதேசம் இணையத்திற்காக
கனகதரன்,

நன்றி ஈழதேசம் இணையம்.

Wednesday, July 20, 2011

வைகோ உண்மையில் ஒரு கோ தான்.

தமிழ் மக்களின் நலனில் அக்கறை செலுத்தும் உண்மையான ஒரு தலைவனை அடையாளம் காட்டுங்கள் என்று சொன்னால் நிச்சயமாக எல்லோருடைய ஆட்காட்டி விரலும் வைகோவுக்கு நேரகதான் இருக்கும். அரசியல் என்றால் தேர்தல், ஆட்சி, அதிகாரம் என்றில்லாமல் சர்வதேச சமுதாயத்தில் தமிழரின் நிலையை எடுத்து சொல்லும் வைகோவின் அரும்பணிக்கு மீண்டும் ஒரு தலை வணக்கம்.

ஈழத்தமிழருக்கு எதிரான கொடுமைகளை ஒரு சி.டியாக தயாரிந்துள்ளார் வைகோ. அதை ஒவ்வொரு கல்லூரி வாயிலிலும் நின்று தன் கைபட மாணவ-மாணவிகளுக்கு கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இளம் சமுதாயம் ஈழத்தின் ஈரத்தை மறந்தவிடக்கூடாது. ஈழத்தாகம் என்பது தேசிய தலைவர் பிரபாகரனோடு முடிந்துபோவது அல்ல. ஈழம் அமைந்தே தீரும் என்ற உரத்த குரலை வைகோ தொடர்ந்து பதிவுசெய்வது நிச்சயம் வீனாகாது.

கோ என்றால் தலைவன் என்று பொருள். நிச்சயம் தமிழர்களின் தலைமகனுக்கான அத்தனை தகுதிகளும் வைகோவுக்கு உள்ளது. வைகோ உண்மையிலுமே ஒரு கோ தான்.

தெற்கு சூடான் அமைந்தது போல நிச்சயம் ஒருநாள் தமிழ்ஈழமும் அமையும். அதற்காக பல்வேறு ரீதிகளில் முயற்சிகள் மேற்கொள்ளும் அத்தனை உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள்.

கோவையின் தென்கோடி முதல் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து இலங்கை என தற்போது உதித்த தென் சூடான் வரை ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தமிழர்கள் ஈழத்துக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த அரும் பணியில் லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் உழைப்பு நிச்சயம் வீண்போகாது. அவர்களை ஊக்குவிக்காவிட்டாலும் பரவாயில்லை தயவு செய்து தூற்றாதீர்கள்...

நன்றி தமிழ் மலர்.

Saturday, July 16, 2011

முத்தையா முரளிதரனின் தேசபக்தி !

இலங்கையில் பிறந்து வளர்ந்து செழிப்பு பெற்றவரான (மட்டை) எறி பந்து விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரன் அவர்களுக்கு சித்த சுவாதீனம் ஏற்பட்டுவிட்டதோ என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ. மோசமான போர்குற்றம் புரிந்தவர் என்பது பல வழிகளில் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டதன் பின். அவர் தப்பித்து விடக்கூடாது. சட்டப்படி தண்டனைக்கு உட்படுத்தவேண்டிய கொடிய மிருகம். என அகில உலகமே திரண்டு நின்று கூறுகிறது.

இலங்கையின் அதிபர் ராஜபக்க்ஷ மன்னிக்க முடியாத இனப்படுகொலை குற்றவாளி, என்று தமிழினம் மட்டுமல்ல அகில உலகமே கைகாட்டுகிறது.

இலங்கை அரசு தொடர்ந்து புரிந்துவரும் அடாவடிகளை கட்டுக்குள் கொண்டுவர சிலநடவடிக்கைகளை உலகம் எடுக்க முயற்சிக்கிறது. அவைகளில் சில ஒத்துழையாமை பொருளாதார நெருக்கடி.

பின்னணி இப்படியிருக்கும்போது விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரன் அவர்கள், படுகொலை குற்றவாளி மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு எதிராக, உலகம் செயற்படுவதா? இலங்கையை தள்ளி வைப்பதா, என்று ராஜபக்க்ஷவுக்கு துணை நின்று விளையாட்டுத்தனமாக பின் விளைவு பற்றி சிந்திக்காமல் எழுந்தமானத்தில் கொதித்து குமுறி,, தனது பெயரை கெடுத்திருக்கிறார்.

சுயநலத்துக்காக, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் போய் தஞ்சமடைந்துள்ள சிலர், தங்களது சொந்த நாடான இலங்கைக்கு எதிராக நடந்து வருகின்றனர். இவர்களது வலியுறுத்தலுக்குப் பயந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இலங்கை கிரிக்கெட் தொடரில் பங்கேற்காமல் புறக்கணித்தால் கடும் விளைவுகளை கிரிக்கெட் சந்திக்க நேரிடும் என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் மிரட்டலாக எச்சரித்திருக்கிறார்.

முரளிதரன் உங்கள் தேசபக்திக்கு முன் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும் நீங்கள் இலங்கையில் தமிழனாகப் பிறந்து தமிழனாக வாழ்ந்திருந்தால் இந்தக்கருத்துக்கே இடமிருந்திருக்காது.

சுயநலத்துக்காக இங்கிலாந்து, அவுஸ்ரேலியாவில் போய் தஞ்சமடைந்த சிலர், இன்று இலங்கைக்கு எதிராக நடந்து வருகின்றனர், என்ற முரளிதரனின் மலிவான சொல்லாடல் வெட்கப்பட வைக்கிறது. இலங்கையிலுள்ள தனது இனம் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டதை சகிக்கமுடியாத (இலங்கை) ஈழ தமிழன் தாயக உறவுகள் சந்தித்த கொடூரத்திற்கு, உலகத்தில் நியாயம் கேட்டு போராடுவதை, உணர்வில்லாவிட்டாலும் முரளிதரனால் எப்படி இப்படி மலிவாக விளிக்க முடிகிறது.

