Friday, May 17, 2013
மே 17,
இயலாமையும் வஞ்சகமும்
சூல் கொண்டு
மானுடம் தெரு மேய்ந்போது
கொடிய நாசகார பாஷாணங்களை
முள்ளிவாய்க்கால் முட்டுக்குள்
மிக மலினமாக ஒத்திகை பார்த்து,
நவீன நரபலி நடத்தப்பட்ட
அரக்கத்தனத்தின்
நான்காம் ஆண்டு.
ஒருசில
கருங்காலிகளின் வரலாற்று துரோகத்தால்,
இருபத்து ஓராம் நூற்றாண்டில்
உலகம் வியப்புடன் திரும்பிப்பார்த்த
தமிழினத்தின் ஒப்பற்ற எழுச்சி
காட்டிக்கொடுக்கப்பட்ட
கரிநாள்.
தந்தரமும் நயவஞ்சகமும் ஒன்றுசேர்ந்து
ஒரு இனத்தின்
நாற்பது ஆண்டு முதலீட்டை
காவு கொடுத்து,
மண்ணோடு மண்ணாக்கிய
வரலாற்றின் வக்கிரமான
நினைவு நாள்.
மானசீகமாக இந்த நினைவு
எனது மண்ணில்
வெப்பத்துடன் நினைவு கூரவேண்டும்.
சுற்றி நின்று வஞ்சகர்கள் விபச்சாரம் செய்வதால்
விண் நோக்கி கூவிக் குரல் எழுப்பி
இறந்துபோன உறவுகளை உச்சாடனம் செய்து
அன்னை தமிழின் பெயரால்
அந்தியட்டி செய்கிறேன்.
எனது
இறந்தகால நினைவுகள் நீண்டு விரிகின்றன.
வீரம் ஒருபுறம்,
வஞ்சகம் மறுபுறம்.
உன்னோடு உன்னோடு என்று அறம் பாடியவர்கள்
தருணம் பார்த்து கருவறுத்த
நினைவுகள் மட்டும்,
நெஞ்சுக் கூட்டுக்குள் அடைந்து கிடக்க முடியாமல்
விழுப்புண்ணின் சீழாக வெளி வருகிறது.
எனது தாய் நாடு
ஒரு சிறிய நாடுதான்.
இருந்தாலும்
தமிழ் இனம் உலகில் இருப்பதை
வரை படங்களுடன் எட்டு திக்கிலும் முரசறைந்தது.
உரிமைப் புரட்சியின் வெப்பத்தால்
ஒரு கட்டத்தில்
எனது மண் உலைக்களமானது உண்மை.
உலைக்களம் கக்கிய கனலுக்குள்
குளித்து வெளிவந்த போதுதான்
மனித மரபணுக்களின் உள்ளிருந்த
அருவருப்பான சூத்திரம் அறிய முடிந்தது.
என் தாய் மண் என்பதால்
எதையும் இட்டுக்கட்டி சொல்லவில்லை.
வாழ்ந்து பார்த்த வரையில்
ரஷ்யாவை விட, ஐரோப்பாவை விட
ஈழநாடு
என்றென்றும் எனக்கு இனிப்பாக இருந்தது.
அன்றொருநாள்
காகம் ஒன்று எனது குழந்தையின் தலையில்
எச்சமிட்டதற்க்குக்கூட காவலுக்கு கட்டளையிட்ட
என் தலைவன் வாழ்ந்த மண்ணில்
நரிகளும் பன்றிகளும்
தமது மேய்ச்சல் காடாக்கி இனப்பெருக்கம் செய்ய
படையெடுக்கின்றன.
முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்
அப்புவும், ஆச்சியும், அடுத்தவீட்டு பாட்டியும்
சொல்லக் கேள்விப்பட்டிருந்தேன்.
அது மிகையல்ல என்பதை
எனக்கு ஞானம் போதித்த பேரககராதி மூலம்
நிதர்சனமாகவும் உணர்ந்தது கொண்டேன்.
எனக்கு விபரம் தெரிந்த காலத்திலிருந்து,
எனது மண்ணில்
தினமும் வெடிச்சத்தம் காதை பிளக்கும்.
அதற்காக
எவரும் வீட்டுக்குள் அடைந்து கிடக்கவுமில்லை.
விபரம் புரியாமலுமில்லை.
அரசியல் செத்துப்போய்
அரை நூற்றாண்டு ஆகிவிட்டபோதும்,
மனுவியல்
உயிர்ப்புடன் எனது மண்ணில்
நிமிர்ந்து நிற்கக் கண்டேன்.
தலைமையின் பண்பு அதுவென்று
நான் மட்டும் சொல்லவில்லை.
அதற்காக
நாங்கள் பாராட்டு விழா நடத்தவுமில்லை.
குழந்தைகள் கூட வெடிச்சத்தத்திற்கு
விளக்கவுரை கூறுமளவுக்கு
விற்பன்னராக இருந்தது
மற்றவர்களுக்கு வியப்பாக இருக்கலாம்,
ஆனால்,
இப்போ மட்டும்
அது
எனக்கும் வியப்பாகத்தான் இருக்கிறது.
அப்போதெல்லாம்
துணிச்சல் கூட
எங்களிடம், கைமாற்று கேட்குமளவுக்கு
துணிவு
பார்க்குமிடமெல்லாம்
கும்பி கும்பியாக கிடந்தது.
நான்கு வருடங்களுக்கு முன்புவரை
எல்லோரைப் போலவும் எங்களுக்கும்
ஆயிரம் பிரச்சினைகள்.
ஆனாலும்
எங்களை அடிமைகள் என்று
எவரும் சொல்லவில்லை.
தினமும் எங்கள் மண்ணில்
மண்ணுக்காக
மரணம் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.
