உலகிலுள்ள மனிதாபிமானத்தை மதித்து நேசிக்கும் நாடுகள்,  மற்றும் முதல்த்தரமான பக்கச்சார்பற்ற சர்வதேச தொண்டரமைப்புக்கள், சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றின் மிகப்பெரிய அழுத்தத்தின் பின் 2010,ல் ஐநா, செயலாளர் நாயகம் பான் கீ மூன்.  அவர்களால்  உருவாக்கப்பட்டிருந்த,   இலங்கையில் நடந்த யுத்த மீறல் விவரணங்கள் பற்றிய ஆராய்வு,   தகுதிவாய்ந்த நிபுணர் குழுவினரால் கிட்டத்தட்ட ஒருவருடம் ஆராய்ந்து கண்டறிந்த தமது பூரணமான அறிக்கையை,  ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களிடம் 2011,  ஏப்ரல் மாதம் நிபுணர்கள் குழு கையளித்திருந்தது.

இலங்கை அரசு ஈடேற்றியிருந்த உலக மரபுக்கு மீறிய போர்க்குற்றம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையை ஐநா சபை ஏப்ரல் 26, 2011 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. மொத்தம் 216. பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில்,  இலங்கையில் நடைபெற்ற காட்டுமிராண்டித்தனமான போர்க்குற்றம்,  மற்றும் படுகொலைகள்,  பாலியல் சித்திரவதைகள், மனித உரிமைமீறல்கள்,   ஆகியவைகளை சுட்டிக்காட்டும் ஆய்வுகள், புகைப்படங்கள், விளக்கப் படங்கள் இன்னும் பல உள்ளடக்கங்கள் இடம்பெற்றிருந்தன.

இருந்தும் நிபுணர்கள் குழுவின் பரிந்துரை அறிக்கை உலகத்தில் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு அல்லாவிட்டாலும்,  பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு துளியளவாகுதல்  நன்மைபயக்கும் வகையில்  எத்தகைய  தாக்கத்தையும் ஏற்படுத்திவிடவில்லை.   மாறாக கிணற்றில்ப்போட்ட கல்லாக தேடுவாறற்ற நிலைக்கு ஐநா முன்னெடுப்பில் தயாரிக்கப்பட்ட  அவ்வறிக்கை சென்றிருக்கிறது.

பன்முகப்பட்ட  உலக அழுத்தம் காரணமாக  நிபுணர்குழுவின் அறிக்கையை ஐநா அமைப்பு 2011, ஏப் ல் அதிகாரபூர்வமாக வெளியிட்டிருந்தது,   ஆனால் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட ஆலோசனைகள்,  வேலைத்திட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவர ஐநாவால் முடியவில்லை.

கவனத்திலெடுக்காமல் விடப்பட்டிருந்தாலும் அந்த அறிக்கை ஐநாவின் ஆளுமை கொண்ட ஒரு தீர்க்கமான தீர்மானம் போன்று உலக அரங்கில் புரியப்பட்டிருந்தது.  உலகிலுள்ள பக்கச்சார்பற்ற தொண்டர் அமைப்புக்கள் ஐநா நிபுணர்கள் குழுவின் அறிக்கையை  ஓரளவேனும் வரவேற்றிருந்தன. அந்த அறிக்கையில் நிபுணர்கள் குழு சுட்டிக்காட்டி முன்னிலைப்படுத்திய வேலைத்திட்டம் தொடங்கப்படவேண்டும் என்றும் குரல்களும்  எழுந்தன,  ஆனால் ஐநா பொதுச்செயலாளர் குறிப்பிட்ட அறிக்கை முன்னிலை பெறுவதை "ஏனோ விரும்பவில்லை".