ஈழத்தமிழனுக்கு நடந்த கொடூரம் முரளியின் குடும்பத்தில் உள்ள அவரது மனைவி குழந்தை தாய் தகப்பனுக்கு நடந்திருந்தால் முரளி இப்படி பேசியிருப்பாரா? முரளியின் குடும்பத்தில் எப்போதாவது ஒரு உயிர் வலுக்கட்டாயமாக சித்திரவதை செய்யப்பட்டு பறிக்கப்பட்டிருக்கிறதா? சிங்களவனோடு கைகோர்த்துக்கொண்டிருந்த அவரது குடும்பம் குறைந்தபட்சம் ஒரு கைதையாவது சந்தித்திருக்கிறதா.

அடிப்படையில் விளையட்டு என்பதே சமூக ஒற்றுமை உண்டுபண்ணுவதற்கு மனித இனத்தால் சிருஸ்டிக்கப்பட்ட ஒன்றுதான். பணங்கொழிக்கும் ஒரு விளையாட்டு என்பதால் படுகொலைகளை எந்த விளையாட்டாலும் சமன்படுத்தக்கூடியதல்ல என்பதை முரளி உணரவேண்டும். ஒருமணி நேரம் நிம்மதியாக உண்டு உறங்கி உயிர்வாழமுடியாத ஒரு தேசத்தில் விளையாட்டை தூக்கிப்பிடிக்கும் முரளி போன்றவர்களை என்னவென்று சொல்லமுடியும்.

படுகொலைகளை நியாயப்படுத்த விழையும், உலகம் அறிந்த ஒரு விளையாட்டுவீரரான முரளியின் மனநிலையை பகுப்பாய்வு செய்யவேண்டிய நிலையில் சர்வதேச விளையாட்டு உலகம் தள்ளப்பட்டிருக்கிறது.

முரளிதரனின் நியாயத்தின்படி பார்த்தால் முரளிதரனின் பெற்றோர் முத்தையா போன்றவர்கள் அன்றொருநாள் வயிற்று பசி காரணமாக. சுயநலன் கொண்டு "பத்தும் பறந்துபோக" பஞ்சம் போக்க பிழைப்புதேடி இந்தியாவிலிருந்து இலங்கை சென்று மலையகத்தில் தஞ்சமடைந்து குடியேறிய ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்தான்.

முரளிதரன் தனக்கான வாழ்க்கைத் துணையைக் கூட பஞ்சம் பிழைக்கவந்த ஒரு மலையக தமிழ் குடும்பத்திலிருந்து தெரிவுசெய்யாமல். தனது பூர்வீக இந்தியாவிலேயே தெரிவு செய்திருக்கும் அவருக்கு முதலில் இலங்கையை, அங்கு வாழும் பூர்வீக தமிழர்களைப் பற்றி வரலாறு புரியாமல் இழிவுபட பேசுவதற்கு அருகதை இல்லை.

ஆரம்பகாலமிருந்தே முரளி தன்னையும் தனது நலனையும் தக்க வைப்பதற்காக தன்மானத்தை புறந்தள்ளிவிட்டு சிங்கள இனத்தின் துடைப்பமாகவே செயற்பட்டு வந்திருக்கிறார். தனது பேட்டிகளில் அதை அவர் நிரூபித்துமிருக்கிறார். இலங்கையில் சிங்களவர்களின் பிரதேசங்கள் தவிர தமிழர் பிரதேசங்களுக்கு தான் சென்றதில்லை என்ற வாக்குமூலத்தையும் முரளி பல மீடியாக்களில் பதிவு செய்திருக்கிறார்.

முரளிதரன் தனது சொந்த பிரச்சினைகளை எப்படி வேண்டுமானாலும் செய்து கொண்டு போகலாம். யாரும் கவலைப்பட்டப்போவதில்லை. சர்வதேச மயப்பட்டிருக்கும் ஒரு பாதகமான கொலை சர்வாதிகாரியின் பிடியிலிருக்கும் ஈழத்தமிழினம் மீண்டு, இலங்கையை மீட்டு எடுப்பதற்கு ஜனநாயக ரீதியாக உலகம் தெரிவு செய்திருக்கும் பொறிநிலை "பொருளாதாரத்தடை, விளையாட்டுத்தடை" போன்றவைகளே. அவற்றை மலினப்படுத்தும் வகையில் சுயநலன் சார்ந்த கருத்துக்களை அவர் நிறுத்தவேண்டும்.

முன்பு தென் ஆப்பிரிக்காவின் இனவெறியைக் கண்டித்து சர்வதேச அளவில் அந்த நாட்டுடன் யாரும் கிரிக்கெட் உறவுகளை வைத்துக் கொள்ளக் கூடாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்தது. இதனால் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக தென் ஆபிரிக்கா சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க முடியாமல் போனது. ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியையும், அதன் இனவெறிக்காக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் புறக்கணித்து வருகின்றன.

தற்போது இலங்கை கிரிக்கெட் அணிக்கும் அதேபோன்ற ஒரு நிலை நெருங்கி வரத் தொடங்கியுள்ளது. இலங்கை ராணுவத்தினர், ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் நடத்திய அகோர கொடூர கொலை வெறியாட்டக் காட்சிகள் அடங்கிய இலங்கையின் கொலைக்களம் என்ற வீடியோவைப் பார்த்து உலக அளவில் மக்கள் (மனிதர்கள்) அதிர்ந்து போயுள்ளனர்.

இந்த கொடூர இனவெறி காட்சிகளால் இப்போது இலங்கையின் கி்ரிக்கெட் நிர்வாகத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது. இதை திசை திருப்பும் விதமாக ராஜபக்க்ஷவால் கொம்பு சீவி விடப்பட்டு முரளி இறங்கியிருக்கிறார். வினாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் 'கருணா' செல்லாக்காசாகப்போயிருக்கும் நிலையில், முத்தையா முரளிதரன். பெயர்களில்க்கூட நல்ல ஒரு ஒற்றுமை.

