"இந்து கோவில்களை இடிக்கிறது இலங்கை,   தடுக்க கருணாநிதி கடிதம்".   இப்படி தலைப்பிடப்பட்டு தமிழக பத்திரிகை இணையத்தளங்கள் சிலதினங்களுக்குமுன் ஒரு செய்தி வெளியிட்டிருந்தன, 
 
"இலங்கையில் தமிழ் மொழி, கலாச்சாரம், மதம் போன்றவைகளை அழிக்க, இலங்கை அரசு திட்டமிட்டு, உள்நோக்கத்தோடு செயல்படுகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும். அங்குள்ள தமிழர்கள், ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்கின்றனர். கொல்லைப்புற வழியாக, மிகப்பெரிய கலாச்சாரத்தையும், பழமை வாய்ந்த மதத்தையும் அழிக்கும் முயற்சியில், இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.  இலங்கையில் உள்ள, 89 தமிழ் கிராமங்களுக்கு, சிங்கள பெயர் சூட்டுதல், மாவட்ட, நகர, கிராம எல்லைகளை மாற்றி அமைத்தல், 367 இந்து கோவில்கள் இடித்தல் போன்ற பணிகளில், இலங்கை அரசு ஈடுப்பட்டுள்ளது. உலகின், மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற முறையில், தமிழர்கள் மீதான இந்த கொடுமைகளை உடனடியாக தடுத்து நிறுத்தும், தார்மீக கடமை இந்தியாவுக்கு உள்ளது. இதற்கான, உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவ்வாறு, அந்த கடிதத்தில் கருணாநிதி  கேட்டுக்கொண்டார். என்று  21, 01, 2013 அன்று தமிழகத்து பிரபலமான பத்திகையின் இணையத்தளம் ஒன்று ஒரு செய்தியை  வெளியிட்டிருந்தது. 
 
கருணாநிதியின் ஆபத்து நிறைந்த அந்த பத்திரிகை ஸ்ரேற்மன்ற் பற்றி எவரும் பெரிதாக அலட்டிக்கொண்டதாக தெரியவில்லை.  இருந்தும்  இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழருக்கும் இருந்துவரும் இன மொழிப்பிரச்சினைகளுடன் மேலதிகமாக மதரீதியான பிரிவினையையும் உண்டாக்கக்கூடிய கருத்து அந்தசெய்திமூலம் சொல்லப்பட்டிருக்கிறது.  கருணாநிதி சுயலாப அரசியல் செய்யவிளையும் உள்நோக்கம் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டிருப்பது அந்தசெய்தியில் உணர்ந்துகொள்ளமுடிகிறது.  ஈழத்தமிழர்கள் இலங்கைக்குள் எதிர்கொண்டுவரும் சூழ்நிலகள் உலகமக்கள் அனைவர் அறிவர். அப்படியிருந்தும்  எதிர்விளைவை சிந்திக்காமல்  மதரீதியான முரண்பாட்டுக்கு கருணாநிதி ஒரு கடிதத்தின் மூலம் வித்திட்டிருக்கிறார்.   அதன் எதிர்த்தாக்கம் பின்னர் நிச்சியம் ஈழத்தமிழர்களுக்கு பாதகமாக உணரப்படும்.
 
கருணாநிதி பத்திரிகைகளுக்கு கொடுத்திருந்த அந்த அறிவித்தல் அப்படியே ஒரு எழுத்து மாற்றாமல் நகலாக மேலே பதியப்பட்டிருக்கிறது.
 