இனிவரும் காலங்களில் இலங்கை இனப்பிரச்சினை சம்பந்தமாக ஈழத்தமிழர்களுக்கு சார்பாக எவர் எந்த நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டாலும், பிரச்சினைபற்றி  அலசி ஆராயும்போது ஆதிமூல எழுவாயாக ஐநா நிபுணர்கள் குழுவின் அறிக்கையை மூலோபாய சான்றாக மேற்கோள் காட்டி விவாதித்து தாக்கத்தை ஏற்படுத்துவர் என்பது தவிர்க்கமுடியாதது.  அதை ஐநாகூட  மறுக்க முடியாமலிருக்கும் என்பது யதார்த்தமான உண்மை.

அமெரிக்கா 2012/ நடப்பு  2013,ம் ஆண்டுகளில் ஐநா மனித உரிமை அமர்வுகளில் இலங்கைக்கு எதிரானது என்று சொல்லப்படும் தீர்மானத்தை கொண்டுவருவதற்கும், சனல் 4, தொலைக்காட்சி ஈழ இனப்படுகொலைகளை பகிரங்கமாக வெளியிடுவதற்கும்,  பல உலக நாடுகள் இலங்கையின் நிலவரங்கள்பற்றி மேற்கோள் காட்டி விவாதிப்பதற்கும்,  தமிழ்நாடு சட்டசபையில்  முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சட்டசபையில் குறுக்கீடற்ற தீர்மானங்களை கொண்டுவருவதற்கும் ஐநாவின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை மூல அங்கீகாரத்தையும்,   குறுக்கீடற்ற ஒரு சீரான பாதையையும் அமைத்துக்கொடுத்திருக்கிறது.

இனி வருங்காலங்களில் ஈழ அரசியலை நிர்ணயிக்கும் விதமாக ஏற்பட இருக்கும் திருப்பங்களுக்கும்,  திருத்தங்களுக்கும் முக்கிய ஆதார அடிநாதமாக எடுகோலாக ஐநா சபையின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை இருந்துவிடக்கூடாது என்பது முக்கியமாக இந்தியாவை ஆட்சி செய்யும் மத்திய ஆட்சியாளர்களான சோனியா, மன்மோஹன் ஆகியோரின் அடிப்படை கொள்கையாக இருந்து வருகிறது.

2012,  க்கு முன்னைய ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகளில் உலக நாடுகள் ஈழத்தமிழர்களுக்கு சார்பாக நிலையெடுத்த விவாதங்களின்போது ஶ்ரீலங்கா அரசுக்கு நேரடியான ஆதரவைத்தந்து சர்வதேச அரங்கில் மேற்குலகின் எதிர்நிலையில் அணிசேர்த்து கடும்போக்கோடு இருந்துவந்த இந்தியா,   அமெரிக்காவின் தீர்மானங்கள் சற்று முனைப்புப்பெற்றபோது அரசியல் உள்நோக்கத்தோடு ஶ்ரீலங்கா ஆட்சியாளர்களுக்கு எதிர் நிலையில் நிற்பதுபோல் காட்டிக்கொண்டிருக்கிறது,

அப்படி காட்டிக்கொண்டாலும்,  மறைவு ஸ்தானத்தில் ஐநா நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை,  செயலற்றதாக்குவதற்கான செயற்பாட்டை கருத்தில்க்கொண்டு அமெரிக்க தலையீட்டை மேலெழச்செய்து ஐநா அறிக்கையை பின்தள்ளி தந்தரமாக தளத்தை மாற்றியமைப்பதற்கான இராசதந்திரத்தில் இந்தியா முனைப்புடன் செயற்பட்டது.

சுயநலன் சார்ந்து ஆதிக்க அரசியல் உள்நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட அமெரிக்க தீர்மானத்தை,  செயல்த்திறன் வலுவுள்ளதாக விளம்பரப்படுத்தி மனித உரிமை அமர்வில் அமெரிக்கா முதல் ஆளாக நின்று முன்மொழிந்து ஈழ விடயத்தை கையிலெடுத்து ஆளுமைசெலுத்தும்போது.  தன்னிச்சையாக ஐநா நிபுணர்கள் குழுவின் பரிந்துரை அறிக்கை மேலெழுந்து ஆதிக்கம் செய்ய முடியாது என்பது அமெரிக்கா,  இந்தியா போன்ற நாடுகளுடன்,   ஐநா பொதுச் செயலாளரின் தந்தரமாகவும் இருந்து வருகிறது.

