Friday, September 28, 2012

தேசியத்தலைவரின் சிந்தனை ஈழ அரசியலை சர்வதேசமயமாக்கியது. உள்ளூர் அரசியல் தேர்தலில் போட்டியிட வைத்தது.

ஐநா சபையில் அமெரிக்கா முன்மொழிந்து கொண்டுவந்த தீர்மானத்தின் ஒரு வருடக்கெடுவை மனதில்க்கொண்டு,  அனைத்தையும் சரிக்கட்டி சர்வதேசத்திற்கு கணக்கு காட்டுவதற்காக ஸ்ரீலங்கா,
இந்திய அரசாங்கங்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட அரசியல் விளையாட்டுக்களில் கிழக்கு மாகாணத்துக்கான மாகாணசபைத் தேர்தலும் ஒன்று.

இப்படியாக ஒரு பொறிக்கிடங்கு ஸ்ரீலங்கா, இந்திய அரசுகளால் திட்டமிட்டு வெட்டப்பட்டிருக்கிறது அதற்குள் தமிழ் அரசியற்சக்திகள் எவரும் விழுந்துவிடாது கவனித்து செயற்படுங்கள் என்று தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் பல முனைகளிலிருந்தும் வழி வழியே எடுத்துக்கூறியும், அனைத்தையும் உதாசீனப்படுத்திவிட்டு,   குறிக்கோள் திட்டமிடல் எதுவுமில்லாமல்,  போலியான ஒரு மாயை தேர்தலில் தலையாரியான தமிழர் தேசியக்கூட்டமைப்பு பங்குபற்றி ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கைகளை ஆதரவாக தாங்கிக்கொடுத்துவிட்டு இந்திய அரசாங்கத்தை திருப்திப்படுத்திய மகிழ்ச்சியுடன் அனைத்து தாள வாத்தியங்களையும் சல்லரிகளையும் கட்டிக்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைக்காக  தனது பரிவாரங்களுடன் கொழும்புக்கு திரும்பிவிட்டது.

கொழும்பு வந்த கையுடன் விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று காட்டும் முகமாக தவறுகளையும் வெறுப்பையும் முஸ்லீம் காங்கிரஸ் பக்கம் திருப்பி விட்டு திருப்திப்பட்டுக்கொண்டதுடன்.  மாற்றுக்காக கிளிநொச்சியில் ஒரு மக்கள் பேரணியையும் நடத்தி தமது ஆளுமை மற்றும் புலமையை ஆகாச அறிக்கைகள் மூலமும் நேர்காணல்களாகவும் வெளிப்படுத்தி கூட்டமைப்பு தனது தரப்பை நியாயப்படுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறது.  கூட்டமைப்பின் இந்த நியாயப்படுத்தல்கள் மூலம் அவர்களுக்கு ஏதோ ஒன்று புலப்பட்டிருக்கிறது என்பது மட்டும் கிளிநொச்சி பேரணி மூலம் உணரக்கூடியதாக இருக்கிறது.

தமிழர் தேசியக்கூட்டமைப்புக்கு எப்படிப்பட்ட கொள்கை கோட்பாட்டு சித்தாந்தம் நட்பு வட்டம் இருக்கிறதோ அதேபோல முஸ்லீம் காங்கிரஸுக்கும் சில அரசியல்த்தந்திரங்கள் கொள்கைச்சித்தாந்தங்கள் நட்பு வட்டம் இருக்கக்கூடும்.  அது தவிர்க்க முடியாததும் மாற்றமுடியாததுமாகும். அது அவர்களை பிரதிநிதுத்துவப்படுத்தும் மக்களின் மனநிலை, கொள்கை சார்ந்தது.   அவரவர் தமக்கு ஏற்ற புறச்சூழல் சார்ந்து அரசியலில் பயணிப்பதே மிகச்சரியான இராசதந்திரமாகவும் அரசியல் ஞானமாகவும் இருக்கும்.

தமிழர் தேசியக்கூட்டமைப்பு எப்படி இந்தியாவை சார்ந்து நம்பிக்கையுடன் அரசியல் செய்ய முடிகிறதோ அதேபோல முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் தலைமைகள் என்றைக்கும் தமிழர்களின் அரசியல் கட்சிகளின் சித்தாந்தங்களுடன் சார்வதை விடவும் பெரும்பான்மை சமூகத்துடன் சார்ந்து அரசியல் நடத்துவதையே கொள்கையாக கொண்டவர்கள் முஸ்லீம்களின் அரசியற் சூழலும் முஸ்லீம்களின் தலைமைகளின் போக்கும் அப்படிப்பட்டதாகவே இருந்துவருகிறது.  அதுவே அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்றதாகவும் காணப்படுகிறது.  சிங்களத்தலைமைகள் இப்பேற்பட்ட பலவீனங்களை நன்கே உணர்ந்து சாதுரியமாக காய் நகர்த்தி அரசியல் செய்து வருகின்றன.  இது இன்று நேற்று இலங்கை அரசியலில் நிகழ்ந்துவரும் அதிசயமுமல்ல. இந்த யதார்த்தத்தை உணராதவரைக்கும் எவரும் இலங்கையில் அரசியல்வாதிகளாக இருக்கவும் முடியாது.

நாட்டில் அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்கு ஏற்புடையாத (ஓரளவேனும்) அமெரிக்க தீர்மானம் சுட்டிக்காட்டும் பரிந்துரைகளில் சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மிக முக்கியமான விடயங்களான இடம்பெயர்ந்த மக்களுக்கான சொந்த இடத்தில் மீழ்குடியேற்றம். சந்தேகத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பொது மக்களுக்கான முறைப்படுத்தப்பட்ட நீதி விசாரணை, காணாமல் போனவர்கள் சம்பந்தமான முறைப்பாடுகளுக்கு சரியான நிவாரணம்,  இறந்துபோனவர்களுக்கான இறப்புச்சான்று அவற்றிற்க்கான முறைப்படுத்தப்பட்ட அறிக்கை.  இராணுவ நிலைகள் திரும்பப்பெறுதல் பற்றிய ஒழுங்கமைப்பு, இவை அனைத்தும்  தேர்தலுக்கு முன் நிறைவு பெற்றிருக்கவேண்டும்.  இவைகள்தான்  தேர்தல் ஒன்றுக்கு தயாராவதற்கு முன் செய்ய வேண்டிய களப்பணிகள்,.  ஆனால் எதுவுமே எவாராலும் தொட்டும் பார்க்கப்படவில்லை. அறிக்கைகளும் பயணங்களும் மட்டுமே தொடர்ந்து ஈழ தீர்வு திட்டமாக முன்னெடுத்து கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.  இறுதியாக கிழக்கு மாகாணத்துக்கான தேர்தலும் நடந்து முடிவடைந்துவிட்டது.

