"ட்ரினிற்ரி ஈவன்ஸ்"   நிறுவனமும் இலங்கை அரசின் கைக்கூலிகளும் இணைந்து "நவம்பர்"  மாவீரர் தினத்திற்கு பக்கத்தில் போட இருந்த கறுப்புக் கோடு போட முடியாமல் முடங்கியிருக்கிறது.
இதில் பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை.  கவலைப்படுவதற்கும் எதுவும் இல்லை.

ஒன்றுக்கு ஏதோ ஒன்றுக்கு ஒவ்வாதமையினால் காலநிலையை (காலம்)  காரணம் காட்டி அந்த நிகழ்ச்சி இயற்கையின் பெயரால் தடுக்கப்பட்டிருக்கிறது.

வெளிப்படை கவிஞன்,  கவியரசு கண்ணதாசன் அவர்களின் அமரத்துவமடையாத "நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்துவிடும் என்ற பாடலை அமைதியுடன் அனுபவித்து கேட்டு இன்றைய நிதர்சனத்தையும் நினைவு கூரமுடியும்.

தமிழ்நாடு  காலாகாலத்துக்கும் ஒவ்வொரு கலைஞர்களை உச்சாணிக்கொம்பில் வைத்து கொண்டாடித்தான் வந்திருக்கிறது.  இந்த வரிசையில் ஜி ராமநாதன், டிஆர் பாப்பா,  திரை இசை திலகம், கேவி மஹாதேவன்,   மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன்,  அதன்பின் 80 ,90 களில் பிசியாக இருந்த  இசையமைப்பாளர் இளையராஜாவும் ஒரு காலகட்டத்தை அலங்கரித்தவரே,   இன்று ஏஆர் ரஹுமான் உச்சத்தில்,   நாளை எவரோ காலம்தான் அதனையும் தீர்மானிக்கவேண்டும்.

ஈழத்தமிழர்கள் மிகவும் நேசித்த இசையமைப்பாளர் இளையராஜா மாவீரர் காலத்தில் குறுக்கே  கோடுபோட முன்வந்தது ஈழத்தமிழர் மனங்களில் மிகுந்த வேதனையை அளித்தது.  இதனால் துரதிர்ஷ்டவசமாக இளையராஜாவுக்கும் ஈழத்தமிழர்களுக்குமிடையே ஒரு பலமான வெடிப்பை காலம் ஏற்படுத்திவிட்டது.

கலைஞர்கள் இசைஞர்கள் என்றாலே அதிகமானவர்களுக்கு ஞானச்செருக்கும் வித்தக காய்ச்சலும் அவர்களை ஆட்கொண்டு அவர்களை அழித்துவிடுவதை புராணகாலந்தொட்டு வரலாறுகள் குறிப்பிடுகின்றன.

கம்பர் காலத்து சீழ்த்தலை சாத்தனார், காதுவெட்டி புலவர், முதற்கொண்டு திருவிளையாடல் படத்தில் பாண்டியன் சபையில் தலைக்கனம் கொண்டு வீம்பு பண்ணிய ஹேமநாத பாகவதர் என்ற புல்லவர் வரை வித்தககாய்ச்சல் பீடித்து ஞானச்செருக்கில் காலமாகி காணாமல் போனவர்களாகவே இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

தலைக்கனம் இல்லாமல் சமூகத்துடன் ஒத்துப்போன கலைஞர்கள் புலவர்கள்,   அமரத்துவம் அடையாமல் என்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

இலங்கைக்கு வெளியே அதிகமான ஈழத்தமிழர்கள் வாழும் நாடாக கனடா இருந்துவருகிறது.  அங்கு வாழும் தமிழர்கள் சுகமான வாழ்வு வாழ்வதற்கும்,   நாடுகடந்து வெளிநாடு போவதற்கும் ஈழ போராட்டம் ஒரு காரணமாக இருந்தது,    போராட்டம் என்று வரும்போது அதன் கதாநாயகர்கள்  மாவீரர்களே,  என்பதை அனைவரும் மீண்டும் ஞாபகப்படுத்திப்பார்த்தால் இதயம் இருப்பவர்கள் ஒருமுறை கூனிக்குறுக நேரிடும்.  இதற்கு இன்று கனடாவில் உயரத்தில் இருக்கும் ஈழத்தமிழர்களின் பெருத்த தொழில் நீறுவனங்களும் விதிவிலக்காக இருக்க முடியாது.

சென்ற மாதம் கச்சேரியின் முன்னேற்பாடு காரணமாகவும்,   விளம்பரத்தின் பொருட்டும் இளையராஜா கனடா வந்திருந்தார்.  கனடாவாழ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவருக்கு அழகிய பெண்களை பதுமைகளாக இருபுறமும் நிறுத்தி சாமரம் வீசி வரவேற்பளித்தனர்,  மாலை பூச்செண்டுகளுடன் ஏற்பாட்டாளர்களால் இராச மரியாதை கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.  இளையராஜா கனத்தின் உச்சத்தில் நின்று வாழ்த்திப்பேசியவர்களின் வரவேற்புக்கு ஹேமநாதரின் பாணியில் பதிலளித்தார்.

பத்திரிகையாளர்களுக்கு பதிலளிக்கும்போது ஏதோ ஒன்றை தொட்டு ஒரு நெருடல் அவரிடம் அடிக்கடி காணக்கூடியதாக இருந்தது.  அந்த கலவரத்திலிருந்து வெளிவரும் நோக்கோடு கம்பரின் பாடல் ஒன்றை நினைவுகூர்ந்து ஏதோ ஒன்றை நியாயப்படுத்துவதாகவே அவரது பேச்சு அமைந்திருந்தது.    "உன்னை உள்ளபடி அறியோம்,  உலகை உள்ள திறம் அறியோம்,   முன்னை அறியோம்,   பின்னை அறியோம்,   எல்லாம் அவன் செயல் என்று நியாயப்படுத்தினார்",

அந்த நியாயப்படுத்தல் இன்று அவன் செயலால்    (!)      நிதர்சனமாகியிருக்கிறது,   எதையும் எந்த சக்திக்கும் அப்பாற்பட்டு,  பணபலம்,   புகழ் பலம்,   விண் முட்டிய விளம்பரம்,   அனைத்தையும் தாண்டி ஏதோ ஒன்று அனைத்தையும் வரையறுக்கிறது அது காலத்தின் கட்டளையாகவும் இருக்கலாம் இயற்கையின் சீற்றமாகவும் இருக்கலாம் மாவீரர்களின் மாசற்ற தியாகத்திற்கு இயற்கை கொடுத்த மரியாதையாகவும் இருக்கலாம். புனித கார்த்திகை மாதத்தில் ஒரு களியாட்ட நிகழ்வு இயற்கை சீற்றத்தால் தடுக்கப்பட்ட்டிருப்பதாக வாக்குமூலம் கொடுத்திருக்கின்றனர்,,  எது எப்படியோ?

இளையராஜா அவர்களின் வாய்க்கு சர்க்கரை போடவேண்டும். 

கார்த்திகையில் களியாட்ட நிகழ்ச்சி நடத்த மனிதம் தடுத்தபோது மனிதன் ஏற்றுக்கொள்ளவில்லை.  இயற்கை சம்மதிக்க மறுத்திருக்கிறது.  எவராலும் எதுவும் செய்ய முடியவில்லை.

ஈழதேசம் இணையத்திற்காக ஊர்க்குருவி.