அமெரிக்கா இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிராக ஐநா மனித உரிமை அமர்வில் ஒரு தீர்மானத்தை கொண்டுவருவதாக காட்டிக்கொண்டபோதும் மற்றொரு புறத்தே தமிழர்களுக்கு அனீதி இழைக்கும் விதமாக இலங்கை அரசாங்கம் தமிழர் பகுதிகளுக்கான அபிவிருத்தியில் திருப்திகரமான சாதனை படைத்திருப்பதாக புகழாரம் சூட்டி பெருந்தொகை அமெரிக்க டொலர்களை அள்ளி ஶ்ரீலங்கா ஜனாதிபதி ராஜபக்‌ஷவுக்கு பரிசாக கொடுத்திருக்கிறது.

இலங்கையில் தமிழர்களுக்கு 2008/ 2009 களில் என்ன நடந்தது.  போரினால் அவர்கள் என்னென்ன இட்டு நிரப்பமுடியாத இழப்புக்களை கொள்வனவு செய்திருக்கின்றனர்,  எப்பேற்பட்ட சித்திரவதைகளை அனுபவித்திருந்தனர்,   அவர்களது எதிர்காலம் என்ன,  அவர்களது வாழ்வாதாரம் எத்திசையை நோக்கி செலுத்தப்பட்டுக்கொடிருக்கிறது.  அந்த நாட்டில் தமிழர்களுக்கு எத்தகைய வாழ்க்கை சுதந்திரம் இருக்கிறது.  அவர்களுக்கான அரசியல் என்ன நிலையில் இருக்கிறது.  எதுபற்றியும் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தில் எந்த இடத்திலும் விளித்து கோடிட்டு காட்டப்பட்டிருக்கவில்லை.  அந்த மக்களுக்கு நடந்த கொடுமைக்கான மாற்றீடு,   தண்டனை பற்றி அமெரிக்க தீர்மானம் கடுமையான சொற்பிரயோகம் கொண்டு ஒரு வாக்கியத்தையும் சேர்த்துக்கொள்ளவில்லை.

ஐநாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்மூலம் நட்பு நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்கா தனது ஆளுமையை தொடர்ந்து ஶ்ரீலங்காவுக்குள் செலுத்துவதற்கான ஒரு பொறிமுறையாகவே அமெரிக்க தீர்மானத்தின் இராசதந்திரம் பார்க்கப்படுகிறது.  தொடர்ந்து ஶ்ரீலங்கா நாட்டுக்குள் அமெரிக்கா கண்காணிப்பாளனாக இருப்பதன்மூலம் சீனாவின் அடர்த்தியை குறைத்துக்கொள்ளமுடியும் என்பதும்,  சந்தற்பம் பார்த்து இலங்கைக்குள் ஒரு ஆட்சிமாற்றத்தை தோற்றுவித்து அமெரிக்க சார்பான ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கிவிடவேண்டும்  என்பதும் அமெரிக்காவின் நீண்டநாளைய கணக்கு.  கூட்டிக்கழித்துப்பார்த்தால் இந்தியாவுக்கும் இந்தக்கணக்கு பொருத்தமாகவே இருந்துவருகிறது.

இந்தியாவுக்கு இலங்கைப் பிரச்சினையில் இரண்டு கவலைகள் இருக்கின்றன.  ஒன்று:  ராஜபக்‌ஷவின் சீனச்சார்பு பாசத்தை எந்தவகையிலும் கட்டுப்படுத்த முடியாமை.   இரண்டாவது:   ஶ்ரீலங்கா அரசுடன் இணைந்து கூட்டாக நிகழ்த்தப்பட்ட ஈழ இனப்படுகொலையில் இருந்து தந்தரமாக தப்பிக்கவேண்டிய கட்டாயம்.   இந்த இரண்டு விடயங்களையும் வெல்லவேண்டுமாயின் அமெரிக்க கொள்கையுடன் ஒத்துப்போய் தந்தரமாக இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டுவரவேண்டும்.