இலங்கை தமிழர் பிரச்சினை சம்பந்தமாக கருணாநிதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது,  பொழுதுபோக்கு கூட்டங்கள் நடத்துவது. மாநாடு நடத்துவது  என்பது ஒன்றும் தமிழகத்தில் புதியவிடயம் அல்ல,  1958ம் ஆண்டிலிருந்து திமுக அப்படித்தான் நடந்துவருவதாகவும்,   நிறைவேற்றப்படாமல்  பழைய அலமாரி இருப்பிலிருந்த திமுகவின் தீர்மான நகல்களை தூசுதட்டி ஐநா சபைக்கு ஸ்ராலின் மூலம் அனுப்பியிருப்பதாகவும் கருணாநிதியே சிலநாட்களுக்குமுன் ஒப்புக்கொண்டுமிருக்கிறார். அவரோ திமுகவோ ஈழமக்கழுக்காக இதுவரை இதயசுத்தியுடன் ஒப்பேற்றிய விடயம் என்று ஒன்றையும் அவரால் சொல்லிக்காட்டுவதற்கும் இல்லை.   திமுக அல்லது கருணாநிதி ஈழத்தமிழர்கழுக்கு செய்த துரோகங்கள் மட்டும் பல அரசியற் கட்சிகளால்,  ஆய்வாளர்களால் ஆயிரக்கணக்கில் பட்டியலிடப்பட்டிருக்கிறது.   சமீபத்தில் கருணாநிதி குழுமம் இந்தியா தாண்டி ஐநா சபைக்கும் கடிதம் அனுப்பியிருந்தது.   அதுவும் அனைவரும் அறிந்த விடயமே.
 
இறுதியாக கருணாநிதி ஈழப்பிரச்சினையில் தலையிடாமலிருந்தாலே ஈழ மக்களுக்கு நிம்மதியாகிப்போகும் என்று பல கட்சிகள் கூட்டாக  மன்றாட்டமாக கேட்டுவருகின்றன.
 
இருந்தும் கருணாநிதி சோனியாவுக்கு முறைப்பாடாக அனுப்பிய கடிதம்பற்றி சிந்திக்கும்போது,    யார்  எவருக்கு,  எதற்கு கடிதம் எழுதினார் என்பது கவனிக்கவேண்டிய ஒன்றாகும்,  சோனியா,   இந்தியப்பிரதமருமல்ல,  இந்திய  ஜனாதிபதியுமல்ல, ஒரு அமைச்சருமல்ல,  ஒரு இந்திய பிரஜையுமல்ல   இலங்கையில் தமிழர்களின் வாழ்க்கையை அழிப்பதற்கு அயராது உழைத்தவர்கள் சோனியாவும்,   கருணாநிதியும்,    என்பது பலமட்டங்களில் இந்திய அரசியற்கட்சிகளால் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று,  அதை இலங்கை ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவும் நேரடியாக பகிரங்க சாட்சியமாக ஒப்புக்கொண்டு உறுதிப்படுத்தியும் இருக்கின்றனர்.   இருந்தும் குழந்தைத்தனமாக கருணாநிதி  சோனியாவுக்கு கடிதம் எழுதுவதையும்,    அதை பத்திரிகைகளில் பிரசுரிப்பதையும் ஒரு முட்டாள் கூட்டம் கைகட்டி  ரசிக்கிறது.
 
இன்னும் விவரம் புரியாமலிருக்கும் எவரையோ ஏமாற்றி அரசியல் செய்ய இப்படியான செயல்களை கருணாநிதி சில்லறைத்தனமாக கிளப்பிவிடுகிறார்,   அல்லது  நிச்சியம் உள்நோக்கம் கொண்டு ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சதித்திட்ட தியரியை கையாண்டு இலங்கைக்குள் தொடர்ந்து அமைதியின்மையை உண்டுபண்ண மத்திய அரசுடன் இணைந்து காய்நகர்த்துகிறார்,  என்பதையும் எவரும் மறுக்கமுடியாது.  இப்படியான ஒரு  கடிதம் கருணாநிதியால் சோனியாவுக்கும்,  பின்னர் இந்திய மத்திய அரசாங்கத்துக்கும்,   அனுப்பட்டட்டுள்ளதாக ஏன் பத்திரிகைகளில் தலைப்புச்செய்தியாக்கி விளம்பரப்படுத்தப்படுகிறது.  பிரதமருடன் அல்லது சோனியாவுடன்   நேரடியாகப்பேசி நடைமுறையில் ஏதாவது நற்காரியத்தை கருணாநிதி செய்திருக்கலாமே,   அப்படி எதுவும் நடக்காமல் பத்திரிகைகளில் அறிக்கைவிட்டு விளையாடுவதை சிந்தித்தபோது   "யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே"   என்ற பழமொழிக்கொப்ப ஆமை வேகத்தில் ஏதோ ஒரு சுத்துமாத்து,   சூழ்ச்சி கபட நாடகத்தை  தமது அரசியல் தப்பித்தலுக்காக சோனியாவுடன் இணைந்து கருணாநிதி மலினமாக ஈடேற்றப்போகிறார்,    என்பது மட்டும் புரிகிறது.
 
இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தல் அடுத்த ஆண்டு வரவிருக்கிறது.   அத்தேர்தலிலும் திமுக+காங்கிரஸ்  மண்னை கவ்வும் என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்து.   களநிலமையும் 100 வீதம் அதைத்தான் பிரதிபலிக்கிறது,  அப்படியே ஆகிவிட்டால் திமுக,வின் எதிர்காலம் புதைபொருள் ஆராய்ச்சிக்கு உட்பட்டது போலாகிவிடும் என்பதை கருணாநிதி நன்கு அறிந்து வைத்திருக்கிறார்,   அதிலிருந்து மீளவேண்டுமானால் தமிழகத்து மக்களை எப்படியாவது ஏமாற்றி தன்பக்கம் திருப்பவேண்டும்,  தனதுபக்கம் மக்களை திருப்புவதற்கான ஆதார நற்பெயர்  திமுக,  கட்சிக்கோ,   கட்சியில் முழுப்பொறுப்பும் வகிக்கும் கருணாநிதியின் வாரிசுகளிடமோ துளியும் இல்லை.  இந்த இக்கட்டிலிருந்து தமிழக மக்களை திசை திருப்பவேண்டும் என்றால் கேட்பாரற்று கிடக்கும்  ஈழப்பிரச்சினை ஒன்றைமட்டும் கையிலெடுத்து தப்பித்தாலன்றி வேறுவழியில்லை,   என்ற கணக்கே கருணாநிதியின் ஈழமக்கள் மீதான கரிசினை. இது அனைவருக்கும் புரிந்திருந்தாலும் கருணாநிதியின் தந்திரம் கருணாநிதிக்கு கைகொடுப்பதும் மறுப்பதற்கில்லை.
 
ஈழப்பிரச்சினை ஒன்றுதானே யாரும் எழுந்தமானத்தில் கையாளக்கூடியதாக அனாதை நிலையில் இருக்கிறது.  அந்த திட்டத்தின் அடிப்படையில்த்தான் கருணாநிதி ஈழப்பிரச்சினையை கையிலெடுத்து தனது வாய் ஜாலத்தையும்  சூழ்ச்சி தந்திரத்தையும்  நம்பி ஈழ ஈடுபாட்டு கடிதநாடகம் காங்கிரஸின் ஆசியுடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.  இதனால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி,  இழந்த இமேஜ்சை கொஞ்சமேனும் மீட்டெடுத்து மக்கள்முன் பிரச்சாரம் செய்யக்கூடிய சூழ்நிலையை உருவாக்கமுடியும் என்பதும்,  அதற்கு திமுக உறுதியுடன் செயற்படுவதுபோல  ஒரு தோற்றப்பாட்டை மக்கள் மத்தியில் காட்டிவிடலாம் என்பதும் கருணாநிதி+சோனியா  கூட்டாளிகளின்  நம்பிக்கை. 
 