படுகொலைக்களமான ஒரு நாட்டுக்கு கிரிக்கெட் ஆடப் போகக் கூடாது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தை அங்குள்ள தமிழர் அமைப்புகள் அமைதி வழியில் வலியுறுத்தி வருகின்றன. இதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளதாக தெரிகிறது. மேலும், ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் கூட இலங்கைக்குச் செல்ல விருப்பமில்லை என்று கூறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே ஒகஸ்ட் 6ம் தேதி தொடங்கவுள்ள இலங்கை கிரிக்கெட் பயணத்தை ரத்து செய்வது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுயள்ளது.

ஆஸ்திரேலிய அணி இந்த யோசனைக்கு வர முக்கியக்காரணம், சேனல் 4 அம்பலப்படுத்தியுள்ள ஆவணப்படம் ஒரு காரணம். இதில், ராணுவம் நடத்திய கொடூரங்களை ஆஸ்திரேலியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

2வது தி ஏஜ் பத்திரிக்கை நடத்திய ஒன்லைன் கருத்துக் கணிப்பு. அவுஸ்த்ரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்குப் போகலாமா என்ற கருத்துக் கணிப்பில், 81 சதவீதம் பேர் போகக் கூடாது என்று ஆணித்தரமாக தெரிவித்துள்ளனர். இதனால்தான் இலங்கைக்குப் போவதை மறு பரிசீலனை செய்ய அவுஸ்த்ரேலிய கிரிக்கெட் அணி ஆரம்பித்துள்ளது.

ஆனால் முரளியின் கருத்துப்படி இலங்கை அணி இங்கிலாந்தில் விளையாடியபோது மைதானத்திற்குள்ளும் மைதானத்திற்கு வெளியேயும் தமிழர்கள் பலர் இலங்கை அணிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். ஆனால் இவர்கள் எல்லாம் தங்களது சுயநலத்திற்காக செயல்படக் கூடியவர்கள். இவர்களால் இலங்கைக்கு எந்தவிதப் பிரச்சினையும் வராது என்றே நான் கருதுகிறேன். வேறு ஒரு நாட்டில் புகலிடம் பெற்று வாழ்ந்துவரும் இவர்கள் சொந்த நாட்டுக்கு எதிராக செயல்படுவது கண்டனத்துக்குரியது என்று கூறியிருக்கிறார்.

தஞ்சமடைந்து வசித்து வரும், சில தமிழர்களே இந்த செயல்களுக்குப் பின்னணியில் உள்ளனர். தாயகத்திற்குத் திரும்ப முன்வராத அவர்கள் தங்களது சொந்த நாடான இலங்கைக்கு எதிராக செயல்படுகின்றனர். சுயநலத்துடன் அவர்கள் செயல்படுகின்றனர். என்று முரளிதரன் கூறியிருக்கிறார்.

இலங்கையில் மிகுந்த செல்வாக்கோடு இருந்துகொண்டு, விளையாட்டு முரளி செய்யாத ஒரு மகத்தான பணியை புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்கின்றனர். முரளி அவர்கள் தானும் தமிழன் என்று கூறுவதால் குறைந்தபட்சம் சனல் 4 அம்பலப்படுத்திய ஆவணப்படத்தையாவது பார்க்கவேண்டும் என்பதே தமிழினத்தின் வேண்டுகோள்.

>ஊர்க்குருவி<

நன்றி ஈழதேசம் இணையம்.

Tuesday, July 12, 2011

போர்க்குற்றவாளி கழுவில் ஏறும்வரை தீர்வு கிடைக்கப்போவதில்லை.

"கெடுகுடி சொற் கேளாது''
ஸ்ரீலங்கா சிங்கள அரசின் செயல்ப்பாடும், வாய்ப்பாடு கணக்குகளும் எத்தகைய மாற்றமும் இல்லாமல் பழையகுருடி கதவைத்திறவடி கதையாக மாற்றமில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழர்களுடன் எந்தவித அதிகார பகிர்வும் செய்து கொள்ள முடியாது! இதுதான் ஸ்ரீலங்கா சிங்கள அரசின் இறுமாப்பான கடைசி react.

சிங்கள அரசு உலக அரசியல் மாற்றங்களை கிஞ்சித்தும் உணராமல், சர்வதேசத்தால் ஆதாரபூர்வமாக சுமத்தப்பட்ட போர்குற்றங்களை மறைப்பதற்காக, தொடர்ச்சியாக மனிதகுலம் காணாத தப்பின் மேல் தப்பாக செய்துகொண்டு போகிறது. இப்படியான செயற்பாடுதான் ஆபிரிக்காவில் தென் சூடான் பிறப்பதற்கு வழி வகுத்திருந்தது என்ற உண்மையை சிங்கள பாசிசவாதிகள் உணரவில்லை.

தற்போது சிங்கள அரசுக்கு பின்புல ஆதரவுக்கரமாக இருக்கும் சில வெளிநாடுகளின் தற்காலிக வெளியுறவு பின்னணியை மனதில்க்கொண்டு ஸ்ரீலங்கா குதர்க்கமாக இப்படி ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. பின்னணியில் சீனா, ரஷ்யா, இந்தியவும் இருக்கின்றன.

07.07.2011 அன்று ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் ராஜபக்க்ஷ அரசாங்கத்தின் தீர்மான குரலாக சிங்கள அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா மூலம் நெருக்கடி நிறைந்த இந்த காலத்தில் நஞ்சுகலந்த இனவாதம் கக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் பல ஆண்டுகளாக நிலவி வரும் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க, அரசியல் அதிகாரப் பகிர்வு செய்து கொள்ளப்படமாட்டாது. அந்த வாய்ப்பை இலங்கை அரசு என்றுமே தமிழர்களுக்கு கொடுக்கப்போவதில்லை. என்று சிங்களத்தரப்பின் சண்டித்தன, உண்மை உள நிலைப்பாட்டை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இது தமிழினத்துக்கு எரிச்சலூட்டினாலும் சர்வதேசமட்டத்தில் ஸ்ரீலங்காவின் இந்த பொறுப்பற்ற தனம் உணரவைக்கப்படவேண்டும்.

இருந்தும், இது சிங்கள இனவாதிகளின் புதிதான கருத்துமல்ல. முன்பும் பலமுறை ஹெகலிய ரம்புக்வெல போன்றோர் இப்படி வாசித்த வசனங்கள் நிறையவுண்டு.