அதற்காக எவரும் பயப்படவும் இல்லை,
பக்கத்து வீட்டில்ப்போய்
பதுங்கிக்கொள்ளவும் இல்லை.
தூக்கத்துக்கென்று
நாங்கள் இரவை தெரிவு செய்ததுமில்லை.
இன்று நான்
வேறொரு நாட்டில் உண்டு உறங்கி
பாதுகாப்பாக இருந்தாலும்,
தனிமையாக உணருகின்றேன்.
காவற்காரரை காணவில்லை
எனது கவச குண்டலத்தின்
சத்தமும் கேட்கவில்லை.
அடிக்கடி திடுக்கிடுகிறேன்.
இரண்டாயிரத்து ஒன்பதுக்கு முன்
என்னிடம்
அசாத்திய துணிச்சல் நிறையவே இருந்தது.
அது
தலைக்கனமாக கூட இருக்கலாம்.
இன்றைக்கு துணிச்சல் இருந்தாலும்
அசாத்தியம் இருந்த இடம்
வெறிச்சோடி வெற்றிடமாக கிடக்கிறது.
அதற்கான காரணங்கள் நிறையவே இருக்கின்றன.
ஈழநாட்டை தாயகமாக கொண்டு
அங்கு பிறந்த பூர்வீக தமிழனான எனக்கு,
அங்கு
எனது மண்ணில் வாழ இடமில்லை.
என் உரிமை வஞ்சகர்களின் வாய்ப்பாடுகளால்
முற்றாக தடை செய்யப்பட்டுவிட்டது.
இப்போதெல்லாம்
வேடனும்
வெட்டரிவாள்களும் குடிகொண்டுவிட்டன.
எனக்கான வழக்குகள் நானில்லாமல்
வெவ்வேறு மன்றங்களில்
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
என் மூலம் தெரியாத பலர்
வேற்று மொழியில் எனது சுதந்திரம் பற்றி
மூச்சு விடமல் காரசாரமாக விவாதிக்கின்றனர்.
எந்த முடிவையும் எட்டிவிட மாட்டார்கள்
என்பது மட்டும்
என்னால் சொல்ல முடியும்.
அதுபற்றி பலருக்கும் உள்ளூர மகிழ்ச்சிதான்.
சிலர் கவலைப்படுவதுபோல் காட்டுகின்றனர்
உலகத்திலுள்ள அனைத்து பேரரசுகளும்,
ஆட்சியாளர்களும் உள சுத்தியோடு
எமது கையறு நிலையை,
வன் குடியகல்வை
மானசீகமாக பேச மறுக்கின்றனர்.
எங்களை
சிங்களவனிடம் தாரைவார்த்துக்கொடுத்த
பிரித்தானிய
எலிஸபெத் மகாராணியார் உட்பட.
அது ஏன் என்பது எனக்கும்
எங்களுக்கும் இதுவரை புரியவில்லை.
இரண்டு காரணங்கள் இருக்கலாம்,
வரலாற்றின்
படிப்பினையை மூலதனமாகக் கொண்டு
எனது உள் மனது
அடித்து சொல்லிக் கொண்டிருக்கிறது.
நான்
அதை மானசீகமாக ஏற்றுக்கொண்டாலும்,
வெளியில் சொல்ல முடியவில்லை,
ஏனென்றால்
கருங்காலிகளுடன், கிரந்தம் பேசும்
பெரியவரும் கோபித்துக் கொள்ளுவார்.
அவரது ஈகோ'வும் வித்தக காய்ச்சலும்,
என்னையும் எனது சந்ததியையும்
உலுக்கிய உலுக்கும் படுத்திய பாடும்
எங்களைத்தவிர வேறு எவரும்
அனுபவித்து புரிந்திருக்க முடியாது.
ஆனாலும் அவர் இன்றைக்கு
மோசமாக அடிபட்டு குப்புற விழுந்து போனார்
இருந்தும் புரியாத கிரந்தத்தை
இன்னும் அவர் நிறுத்திக்கொள்ளவில்லை.
அது சர்வதேச மட்டத்தில்
பலருக்கும் புரிந்த விடயங்கள்தான்.
இன்னுமொரு மூன்று வருடத்திற்கு
பொறுத்துத்தான் ஆகவேண்டும்.
அட்டம சாமத்தில்
பட்சி ஒன்று சொல்லிவிட்டு பறந்துவிட்டது.
உலகத்தில்
தாழ்வு மனப்பாண்மையை
பகிரங்கமாக சொன்னால்
பெரியவருக்கு மட்டுமல்ல
எவருக்கும் ஏற்றுக்கொள்ள முடியாமலிருக்கலாம்.
அதனால்
அதை நான் வெளிப்படையாக
சொல்ல விரும்பவில்லை.
எனது இனம்
அகதியாக புலம்பெயர்ந்திருந்தாலும,
அமெரிக்காவில்,
ஐரோப்பாவில்,
அவுஸ்திரேலியாவில்,
கனடாவில்
இன்னபிற இருபது நாடுகளில்
அமைதியாக நிம்மதியாக வாழ முடிகிறது.
ஆனால்
நிராயுதபாணியான போதும்
எனது சொந்த நாடான ஈழத்தில்
ஒரு மணி நேரம்
சுதந்திரமாக உயிர் வாழ இடமில்லை.
நம்பிக்கையுடன்
நான் அகதி என்று தமிழ்நாடு வந்தாலும்,
அதிகம் சிறையிலும்,
சிறைச்சாலை போன்ற கட்டமைப்புக்குள்ளும்
மட்டுமே வாழ முடிகிறது.
ஏனென்று புரியவில்லை.
அதுபற்றி
வெளியில் சொல்லவும் முடியவில்லை.