அதிகாரமற்ற, குறிக்கோளில்லாத மாகாணசபைக்கான மந்திரி சபை நேற்றய முந்தினம் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராஜபக்க்ஷ முன்னிலையில் தெரிவு செய்யப்பட்டு பொறுப்பு இல்லாத பதவிகள் வழங்கப்பட்டு சர்வ தேசத்தை ஏமாற்றுவதற்கான முதற்கட்ட செயற்பாடுகள்  அனைத்து இனிதே நிறைவு பெற்றுவிட்டன.

ஸ்ரீலங்கா அரசும் அந்நாட்டின் அரசியலும் ஏற்கெனவே செல்லும் பாதை மிகவும் பிழையானது என்று தெரிந்தும் ஏதோ ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் தேர்தலில் களம் இறங்கியது சம்பந்தர் குழு, ஆனால் குளத்தை கலக்கி பிராந்துக்கு இரை குடுத்த கதையாக நிகழ்வுகள் நிகழ்ந்து முடிந்திருக்கின்றன. நடந்தவற்றை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு சரி பிழைகளை சிந்தித்து அடுத்து என்னெ செய்யலாம் எங்கு தவறு நடந்தது என்பதைப்பற்றி யோசித்து காரியத்தில் இறங்குவதை விட்டுவிட்டு அடுத்த நடவடிக்கைக்கு நாள்க்குறிக்க தலைமைச்செயலகம் டில்லிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதான் இன்றைக்கு ஈழத்தமிழனுக்கு வயிற்றை கலக்கும் விடயமாக மாறியிருக்கிறது.

மலையோ மடுவோ, உக்கலோ வத்தலோ  அனைத்தையும் சீதூக்கி பார்த்து வியூகம் வகுப்பதே தேர்ந்த அரசியலுக்கு அழகு, தொலைநோக்கு பார்வை அல்லது மதிநுட்பம் என்று அதைத்தான் சொல்லிக்கொள்ள முடியும்.  அடுத்து தன்னுடைய பலம் என்ன பலவீனம் என்ன என்பதை வரையறுத்து உணர்ந்து கொள்ளவேண்டும். அவற்றை உணராமல் அடுத்த வீட்டுக்காரன் முண்டுகொடுப்பான் தாங்கிப்பிடித்து கரை சேரலாம் என்பதெல்லாம் விவேகமுமல்ல தமிழர்களின் இன்றைய பொறிநிலை அரசியற் சூழ்நிலைக்கு அது ஏற்றதுமல்ல. கடந்தகால பாடங்கள் அனைத்தும் அதையே தொடர்ச்சியாக படம்பிடித்துக்காட்டுகின்றன.

எவற்றையும் சீர்தூக்கிப்பார்த்து, மதி நுட்பத்துடன் அரசியல் ஆற்றை கடக்கும் சித்தம் + விவேகம்  உள்ளவர்கள்தான் ஈழ அரசியல் போன்ற சிக்கல் நிறைந்த சிரமமான அரசியலில் ஸ்ரீலங்கா ஆட்சியாளர்கள் போன்றோரை வென்று சாதிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.

தேசியத்தலைவரின் கட்டுப்பாட்டில் ஈழத்தாய் நாட்டின் அரசியல் இருந்த கால் நூற்றாண்டுக்கு மேலான காலங்களில் அந்த ஆளுமை நிறைந்த மதிநுட்பம்தான் சர்வ தேச உலகத்தை இவ்வளவு தூரம் ஈழ அரசியலுடன் இணைத்து இந்த இடத்துக்கு நகர்த்தி வந்திருக்கிறது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம்.  அந்த அரசியல் பாடத்தை மேலோட்டமாக ஒருமுறை நோக்கினாலே நல்லது எது தீது எது என்பது புரியவரும். இன்றைய நிலையில் ஈழ அரசியலில் இட்டு நிரவமுடியாத ஒரு வெற்றிடம் காணப்படுகிறது.  இருந்தும் தேசியத் தலைவரால் இனங்காட்டப்பட்ட தமிழர் தேசிய கூட்டமைப்பையே   ஈழத்தமிழ் மக்களும்,   ஈழத்தமிழர்களின் உருப்படியான அரசியல் சக்தியாக சர்வதேசமும் அங்கீகரித்திருக்கிறது.  அந்த வகையில் மாய தரகர்களின் வலைக்குள் சிக்கி சீரழிந்துபோகாமல் தமிழர்களுக்கான தேசிய அரசியலை சரியாக நகர்த்தி செல்லவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு சம்பந்தர் தலைமையிலான தமிழர் தேசியக்கூட்டமைப்பு ஒன்றுக்குத்தான் இருப்பதாக இப்போதைக்கு வரையறுக்கப்பட்டிருக்கிறது.  இவைகளை அறிந்துகொள்ளாத மூத்த அரசியல்த்தலைவரான சம்பந்தன் அடுத்த நடவடிக்கையாக என்ன செய்யப்போகிறார் என்பது தமிழர்களின் பில்லியன் டொலர் கேள்வியாக எழுந்து நிற்கிறது.

அடுத்து வடக்கு மாகாணத்துக்கான தேர்தலை 2013 பெப் மாதமளவில் நடத்தவேண்டுமென்றும்,  ராஜபக்க்ஷவின் அரசாங்கம் பென்னம் பெரிதாக தீர்வுத்திட்டம் ஒன்றை ஒளித்து வைத்திருப்பதாகவும் அனைத்திலங்கை ஒட்டுக்குழுக்களின் தலைவர் டக்கிளஸ் தேவானந்தர் உலகத்தை குளப்பும்விதமாக தன்பாட்டுக்கு அறிவித்திருக்கிறார். அந்த தேர்தலில் தான் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடப்போவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். அதுவும் நடக்கக்கூடிய ஒன்று என்பதே சாதாரணமாக அரசியால் தெரிந்தவர்களின் காருத்துமாகும். சூழலும் அதை நோக்கித்தான் பயணிப்பதாகவும் தெரிகிறது தேசியக்கூட்டமைப்பு சரியான நிலை எடுக்கத்தவறின் நிலமை கைமீறி போகவும் வாய்ப்புண்டு