மத்தியில் கருணாநிதியின் கூட்டாளிகள் ஆட்சியாளர்களாக இருப்பதால்,  இந்த கடிதநாடகம் செயல்வடிவம் பெற இருப்பதுபோல தோற்றப்படுத்தி  காட்டிக்கொள்வதற்காக,    இலங்கை அரசாங்கம்,   மற்றும் தமிழர் தேசியக்கூட்டமைப்பு போன்றவற்றை   டில்லிக்கு அழைத்து அதுசம்பந்தமாக பேச்சுவார்த்தை  நடத்துவதுபோன்ற சூழ்ச்சி நாடக வேலைகளும் ஈடேற்றப்படலாம்.  தமிழ்நாட்டிலும்   சுத்துகாத்துக்காக  ஒரு பேச்சுவார்த்தையை வைத்துக்கொள்ளலாம்,   இந்த நாடகத்தில் ஈர்க்கப்பட்டு புலம்பெயர் அமைப்புக்களும்,   தமிழர் கூடமைப்பு போன்ற அரசியற் கட்சிகளும்,   கருணாநிதியின் கபட திட்டத்தில் வீழ்ந்து அவரது ஆசைப்படி தமிழக மக்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை தோற்றுவித்து தேர்தலில் வெற்றிபெற வைக்கும் நிலை உருவாகும்  என்று கருணாநிதி நம்புகிறார்,  இத்திட்டத்தின் ஆரம்பம்தான் சமீபத்தில்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்,    தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,    அவர்களை ஸ்ரீலங்கா புலனாய்வுத்துறையினர் 4ம் மாடிக்கு விசாரணைக்கு அழைத்திருப்பதை கண்டித்து கருணாநிதி விடுத்திருந்த கண்டன அறிக்கை என்பதை ஞாபகப்படுத்தி பொருத்திப்பார்த்துக் கொள்ளவேண்டும்.
 
போருக்குப்பின் ஈழ அரசியலைப் பொறுத்தவரையில் புலம்பெயர் அமைப்புக்கள் வீரியமாக இருக்கின்றன என்பதும்.   அவைகளின் அசைவை பின்பற்றியே சர்வதேசத்தில் ஈழ அரசியல் நகர்கிறது என்பதும்.   புலம்பெயர் அமைப்புக்களின் நீரோட்டத்தை ஒத்து செயற்படும் கட்சியாக தமிழர் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதை கருணாநிதி அறிந்துகொண்டதாலேயே அவசர அவசரமாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களை தனது வலையில் வீழ்த்தும் நோக்கத்துடன் கஜேந்திரகுமார்,   அவர்களின் பேரன் ஜீஜீ பொன்னம்பலம்,   அவர்களது புகழையும் சிலாகித்து  ஸ்ரீலங்கா அரசை கண்டித்திருந்ததை எடுத்துக்கொள்ளமுடியும்.
 
இந்திய மத்திய அரசு கருணாநிதிக்கு நட்பு சக்தியாக இருப்பதால்,   கருணாநிதி விரித்திருக்கும் தந்திரவலை நாடகம் விளிம்புநிலை வாக்காள மக்களை வீழ்த்துவதற்கு ஓரளவு உதவக்கூடும்.   ஆனால் இந்தபுரளிச்செய்தியால் ஈழமக்களுக்கு இன்னும் புதிது புதிதாக இடர்ப்பாடுகள் தொடருமேதவிர எந்த நிவாரணமும் நிம்மதியும் ஏற்பட்டுவிடப்போவதில்லை என்பதை அனைவரும் தீர்க்கதரிசனமாக புரிந்துகொள்ளலாம்.
 
தமிழினத்துரோகி,  உலகப்பொய்யன்,   மிகப்பெரும் சுத்துமாத்துக்காரன்,  கபடதாரி, சூழ்ச்சிக்காரன் கொலையாளி என்று கருணாநிதி தமிழ்ச் சமூகத்தில் அறியப்பட்டிருப்பதால் கருணாநிதியின் இந்த கடித விடயத்தை பெரிதுபடுத்தாமல் புறந்தள்ளிவிட்டு தமது பணிகளை செய்யவே பலரும் முயற்சிப்பர்.   உண்ணாவிரத நாடகம்போல,   மனிதச்சங்சகிலிபோல,   இதுவும் கோசத்துடன் முடிந்துவிடும் என்று மவுனம் காத்துவிடவும் முடியாது. ஏனெனில் கருணாநிதி இப்போ கிளறிவிட்டிருக்கும் தமிழ்க்கிராமங்களுக்கு சிங்ளப்பெயர் சூட்டுதல்,   தமிழீழத்தில் 367 கோவில்கள் இடிப்பு,   போன்ற குற்றச்சாட்டுக்களில் உண்மைத்தன்மை இருந்தாலும் இலங்கையில் தமிழர்,  சிங்களவர்களுக்கிடையே மதரீதியான ஒரு புதிய கிளர்ச்சியை கருணாநிதியின்   "367 கோவில் உடைப்பு"  புரளி உண்டாக்கும் அபாயம் இருக்கிறது.
 