எனது தாய் நாட்டு மண்ணில்
நான் ஏன் வாழமுடியாது?,
எனது உறவுகள் நிறைய செத்துப்போய் விட்டன,
மீதமாக இருப்பவர்கள்
ஒன்றாக ஒரு நாட்டில் இல்லை.
கணவன் ஒரு நாட்டில்
மனைவி மற்றொரு நாட்டில்
குழந்தைகள் வேறு கண்டத்தில்.
இதை பெரியவருக்கும் சிலர் தெரியப்படுத்தினர்
அவர்
தனது குடும்பமும் பல துருவங்களாகி
தீர்க்க முடியாத சிக்கல் இருப்பதாக
கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.
பஞ்சாயத்து காரர்களை நம்பி ஏமாந்து போனோம்.
நான் எனது மண்ணில் வாழவேண்டும்.
ஏன் வாழ முடியாது?
அந்த உண்மை தெரிந்தாகும் வரை..
அறிந்தாகும் வரை..
அங்கு அமைதி நிலை
தோன்றும் என்று
அகதியாக
நாட்டுக்கு வெளியில் வசிக்கும் நான்
ஒருபோதும் நம்பவில்லை.
ஏனென்றால்
நான் ஒரு பொழுது
மவுனமாக இருந்துவிட்டாலே
அங்கு
அமைதி என்று கதை கட்டிவிடுவர்.
நான் சுதந்திரவாதியாக உணரும்வரை
நான் அமைதியாக இருக்க முடியாது.
என் தாய் மண் சுடுகாடாகி கிடக்கிறது.
எஞ்சிய உறவுகள் கழுகுகளின் கட்டுப்பாட்டில்
ஊசலாடுவதை ஊடகங்கள் சொல்லுகின்றன.
உள்ளம் எரிதனலாகி புழுக்கம் மிஞ்சிவிட்டது.
எமிஞ்சிய உறவினர்கள்
தினமும் மரணவதை படுவதை
எப்படி என்னால் பொறுத்துக்கொள்ள முடியும்?
நான் சந்திப்பவர்களும்
எனது கருத்தை ஒத்தவர்களாகவே
இருக்கின்றனர்.
எங்களுக்கு
இது ஒரு மிகப் பெரிய பின்னடைவு,
இருந்தும் காலப்போக்கில்
கட்டாயம் நிமிர்த்தப்படும்
என்றுதான் உறுதியாக நினைக்கிறேன்.
எங்கள் சுதந்திரத்திற்கான அத்திவாரமும்
திட்டங்களும்
மிக உறுதியாகவே போடப்பட்டிருந்தன.
அது எனக்கு நன்கு தெரியும்.
அந்த அனுமானங்கள் மட்டும்தான்
என்றைக்கும்
இலகுவானதாக எனக்குப் படுகிறது.
அதுபற்றி வேறு பலரும் அறிந்திருக்கக்கூடும்.
மற்றவர் வெளியில் சொல்லாவிட்டாலும்
எல்லோரும்
உள்ளூர நன்றாகவே அறிவர்.
என் தாய் மண்ணில்
நான் ஏன் வசிக்க முடியாது என்பதற்கான
மூல முகாந்திரம்
எனக்கு தெரிந்தாகவேண்டும்.
அதுவரை
நான் எதையும் எதற்காகவும்
சாதாரணமாக விட்டுவிட முடியாது.
எனது
தாய் மண்ணில் அமைதி பிறக்கும்வரை,
நான் மட்டுமல்ல
எனது சந்ததி
தூங்கிக்கிடக்குமென்று நான் நினைக்கவில்லை.
2009ல் பெருத்த இனப் படுகொலையுடன்
அனைத்தும் நிறைவுக்கு வந்தது என்றனர்.
இந்தியா
ஒரு இலட்சம் வீடு கட்டி கொடுக்க இருப்பதாக
செய்தி வந்தது
செய்தியை படித்த வழிப்போக்கன்
அடக்க முடியாமல் சிரித்தான்,
எனக்கு ஒன்றும் புரியவில்லை
ஏனென்று கேட்டேன்
இந்தியாவில் 40 கோடி மக்களுக்கு
வீடு இல்லை என்ற உண்மையை சொன்னான்.
இந்திய அரசியல் என்னை புல்லரிக்க வைத்தது.
நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டது.
அயலவர்கள், அடுத்த வீட்டுக்காரர்
பஞ்சாயத்து செய்து தீர்வு சொல்லுவார்கள்
என நம்பினேன்,
ஆனால் அவர்கள்
ஆயிரம் மேடை அமைத்து விசாரித்தபோதும்
எங்களில்
செத்துப்போனது எத்தனைபேர் என்பதுகூட
அவர்களால் அறிய முடியவில்லை.
எதையெல்லாமோ புலனாய்வு செய்து
தேடுவதாக சொன்னர்கள்,
ஒன்றையும் புடுங்கிவிடவில்லை.
அவர்கள்
எனது எரிந்த வீட்டினுள் கிடந்த
பூனையின்
மயிரை மட்டும் புடுங்கிக்கொண்டிருக்கின்றனர்
என்பதை அறிந்து வெறுத்துப்போனேன்.
கயிறு இறுகிக்கொண்டிருப்பதாகவே
நான் உணருகிறேன்.
காப்பாற்றும் நோக்கோடு எவரும் இல்லை.
எங்களுக்கான நேரமும் ஒன்று உண்டு.
அதனால்
அந்த மண்ணில் மீண்டும் அமைதியின்மை
ஏற்படலாம்.
அந்த அமைதியின்மை
கருக்கட்டாமல் செய்யவேண்டிய பொறுப்பு
என்னுடையதல்ல என்பதில்
என்றைக்கும் நான் உறுதியாகவே உள்ளேன்.