இதற்கிடையே  சென்றவாரம் இந்திய மத்திய பிரதேசத்தில் புத்தமத பல்கலைகழகம் ஒன்றின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு  சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி ராஜபக்க்ஷவிடம்  இலங்கையில் உள்ள தமிழர்கள் மதிப்புடனும்!?, மரியாதையுடனும்!? வாழ அவர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டதாகவும் இந்திய இலங்கை கடற்பரப்பில் தமிழகத்து மீனவர்கள் கடல் எல்லையைக் கடக்கையில் அவர்களைத் தாக்குவதையும், கைது செய்வதையும் தயவுசெய்து விட்டுவிட்டு மனிதாபிமான முறையில் இலங்கை ராணுவத்தினர் நடந்துகொள்ள வேண்டும் என்று வேண்டி கேட்டுக் கொண்டதாகவும், தமிழகத்து மீனவர்கள் ஸ்ரீலங்கா இராணுவத்தால் தாக்கப்படுவது குறித்து இரு தரப்பு மீனவர் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்துவதே சிறந்தது என்று இருநாட்டு அதிகாரிகளும் ஒப்புக் கொண்டனர் அதன்படி செயற்படுவதே நல்லது என்று ராஜபக்க்ஷ கூறியதாகவும் இந்தியாவிலிருந்து வெளிவரும் ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இலங்கை இந்திய பிரச்சினை சம்பந்தமாக இந்தளவுதான் மன்மோகன் சிங் அவர்களின் வல்லமைக்குட்பட்டு ராஜபக்க்ஷவுடன் பேச முடிந்திருக்கிறது. இதேவேளை மன்மோகன் சிங் அவர்கள் தமிழர்களுக்கான உரிமை அனைத்தையும் பெற்றுத்தருவார் என்று தமிழர் தேசியக்கூட்டமைப்பு மூர்க்கத்தனமாக நம்புகிறது.. தமிழ்நாட்டின் கபட அரசியல்வாதி கருணாநிதியின் கொள்கைப்போக்கும் தமிழர் தேசியக்கூட்டமைப்பின் கொள்கைப்போக்கும் வெவ்வேறு தளங்களில் இருந்து புறப்பட்டாலும் இரு பக்கத்தின் நோக்கமும் சென்று சேரும் மையப்புள்ளியும் ஒரு இடமாக இருப்ப்பதால் ஈழத்தமிழன் இதை ஒருபோதும் நம்பத்தயாராக இல்லை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்து மன்மோஹனுடன் விருந்துண்டு திரும்பிய சில நாட்கள் கழிந்துள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒக்டோபர் 10 ஆம் திகதி புதுடில்லி வருமாறு இந்திய வெளிவிவகார அமைச்சசர் எஸ் எம் கிருஷ்ணா அழைத்துள்ளதாகவும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடானான சில சுற்று பேச்சுக்களில் பங்குபற்றுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு புதுடில்லி செல்ல இருப்பதாகவும் தெரிய வருகிறது.

பல்லாயிரம் இலட்சம் கோடி ஊழல் முறைகேடுகள், கூட்டணி கட்சிகளின் வெளியேற்றம்,  பொருளாதார வீழ்ச்சி,  மின்சார உற்பத்திக்கான வழி தெரியாத வக்கற்ற நிலை, விலைவாசி உயர்வு, வயோதிப அரசியல்வாதிகளின் விவேகமற்ற வழிநடத்தல், இன்ன பிற காரணங்களால்   இந்தியப்பிரதமர் மன்மோகனும் அவரது கட்சியான காங்கிரஸும் ஆட்சியை கலைத்துவிட்டு வீட்டுக்கு அல்லது சிறைக்கு போகும் நிலை இந்தியாவில் தோன்றியிருக்கிறது,  இருந்தும் மன்மோகன் அரசு இலங்கை பிரச்சினையை தீர்க்காமல் ஓயப்போவதில்லை என்பதில் மிகுந்த அக்கறையாக இருப்பதாக கருணாநிதி மற்றும் சம்பந்தன் ஐயா அவர்கள் மூலமும் பறை சாற்றிகொள்ளப்படுகிறது.

இலங்கை பிரச்சினையை தீராமல்  வைத்திருப்பதன்மூலம்  இந்திய    அரசுக்கு, காங்கிரஸ் கட்சிக்கு,     திராவிட கட்சிகளுக்கு ஏதோ    தொடர் நன்மை     ஒன்று இருக்கிறது என்பது மட்டும்      உணரக்கூடியதாக இருக்கிறது. அதை சம்பந்தன் ஐயா அவர்கள் உணரவேண்டும்                   என்பதே ஈழத்தமிழர்களின் விருப்பம்.

ஈழத்தமிழர்களின் விடுதலை நோக்கிய அரசியல்ப்போராட்டம் இன்று சர்வதேச மயமாக மாற்றம் கண்டுவிட்டது. தமிழர் தேசியக்கூட்டமைப்பு இந்திய உதவியுடன் தேர்தல் மூலம் தீர்வை தொட்டுவிடலாம் என பழைய இடத்துக்கு வந்திருக்கிறது புலம்பெயர்தேசங்களில் உள்ள மக்கள் தினமும் ஒரு ஜனநாயக வெகுஜன போராட்டம் என்ற அளவில்  அரசியற் தீர்வை முன்வைத்து   தொடற்சியாக போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்றய தினம் பொங்குதமிழ் எழுச்சிக்கான போராட்டம் ஜெனீவாவை நோக்கி நகர்ந்திருக்கிறது.  இந்த இடத்தில்த்தான் ஒரு பெருத்த கேள்விக்குறி உருவாகியிருக்கிறது.  சர்வதேச அழுத்தத்தின்மூலம் தீர்வை பெற முடியுமா அல்லது ராஜபக்க்ஷவுடனும் மன்மோகனுடனும் கதைத்து தீர்வை எட்டிவிட மூடியுமா என்ற வினா தவிர்க்க முடியாமல் எழுந்து நிற்கிறது. இதை சம்பந்தன் ஐயா அவர்களின்  தலைமையிலுள்ள தமிழர்களின் கட்சியான தேசியக்கூட்டமைப்பு கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்றே நம்பலாம்.

ஈழதேசம் இணையத்துக்காக

கனகதரன்.

Tuesday, September 18, 2012

மிருக விதி..

3-1
எலிக்கு, எறும்புக்கு,,
பாம்பு, தேரைக்கு,
காட்டு மரத்துக்கு,
தேள், பூரானுக்கும்.
வாழ்வியல் தத்துவம் பற்றி
வாதாடுவதற்கு
சட்டப்படி அமைப்புக்கள் உண்டு.

எலி வளைக்குள் நீர் புகுந்துவிட்டால்,
பெருச்சாளி புகை இடுக்கில் சிக்கிக்கொண்டால்,
தவளை பாம்பை கௌவிக்கொண்டால்,
அவைகளை காப்பாற்ற
போர்க்கால அடிப்படையில்
தெருவில் இறங்கி போராட்டம் நடத்த
அரச அனுசரணையுடன்
அமைப்பு ரீதியாக
மனிதனுக்கு உரிமையுண்டு!

ஆனால்
பாவப்பட்ட மனித குலத்துக்கு மட்டும்
எதிர்மறையான புளக்கமே
வாழ்வியலில் சாத்தியம்
என்கிறது ஆளும் வர்க்கம்.

மானுடம் தவிர்த்தவற்றின்
வாழ்வின் சூட்சுமத்தை
அறிந்து கொள்ள மட்டும்.
ஐநா வும் அதிகார வர்க்கங்களும்
அனுதினமும்
பலகோடி பணம் செலவு செய்கிறது!

அவைகளுக்காக
மனிதாபிமானத்துடன்
பெருத்த வரையறை
விஞ்ஞான, அறிவியல் மேதாவிகளால்
உலக அரங்கத்தில் வகுக்கப்பட்டிருக்கிறது.