ஈழத்ததில் கோவில்கள் இடிக்கப்பட்டதிலும்பாற்க தமிழர் குடியிருப்புக்களும்,   பொருளாதார மையங்களும்,   பாடசாலை வளாகங்களும்,   100 வீதம் அழிக்கப்பட்டிருக்கின்றன.   சிங்களவன் எவ்வளவுதான் இன அழிப்பில் ஈடுபட்டிருந்தாலும் மதரீதியான துவேஷத்தை மூர்க்கமாக வெளிப்படுத்தியிருக்கவில்லை. ""அல்லது அவனுக்கு அந்தச்சிந்தனை முனைப்புப்பெறவில்லை"",   புத்தர்சிலைகளை நிறுவினான் அது சிங்கள நாடென்று  காட்டிக்கொள்ள அல்லது தமது இன ஆளுமையை பெருக்கிக்கொள்ள என்பதாகவே அந்த வினை உணரப்பட்டிருக்கிறது.  இனக்கலவரம்,  இனப்படுகொலை, இனத்துவேஷம்,   என்பதே இலங்கைத்தீவில் இனங்காணப்பட்டிருக்கிறது.  மத ஏகாதிபத்தியம் சிங்களவனிடம் உள்ளூர இருந்திருந்தாலும்,  அது மூர்க்கமாக வெளிப்பட்டிருக்கவில்லை. அதுபற்றி விபரிக்கில் அதிக பக்கங்கள் தேவைப்படும் எனவே சுருக்கம்மாக இப்போதய விடயத்தை பார்க்கலாம், 
 
தமிழீழத்தில் பல ஆயிரம் கோவில்கள் போரின்போது பாதிப்புக்குள்ளாகியிருக்கின்ற அவற்றுள் கிறிஸ்த்துவ தேவாலயங்கள், முஸ்லிம் பள்ளிவாசல்கள் இந்துக்கோவில்கள் அனைத்தும் அடக்கம்,   போர் முடிவுக்குவந்தபின் அண்மையில் சிதைக்கப்பட்ட சில இந்துக்கோவில்கள் பற்றிய முறைப்பாடுகள் அந்தந்த மாவட்ட அரச அதிபருக்கு ஊர் மக்களால் முறைப்பாடக பதிவு செய்யப்பட்டிருக்கிறது அதில் குறைந்தபட்சம் 367 முறைப்பாடுகள் மட்டும் கிடைக்கப்பெற்றிருக்கலாம் அந்த தரவின் அடிப்படையில் INTERNATIONAL POLICY DIGEST சஞ்சிகை  யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, கிளிநொச்சி,முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் 367 இந்துக்கோவில்கள் எரிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கிறது.  கிளிநொச்சி மாவட்டத்தில் 46 கோவில்கள் எரிக்கப்பட்டதாக அந்தச்செய்தி குறிப்பிடுகிறது ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தில் சிறியதும் பெரியதுமாக 150க்கும் அதிகமான கோவில்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன.  பல சிறிய கோவில்கள் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கின்றன.
 