அமெரிக்க பூர்வீக குடிகள்போல,
அவுஸ்திரேலிய பழங்குடிகள்போல,
"பூமராங்" குடன் நான் விட்டேந்தியாக
இருந்திருந்தால்.
நாற்பது ஆண்டுகள்
என்னைப்பற்றி
எனது இனத்தின் அசைவுகள் பற்றி
எதுவும் வெளியில் தெரிந்திருக்காது.
அமெரிக்கா,
அவுஸ்திரேலியா
எப்படி வெள்ளையர்களின் சொந்த நாடு என
வரலாறு தெரியாதவர்களால்
நம்பப்படுவதுபோல,
இலங்கையும் சிங்களவனின் நாடு என்று
நம்பப்பட்டிருக்கும்.
பாரதியார்மீதும் எனக்கு வருத்தம் உண்டு.
சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்,
என்று எதுகை மோனையுடன்
சிலாகித்துவிட்டு போய்விட்டார்.
சிங்களவன் நாளை
வரலாற்று சான்றாக அதை தூக்கிப்பிடிக்க கூடும்.
1948 களில் பிரித்தானியா செய்த தவறு
அது எனக்கும் தெரியும்.
பிரித்தானியாவுக்கும் தெரியும்.
ஏன்
இந்தியாவுக்கும் தெரியும்.
முழு உலகத்துக்கும் இப்போ தெரிகிறது.
நியாயம் என்பக்கம் இருக்கும்வரை
நான் எனது இருப்பிடத்திற்காக
மண்ணுக்காக போராடிக்கொண்டே இருப்பேன்.
அது எனது அடிப்படை உரிமை.
மறுப்பவர்கள்
எனக்கும் மனிதாபிமானத்துக்கும்
எதிரியாகிக்கொண்டே இருப்பர்.
நான் மவுனமாக கிடப்பதென்றால்
மரம் தடியாக பிறந்திருக்கவேண்டும்.
அடி வாங்கிக்கொண்டு வாழுவதாக இருந்தால்
நாயாக பிறந்திருக்கவேண்டும்.
நான் அரசியல்வாதியாக இருக்கவேண்டும் என்றால்
இந்தியாவில் பிறந்திருக்கவேண்டும்.
நான் மூடத்தனமாக மண்புழுவாக
இருந்தால்
சிங்களவனுக்கு நல்லது,
ஆனால்
எனக்கு அது நல்லதல்ல.
எங்கள் உரிமையை 1950 களில்
நாங்கள் அரசியல் ரீதியாக தேடியபோது
எதையும் தரமுடியாது என்றார்கள்.
வந்தேறியான சிங்களவர்கள்.
அவன் ஏன் இப்படி பேசுகிறான்
பின்னணி எதுவாக இருக்கும் என்று
பிரமித்துப்போனேன்.
அன்றைக்கும் இந்தியாதான்
பின்னுக்கு நின்றதோ என்று சந்தேகிக்கிறேன்.
ஜனநாயக வழியில் திரண்டபோது
பின்னால் அடித்தார்கள்.
யார் தடி எடுத்து கொடுத்தது என்பதை
நான் அப்போ கவனிக்கவில்லை.
காந்திய வழியில் போராடியபோது
வெட்டினார்கள்.
வீட்டை எரித்தார்கள்.
இனக்கலவரம் என்று பெயர் சூட்டி
அரசியல் செய்தனர்.
அப்போதான் எனக்குள் ரசாயினம் சுரந்தது.
ஆத்திரப்பட்போது
கொதிக்கும் தார் பீப்பாவுக்குள்
தூக்கி போட்டார்கள்.
அம்மாவுக்கும் அக்காவுக்கும்
சூட்டுக்கோல் காய்ச்சி
நெற்றியிலும் மார்பிலும் சிங்கள ஶ்ரீ சுட்டார்கள்.
பிறப்புறுப்பில் சிங்க கொடியை நாட்டினார்கள்.
அப்பாவும் மாமாவும் திமிறியபோது
அவர்களை
துப்பாக்கியால் சுட்டு கொன்று
தெருவில் ரயர் போட்டு கொளுத்தினார்கள்.
எங்களுக்கும் கோபம் வந்தது.
சிங்களவர்கள்
இந்தியா கலிங்கத்திலிருந்து
வந்திறங்கியதாக படித்திருக்கிறேன்.
இந்தியாவுக்கான இலங்கை தூதுவர்
காரியவாசாம்,
அந்த உண்மையை ஆதாரபூர்வமாக
இந்தியாவுக்கு
உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
வந்தேறியான சிங்களவன்
முதலாளி மூர்க்கத்துடன் அடாவடி செய்கிறான்.
அப்படியானால்
நாங்கள் ஏன் எங்கள் பூர்வீக மண்ணுக்காக
துப்பாக்கி தூக்கக்கூடாது?
ஏன் சுதந்திரமாக வாழமுடியாது?
சேர்ந்து வாழும்படி
வம்படியாக வழக்குரைக்கின்றனர்.
அம்மாவின் மார்பில் குறி சுட்டான்.
அக்காவின் பிறப்புறுப்பில் கொடியேற்றினான்.
அப்பாவையும் மாமாவையும்
கொதிக்கும் தார் பீப்பாவுக்குள் தூக்கி போட்டான்.
தங்கையை கற்பழித்தான்.
அவனுடன் சேர்ந்து வாழுவது என்றால்
நான் எதுவாக கருதப்படுவேன்?
உரிமை இருக்கிறது என்பதால்
துப்பாக்கி தூக்கினோம்.
தற்காப்புக்காக
என்று சொல்ல வரவில்லை
எதிர்த்து போராடுவதற்காக
என்பது உண்மையே.
"மணலாறு" "வெலி ஓயா" ஆக்கப்பட்டபோது
எனது கழுத்து அறுக்கப்பட்டதாக உணர்ந்தேன்.