ஆனால் மத்திய காங்கிரஸ் அரசு பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாக சமீபகாலத்தய நிகழ்வுகள் எதிர்பாராத நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

அமெரிக்க தீர்மானத்தில் நம்பிக்கையில்லாமல் தமிழ்நாட்டில் தொடர்ந்துவரும்  மாணவர் போராட்ட புரட்சி,  அதனால் தமிழ்நாட்டில் உண்டாகியிருக்கும் நிர்வாக நெருக்கடி அவற்றின் மூலமாக இந்திய மத்திய அரசு, மற்றும் ஐநா நோக்கிய  தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் போன்ற  கடுமையான அழுத்தங்கள்,  ஈழ ஆதரவு அரசியற் கட்சிகள் போராட்ட மாணவர்களுக்கு வழங்கிவரும் மறைமுகமான ஆதரவு.  இவைகளுடன்  கூட்டணியில் இருந்து தப்பித்து தலை தெறிக்க  ஓடிய திமுக கருணாநிதியின்  வெளியேற்றம்.  அப்படி ஏகப்பட்ட நெருக்குவாரங்களை சோனியா மன்மோஹன் அரசு சந்தித்துவருகிறது.

அவைகளுக்கு பணிந்து ஈழத்தமிழர்களுக்கு அரசியல்ரீதியாக ஏதாவது அனுசரணையான மாற்றீடு செய்யப்போனால் ராஜபக்‌ஷ அரசால் இந்தியா போர்க்குற்றவாளியாக காட்டிக்கொடுக்கப்படலாம். என்பதற்கான சமிக்கைகளும் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, மற்றும் ராஜபக்‌ஷ ஆகியோரின் பேச்சுக்கள் மூலம் மறைமுகமாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறன.

அமெரிக்கா தனது நலன்சார்ந்து எப்போ வேண்டுமென்றாலும் எதையும் மாற்றிக்கொள்ளக்கூடிய கொள்கையுடையது என்பது ஈரான் ஈராக் அரசியலில் இருந்து லிபியா,   சிரியா வரை உலகம் அறிந்தவிடயம்.  இந்தியா அப்பேற்பட்ட இராஜதந்திரத்தை செய்யக்கூடிய வல்லமை பொருந்திய நாடல்ல.

மார்ச் 21, 2013 அன்று ஐநா மனித உரிமைகள் அமர்வில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியாவின் நலன் காரணமாக இந்தியா கேட்டுக்கொண்டதன் பேரில் திருத்தியமைத்தாக அமெரிக்காவின் தெற்காசிய பிராந்தியங்களுக்கான வெளியுறவுச்செயலர் றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்திருக்கிறார்.

"ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில், இலங்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம்,  "இந்தியாவின் ஒத்துழைப்புடன்தான் தயாரிக்கப்பட்டது,''  என்றும். அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானத்தை,  இந்தியா நீர்த்து போக செய்து விட்டதாக புகார் கூறப்பட்டது.  இது குறித்து,  தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கான அமெரிக்க வெளியுறவுத்துறை, துணை செயலர் றொபேர்ட் ஓ பிளேக்,  கூறியதாவது.

இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம்,  "இந்தியாவின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்டது"  என்றும். தீர்மானத்தில் இந்தியாவின் ஆலோசனைபடி பல திருத்தங்கள் செய்யப்பட்டது என்றும்,  இலங்கையுடன் இந்தியாவுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவே,  இந்தியாவின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்ட இந்த தீர்மானம், எங்களுக்கு மன நிறைவை அளிக்கிறது.  என்று தெரிவித்திருக்கிறார்.