அந்த தகவலை தற்செயலாக கருணாநிதிக்கு எவராவது கொடுத்திருக்கலாம் எரிகிற வீட்டில் அள்ளியது இலாபம் என்ற கணக்கில் கருணாநிதி அந்தச்செய்தியை வைத்து அவசர அவசரமாக மத சாயத்தை பூசி புரளி கிளப்பியிருப்பது தேவையற்ற எதிர்விளைவுகளை தோற்றுவிக்கும். பத்திரிகைகள் பொது தொண்டு அமைப்புக்கள் வெளியிடும் புள்ளிவிபரங்களின் தாக்கம் வேறாகவும்,   உள் நோக்கத்துடன் அரசியல்வாதிகள் வெளியிடும் கதைகள் வேறு விளைவுகளையும் தோற்றுவிக்கின்றன. அதை கருணாநிதிபோன்றவர்கள் உணர்ந்து நடக்கவேண்டும்.
 
கருணாநிதியின் நஞ்சுத்தனமான பிரித்தாளும்  தந்திரம்,   சிங்களவனை இந்துக்கோவில்களை அழிக்கும் சிந்தனையை புதிதாக தூண்டிவிட்டுவிடுமோ என்ற ஐயம் எழுந்திருக்கிறது.
 
சிங்களவன் தமிழனுக்கு எதிரி,   தமிழ்மொழிக்கு எதிரி,  என்ற நிலையுடன் இனிமேல் தமிழர்களின் வழிபாட்டிடங்களுக்கும் எதிரியாகிவிடுவானோ என்ற ஐயமும் கருணாநிதியால் பற்றவைக்கப்பட்டிருக்கிறது.
 
பல நூற்றாண்டுகளுக்குமுன் தமிழர்களின் மூதாதையர்களான நாகர்'களால் தென்னிலங்கை காலியில் நிர்மாணிக்கப்பட்டு வழிபட்டுவந்த சிவன் கோவில், அங்குவாழும்  காடை சிங்களவர்களால் பாதிப்புக்குள்ளாகாமல் இன்றும் இருந்து வருகிறது. அதற்கு காரணம் சிங்களவன் இன்னும் மதரீதியாக துவேஷியாக சிந்திக்கவில்லை என்றே எடுத்துக்கொண்டாலும்,  கருணாநிதி போன்ற மலினமானவர்கள் அதையும் விடுவதாக இல்லை.  தலைநகரம் கொழும்பிலும் சிறியதும் பெரியதுமாக பல நூற்றுக்கணக்கான இந்துக்கோவில்கள் பூஜை திருவிழாக்கள் செய்யப்பட்டு சிறப்புடன் இருந்துவருகின்றன. சிலாபத்தில் முனீஸ்வரம், தென்னிலங்கை கோடியில் கதிர்காமம். கதிர்காமத்தையொட்டி தனித்தன்மையுடன் செல்வக்கதிர்காமம். எதுவும் இதிவரை சிங்களவனால் பெரிய பாதிப்புக்குள்ளாகவில்லை.
 
கருணாநிதி தனது அரசியல் நலனுக்காக திட்டமிட்டு இலங்கைக்குள் மதரீதியாகவும் பிரிவினைவாதத்தை  விதைத்து பிரித்தாளும் தந்திரத்தை இலங்கையில் தூண்டிவிடுகிறார் என்றே அனுமானிக்கக்கூடியதாக உள்ளது.  இது ஒரு அபாய எச்சரிக்கை என்பதை தமிழ் ஈழ அடரசியல்வாதிகள் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் உணர்ந்துகொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றனர்.
 
ஆட்சியிலிருக்கும் ஜெயலலிதாவை வீழ்த்தி தமிழகத்தின் ஆட்சியை தனது குடும்ப  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்வரை அரசியல் செய்வதற்கு கருணாநிதிக்கு ஏதாவது ஆதாரம் தேவைப்படுகிறது.   அதன் ஆரம்பம்தான் கருணாநிதியால் சென்ற ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட TESO,  என்ற நாடக அமைப்பு. ஈழப்பிரச்சினையைவிட கருணாநிதியிடம் இப்போதைக்கு அரசியல் செய்ய வேறு வழியுமில்லை உசாராக இருக்கவேண்டிய பொறுப்பு ஈழத்தமிழர்களுக்கே உரித்தானது.
 