எனது கல்வி தரப்படுத்தப்பட்டபோது
நான் முட்டளாக்கப்படுவதை உணர்ந்தேன்.
புத்தர் சிலைகளை
எனது முற்றத்தில் நாட்டியபோது
எனது கடவுளை கடலில் தேடினேன்.
வீடு பறிக்கப்பட்டபோது
அகதி ஆக்கப்பட்டதாக மனமார உணர்ந்தேன்.
மீண்டும் 2009ல் அம்மா, அக்கா, தங்கை
கற்பழிக்கப்பட்டபோதும்
எனது குழந்தைகளை கழுத்தறுத்து வீசிய பின்னும்,
சிங்களவனுடன் சேர்ந்து வாழும்படி
இந்தியா சொல்லுகிறது.
எனது வாழ்க்கையை தீர்மானிக்க
எனக்கு ஏன் உரிமையில்லை.
சிங்களவனைவிட
சிங்களவனுடன் சேர்ந்து வாழச்சொல்பவன்
எந்தளவுக்கு கொடியவன்.
நாங்கள் சிகிரியாவில்,
அனுரதபுரத்தில்,
மாத்தறை, ஹம்பாந்தோட்டையில்
இடம் பிடிக்க அடாவடித்தனத்துடன்
நிலம் ஆக்கிரமிக்கவில்லை.
நாங்கள் வாழ்ந்த
வடக்கு கிழக்கு மண்ணில்
நிம்மதியாக வாழ விடுங்கள்
என்றுதான் கேட்டோம்.
இது எங்கள் மண்
இன்னும் கேட்போம்.
இனியும் கேட்போம்.
நாங்கள் தோற்றுப்போனதாகவே
காட்டப்படுகிறது.
நாங்கள் தோற்றுப்போனதாகவே
இப்போதைக்கு இருக்கட்டும்.
நாங்கள் வெல்லும்வரை
தோற்றுப்போனதாக நினைக்கப்போவதில்லை.
-ஊர்க்குருவி-
நன்றி, சவுக்கு.
Saturday, May 11, 2013
"எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்" கிடைக்கும் சந்தற்பத்தை தொலைநோக்குடன் அணுகினால் அவனே தலைவன்.
தமிழ்
தேசியக் கூட்டமைப்புடன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தலமையிலான
தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் இணைத்துக்கொள்ள வேண்டுமெனச் சமீபகாலமாக
தமிழர் தரப்பிலிருந்து பலதரப்பட்ட
வேண்டுகோள்கள் வந்துகொண்டிருக்கின்றன.
தமிழர் தேசியம் பற்றிய தேசியத்தலைவரின் கொள்கையில் சறுக்கல் இல்லாமல்
இணக்கம் ஏற்படும் பட்சத்தில் தமிழர் தேசியக்கூட்டமைப்புடன் தமிழ் தேசிய
மக்கள் முன்னணி, இணைந்து செயலாற்றுவதில் கருத்துவேறுபாடு இருக்காது
என்றும், தேசியத்தலைவரின் கொள்கைக்கு வேட்டு வைக்காத தமிழர் நலன் சார்ந்த
எந்த வேலைத்திட்டத்திலும் உளப்பூர்வமாக பணியாற்ற முடியும் என்றும் தேசிய
மக்கள் முன்னணி கருதுவதாகவும் உறுதிப்படுத்தாத செய்திகள் வெளிவந்திருந்தன.தமிழர் விடுதலை கூட்டணி.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ். (கஜேந்திரகுமார் பொன்னம்பலம்).
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி. (ஈபிஆர்எல்எஃப் - சுரேஷ் அணி)
தமிழீழ விடுதலை இயக்கம். (ரெலோ)
ஆகிய கட்சிகள் இணைந்து தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் தொலைநோக்கு சிந்தனையின் பேரில் 20, 2001, அக்டோபர் திங்களில், தமிழ் தேசிய கூட்டமைப்பு, என்ற கட்சி தமிழ் தேசியத்தின் மேன்மையான நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது. " அதை தமிழுலகம் நன்கறியும்"
பிற்பாடு தமிழர் விடுதலை கூட்டணி. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஆகிய இரண்டு கட்சிகளும் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி வெளியேறிவிட்டன. பிற்பாடு தமிழர் விடுதலை கூட்டணியின் உறுப்பினர்களான இரா சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோர் தமிழரசு கட்சி என்ற பெயரிலும், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஈபிஆர்எல்எஃப் சார்பாகவும், செல்வம் அடைக்கலநாதன் ரெலோ சார்பாகவும், இன்னும்பல உறுப்பினர்களுடன் தமிழர் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டு வந்தது.
அதேவேளை தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஆளுமையுள்ள பொதுவான தமிழர் அரசியற் கட்சியாக பதிவு செய்யவேண்டும் என்று பலர் முனைப்புடன் முயற்சித்து செயற்பட்டும் வந்திருந்தனர். அந்த முயற்சியின் பலனாக பன்னிரண்டு வருடம் கழிந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய கொள்கையளவில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக ரெலோ அமைப்பைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். கே சிவாஜிலிங்கம் அவர்கள் கூறியதாக செய்தியொன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவுசெய்வது தொடர்பில் ஏற்கனவே தமிழரசுக் கட்சியை சேர்ந்த இரா சம்பந்தன், மாவை சேனாதிராசா தவிர்ந்த ஏனைய கட்சிகள் உறுப்பினர் மத்தியில் இணக்கம் ஏற்பட்டிருந்தது. எனினும், தமிழரசுக்கட்சி மாத்திரம் அதில் பின்னடிப்பை தொடர்ந்து காட்டிவந்தது. இந்தநிலையில் மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப்பின் முயற்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் அடிப்படையில் நேற்று ரெலோவுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது உடன்படிக்கை ஒன்றின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவுசெய்ய கொள்கையளவில் இணக்கம் ஏற்பட்டதாக சிவாஜிலிங்கம் 10 , 05, 3013 நேற்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, அரசியற் கட்சியாக பதிவு செய்யப்படும் பட்சத்தில் ஏற்கெனவே கட்சியிலிருந்து விலகிச்சென்ற பல கட்சிகள் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன. இது தமிழர்களிடத்து மிக நல்ல ஆரோக்கியமான அரசியலை வென்றெடுக்க உதவும்.