இந்தியா தொலைநோக்கு பார்வையுடன் யதார்த்தத்தை ஊடுருவிப்பார்த்து இலங்கை தமிழர் விடயத்தில்  மாற்றம் கொண்டுவராமல் அப்படியே அரைத்த மாவையே திரும்பவும் அரைத்துக்கொண்டிருந்தால் காலப்போக்கில் ஈழம் பிரிந்துபோவது ஒருபுறமிருக்க  இந்திய துணைக்கண்டம் சிதறிப்போவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உண்டு.

1960 களுக்குமுன் காங்கிரஸின் ஒரு மானிலமாக தமிழ்நாடு இருந்துவந்தது,  தந்திரசாலிகளான திராவிட கட்சித்தலைவர்கள் குறிப்பாக கருணாநிதி  இந்தி எதிர்ப்பு என்ற தந்திர நெருப்பை மூட்டி காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டுக்கு சொந்தமானதல்ல என்பதை தனது நா வல்லமையாலும் நடிப்பு திறமையாலும் வெற்றிகொண்டிருந்தார்.  ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ்க்கு சொந்தமானதில்லை என்று ஆட்சியை கைப்பற்றிக்கொண்டாலும் அவர் தனது தலைமைச்செயலகமாக காங்கிரஸ் கட்சியை இருத்தி குறுகிய அரசியல் செய்து தமிழ்நாட்டை மீண்டும் காங்கிரஸிடம் அடகு வைத்து தன்நலன் காப்பதிலேயே குறியாக இருந்தார்.

முள்ளிவாய்க்கால் அனர்த்தமும் ஈழப்படுகொலைகளும் இடம்பெறாமல் இருந்திருந்தால் கருணாநிதியின் வேசம் கலையாமலே திராவிட வேசத்துக்குள் காங்கிரஸ் பதுங்கியிருந்து அனைத்து தமிழர்களையும் தமிழ்நாட்டையும் அழித்திருக்கும்.

இன்றைக்கு ஈழம் அழிந்திருக்கிறது.   உண்மைகளை மாணவர்கள் அறிந்தபோது  தமிழகம் தப்பித்துக்கொண்டுவிட்டது.

சிங்களவனை ஏவிவிட்டு காங்கிரஸும்,  திராவிட கருணாநிதியும் ஈழத்தை அழித்தனர் தமிழின அழிப்பின் ஆரம்பம் ஈழ அழிப்பு என்பதை அரசியற்கட்சிகளை புறந்தள்ளிவிட்டு தமிழகத்து மாணவர்கள் இன்று புரிந்துகொண்டுவிட்டனர்.

மாணவர் போராட்டம் மிஞ்சியிருக்கும் தனது இருப்பை கேள்விக்குறியாக்கி காணாமல்ச்செய்துவிடும் என்பதை கருணாநிதி அறிந்தபோது மாணவர்களின் கோசங்களும் கொள்கைகளுமே தனது கொள்கை என்று தன்னிலை விளக்கம் செய்துவிட்டு காலதாமதப்படுத்தாமல் காங்கிரஸை விட்டு தலை தெறிக்க தப்பி ஓடி வந்திருக்கிறார்.

மாணவர்களது போராட்டத்தின் வீச்சறிந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள்,   ஒன்றுக்கு இரண்டுமுறை சட்டசபையில் தீர்மானம் இயற்றவேண்டிய கட்டாயத்துக்கு  தள்ளப்பட்டிருக்கிறார்.

உலக வல்லரசுகளின் ஒப்பந்தங்களும்,  தீர்மானங்களும் தீர்மானிக்க முடியாத ஒரு விடயத்தை திருப்பி எழுதும் விதமாக   தமிழக மாணவர் போராட்டம் உலகத்தையும் அரசியல் விற்பன்னர்களையும்  திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது.