அடப்பாவி ஏழை மனிதா!
அவை
உனக்கு சற்றும் பொருந்தாது,
உணர்ந்துகொள் என்று
கூடங்குளம் படுகொலை சொல்லுகிறது.

தெரியாவிட்டால்,
காவல்த்துறையை,
கட்சி மேலாளர்களை
கேட்டு தெரிந்துகொள் என்று
புரிய வைக்கின்றனர்
ஆட்சியாளர்கள், கட்சி முதலாளிகள்.

நீ தேசியத்தை சொந்தமாக எண்ணும்வரை,
நீ ஏழை மனிதனாக இருக்கும்வரை,
உரிமையுள்ள
சுதந்திரவானாக சிந்திப்பது,
தண்டனைக்குரிய குற்றம்
என்பது பல இடங்களில்
மெத்த சரியாக உணர்த்தப்பட்டிருக்கிறது!

இருந்தும் நீ போராடுகிறாய்!!.

உரிமை எதுவும் உனக்கு சாத்தியமில்லை!
கனவில் வேண்டுமானால்
சுதந்திர மனிதனாக
ஆனந்தமாக வாழ்ந்து களித்துக்கொள்!
இப்படி
காவல்த்துறை இடித்துரைக்கிறது!

உனது மனைவி குழந்தைகளுக்கு
அணுவால் ஆபத்து என்றறிந்தால்
ஊரை விட்டோடிவிடு,
அல்லது
நகரத்து அரசியல் கட்சி ஒன்றில்
ஐக்கியமாகி தொண்டனாக கலந்துவிடு.
இல்லையென்றால்
பட்டணத்தில்
ரசிகர் மன்றம் ஒன்றை துறந்துகொள்.
இதுதான் மூத்த அரசியல்வாதிகளின்
முதலீடு என்கிறது தமிழகத்து
திராவிட அரசியல் வரலாறு.

சட்டத்தின் தாற்பரீகம் அறியாமல்,
உரிமை உள்ளதென்று நினைத்து
தெரியாத்தனமாக
தெருவுக்கு வந்தால்
பெருங்குற்றமாகிவிடும்
ஏமாந்து போகாதே!
என்பதை
பரமக்குடி போதித்து போனது.

மிருகவதை கொலைக்குற்றம்!
பிராணியை துன்புறுத்தினால்
சிறைத்தண்டனை!
மரம் வெட்டினால் தண்டனை!
உரிமைக்கு நீ போராடினால்
உயிருக்கு உத்தரவாதம் இல்லை
இதைத்தான்
முள்ளிவாய்க்கால் மெய்ப்படுத்தியது.

மிருகங்களுக்கான விதி உனக்கு பொருந்தாது!
நீ பொருமினால் அழிக்கப்படுவாய்
இதுதான்
சனநாயக சட்டமாக பகிரப்பட்டிருக்கிறது.

அதைத்தானே
இலங்கை, இந்திய சனநாயகமும்
மத்தியும், மானிலமும் எப்போதும்
மெத்த தெளிவாக சொல்லி வருகின்றன,
சாக்காட்டு சட்டங்களும் அதைத்தானே
வரையுறுத்தி நிற்கிறது.
அவற்றை பின்பற்றி வழிமொழிய
தேசத்திலும் ஆயிரம் அமைப்புக்கள்
போட்டி போட்டு நிற்கின்றன.

மானுடத்துக்கு
அது ஒரு காலமும் பொருந்தாது!
இருந்தும்
நீ போராடுகிறாய்!

அணு உலை வெடித்து ஆறாக ஓடினாலும்,
ஆற்றுநீர் கடலில் பாய்ந்து வீணாகி போனாலும்,
அப்பன், அண்ணன் கடலில் செத்தொழிந்தாலும்.
ஆற்றாமையில்
பிறப்பு உரிமையின் பேரால்
ஆர்பாட்டம் செய்யாதே!
உருக்குலைந்து போவாய்
என்றே வரையப்பட்டிருக்கிறது.

அடிப்படை உரிமை உனக்கு
கிடைக்கவில்லை என்றாலும்,
விலையேற்றத்தின் பளு
உன் கழுத்தை நெரித்தாலும்,
குழந்தைகள் பட்டினியால் செத்தாலும்,
வினைப்பயன் என்று எடுத்துக்கொள்.

ஆட்சியாளர்களின்
முறைகேடுகள் பற்றி
நீ ஆள் சேர்த்து பேசக்கூடாது.

ஊழல் முறைகேட்டை தட்டிக்கேட்டால்
உனக்குத்தான் வாழ்வு பழுதாகிவிடும்.
நாட்டு நலனென்று
நீ குரல் கொடுத்தால்
தனிமைப்படுத்தப்பட்டு
சோற்றுக்கு வழியில்லாமல்
செத்து போய்விடுவாய்.
காவல்த்துறையிடம் அகப்பட்டால்
கதை கந்தலாகிவிடும்.

உன் சமூகத்தை வழிநடத்தவும்
சீர்திருத்தம் பற்றி பேசவும்
யார் உனக்கு அனுமதி தந்தது?
என்ன  நடந்தாலும்
கேள்வி கேட்க
உனக்கு எந்த உரிமையுமில்லை!
ஏனென்றால்
நீ ஆட்சியாளர்களின் விருப்பத்திற்குரிய
விளையாட்டு பொருள்.
அத்துடன், நீ ஆறறிவு
மனிதன் என்பதை மறந்துவிடாதே!

உன்னை சுட்டு தள்ளினாலும்,
தூக்கில் மாட்டினாலும்,
கட்டிப்போட்டு அடித்தாலும்,
ஏன் என்று எவரும் கேட்கமாட்டார்கள்.
கேட்க சனநாயக சக்கரமும்
சட்டத்தின்  ஓட்டமும் ஒத்துவராது!
தட்டி கேட்டாலும்
தரித்திரமும்
தண்டனையும்  உன்னைத்தான் துரத்தும்!.

போபாலை திரும்பி பார்!
கும்பகோணத்தை சிந்தித்து பார்!
பரமக்குடியை கிரகித்து பார்!
சிவகாசியை அசைபோட்டு பார்!
முள்ளிவாய்க்காலை தள்ளி நின்று பார்!
மீனவர்களின் வாழ்க்கையை முழுதாக பார்!
பார்த்துக்கொண்டேயிரு!

மாற்றி
எங்காவது ஏழைக்கு நியாயம் கிடைத்ததாக,
அடக்குமுறைக்கு எதிராக,
அதிகார வர்க்கம் தண்டிக்கப்பட்டதாக,
ஊழல்வாதிகள் கழுவில் ஏற்றப்பட்டதாக
தகவலுண்டா தேடிப்பார்.