இதனையடுத்து, இன்று மன்னார் ஆயருடன் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகள் நடத்தும் சந்திப்பின்போது கூட்டமைப்பின் பதிவு என்ற விடயம் பெரும்பாலும் உறுதி செய்யப்படலாம் என்றும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் சம்பந்தன் தரப்பிலிருந்து கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
வரவிருக்கும் வடக்கு மாகாணசபை தேர்தலில் உறுதியான வெற்றியை தமிழர் தரப்பு பெற்றுக்கொள்வதற்கு பிரிந்துபோன கட்சிகளின் இணைவு, ஒரு குடையின்கீழ் கருத்து வேறுபாடின்றி ஶ்ரீலங்கா ஆட்சியாளர்களிடத்து பேரம்பேசி ஒரு கருத்துக்கூடலுக்கு வருவதற்கு உறுதியான களத்தை உருவாக்க இந்த இணைவுப்புள்ளி மிகப்பெரிய பாலமாக அமையும்.இணைந்த கட்சிகளின் கூட்டமைப்பை அரசியற் கட்சியாக பதிவு செய்வது ஈழத்தமிழினத்திற்கு என்றைக்கும் ஆரோக்கியமான விடயமே.
வடக்கு மாகாணசபை தேர்தல் இந்தவருடம் 2013ம் ஆண்டு நடத்தப்படலாம் என்று ஶ்ரீலங்கா அரசாங்க மட்டத்தில் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. ஜெனீவா தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு அந்த வேலைத்திட்டத்தில் ஶ்ரீலங்கா அரசு முனைப்பு காட்டுவதாக சர்வதேசத்தின்முன் நன்மதிப்பை பெறுவதற்கு வடக்கு மாகாணத்தில் தேர்தல் ஒன்றை உடனடியாக நடத்தவேண்டிய தேவை ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு இருக்கிறது.
வடக்கு மாகாணத்தில் மாகாணசபை தேர்தல் ஒன்றை நடத்துவதால் யாருக்கு என்ன இலாபம். தேர்தலின் பின் வடக்கு மாகாண மக்கள் மத்தியில் என்னென்ன முன்னேற்றங்கள் நிகழும். மாகாணசபை தேர்தலில் வெற்றிபெற்று அதிகாரத்தை கைப்பற்றி அதிகாரசபையை அமைக்கும் தரப்புக்கு வடக்கு மாகாணத்தை நிர்வகிக்கும் பொறுப்புக்கள் கொஞ்சமேனும் வழங்கப்படுமா? அல்லது வழமைபோல போக்குக்காக வடக்கு மாகாணசபையை நிறுவியாகிவிட்டது என்று பெயரளவில் விளம்பரப்படுத்திவிட்டு ஜனாதிபதியின் கட்டுப்பாட்டிலுள்ள இராணுவ ஆட்சி தொடருமா என்ற கேள்வி உள்ளூர் மக்களிடம் மட்டுமல்லாது சர்வதேச மட்டத்திலும் எழுந்திருக்கும் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
ஆனால் தேர்தலில் போட்டியிடும் தரப்பின் மதிநுட்பம், வல்லமை பொறுத்து வடக்கு மாகாணசபை அதிகாரத்தை நிர்வகிக்கும் பொறுப்பு தீர்மானிக்கப்படும் என்பதை வருங்காலங்களில் காணமுடியும். தடைக்கல்லையும் படிக்கல்லாக மாற்றும் வல்லமை கொண்ட தலைமையிடமிருந்து வந்தவர்கள் நாங்கள் என்பதை நிரூபிக்கவேண்டிய பொறுப்பும் நமக்கு இருக்கிறது.
வஞ்சக இந்தியாவின், திருப்திக்காக அமெரிக்கா ஜெனீவாவில் கொண்டுவந்த தீர்மானத்தின் நிமித்தம் வடக்கு மாகாணத்தில் தேர்தல் ஒன்று நடத்தப்படவில்லையென்றால் அடுத்துவரும் ஜெனீவா அமர்பில் ஶ்ரீலங்கா ஜனாதிபதி ராஜபக்ஷ, மீது பரவலாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் பற்றி இந்தியா எந்தச் சமாதானத்தையும் சர்வதேச அரங்கில் முன் வைக்கமுடியாது.
அடுத்து தமிழக அரசியற் கட்சிகளின் நெருக்குவாரம், மற்றும் பொது / மாணவ அமைப்புக்களின் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு கிளர்ச்சி, இவைகளிலிருந்து தப்பிக்க முடியாத நிலை பலவீனப்பட்டுப்போய் கிடக்கும் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு பெருத்த இடர்பாடாக அமைந்துவிடும் அபாயம் இருக்கிறது. இந்த நிலை தோன்றும் பட்ஷத்தில் அது சர்வதேச மன்றம்வரை விவாதத்துக்குள்ளாகும் சந்தற்பங்கள் உண்டு.