1987,ல் இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தி,  ஶ்ரீலங்கா ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தன,   கைவண்ணத்தில் உருவாகி வரலாற்று பதிவில் இடம்பெற்று காணாமல்ப்போன  இலங்கை இந்திய சமாதான ஒப்பந்தம்,

2011,ல் அகில உலக அழுத்தம் காரணமாக பெருத்த எதிர்பார்ப்புடன் பெரும் பணச்செலவு செய்து ஒருவருட கால உழைப்பில் ஐநா செயலாளரால் உருவாக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் உலகபிரசித்திபெற்று,  கிணற்றில் இட்ட கல்போல் கிடக்கும் ஐநா நிபுணர்குழு அறிக்கை,

அதேகாலத்தில் ஐநா நிபுணர்கள் குழுவுக்க போட்டியாக வரையப்பட்ட ஶ்ரீலங்கா ஜனாதிபதி ராஜபக்‌ஷ புகழ்பாடும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தமிழர் நலனை குழிதோண்டி புதைக்க வல்ல தீர்மான அறிக்கை,   

2012, ல் ஜெனீவா அரங்கில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வில் உலக மகா வல்லரசு அமெரிக்கா கொண்டுவந்து பலநாடுகளின் அனுசரணையுடன் வெற்றிபெற்று சர்வதேசத்தை ஈர்த்த  இலங்கைக்கு எதிரான என்று சொல்லப்படும் ஒன்றுமில்லாத தீர்மானம்.

அதன்பின் சர்வதேச புகழ்பூக்க 2013 மார்ச் 21, அன்று இந்தியாவின் திருத்தங்களுடன் அமெரிக்கா கொண்டுவந்த அடுத்த இலங்கை அரசுக்கு எதிரான என்று பகிரப்படும் இந்திய தந்திர சர்வதேச தீர்மானம்.

தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் முன்மொழிந்து இயற்றப்பட்ட வரலாற்று சிறப்புப்பெற்று முக்கியம் வாய்ந்த தீர்மானங்கள்,

அவை தவிர நாடக கலைஞர் குடும்பத்தலைவன் மு கருணாநிதியார்,   அவர்களால் 1952  ம் ஆண்டிலிருந்து  இருந்து காலையும் மாலையும் கண்மூடாமல் இயற்றி அடுக்கப்பட்ட தீர்மானங்கள். டெஸோவின் நாடக கலை நிகழ்ச்சிகள்.

அனைத்தும்  சுயநலன் காத்து அவரவர் இமேஜ்ஜை உயர்த்தி ஓங்கி பறைசாற்றும் வண்ணம் அறிக்கைகளாகவும் தீர்மானங்களாகவும் மட்டுமே  சாகாவரம் பெற்று  இருந்துகொண்டிருக்கின்றன.

இந்த தீர்மானங்களாலும்,  ஒப்பந்தங்களாலும் ஈழத்தமிழரின் வாழ்வில் படுகொலை,   படுகுழி தோண்டியது தவிர ஒரு மண்ணளவு முன்னேற்றம் காணப்பட்டதாக வரலாற்றில் தகவலில்லை.

ஆனால் தமிழகத்தில் லயோலா கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்ட மாணவர்களின் போராட்டம் ஒன்றுமட்டுமே ஈழத்தமிழர் பிரச்சினையில் ஏதிரேவரும் அனைத்தையும் தாங்கும் வலிமையுடன் குறுக்கே மலைபோல இன்று தினவெடுத்து நிமிர்ந்து நிற்கிறது.  வேசம் கட்டி குறுக்கே நின்ற சோனியா,   மன்மோஹன், கருணாநிதி சிதம்பரம்,   தாண்டி அமெரிக்கா ஐநாவரை செய்திகளை  சொல்லி தமிழர்களுக்கான நீதியான இருப்பை நிறுவக்கூடிய வீச்சோடு உலகத்தால்  தமிழக மாணவர்கள் போராட்டம் உணரப்படுகிறது.   இன்றில்லாவிட்டாலும் மாணவர்களின் போராட்டம் உறுதியாக தொடரும் பட்ஷத்தில் அடிபணியவேண்டிய கட்டாயம் இந்திய,  இலங்கை அரசுகளுக்குமட்டுமல்ல உலகிலுள்ள எந்த அரசுக்குமுண்டு.

ஈழதேசம் செய்திகளுக்காக.
கனகதரன்.