ஆனால்
"கொல்லப்பட்டபோதும்
நீ போராடிக்கொண்டிருக்கிறாய்.
அது ஒன்றுதான் உறுத்துகிறது",

மீறி
ஒருவேளை!
ஒரு நபர் விசாரணை கமிஷன் வந்தாலும்,
நவீன  சனநாயகத்தை புறந்தள்ளி
புதிதாக ஒன்றையும்
அனுமானித்து விடப்போவதில்லை.
சர்வ வல்லமையும்+ சனநாயகமும்
இதைத்தான் விதந்துரைக்கிறது!

போபர்ஸ் பீரங்கி ஊழல்
அதர்ஷ குடியிருப்பு ஊழல்
கொமன் வெல்த் விளையாட்டு ஊழல்
முத்திரை தாள் மெத்தப்பெரிய ஊழல்
ஸ்பெக்ரம் விண்வெளி ஊழல்
நிலக்கரியின் மிகப்பெரிய ஊழல்
கிலிசகேடான கழிப்பறை ஊழல்
இவைகள் நடந்ததால்
அரசாங்கம் இல்லையென்று போய்விடுமா?

உனக்காக என்றும் இலவசங்கள்
தோன்றிக்கொண்டேயிருக்கின்றன,
அதை ஊழல் அரித்து தின்றாலும்,
கிடைப்பதை
இருகரம் கூப்பி வாங்கி,
புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துவிட்டு
சிவனே என்று
அமைதியாக கிடப்பதே உன் பணி!

அதிக பட்சமாக,
அறிவிக்கப்பட்ட தேர்தல் காலத்தில்
ஆட்சியை தெரிவுசெய்ய,
உனக்கு உரிமையுண்டு!
அமைச்சரை வரவேற்க,
மேயரை துதிபாட,
பஞ்சாயத்து தலைவருக்கு
பாதுகை கட்ட,
இன்னும் உன்னை நம்பி
பொறுப்புக்கள்
நிறைய இருக்கின்றன.

அதிகாரம் செலுத்தவேண்டுமென்றால்
கட்சியின் இளைஞர் அணியில் சேர்ந்துவிடு
கட்ட பஞ்சாயத்து தேடி வரும்
உரிய காலத்தில் சொத்து சேரும்.

எதுவும் சாத்தியப்படவில்லையா
பல்லு தெரிய சிரித்துக்கொண்டே
படுத்து தூங்கு.
பேசும் உரிமையெல்லாம் உனக்கில்லை
அதுபற்றி
உனக்கு தெரியவும் வேண்டாம்!

அதையும் மீறி
உரிமையை அடைய நீ முற்பட்டால்
நீ துரோகிதானே!
தெருவுக்கு வந்து நீ போராடினால்
நீ தீவிரவாதிதானே!

இதுதான் இந்தியாவின்
நவீன சனநாயக சட்டம்!
இதைத்தான்
அறுபது ஆண்டுகளுக்கு மேலாக
கட்டி காப்பாற்ற
வயோதிப கட்சிகள் பாடுபடுகின்றன.

கூடங்குளம் பிரதேசத்தை
வேடந்தாங்கலாக
மாற்ற முயற்சிக்காதே!
விளைவு விபரீதமாகிப்போகும்.

இத்தனை ஊழல்களை கட்டிக்காத்த
ஆட்சியாளர்களுக்கு
மண்ணும் மரங்களும்
நீயும் உன் சந்ததியும்
எப்படி வாழவேண்டும் என்பது
மெத்த சரியாகவே தெரியும்.

அணுவை விதைப்பது ஏன்,
ஆட்சி நடத்துவது எப்படி
என்பதை அறிந்து நீ
என்ன செய்துவிடப்போகிறாய்.

அது
ஆட்சியாளர்களின் கவலை!
அதற்குத்தானே அவர்களை
ஐந்து, ஐந்து வருடங்களுக்கு
நீயாக
விரும்பி தெரிவு செய்திருக்கிறாய்.
அதுதானே  மக்களாட்சி!
அதுதானே சனநாயகம்!
அதுதானே அரசியல் சாசனம்!

உனது தொடர் போராட்டங்கள்
எங்களை எரிச்சலடைய வைக்கிறது.
ஏதாவது திரும்பி விடுமோ
என்ற பயம் இருந்தாலும்,
அது அவ்வளவு இலகுவானதல்ல
என்ற நம்பிக்கையை காவல்த்துறையும்,
உள்த்துறையும் தந்துகொண்டுதான் இருக்கின்றன.

சனாதிபதிக்கும்,
பிரதமருக்கும்,
வெளியுறவு மந்திரிக்கும்,
கொள்கை வகுப்பாளர்களுக்கும்,
கட்சி தலைவர்களுக்கும்,
விஞ்ஞானம் படித்தவர்களுக்கும்
தெரியாத அற்புதம்,
சாதாரணாமாக தேர்தலில் வாக்களிக்கும்
பாவப்பட்ட உனக்கு என்ன தெரிந்துவிட்டது?

ஆனாலும் மனிதா!
ஆட்சியாளர்களை  தெரிவு செய்யும் அதிகாரம்
என்றைக்கும்
உனது கைகளில்த்தான் இருக்கிறது
அடுத்த தேர்தலில் கண்களை திற,
பள பளக்கும் அட்டை கத்திகளை தூர வீசிவிட்டு
மெத்த சரியான கத்தியை தெரிவு செய்
அத்தனையும் சாத்தியமாகும்.

ஊர்க்குருவி.
நன்றி சவுக்கு இணையம்.

Wednesday, September 5, 2012

தமிழர் தேசியக்கூட்டமைப்பின் அரசியல் பயணம் எதை நோக்கி செல்லுகிறது?

2012 செப், நடக்க இருக்கும் கிழக்கு மாகாணத்துக்கான, மாகாணசபை தேர்தலில் தமிழர் தேசியக்கூட்டமைப்பு போட்டியிட்டு வெற்றி பெறுகிறதோ இல்லையோ,
ஸ்ரீலங்காவின் பெளத்த பேரினவாத சிங்கள அரசாங்கத்துக்கு சர்வதேச அரங்கில் ஒரு ஆறுதல் கிடைக்க வழி ஏற்படுத்தி மீண்டுமொரு விரும்பத்தகாத வரலாற்று பிழைக்கு தேசியக்கூட்டமைப்பு பிள்ளையார் சுழி போட்டு தமிழ்ச்சமுதாயத்திற்கு மாபெரும் துரோகம் இழைத்திருக்கிறது.

இதன்மூலம் ஒட்டு மொத்த ஈழத்தமிழினத்தின் ஒப்பற்ற  தியாகங்களும், முப்பது வருட உயிர் ஆயுத போராட்ட வரலாற்றின் ஒப்பற்ற அர்த்தமும், ஈழ தேசிய அரசியல் நீரோட்டத்தின் அடிப்படை தத்துவமும்  திக்கற்று திசைமாறிப்போவதுடன், கொதிநிலையில் இருந்துகொண்டிருக்கும் படுகொலை நீதிவிசாரணை முன்னெடுப்பில் பெருத்த இடைவெளியை தோற்றுவித்து குறைந்தது ஒரு பத்துவருட பின்னடைவையாவது  தமிழ்ச்சமூகம் இந்த மாகாணசபை நாடகத்தால் சந்திக்க இருப்பது எவராலும் தவிர்க்க முடியாமல் போவதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன. 