தமிழ்நாட்டில் தோன்றியிருக்கும் மாணவர்களின் போராட்டச்சூழல் மீண்டும் பற்றிப்படருமானால் ஒரு கட்டத்தில் ராஜபக்ஷவின் அதிகாரத்தை அடியோடு வீழ்த்தக்கூடிய பொறிநிலை சர்வதேச அரங்கிலிருந்து உருவாக்கலாம். ராஜபக்ஷ வீழ்த்தப்பட்டால் அடுத்து ராஜபக்ஷவால் காட்டிக்கொடுக்கப்படுவது இந்தியாவாகத்தான் இருக்கமுடியும்.
அப்படி ஒரு நிலை தோன்ற ராஜபக்ஷவோ, இந்தியாவோ ஒருபோதும் விருப்ப மாடார்கள். எனவே வடக்கில் ஒரு மாற்றம் நிகழ்த்திவிட்டதாக சகல தரப்புக்கும் காட்டிக்கொள்ளுவதற்கு விரைவில் தேர்தல் ஒன்று வரும் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. எல்லோரும் சேர்ந்து இழுத்த தேரை கரை சேர்க்கவேண்டிய பொறுப்பு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கைகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் தேர்தல் நடைபெறுவதற்கு முன், தேர்தலின்பின் நிகழவிருப்பது என்ன என்பதை ஈழ தமிழர்களின் மேய்ப்பர்களான அரசியற்கட்சிகள் நன்கு வரையறுத்துக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றனர்.
1987 ல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர், வடக்கு கிழக்கு மாகாணசபை ஒன்று உருவாக்கப்பட்டு வரதராஜப்பெருமாள் முதலமைச்சராக அன்றைய யூஎன்பி, அரசால் நியமிக்கப்பட்டிருந்தார், ஆனால் வரதராஜப்பெருமாள் பதவியை விட்டு விலகி இந்தியா செல்லும்வரை எந்த ஒரு அதிகாரங்களையும் ஶ்ரீலங்காவின் மத்திய அரசாங்கம் வடக்கு கிழக்கு மாகாணசபைக்கு வழங்கியிருக்கவில்லை.
2009, க்குப்பின் கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக இருந்த பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன். அங்கு வாழும் மக்களுக்கான சமூக மேம்பாட்டுக்கு குறிப்பிடும்படியான அதிகாரம் எதையும் ஶ்ரீலங்கா அரசாங்கத்திடமிருந்து பெற்றிருக்கவில்லை. எனவே வரவிருக்கும் வடக்கு மாகாணசபைக்கான அதிகார அலகு என்ன என்பதை சர்வதேச உதவியுடன் தேர்தலில் போட்டியிடுபவர்கள் ராஜபக்ஷ அரசிடம் கேட்டறிந்து மக்களுக்கு தெரிவிக்கவேண்டிய தலையாய கடமை இருக்கிறது.
அதற்கான மிடுக்கு, தகுதி தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் சம்பந்தன் ஐயாவிடம் இருப்பதற்கான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை. வடக்கு கிழக்கு பிரதேசங்கள் தமிழர்களுக்கான பிறப்புரிமை கொண்ட சொந்த நிலம் என்று சொல்லமுடியாதவராகவே சம்பந்தன் இருந்து வருகிறார். அப்பேற்பட்ட தலைமையை வைத்துக்கொண்டு கிடைக்கும் ஒரு சந்தற்பத்தை கோட்டைவிடலாகாது.
2009 க்குபின்னர் வந்த நான்கு ஆண்டுகளாக இன்றுவரை தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் அவர்கள் இந்தியாவின் சோனியா அரசவையின் ஒரு எம்பியாகவும், ராஜபக்ஷவின் நட்பு நிறைந்த இந்திய தூதுவராகவும் செயற்பட்டு வருகிறார். ஈழ மக்கள் வாழ்வு சம்பந்தமாக தமிழர்தரப்பிலிருந்து யார் எவராவது அவரிடம் கேள்வி எதுவும் கேட்க முடியவில்லை. அப்படி கேட்டாலும் அவர்கள்மீது எரிந்து விழுவதும் குதற்கமான பதிலளிப்பதுமே அவரது செயற்பாடாக இருந்து வருகிறது இதை தேசிய கூட்டமைப்பின் பல எம்பீக்கள் கசப்புடன் புலம்பி தீர்த்த சம்பவங்களும் உண்டு.
இருந்தும் தமிழர் தேசியக்கூட்டமைப்பின் சுமந்திரன், தவிர மற்றய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சம்பந்தர் அவர்களின் வழி நடத்தலை பின்பற்றி செயற்படுபவர்களாக இருக்கவில்லை. ஶ்ரீதரன் எம்பி, சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்பி, செல்வம் அடைக்கலநாதன் எம்பி, சிவசக்தி ஆனந்தன் எம்பி ஆகியோர் சம்பந்தரின் ஆணைக்கு பொறுத்திருக்காமல் தன்னிச்சையாக மக்கள் மன்றத்தில் கலந்து, மக்களுக்கு எதிரான அரச செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்தும் போராட்டங்கள் நடத்தியும் மக்கள் சேவையாற்றி வந்திருக்கின்றனர். குறிப்பாக கிளிநொச்சியில் ஶ்ரீதரனும் வன்னிப்பகுதியில் சிவசக்தி ஆனந்தனும் அவ்வப்போது சுரேஷ் பிரேமச்சந்திரனும் செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் ஆக்கபூர்வமாக குரல் கொடுத்தே வந்திருக்கின்றனர். இதன் காரணமாக அவர்கள் அரசாங்கத்தின் அச்சுறுத்தலையும் நெருக்கடிகளையும் சந்தித்தும் வருகின்றனர்.