இலங்கையில் உள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண அரசியல் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்று உலகில் பல்வேறு நாடுகளும், உயர்நிலையிலுள்ள சர்வதேச பக்கச்சார்பற்ற தொண்டு அமைப்புக்களும் மனுதர்ம நியாயரீதியாக ஸ்ரீலங்கா அரசை வலியுறுத்தி கேட்டுவருகின்றன.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இப்படிப்பட்ட துவேசம் நிறைந்த அறிவிப்பு சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடியதுமல்ல. இந்தக்கூற்றை ஐநாவும், சர்வதேசமும், மனித உரிமை அமைப்புக்களும், தமிழ்நாடும், சிங்கள அரசுடன் கைகோர்த்துக்கொண்டிருக்கும் "தமிழ்க்கட்சிகளும்" எப்படிக் கையாளப்போகிறதென்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

எனினும் தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து பல்வேறு கட்சியினருடன் பேசி அவர்களின் கருத்துகளைக் கேட்டு வருகிறோம். பிரச்சினைக்கு நல்ல தீர்வு காணப்படும். என்ற அதரப்பழசான "தொடர்கதை" சொத்தை வாதத்தையும், கருணாநிதியின் பாணியில் அமைச்சர் ஒப்புக்கு ஒப்படைத்தார்.

உலகநாடுகள் தொடர்ந்து எவ்வளவோ பண்ணாக எடுத்துக்கூறியும் தமிழர்களுக்கான தீர்வு திட்டம் ஏதாவது அரசாங்கத்தின் தயாரிப்பில் இருப்பதாக இதுவரையில் சிங்களத்தரப்பிலிருந்து எவரும் கருத்துக்கூறவில்லை.

மறுபுறம் பொறுப்பான ஐநா அமைப்பும் உலகநாடுகளும் அரை நூற்றாண்டுக்கு மேலாக ஈழத்தமிழினத்தின் அசாதாரண சித்திரவதை உயிர்ப்பலிகளை வேடிக்கை பார்த்தது, தூதுக்குழுக்களை அனுப்பி வேவு பார்த்தது தவிர, 2009 ம், அதற்குப்பின்னும் உச்சக்கட்ட கழுத்தறுப்பு படுகொலைகள் நடத்தப்பட்ட ஆதாரங்கள் கிடைத்தபோதும் ஸ்ரீலங்காவுக்கு எதிராக ஒரு துரும்பையும் தூக்கி அகற்றிவிடவில்லை.sd

இலங்கையில் தமிழர்களுக்கு உரிய அரசியல் தீர்வொன்றை வழங்க அரசாங்கம் தவறுமானால் அத்தீர்வினைப் பெற்றுக் கொள்ள போராட்டங்களை முன்னெடுக்கத் தயார் என தமிழத் தேசியக் கூட்டமைப்பும் தமது பங்குக்கு சூளுரைத்திருக்கிறது.

பாராளுமன்றில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு வழமையான அவரது பாணியில் தனது உச்சபட்ச ஜனநாயக சக்திக்குட்பட்டு ஆத்திரத்துடன் எச்சரித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்க இதுவே சிறந்த தருணம்? என்றும். அரசியல் தீர்வு திட்டமொன்றை முன்வைப்பதன் நோக்கமாக அரசாங்க தரப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தொடர்ச்சியாக எட்டு தடவைகள்(?) கூடி பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.இந்நிலையில் சமஷ்டி முறையிலான தீர்வை வழங்க அரசாங்கம் இணங்கவில்லையாயின், இறுதித் தீர்வைப் பெற தேவைப்படின் அரசியல் யாப்பில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமென இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தன் அவர்களின் வாதம் மிகச்சரியானது, இருந்தாலும். சம்பந்தன் ஐயா யாப்பை மாற்றி அமைக்கும்படி ஆலோசனை கூறுவதற்கு சகல உரிமையும் பாராளுமன்ற உறுப்பினர் என்றவகையில் அவருக்கு இருக்கிறது. ஆனால் அவரது முழக்கத்தினால் சிங்கள ஏகாதிபத்திய ஸ்ரீலங்கா அரசியலரங்கில், ஏதாவது நடக்குமா என்பது சிந்திப்பதற்கு அப்பாற்பட்ட ஒன்று என்பதுதான் இலங்கையின் பாராளுமன்றத்தின் வரலாறு.

நடப்புக்காலப்பகுதியில் சிங்கள ராஜபக்க்ஷ பரிவாரத்தின் சிந்தனை முனைப்பு எல்லாம். எழுச்சி கொண்டு முன்னணியில் நிற்கும் தமிழர்களை உள்ளடி ஒற்றர்களின் சதி மூலம் ஒடுக்கி, ஒரு மூலைக்குள் தள்ளிவிட்டு. சர்வதேசத்தின் படுகொலைக்கான குற்றச்சாட்டிலிருந்து எப்படி தப்பி வெளியேறுவது என்பதாகவே தெரிகிறது.

இந்நேரத்தில் சம்பந்தன் ஐயாவின் கோரிக்கைக்கும், உலக நெருக்குதலுக்கு உடன்பட்டு, தமிழருக்கான ஒரு அரசியல்ரீதியான சிறிய தீர்வுக்கு ஒப்புக்கொள்ள போனாலும். ஸ்ரீலங்காவில் அமூலிலிருக்கும் அடக்குமுறை சட்டங்கள்/ இராணுவத்தலையீடுகள் விலக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஸ்ரீலங்கா அரசுக்கு உண்டாகும்.

சந்தற்பம் பார்த்து காத்திருக்கும் உலகநாடுகள் களத்தில் இறங்கி ஒப்பந்தங்களில் தலையிடுவதற்கு நிச்சியம் முயற்சி செய்யும். தமிழ்த்தரப்பும் அப்படியான ஒரு சூழலைத்தான் விரும்பி வரவேற்கும்.