கருணாநிதி தான் தமிழகத்தை கைப்பற்றவேண்டுமென்றால் தமிழ்நாட்டை வைத்து அரசியல் செய்யவேண்டும்,   அதுதான் தர்மமாகும்.  ஆனால் நஞ்சுத்தனமான புரளிகளை கிளப்பிவிட்டு ஈழத்தை கிளர்ச்சிக்குள்ளாக்கி அரசியல் செய்வதை எவரும் அனுமதிக்க முடியாது. சுதந்திரத்துக்குப்பின் இன்றுவரை இலங்கையில் தமிழருக்கான அங்கீகாரம் மறுக்கப்பட்டே வருகிறது அதன் எதிர்வினை இனமுரண்பாட்டை தோற்றுவித்து இனப்படுகொலைவரை இட்டுச்சென்றிருக்கிறது.
 
ஈழத்தில் கோவில்கள் உடைக்கப்பட்டதும் உண்மை,  பள்ளிக்கூடங்கள் மண்ணாக்கப்பட்டதும் உண்மை,  பொதுச்சொத்துக்கள் காவு வாங்கப்பட்டதும் உண்மை, மக்கள் கூட்டங்கூட்டமாக புதைக்கபபட்டதும் உண்மை,  தொடர்ந்து சிங்கள ஆதிக்கம் பெருகிவருவதும் உண்மை இவை அனைத்திற்கும் திரைமறைவில் நின்று ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து வருவது   கருணாநிதியின் கூட்டமைப்பு காங்கிரஸ் சோனியாவின் அரசு.  தனது குடும்ப நலனே குறியாகக்கொண்டு சோனியாவின் அரசு கவிழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக அனைத்து சம்பவங்களிலும் காங்கிரஸ் அரசுக்கு முண்டுகொடுத்து உறுதுணையாக நின்றுகொண்டிருப்பவர் கருங்காலி கருணாநிதி.
 
இன்னும் ஒரு விடயத்தை இங்கு புரிதலாக்கவேண்டியுள்ளது.  சோனியாவின் காங்கிரஸ் அரசுதான் ஈழத்துக்கு எதிராக,   விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிராக செயற்பட்டு வருகிறது என்றும்,   கூட்டணி அமைத்து அரசியல் செய்யும் கருணாநிதி பேராசை குடும்ப நலன் காரணமாக அரசியல் ரீதியாக சோரம் போய்க்கொண்டிருக்கிறார்  அவர் மானசீகமாக ஈழத்தமிழர்களுக்கு எதிரியாக இருக்கமாட்டார் என்ற அப்பாவித்தனமான நம்பிக்கையும் நடுநிலையிலும் விளிம்புநிலையில் இருக்கும் பலருக்கு புரியாமல் இருக்கிறது.  அந்த இரண்டும் கெட்டான் விளிம்புநிலை அப்பாவித்தனம்தான் கருணாநிதி தொடர்ந்து கபடநாடகங்கள் நடத்தி ஏமாற்றி மக்கள் மத்தியில் புலுடா விடுவதற்கு இடமளித்து வருவதையும் கடைசிகாலமான இப்போதாவது கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. 
 
1980 களில் இருந்து தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் தமிழ் ஈழக்கொள்கைக்கு எதிராக கபடத்தனமான சூழ்ச்சி  அரசியல் செய்து வந்திருப்பதுதான் கருணாநிதியின் முடிவான நிலைப்பாடு.  என்பதை இன்னும் பலர் நம்பவில்லை அல்லது புரிந்துகொள்ளவில்லையென்றே கூறமுடியும்.  கருணாநிதியின் பதவி புகழ் ஆசையும் தனது குடும்பத்தை தமிழகத்தில் தொடர்ந்து நிலைநிறுத்தவேண்டும் என்ற வக்கிரமான பேராசையும்,   பிறாப்பால் தாய்மொழியை தமிழாக கொள்ளாத மரபும் இப்படி கருணாநிதியை ஆக்கியிருக்கக்கூடும் என்பதும் மறுப்பதற்கில்லை.  எது எப்படியிருப்பினும் கருணாநிதியின் நச்சுத்தனமான பிதற்றலுக்கு காதுகொடுத்தாலே அது அழிவில் முடியும் என்பதை கடைசிகாலததில் என்றாலும் பலர் அறிந்திருக்கின்றனர் என்பது ஓரளவு நிம்மதியை தரும்.
 