மக்களின் முற்று முழுதான நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த கூட்டமைப்பின் பிறழ்வு காரணமாகவும்,  கள சூழ்நிலை காரணமாகவும்  இப்போதைக்கு தாய்மண்ணில் இதற்கான எதிர்ப்போ, கிளர்ச்சியோ திடீரென  தோன்றப்போவதில்லை. அந்த அமைதி தமிழர் விரோதிகளான ஸ்ரீலங்கா, இந்தியா, தமிழர் தேசிய கூட்டமைப்பு போன்ற சக்திகளுக்கு ஒரு ஆறுதலை தரலாம்,  ஆனால் நாளடைவில் தாயகத்தில் தாக்கம் வேறுவிதமாக உணரப்படாமல் தடுக்கப்படவேண்டுமானால் புலம்பெயர் தமிழர்கள் அதற்கான எதிர்ப்பை உடனடியாக பதிவு சேய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். கடந்தகால வரலாறும் கள நிலையும் அதைத்தான் இடித்துரைக்கிறது.  இது விளையாட்டான தன்னிலையான வரலாற்று திருப்பமல்ல என்பதை புலம்பேயர் தேசியவாதிகள் உணரவேண்டும். அத்துடன் நின்றுவிடாமல் தாய் மண்ணில் சரியான பாதையை மக்களுக்கு புலப்படுத்த வல்ல நம்பிக்கையான மாற்று அரசியல் சக்தி உடனடியாக (அங்கீகரிக்கப்பட்டு) வெளிப்படுத்தப்படவேண்டும்.

இந்த மாகாணசபை தேர்தல் மூலம் ஐநா மன்றத்தில், ஸ்ரீலங்கா அரச தரப்பு எதிர்கொண்டிருந்த நெருக்கடியை தளர்த்துவதற்கான கொள்ளிடம் தேடப்பட்டிருக்கிறது.  ஐநா அரங்கின் நியாயப்படுத்தலுக்கான தற்காலிக பிணை எடுப்பை சம்பந்தரின் தமிழர் தேசியக்கூட்டமைப்பு முண்டுகொடுத்து உறுதி செய்திருக்கிறது.  இது வெட்கப்படவேண்டியதுடன் கண்டிக்கப்படவேண்டியதும் ஆகும். தமிழர்களின் எதிர்பார்ப்புக்களை ஈடுகட்ட தொலைநோக்கோடு காய் நகர்த்தவேண்டிய தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்காவின் விசமத்தனமான சதியில் சிக்கிக்கொண்டதோ,  அல்லாமல் தேர்ந்த திட்டத்துடன் களம் இறங்கியிருக்கிறதோ,  என்பதை கூட்டமைப்பு பகிரங்கமாக மக்கள் மன்றத்தில் தெரியப்படுத்த வேண்டும்.

"பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகிறது", என்று ஒரு பண்பட்ட பழமொழியுண்டு. அதே விளையாட்டைத்தான் இப்போ கிழக்கு மாகாண சபை தேர்தல் மூலம் தமிழர்களின் வாழ்வில் தொடங்கப்பட்டிருக்கிறது. விரால் இல்லாத குளத்தில் குறவை மீன் தலைவனாம். முன்பும் பல சமயங்களில் உள்ளுடன் அறியப்பட்ட சந்தற்பவாதி சம்பந்தர்,  சர்வதேசத்திற்கு தனது அரசியல் வீர விளையாட்டு விடுப்பு காட்டப்போகிறேன் என்று இந்திய, ஸ்ரீலங்கா சதி அரசியல் காய் நகர்த்தலுக்கு ஒத்தூதி புதிய அவதார வேடத்தை எடுத்திருக்கிறார். சம்பந்தரின் இந்த விளையாட்டுக்கு பின்னர், நிறைய தமிழ் மக்களின் வாழ்வாதாரமும் உரிமைகளும் பூனையின் விளையாட்டில் அகப்பட்ட  சுண்டெலியின் கணக்காக தமிழ்ச்சமூகம் எழுந்திருக்க முடியாமல் பலியாகியிருப்பது தேர்தலுக்கு பின்னர் புரியவரும்.

மனிதாபிமான சபை, மாகாணசபை என்பதேல்லாம் இலங்கை வரலாற்றை பொறுத்தவரை ஏட்டுச்சுரைக்காய் மட்டுமே. தமிழர்களுக்கான அரசியலில் வலுவான ஒரு தீர்வுத்திட்டம் வரையறுக்கப்படாதவரை,  அனைத்தும் உலகத்தை ஏமாற்றும் நாடகங்களாக காலம் கடத்தும் உத்தியே தவிர வேறெதுவுமில்லை என்பதை,  சம்பந்தர் போன்றோர் கடந்தகால படிப்பினைகளிலிருந்து நிச்சியம் புரிந்துகொள்ளாமலிருக்க முடியாது.

எத்தனை பேச்சுவார்த்தை மேசைகளை தமிழினம் வல்லமையுடன் இருந்தபோதும் கண்டு கழித்துவிட்டது. எதுக்கும் எடுபடாத சிங்கள ஏகாதிபத்தியம் மாகாணசபைகளில் அதிகாரத்தை அள்ளி கொடுக்கும், ஆட்சி அதிகாரத்தை தாரைவார்த்து கொடுக்கும் என்று எந்த ஆதார அடிப்படையில் சம்பந்தர் தரப்பு தேர்தலை சந்திக்கிறது? தேர்தலுக்குள் இறங்குவதற்கு முன் ஈழ தமிழினத்தின் அபிலாசைகள் அனைத்தையும் உறுதி செய்து பகிரங்கப்படுத்தியிருக்க வேண்டும்.  இங்கு ஒளிவு மறைவு ஒன்றிற்கும் இடமில்லை. வரையறையான தீர்மானம் ஒன்றை எட்டமுன் தேர்தலை சந்திக்கவேண்டிய அவசரம் ஒன்றும் இப்போது காணப்படவுமில்லை.

மாகாணசபை அதிகாரம் என்று பார்த்தால் கிராமச்சபை அதிகாரத்தை விடவும் கேவலமானது என்பதுதான் கடந்தகால வரதராஜ பெருமாள், பிள்ளையான் போன்றவர்களின் வழி வந்த வரலாறு.  எந்த அதிகாரத்தையும் சிங்கள பெளத்த பேரினவாதிகள் தமிழர்களுக்கான மாகாணசபைக்கு  வழங்கிவிடப்போவதில்லை. வேண்டுமானால் ஒப்புக்கு சப்பாணியாக அமரக்கூடிய பிள்ளையான் போன்றோரை வைத்து பொம்மலாட்டம் நடத்தலாமே தவிர தேசியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் வெகுஜன மக்கள் அரசியலை ஈடுகட்ட முடியாது.  பிள்ளையான் போன்றோரை சர்வதேசம் நிராகரித்துவிட்டதால் தமிழர்களின் செல்வாக்கை கொண்டுள்ள தேசியக்கூட்டமைப்பின் சம்பந்தர் பகடை காயாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார். அல்லது அவர் தானாக விழுந்திருக்கிறார்.