குறுகிய காலத்தில் உள்ளூர் மக்களின் கருத்துச்சுதந்திரம் வலுப்பெற்று பத்திரிகை ஊடகங்களை கட்டுப்படுத்த முடியாமல்ப்போய் போர்க்குற்றத்தின் மறைவுஸ்தானமெல்லாம் வெளிவரும் அபாயம் இருக்கிறது.

இந்தப்பின்னணி பொல்லுக்கொடுத்து அடிவாங்கிய நிலைக்கு ஸ்ரீலங்காவை கொண்டு சேர்க்கும் ஆபத்து உண்டு. எனவே ஸ்ரீபால டி சில்வா சொல்லுவதுதான் சிங்களத்தின் திட்டமிடப்பட்ட மனநிலை என்பதையும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

தீர்வுத்திட்டமொன்று நிறைவேற்றப்பட்டாலும், நடந்து முடிந்த போர்க்குற்றம் அஸ்த்தமித்து விடப்போவதில்லை. புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் நடத்திய ஜனநாயக எதிர்ப்பு போராட்டங்கள், உள்ளூரில் உண்டாக்குவதற்கான வழியை உருவாக்கும்நிலை அமைந்துவிடும், அதன் பின்னணி சர்வதேசத்தில் போர்க்குற்ற விசாரணையை இலகுவாக கையாளக்கூடிய சூழல் தோன்றிவிடும்.

எனவே ஏதாவது காரணத்தை நியாயப்படுத்தி புரியாத கிரந்தம் பேசி, தீர்வுக்கான கால அளவை காலவரையற்று, நீட்டிக்கொண்டு இராணுவமயத்தில் இலங்கையை வைத்திருக்கவேண்டிய தேவை மஹிந்த அரசுக்கு இருக்கிறது. அதன் முன்னோட்டம் ஸ்ரீபால சில்வாவின் தமிழனுக்கு ஒன்றும் கிடையாது என்ற நஞ்சுத்தனமான பேச்சு.

மாறி மாறி சர்வதேச அழுத்தம் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் நிலையில் தனது தரப்பில் நியாயப்படுத்துவதற்கான வலுவான ஆதாரம் எதுவும் இல்லாவிட்டாலும் ராஜபக்க்ஷ நம்பி இருப்பது சிங்களவனையோ மேற்கு உலகத்தையோ அல்ல.

அரசியல் ரீதியாக சர்வதேசத்திற்கு ஆள்க்காட்டுவதற்கு துணைபோகும் தமிழ்த்துரோகிகளான கேபி எனப்படும் செல்வராசா பத்மநாதன், டக்கிளஸ், கருணா, பொன்றோரையும் முஸ்லீம் தரப்பையும் சாக்காக வைத்துக்கொண்டு அவர்கள்தான் தமிழ்த்தரப்பு என்று உலகை ஏமாற்றவேண்டிய தொடர் தேவை ராஜபக்க்ஷ தரப்புக்குண்டு.

இருந்தும் தமிழினத்தை விட சிங்களவன் ஒற்றுமையுடன் இருக்கிறான் என்பதை எதிர்க்கட்சித்தலைவர் ரணிலின் உலக சுற்றுப்பயணங்கள் காட்டுகின்றன. மஹிந்தவுக்காக உலகம் சுற்றும் வாலிபனாக பலநாடுகளுக்கு தூது வலம்வரும் ரணில் விக்கிரமசிங்கவின் இனப்பற்றை, மஹிந்தவுக்காக ஐநாவை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த வீரவங்ஷவை, பார்த்தாவது தமிழினம் பாடமாக கற்றுக்கொள்ளவேண்டும்.

தொடர்ந்து நெருக்கடி கொடுத்துக்கொண்டிருக்கும் மேற்குலகம், மற்றும் மனித உரிமை அமைப்புக்கள், இறுதியாக நிபுணர்கள் குழு அறிக்கையின் பின் ஒப்புக்காவது தலையசைக்கும் ஐநா, போன்றவற்றை சமாளிப்பதற்கு சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளையும் ஸ்ரீலங்கா தந்திரமாக கையாளுகிறதென்பதையும் எவரும் மறுக்கமுடியாது.

சீனாவைப்பொறுத்தவரை பதற்றம் இல்லாத ஒற்றை இலங்கையை சீனா அதிகம் விரும்பக் காரணம் தடையற்ற தனது ஆளுமையை நிலைநிறுத்தும் கடல்ப்போக்குவரத்து, இந்து மாகடலில் தனது கடல்ப்படையை விஸ்தரிப்பதற்கான தந்திரம், இந்தியாவை பின்தள்ளக்கூடிய வணிகம்.

இலங்கைக்கு உதவும் நாடுகளில் சிலவருடங்களாக சீனாவே முதலிடத்தில் இருப்பதாக அமெரிக்காவின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. கடந்த ஆண்டும் இலங்கைக்கு உதவி செய்த நாடுகளில் சீனாவே முதலிடத்தில் இருந்திருக்கிறது. இலங்கைக்குக் கிடைத்த வெளிநாட்டு நிதிகளில் 55 சத வீதமான உதவி சீனாவிடமிருந்தும், அடுத்து 30 வீதமான உதவித் தொகை ஜப்பானிடமிருந்து கிடைத்துள்ளது.

அண்மையில் வெளிவிடப்பட்ட அமெரிக்க அறிக்கை ஒன்றில், சீனா இந்தியக் கடற்பரப்பில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்புகிறது என்றும், இந்தியாவின் அண்டை நாடொன்றில் குறிப்பாக இலங்கையில், சீனா தனது கடற்படைத் தளம் ஒன்றை அமைக்கவுள்ளதாகவும் தெரியவருகிறது.

சீனாவுக்கு சாதகமாக இருக்கும் இன்னுமொரு அம்சம் ஸ்ரீலங்காவுக்கும் சீனாவுக்குமிடையிலான மதரீதியான ஒற்றுமை.

ஈழத்தமிழருக்கும் சீனாவுக்கும் பெருத்த தொடர்பு எதுவும் கிடையாது. தமிழ் இனம் என்று சீனா சிந்திப்பதாக இருந்தாலும் இந்தியாவில் வாழும் தமிழர்கள்தான் சீனாவுக்கு நினைவுக்கு வரக்கூடும். இந்தியர்களை நினைத்தாலே சீனாவுக்கு ஆகாது.