தற்போதைய காலம் கருணாநிதிக்கு அரசியலில் அடுத்தகால் எடுத்துவைக்கமுடியாத நெருக்கடியை கொடுத்திருக்கிறது,  உலகப்பிரசித்திபெற்ற ஊழல்க்குடும்பம் என்று அனைத்து ஊடகங்களும் மண்ணை வாரி இறைத்தாலும்,   எதையும் சட்டைசெய்யாமல் கருணாநிதியால் தினமும் அறிக்கைவிட்டு அரசியல் செய்ய முடிகிறதென்றால் அவையனைத்தும் தமிழகமக்களின் அப்பாவித்தனமும் ஜெயலலிதாவின் தாந்தோன்றித்தனமான நிர்வாக சீர்கேடும் என்பதே உண்மை.
 
தமிழ்நாட்டு தமிழர் மத்தியில்,  ஈழத்தமிழர் மத்தியில்,   இந்திய அளவில் 2009 / 2010 க்குப்பின் கருணாநிதி வாய் திறக்கமுடியாது என்றே ஊடகங்கள்,   தொண்டு அமைப்புக்கள்,   அரசியல் அனுமானிகள்,   கணித்திருந்தன ஆனால் அவைகளை தாண்டி எதிர்க்கட்சி தகுதியுமில்லாமல் கருணாநிதியால் அரசியல் செய்ய முடிகிறதென்றால் அந்த திறமையை பாராட்டாமல் இருக்கமுடியாது.
 
எதை பாவித்தால் மக்களை பலவீனர்கள் ஆக்கலாம் என்பது கருணாநிதியின் மூல உபாய தந்திரம். 96 களில் ஜெயலலிதாவின் அலை மேலெழுகிறதென்று தெரிந்தபோது எம்ஜீஆர் ஆதரவாளர்களை தனது பக்கம் திருப்புவதற்காக சென்னையில் ஒரு திரைப்பட நகரத்தை திறந்து அதற்கு எம்ஜீஆர் திரைப்பட நகரம் என்று கருணாநிதி பெயர்சூட்டி ஜெயலலிதாவை பின்னுக்கு தள்ளினார்.  அரசு பொது மருத்துவமனை ஒன்றை இராமச்சந்திரா மருத்துவமனை என்று எம்ஜீஆர் பெயர்சூட்டி தன்னை காந்தியவாதியாக காட்டிக்கொண்டார்.
 
செத்துப்போன பெரியாரையும்,   அண்ணாத்துரையையும் கருணாநிதி அரவணைத்து கண்ணீர் விடாத நாளில்லை. இன்று கருணாநிதி அடிமட்டம்வரை ஒதுக்கப்பட்டிருந்தாலும் அண்ணாவளைவை  அகற்றி தெருவீதி விஸ்தரிக்க ஜெயலலிதா எடுத்த முடிவு நிறைவேற்ற முடியவில்லை.  அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஜெயலலிதாவால் கைவைக்க முடியவில்லை,  திருவள்ளுவர் சிலைக்கு வர்ணம் பூச காலதாமதமாகிவிட்டதென்று ஜெயலலிதாவின் ஆட்சியையே நிலை குலையச்செய்யும் அளவுக்கு தந்திரமும் சூழ்ச்சியும் அவரால் பரப்பப்படுகிறது.
 
இதுதான் கருணாநிதி என்பதை ஈழத்தமிழர்கள் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து  நடந்து செல்லும் பாதையை கடக்கவேண்டும்.

ஈழதேசம் செய்திகளுக்காக,

கனகதரன்.