தேர்தலின்பின் ஒப்புக்கு மாகாணசபைக்கு என்று ஒரு கந்தோர் திறக்கப்படலாம், சில வாகனங்கள் சிங்கள சாரதிகளுடன் சேவையில் ஈடுபடலாம், சம்பந்தரின் கட்சி அதிகாரத்துக்கு வந்தால் மகிந்தரின் கட்சியோ,  முஸ்லீம் காங்கிரசோ,  பிள்ளையான் கட்சியோ எதிர்க்கட்சிக்கு வரப்போகிறது. அதிகாரம் இல்லாத கந்தோரில் இவர்கள் எதை விவாதிக்கப்போகிறார்கள். 2001  ஆண்டிலிருந்து பாராளுமன்றத்தில் அதிகாரபூர்வ எம்பி களாக இருந்தே பேச்சுவார்த்தை என்ற இலக்குக்கு வரமுடியாத தமிழர் தேசியக்கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபையை பெற்று கிழிப்பதற்கு எதுவும் இல்லை. 

யுத்தம் முடிந்து மூன்று வருடங்கள் முடிந்துவிட்டது.  பிள்ளையான் தலைமையிலான ஒட்டுக்கட்சி கிழக்கில் அதிகாரமில்லாத மாகாண சபையை நிருவகித்தது மக்களை ஆயுத முனையில் சீரழித்தது . வடக்கை எடுத்துக்கொண்டால் யாழ்ப்பாணத்தை ஒட்டுக்குழுவின் பிதா டக்கிளஸ் தேவானந்தா,  வைத்ததுதான் சட்டம் என்று அனைத்து சீர்கேடுகளும் அந்த மண்ணில் அரங்கேற்றப்பட்டுள்ளது. வன்னி பகுதி முழுவதும் புத்தர் சிலைகள் சிங்கள இராணுவ குடியிருப்புக்கள் பெருக்கெடுத்து வருகின்றன, இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களாக சம்பந்தன் குழுவினர் கொழும்பிலும் வெளிநாடுகளிலும் குடியிருந்து வருகின்றனர். ஒரு புத்தர்சிலையை அகற்றுவது தொடர்பாக, கிளிநொச்சி இராணுவ ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றுவது தொடர்பாக இவர்களால் ஒரு உறுதியான காத்திரமான போராட்டத்தை நடத்த முடியவில்லை. இப்போ மாகாண சபையை கைப்பற்றுவதன் மூலம் அல்லது மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதன்மூலம் சர்வதேசத்திற்கு வலிமையை எடுத்துக்காட்டப்போகிறோம் என்பது  கேலிக்கூத்து அல்லாமல் வேறு என்னவென்று எடுத்துக்கொள்ள முடியும்.

தற்காலிக தப்பித்தலுக்காக இலங்கை அரசாங்கம் தோண்டிவைத்திருக்கும் அரசியல் படுகுழியான கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதன்மூலம் அல்லது அத் தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் தேசியக்கூட்டமைப்பு எதையும் சாதித்துவிட முடியாது. தமிழர் தேசியக்கூட்டமைப்பைப்பொறுத்த வரையில் அவர்களது தலைமைச்செயலகம் இந்தியா, இந்தியாவை திருப்திப்படுத்துவதற்கும் எம்பி பதவிகளை தக்க வைத்துக்கொள்ளுவதற்கும் சம்பந்தர் மாகாணசபைக்கு ஒத்துபோகவேண்டிய தேவை வந்திருக்கிறது.

2001 ம் ஆண்டு  தமிழர் தேசியக்கூட்டமைப்பு ஏன் எதற்காக பிறந்தது என்பதை சம்பந்தரும் சகபாடிகளும் சிந்தித்துப்பார்க்கவேண்டும்.  தமிழ்தேசியம், சுய நிர்ணய உரிமை, தன்னாட்சி பகிர்வு, இவைகளுக்காக பிறப்பிக்கப்பட்ட தமிழர் தேசிய கூட்டமைப்பு,  இன்று ஏதோ ஒன்றுக்குள் புதைந்து காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. அன்று வீரசிங்கம் ஆனந்தசங்கரியின்,  கொள்கை வேறுபாட்டால் உருவான தமிழர் தேசியக்கூட்டமைப்பு  அன்றைய தமிழர் விடுதலை கூட்டணியின் அதே சித்தாந்தத்தை பின்பற்றி தொடர நினைக்குமானால் வரலாறு மாற்றி எழுதப்படுவதற்கு நீண்ட காலம் எடுக்கப்போவதில்லை.

மக்களுக்கு உதவாத மாகாண சபை ஒன்று உருவாகுமானால் வேறு வினையே தேவையில்லை  தமிழர் தேசியக்கூட்டமைப்பு என்ற அரசியல் கட்சி, மெல்ல மெல்ல தமிழர் விடுதலை கூட்டணியாக மாறி உறக்கநிலையை அடைவதை எவராலும் தவிர்க்க முடியாமல் போகலாம்.

தீதும் நன்றும் பிறர்தர வாரா. என்பதை தேசிய கூட்டமைப்புக்கும் தலைவர் சம்பந்தன் ஐயாவுக்கும் வரலாறு நிச்சியம் புரிய வைக்கும்.

ஈழதேசம் இணையத்திற்காக,
கனகதரன்.


நன்றி ஈழதேசம்.

Sunday, September 2, 2012

அஹிம்சையின் மரணம்.

283617_128153527329238_1419357596_n
நீதி கேட்டு உண்ணாவிரதம் இருந்ததால்,
ஈழ அகதியான "செந்தூரன்"
குற்றவாளி என்கிறது தமிழக அரசு!.
உண்ணாவிரதம்
தற்கொலைக்குற்றம் என்கிறது தமிழக பொலிஸ்!!?.

மகாத்மா காந்தி'யும் தன்னை வருத்தி
உண்ணாவிரதம் இருந்தார்.
உள்ளடக்கம் இல்லாமல்,
உரிமைக்காக
உணர்வோடு உணவொறுத்தார்.
அதிகாரம் பணிந்தது,
அகிம்சை தலை குனிந்தது.
சத்தியத்தின் பிதாவாக
உலகம் காந்தியை ஏற்றுக்கொண்டது.
அது ஒரு இனிய கனாக்காலம்.