சீனா இந்தியாவுடன் எப்போதும் முறுகல் நிலையில் இருந்தே வந்திருக்கிறது. அதேகண்ணோட்டத்தில்த்தான் ஈழத்தமிழனையும் சீனா நோக்க முற்படும். எனவே சீனா அதிகப்படியான முக்கியத்துவத்தை சிங்களவனுக்கு கொடுப்பது அதிசயமானதுமல்ல. கூடுதல் இலாபமாக சீனாவின் முத்துமாலை இந்து சமுத்திர கடல் வியூகத்தின் ஒரு புள்ளி முத்து, ஸ்ரீலங்கா தீவு, என்பதும் ஆய்வாளர்களின் கருத்து.

அம்பாந்தோட்ட தொடங்கி கச்சதீவுவரை உள்ள கடல்ப்பிராந்தியத்தில் சீனா தனது கையை அகல விரித்துவிட்டது. இந்த நடவடிக்கையை தடுப்பதற்கு இந்தியாவால் இதுவரை எதுவும் முடிந்திருக்கவில்லை. தமிழ்நாட்டிலிருந்து சில சக்திகள் அதுபற்றி பேசினாலும் ஊமையான இந்திய மத்திய அரசு காதில் வாங்கியதாகவும் தெரியவில்லை.

ஸ்ரீலங்காவின் அன்னியோன்யமான இராசதந்திரத் தொடர்பெல்லாம் வெளிப்படையாக சீனாவுடன் மிக ஐக்கியமாக இருக்கிறது. பணபலம் ஆயுதபலம் என்று பார்த்தாலும் சீனாவுக்கு கிட்ட இந்தியாவால் இலகுவில் நெருங்கமுடியாத சூழலும் உண்டு.

இந்தியாவை ஸ்ரீலங்காவிலிருந்து முற்றாக வெளியேற்றாமல் ராஜபக்க்ஷ விட்டு வைத்திருப்பதற்கு இருக்கும் ஒரே ஒரு பிடிமானம் ஈழ படுகொலையில் பொறுத்த நேரத்தில் இந்தியா தன்னிச்சையாக நுழைந்து கைகோர்த்துக்கொண்டு கொள்ளி சொருவிய கூடுறவு நன்றி ஒன்று மட்டுமே.

இந்தியாவை ராஜபக்க்ஷ வெளியேற்றினாலும், அல்லது இந்தியா தானாக வெளியேறினாலும் நஸ்டம் நெருக்கடி இரண்டும் இந்தியாவுக்கே. ஸ்ரீலங்காவின் உள் விவகாரத்தில் இந்தியா கடுமை காட்டுமாகவிருந்தால் ஸ்ரீலங்கா முற்றுமுழுதாக சீனச்சார்பாகிவிடும். இந்தியாதான் மறைமுகமான ஈழப்படுகொலைச்சூத்திரதாரி என்ற உண்மையை உலகத்துக்கு ஸ்ரீலங்கா போட்டுக்கொடுக்கவும் தயங்காது.

இச்சிக்கலிலிருந்து இந்தியா தப்பவேண்டுமானால் நோகாமல் காய் நகர்த்த வேண்டிய தந்திரம்தவிர வேறு வழியுமில்லை. பிள்ளையார் பிடிக்க குரங்காக மாறிய திரிசங்குநிலை இந்தியாவுக்கு. அத்துடன் இலங்கை விடயத்தில் இதயசுத்தியுடன் தமிழருக்கான நியாயமான தீர்வை இந்தியா ஒருபோதும் விரும்பியதுமில்லை.

தமிழர் தரப்புடன் இந்தியா நல்லுறவை பேணியிருந்தால் படுகொலையும் நடந்திருக்க வாய்ப்பில்லை சீன ஆக்கிரமிப்பும் தடுக்கப்பட்டிருக்கும். தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள் அதுபற்றி சிந்திக்கவில்லை. குடும்ப பதவியையும் பணத்தையும் குறியாக கொண்டிருந்தனரே தவிர பிராந்திய நலனில் முனைப்புக்காட்டவில்லை.

தமிழ்நாட்டின் துணையோடு அவசரக்குடுக்கையாக இனப்படுகொலையில் கைகோர்த்துக்கொண்டதால் ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் இந்தியா இருப்பது சீனாவுக்கு தெரியாததுமல்ல. இந்தியாவின் இரட்டை வேடமும் அரசியல் பலவீனம் அனைத்தும் அறிந்ததால்த்தான் எந்தவித அலட்டலும் இல்லாமல் தனி இராசதானியாக ஸ்ரீலங்காவுக்குள் பல பில்லியன் டொலர் முதலீட்டை நீண்டகால அடிப்படையில் சீனா செய்திருக்கிறது.

ஐநா, அமெரிக்கா, இங்கிலாந்து, போன்ற சக்திகளையே அவமதிக்குமளவுக்கு நடந்துகொள்ளும் ராஜபக்க்ஷ, இந்தியாவுக்கு பயந்து பணிந்து நடந்துகொள்ளுவார் என்பதெல்லாம் இல்லை. இன அழிப்பு யுத்தத்தின்போது இந்திய ஆட்சியாளர்கள் கூட்டுச்சேர்ந்து பாதகம் செய்தவர்கள் என்பதால் அவர்களும் குற்றவாளிகளே. இது ராஜபக்க்ஷவுக்கு நன்கு தெரியும்.

என்றைக்கு ராஜபக்க்ஷ போர்க்குற்றவாளியாக சர்வதேச நீதிக்கூண்டில் ஏறுகிறாரோ மறுநிமிடம் இந்தியாவுக்கும் அனுட்டக்குற்றம் ஆரம்பிக்கும் என்பது ஆய்வாளர்கள் தாமதமாகவேனும் புரிந்துகொள்ளுவார்கள்.