ஆனால் பாராளுமன்ற அங்கத்துவம் இல்லாவிட்டாலும் யாழ்ப்பாணத்திலும் சரி கிளிநொச்சி, வன்னி போன்ற இடங்களில் நடைபெறும் அரச அத்துமீறல்கள் மற்றும் புலம்பெயர் நாடுகளின் கருத்தரங்குகள், ஜெனீவாவின் வெளிக்கள அமர்வுகள் அனைத்திலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது தேசியத்துக்கான பங்களிப்பை முடிந்தளவு செய்வதுடன் தேசியத்தலைவர் வகுத்த பாதையிலிருந்து வழுவாமல் தேசியம், சுயநிர்ணயம், தன்னாட்சி போன்ற கோட்பாடுகளுடன் அரச அத்துமீறல்களை முழு மூச்சுடன் எதிர்த்து வந்திருக்கிறது. இதனால் பல இடர்பாடுகளையும் அக் கட்சியும் கட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சந்தித்தும் வருகின்றனர். அதன் எதிர்வினைதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரை சம்பந்தனின் கருத்தை புறந்தள்ளிவிட்டு மக்களுக்காக துணிவுடன் செயலாற்ற வழி கோலியிருக்கிறது என்றே எண்ணத்தொன்றுகிறது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசியத்தலைமை மீதுகொண்ட பற்று, தமிழ் தேசியத்தின் மீதானபக்தி, வெளிக்கள அரசியல் வேலைத்திட்டங்களில் பல இடங்களில் வெளிப்படுவதை காணமுடிகிறது. அந்த உந்துதலின் எதிர்வினை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்களை தட்டி உற்சாகப்படுத்தி உந்திவிட்டிருக்கிறது என்றால் அது மிகைப்படுத்திய சொல்லாடலாக இருக்க முடியாது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஆகிய இரண்டு கட்சிகளும் தமிழர்களுக்கான நம்பகத்தன்மை வாய்ந்த உளப்பூர்வமான அரசியற் கட்சி என்றே ஈழ தமிழினம் மான்சீகமாக நம்புகிறது . இருந்தும் தேசியக்கூட்மைப்பிலிருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வெளியேற்றத்தின்பின் தமிழர்களுக்கான அரசியற்பலம் கூடியிருக்கிறதேயன்றி குறைந்து போயிருப்பதாக கருத முடியாது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் விட்டுக்கொடுக்காத ஒளிவு மறைவு இல்லாத அணுகுமுறை மக்களை கவர்ந்திருப்பதில் ஐயமில்லை.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி, கட்சியின் பிறப்பு ஈழத்தமிழர்களுக்கு ஓரளவு அரசியல் பொருளாதார ரீதியாக ஆரோக்கியமான அரசியலுக்கு வழி தேடியிருக்கிறதென்றே கொள்ள முடியும். இந்த நிலையில் மீண்டும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, சம்பந்தன் ஐயாவின் மந்தகதி ஆளுமைக்குள் மூழ்கடிக்கப்படுமானால் ஒன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தமிழ் தேசியத்துக்கான செயல்த்திறன் மழுங்கடிக்கப்படலாம், அல்லது மீண்டும் பிளவுபட்டு வெளியேற்றவேண்டிய நிர்ப்பந்தத்தை தோற்றுவிக்கலாம், எனவே தேர்தல்கால உடன்படிக்கையொன்றுடன் உளப்பூர்வமாக கலந்துரையாடி தொகுதி பங்கீட்டு அடிப்படையில் இணைந்து செயலாற்றினால் எதிராளிகளை வென்று ஆரோக்கியமான அரசியல் தமிழர்களுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி இல்லாத பட்ஷத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையின் சிந்தனையில் தொலை நோக்குடன் கூடிய அடிப்படை மாற்றம் நிகழ்ந்தாக வேண்டும். மாற்றம் ஒன்று புதிய சிந்தனைக்கும் வேலைத்திட்டத்துக்கும் வழிவகுக்கும்.
தேசிய கூட்டமைப்பின் தலைமையின் சிந்தனையில் மாற்றம் ஏற்ப்படவேண்டும் என்பதற்கு சான்றாக மூன்று நான்கு வருடங்களாக சம்பந்தன் ஐயா மீது சுமத்தப்படும் கட்டுக்கடங்காத விமர்சனங்களை ஊடகங்கள், பேச்சாளர்கள், தமிழ் அமைப்புக்கள், புத்திஜீவிகள், தனிமனிதர்கள் என்று சகட்டுமேனிக்கு வெறுப்புடன் வெளியிட்டு வருகின்றன. சம்பந்தன் ஐயா பல சந்தற்பங்களில் வெளியிட்டுவரும் தேசியத்துக்கு விரோதமான கருத்துக்களே அவர்மீது மக்களுக்கு நம்பிக்கையீனத்தை தொடற்சியாக தோற்றுவித்து வருகிறது. பல ஊடகங்கள் சம்பந்தன் ஐயா அவர்களை விமர்சித்து தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டிருப்பதை இங்கு ஞாபகப்படுத்திக்கொள்ள முடியும்.
"எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்" சம்பந்தன் ஐயா தலைமை பொறுப்பை ஆரோக்கியமான சிந்தனையுடைய அடுத்த கட்ட உறுப்பினரிடம் கொடுத்து வழிவிடுவாராக இருந்தால் இன்னும் ஆரோக்கியமான அரசியல் ஈழ மக்களுக்கு கிடைக்கும். அத்துடன் தமிழினத்துக்கும், தமிழர் தேசிய கூட்டமைப்புக்கும் புத்துணர்வு ஏற்படும். சமயோசிதமான புதிய சிந்தனை பிறந்து தமிழர்களுக்கான அரசியலில் பிரகாசமான அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்வு நம்பிக்கயளிப்பதாக இருக்கும்.
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.
குறள்: பொருட்பால்
கோட்டைக்குத் தேவையான எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூட உள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாது.
ஈழதேசம் செய்திகளுக்காக,
கனகதரன்.
Subscribe to:
Posts (Atom)