கண்டத்தையும் தாண்டி
காந்தியின் அகிம்சையில்
உலகம் மண்டியிட்டது.
அகிம்சையின் வீரியத்தை அறிந்த
வெள்ளைக்காரன்,
விக்கித்து வெளியேறினான்.
இந்தியா சுதந்திரம் அடைய
உண்ணாவிரதம் வழி திறந்தது.
அது ஒரு பொற்காலம்.

மார்ச் 09, 2009 ல் ஜெயலலிதா,
"ஈழத்தமிழர்களுக்காக"  உண்ண நோன்பிருந்தார்.
கடல் கடந்தும்,
காற்றின் வெளியூடேயும்
படை அனுப்பி காத்தருள்வேன்
என்றும் கர்ஜித்தார்.
தமிழகம் தலை வணங்கியது.
அகிம்சை திகைத்தபோது,
மக்கள் கோட்டை வாசலை திறந்து விட்டனர்.,
அம்மா முதலமைச்சரானார்.
இன்று
அதே நம்பிக்கையுடன்
ஈழ அகதி செந்தூரன் அம்மாவை நோக்கி
உண்ணா விரதம் இருந்தபோது
அது
தற்கொலை குற்றமாகியிருக்கிறது.!
அதுவும் ஒரு விசித்திர வினாக்காலம்

கால கிறுக்கலில் கருணாநிதியின் கதவு
காற்றுவாக்கில் மூடிவிட,
இன்று தொடர் கதையாக
வறுமையற்ற வாக்குறுதியுடன்,
கருணாவின் நித்த புலம்பல்
நீலிக்கண்ணீருடன் நித்தமொரு தத்துவம்
இதுவும் விதைத்த பயன்
அறுவடையின் நிகழ்காலம்.

தமிழீன தலைவன் கருணாநிதி
"ஈழத்தமிழர் உயிர் காக்க"
ஏப்ரல் 27 2009 ல்
உயிர் துறந்தேன் பார் என்று
அதிகாலையில் உறக்கம் கலைந்து,
அகிம்சையின் கோவணத்தை உருவி
தோளில் போட்டுக்கொண்டு,
அண்ணாவின் சமாதி அருகில்
அருங்காட்சியகமாக
அம்மணிகள் புடைசூழ
1/2 நாள் உண்ணாவிரதம் இருந்தார்.
அது ஒரு புதுக்கோலம்,..

அன்று,
ஈழத்து படுகொலை செய்தியை விட
தாத்தாவின் தாண்டவம் பெரும் புதினமானது.
மீடியாக்கள் கண்சிமிட்டி படபடத்தன
நெத்தியடியாக அழகிரிக்கு மந்திரி பதவியும்,
கனிமொழிக்கு எம்பி பதவியும் தந்து.
மத்திய அரசு மண்டியிட்டதது.
தமிழகம் அடங்கி அமைதியான போது
அகிம்சை
கோவணத்தை தேடி அலைந்தது.
அதுவும் ஒரு வினோத காலம்.

அகிம்சையை அரவாணியாக்கி
'உண்ணா விரதம் இருந்து வென்றவர்'
வாயால் வில் பூட்டி வானத்துக்கு எய்தவர்
நா விலங்கு கருணாநிதி,
நம்பி ஏமாந்த ஈழத்து ஏமாளிகள்
ரத்த சகதியில் சிதறி செத்து தீயில் மாண்டனர்.
அகிம்சை அரசியலுடன் சங்கமமாகிவிட
சுடுகாட்டு கரி மட்டும் மிஞ்சியது.
அது மயான காவியத்தின் வினைக்காலம்.

"ஈழமக்களுக்காக"
தெரு முனையில் சாவேனே தவிர
வெட்டியாக வீடு திரும்பேன்.
சத்தியம் இதுவென்று
விடுதலை சிறுத்தையின் வீரத்திருமகன்.
திருமாவளவன்,..
சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார்.
முற்றியது மூன்று நாள்
பற்றியது ஒரு கரம்
தி.முக தலைவர் பற்றினார் தம்பியை
மெல்ல கலந்து காங்கிரஸுடன்
திருமாவை மத்தியில் எம்பி ஆக்கினார்.
வென்றனர் விரும்பியதை
அதுவும் ஒரு ரம்யமான
வஞ்சகத்தின் வர்ண ஜாலம்!

ஏன் எதற்கு
அவர்கள் உண்ணாவிரதம் இருந்தனரோ
அதற்காக இவர்களும் ஏமாளிகளாக
உண்ணாவிரதம் இருந்தனர்.
நளினி, முருகன்,
சிறைக்குள் விரதம் பூண்டனர்.
பிணைப்பாக
ஜனாதிபதிக்கு கருணை மனுவும்....
அனைத்தும் கனவாகி
கால் நூற்றாண்டு காத்திருந்தனர்.
அகிம்சை எவரையும் தட்டி எழுப்பவில்லை.
தண்டனை மட்டும் இறுகியது.
இணைப்பாக
செங்கொடி என்ற மனிதாபிமானம்
ஏமாந்து தீயில் எரிந்து கருகியது.
அது ஒரு ஏமாந்த காலம்.

இருந்தபோதும்
மீண்டும் நம்பிக்கையுடன்,
செங்கல்ப்பட்டு பூந்தமல்லி தடை முகாமில்
ஈழத்தமிழர்கள் உண்ணாமல் இருந்தனர்.
மத்திய, மானில ஆட்சிகள் ஆத்திரத்துடன்.
சூத்திரத்தை மறந்து சன்னதம் கொண்டன.

செந்தூரன் உறுதியானபோது
சிறுநீரகம் செயலிழந்து வயிறு புண்ணாகி
மலவாசல் வழியாக இரத்தம் கசிந்தது,.
மரண வாயிலில்.
அகிம்சை செந்தூரனை கொன்றுவிடும்
என்று அறிந்தபோது
அதிகாரம் அரக்கனாகியது.
அது ஒரு வினைக்காலம்.

செந்தூரன்
தற்கொலைக்கு முயற்சித்தான்,
ஆணவத்தால் அடங்க மறுத்தான்,
புதிய கண்டுபிடிப்புடன்  காலங்கடந்து
பொலீஸ் படை பாய்ந்து
அகிம்சை போராளியை கைது செய்திருக்கிறது.
இது ஒரு புதிர்காலம்.

கருணாநிதிக்கு,.............
ஜெயலலிதாவுக்கு,...............
திருமாவுக்கு,...................
ஈழத்தமிழன் பெயரால் அரசியல் செய்யவும்
பதவியை,....... வாழ்க்கையை........... வழங்கிய
உண்ணா விரதம்!!
ஈழத்தமிழனுக்கு தொண்டைக்குள்
கடப்பாரையாக சொருவப்பட்டது,
அகிம்சை மூச்சையர்த்து சேடமிழுத்து
தூரத்தே ஈனசுரத்தில்
அழும் குரல் மட்டும் கேட்கிறது!
இது எந்தக்காலம்?

ஊர்க்குருவி.
நன்றி சவுக்கு இணையம்.