இன்று ஈழத்தின் சாபம் இந்தியாவின் ஆட்சி கலையும் அளவுக்கு காங்கிரஸை உலுக்கிக்கொண்டிருக்கிறது, ஊழல்க்குற்றச்சாட்டுக்கள் கூட்டாளிகள் மந்திரிகளை தாண்டி பிரதமர்வரை நீண்டுகொண்டு போகிறது. இந்நிலையில் இலங்கை உள்விவகாரத்தில் இந்தியாவால் எதுவுமே செய்ய முடியாது.

இப்போதைக்கு உள்நோக்கத்துடன் பம்மாத்து அரசியல் செய்து தந்தரமாக உலகத்தை ஏமாற்றிக் கொள்ளவேண்டிய தேவை மட்டுமே இந்தியாவுக்கு தவிர்க்க முடியாமல் இருக்கிறது.

கொடு வைரஸ் தாக்கத்தில் அகப்பட்ட நிலையில் ராஜபக்க்ஷ இருந்துகொண்டிருக்கிறார். அவருக்காக சீனா இந்தியா போன்ற வைத்தியர்கள் பரிந்துரைக்கும் மருந்தெல்லாம் தற்காலிகமான சிறு நிவாரணம்தான். நோயும் பக்கவிளைவுகளும் ராஜபக்க்ஷவை சூழ்ந்துவிட்டன திரும்புமிடமெல்லாம் சிக்கலும் தொந்தரவுகளும் அவரை தொடருகின்றன.

இந்த நேரத்தில் இந்தியா தனது நெருக்கடியான உள்நாட்டு அரசியல்ச்சூழ்நிலையில் தமிழ்நாட்டை திருப்திப்படுத்த முனைந்தால் ராஜபக்க்ஷ இந்தியாவை காட்டிக்கொடுத்துவிட்டு சீனாவுடன் இரண்டறக்கலந்துவிடுவார் என்பதால், சமீபத்தில் இந்திய தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்ட படுகொலைக்கள ஆவணப்படத்தைப்பற்றிய எதிர்வினை எதனையும் இந்தியா வெளிக்காட்டவில்லை.

ஈழப்படுகொலை ஆவணப்படத்தால் உலகில் தோன்றியிருக்கும் தொடர் நெருக்கடிகள் அதிர்ச்சிகள் ஸ்ரீலங்காவை மட்டுமல்ல இந்தியாவையும் செய்வதறியாது திகைக்க வைத்திருக்கிறது.

இப்படியான சூழ்நிலையில் ஸ்ரீலங்காவின் அபிவிருத்திக்கு கேட்காமல் உதவுவது, ஸ்ரீலங்காவின் சுத்துமாத்துக்களை கண்டுகொள்ளாமல் இருப்பது தவிர இந்தியாவுக்கு வேறு வழியுமில்லை.

உலக ஒப்புக்கு ஈழத்தின் இனப்பிரச்சினைக்கான தீர்வு பேச்சுவார்த்தை என்று போகாத ஊருக்கு வழி தேடி காலத்தை இழுத்தடித்து சிக்கலை தீர்க்கிறேன் பேர்வழி என்று சிக்கலை தீர்வுகண்ட்டுவிடாதபடி சிக்கலாகவே பார்த்துக்கொள்வது போன்ற இராசதந்திரத்தைத்தான் இந்தியா தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறது.

சோனியா தனிப்பட்ட ரீதியில் ஈழத்தமிழினத்துடன் பகைமை கொண்டிருந்தால், போரின்போது ஸ்ரீலங்காவுக்குள் சீனாவின் ஆக்கிரமிப்பு அடர்த்தியை குறைப்பதற்காகவும் முந்திக்கொண்டு கண்மூடித்தனமாக சர்வதேச கட்டுப்பாடுகளை புறந்தள்ளி ஸ்ரீலங்கா சிங்கள அரசுக்கு தடைசெய்யப்பட்ட ஆயுதங்களும் ஆலோசனைகளும் இராணுவ உதவியும் வழங்கி உதவியிருந்தார். அதற்கு தடையில்லாமல் வழிமொழிந்த சோனியாவின் நண்பனான தமிழ்நாட்டு மூத்த முதலை கருணாநிதியும், சிதம்பரம் போன்ற ஊழல்வாதி அமைச்சர்களும் பாதுகாப்பு ஆலோசகர்களும் ஒத்துழைப்பையும் கொடுத்திருந்தனர்.

பொய்வழி ஊர்போய் சேராது என்பர். இதை உலகம் இப்போ நன்கு புரிந்துகொண்டது. தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றமும் சர்வதேசத்தின் நிர்ப்பந்தங்களும் ஐநாவின் கட்டளைகளும் ஸ்ரீலங்காவை சற்றேனும் அச்சப்படவைத்திருக்கிறது. இருந்தும் இறந்து கிடந்த உடலை தூக்கிக்கொண்டு வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது. போலவே இந்தியாவும் ஸ்ரீலங்காவும் நடந்து கொடிருக்கின்றன.

சனல்4 தொலைக்காட்சியும், தமிழ்நாட்டு அரசியல் சூழ்நிலையும், புலம்பெயர் தேசத்து தமிழ் மக்களின் நெருக்கடிகளும் ஐநாவையும் மேற்குலகத்தையும் ஒரு இக்கட்டுக்குள் தள்ளி விசாரணை வளையத்துள் குற்றவாளிகளை கொண்டுவரும் பொறி உருவாகியிருக்கிறது.

இந்த பொறி வேகத்தை உடைப்பதற்கான முதல் உத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு புலிகளால் ஆபத்து. என்ற விசமப்பிரச்சாரத்தை அவிழ்த்துவிட்டு ஈழத்தமிழினத்திற்கும் தமிழக முதல்வருக்கிடையில் இடைவெளி ஏற்படுத்தி திசை திருப்பும் முயற்சி நடைபெறுகிறது.

இதன் பின்னணியில் இந்திய மத்திய அரசின் சதியும், இந்திய புலனாய்வு அமைப்பான றோவும், இந்திய மத்திய அரசின் பாதுகாப்புதுறை newsஆலோசகர்கள் சிவ்சங்கர் மேனன் போன்றோரும், சில பச்சோந்தி மந்திரிகளும் இருக்கலாம் என சிந்திக்க இடமிருக்கிறது.

தமிழகத்தின் முன்னைய ஆட்சியின் ஐந்துவருட கால கருணாநிதியின் கபட ஏமாற்று திருகுதாளம், அனைத்தையும் இன்றய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நன்கு கவனித்து வந்திருக்கிறார். ஈழ குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததால் இன்று திமுக நிர்வாணமாக்கப்பட்டு தெருவில் நின்று படும் அவமானம் ஜெயலலிதா அவர்களுக்கு புரியாததுமல்ல. தமிழகமக்களின் எண்ண ஓட்டத்தையும் ஈழமக்களின் பிடிமானமற்ற அவலநிலை நியாயத்தையும் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நன்கே அறிந்தும் வைத்திருக்கிறார்.

இந்நிலையில் புலிகளின் பெயரை வைத்து புளுகி ஜெயலலிதா அவர்களை கிலி கொள்ள வைப்பதெல்லாம் சாத்தியம்தானா என்பதை தப்புமேல் தப்புச்செய்யும் சம்பந்தப்பட்டவர்கள் தாமதமாகவே புரிந்துகொள்ள நேரும்.

சிங்கள இனவாதிகளின் இன்றைய முதன்மையான விரோதிகள் சனல்4 தொலைக்காட்சியும் தமிழ்நாடும் என்பதாகவே நகர்வுகள் காட்டுகின்றன. அவைதான் ஈழத்தமிழினத்துக்கு ஆதார பலம் என்பதையும் ஈழத்தமிழர் செயற்பாட்டாளர்கள் உணர்ந்து செயற்படும் காலம் இது.

இதுவரை ஐம்பது வருட காலமாக கொடூரமான வதைக் காட்சிகளை பார்த்ததும் கருத்து சொல்லிக்கொண்டிருந்த ஐநாவுக்கும் சர்வதேசத்திற்கும் சனல்4 தொலைக்காட்சி குற்றவாளியை தண்டிப்பதற்கு ஆதார வழியை ஆவணமாக காட்டியிருக்கிறது. ஐநா நிபுணர்குழுவின் அறிக்கை சத்தியக்கடதாசியாக சாட்சி சொல்லுகிறது. மீதியை புலம்பெயர் தேசங்களில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் தமிழர்தரப்பு ஒற்றுமை குலையாமல் வீரியமான் வழியில் படுகொலைக்குற்றவாளியை கழுவில் ஏற்ற முதலாவதாக முயலவேண்டும்.

அடுத்ததாக தென்சூடான் தனி அரசு மலர்ந்ததுபோல் தமிழீழம் எவரும் தடுக்கமுடியாமல் தானாக மலரும்.


ஈழதேசம் இணையத்திற்காக.
கனகதரன்.

நன்றி ஈழதேசம்.

Sunday, July 3, 2011

= கரும்புலிகள் காவிய நாள் ஜூலை, 05, 2011=

= கரும்புலிகள் காவிய நாள் ஜூலை, 05, 2011=

karumpulikalகால வயல்ப் பரப்பில்
கதிரியக்கம் ஒன்று
கரவெட்டியில்.
ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தாறின்
ஜனவரித் திங்கள், ஒன்றில்,
ஓங்காரச் சுடராக ஒளிர்ந்து
பாலனாக பிறந்தபோது,
யாரும் நினைத்திருக்கவில்லை-அது
உலக அதிசயமாகுமென்று.

ஜூலை ஐந்து எண்பது ஏழில்
இடி முழக்கத்துடன் பிரளயமாக
இரவை பகலாக்கி
காலப்பதிவாகிய
அந்த அகோர அதிர்வு,
எனக்கும் என் உறவுகளுக்கும்
வசந்தம் வேண்டும் என்பதற்காக.

இருபது வருட இளமையை
விடுதலைக்கு இரையாக்கி
இரத்த சகதியாகி, தனலாகி
தற்கொடை சந்தனமாகுமென்று
கனவில்க்கூட எவரும் நினைக்கவில்லை.

மெல்லிய மனித உணர்வனைத்தையும்
வல்லினமாக்கி,
"மில்லராய்"
எதிரியின் கோட்டத்தை
ஒரு நொடியில் உலுக்கிய
அந்தக் கதிரியக்கம்,
தன்னலமில்லாமல் தன்னை மறந்து
உலகை திரும்பி பார்க்க வைத்தது.

தமிழ் இனத்தின் வசந்தத்துக்காக
வல்லிபுரம் பெற்றெடுத்த வசந்தன்
"மில்லராய்" மீளாத் துயில் கொண்ட நாள்.
கரும்புலி என்ற பரிமாணத்தை
காவியமாக்கி கல்வெட்டாக்கிய நாள்
பூமி உருண்டையில்
புள்ளியாய் இருந்த மாங்காய்த் தீவை
மலையாக உலகிற்கு காட்டிய வேள்வி நாள்,

நான் இருக்கும்வரை-என்
சந்ததி இருக்கும்வரை
உலகம் இருக்கும்வரை
தற்கொடையான
"மில்லர்" என்ற மாபெரும் கதிரியக்கம்,
நீக்கமற நிலையாக
தமிழர் நெஞ்சத்தில் நிறைந்திருக்கும்,

வான நட்சத்திரக் கூட்டத்தில்
வித்தியாசமான துருவ நட்சத்திரமாக
நேர் கோட்டில் நின்று
ஈழம் நோக்கி
நிச்சியம் ஒளி பகர்ந்து கொண்டேயிருக்கும்.

பால் பழம் படைக்காவிட்டாலும்
வெஞ்சினத்தோடு போராடி
மண்ணோடு விதையாகி வேராகி
விடுதலை தேடிய மறவர்களின்
நெஞ்சத்தை, உணர்வுடன்
நினைந்து போற்றுவோம்.
எமது சிறுமையான வஞ்சகத்தை மறந்து
நேர்வழிக்கான பாதையை
நிச்சியம் அவர்கள் காட்டுவார்கள்.

>ஊர்க்குருவி<

நன்றி ஈழதேசம் இணையம்.