Tuesday, February 22, 2011

திருமாவின் அஞ்சலியை முற்றாக நிராகரித்த "தேசத்தின் அன்னை"

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தாய் அன்னை பார்வதி அம்மாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்கச் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் குழுவினர் கொழும்பு விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு உடனடியாக சென்னைக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக செய்தி வந்திருந்தது.
அதைத்தொடர்ந்து விடுதலைச்சிறுத்தைகள் சங்கத்தின் தலைவர் திருமாவளவன் தனது நியாயப்பாட்டையும் அவருக்கு நிகழ்ந்த அவமானத்தையும் அறிக்கை ஒன்றின்மூலம் வெளிப்படுத்தியிருந்தார், அவர் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்கள் குற்றச்சாட்டுக்கள் அப்படியே எதிர்மறையாக முன்னுக்குப்பின் முரண்பட்டதாகவும் அவர் ஏதோ சுயலாபம் தேடி அழுவதுபோலவும் படுகிறது, அவரது அறிக்கையும் ஆவேசமும் சென்னையில் அவர் ஸ்ரீலங்கா தூதரகத்தின் முன் நிகழ்த்திய ஆற்பாட்டமும் அவருக்கு இலாபத்தை நட்டத்தை தருகிறதோ இல்லையோ ஈழத்தில் மரணவிளிம்பில் நின்றுகொண்டிருக்கும் இளம் சந்ததியினருக்கு வேண்டாத நெருக்கடிகளை தோற்றுவிக்கும் என்பது கடந்தகால அனுபவம்.

திருவாளர் திருமாவளவன் தமிழீழ தேசத்தின் அன்னைக்கு அஞ்சலி செலுத்த முயற்சித்ததை எவரும் கொச்சைப்படுத்தவில்லை தடுக்கவுமில்லை, அண்ணன் அவர்கள் சட்டசபை தேர்தலில் ஏற்படப்போகும் தோல்விக்கு அனுதாபம் தேடுவதற்கு கருணாநிதியால் அனுப்பப்பட்டிருக்கும் ஒரு ஆயுதம், தேசத்து அன்னையின் மறைவுக்கு அழுதுபுலம்பும் திருமா அவர்கள் 2009ல் கூட்டங்கூட்டமாக ஈழம் பிணக்காடானபோது கருணாநிதிக்கும் அந்தோனியோ மொய்னோ என்ற சோனியாவுக்கும் வாழ்த்துப்பாடி வழிமொழிந்ததை வசதியாக வெகு விரைவில் மறந்திருக்கிறார்.

திருமா திருப்பி அனுப்பப்பட்டதும் ஒருவகைக்கு அவருக்கு நல்லதே சிலவேளை அவர் வல்வெட்டித்துறைக்கு சென்றிருந்தால் அங்குள்ள தாய்மார்கள் விளக்குமாறு ஆராத்திக்கு உட்படுத்தியிருக்கவும் கூடும் அந்த பழி கடவுள் கிருபையால் தடுக்கப்பட்டிருக்கிறது.

2009 முள்ளிவாய்க்கால் முற்றுகையின்போது கொல்லப்பட்ட தாய்மார்களும் குழந்தைகளின் படுகொலை அவலங்களையும் அன்னை பார்வதி அம்மா அவர்கள் நேரடியாக இருந்து இரண்டறக்கலந்து அனுபவித்த சோகங்கள் கவலைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

அந்த வெறுப்பும் விரக்தியும் அம்மா இறந்துபோனாலும் அந்த ஆத்மாவின் ஆவியில் ஆழமாக என்றும் மாறாத வடுவுடனேயே உடலைவிட்டு பிரிந்து சென்றிருக்கிறது, அம்மா அவர்களின் அடிமனதில் அன்று திருமா ஏற்படுத்திய விரும்பாத குத்துக்கரணங்கள் தலைவருக்கு செய்த நம்பிக்கை மோசடிகள் வெறுப்பின் உச்சத்துக்கு சென்றிருந்தாலும் அம்மா அவற்றை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

அம்மா அவர்கள் மறைந்து இறைபதம் அடைந்திருந்தாலும், அவர் உயிருடனிருக்கும்போது திருமா செய்த இரண்டக அதகளியை மறக்காமல் தனது பூதவுடலுக்கு திருமாவின் அஞ்சலியை வேண்டாமென்று நிராகரித்துவிட்டார்கள் என்றே நான் மனதார நம்புகின்றேன்.

ஒன்றை திருமாவும்சரி, இந்திய ஆதிக்கவாதிகள் எவராக இருந்தாலும் சரி நன்கு புரிந்துகொள்ளவேண்டும், இவர்களின் அசிங்கமான உள்நோக்கம் கொண்ட அரசியலை எங்களது அற்பணிப்பான புனிதமான போராட்டத்துடன் கலப்பதை அதிகமானவர்கள் விரும்பவில்லை, நாகரீகம் கருதி நாசூக்காக சில சமிக்கைகளை காட்டமுடியுமேதவிர எட்டப்பன் கருணாநிதியைப்போலவோ மற்றய அரசியல் வியாபாரிகள் போலவோ எட்டி உதைத்து முகத்துக்கு கரிபூச எம்மவர்கள் விரும்புவதில்லை.

அன்னையின் இறுதி வணக்க நிகழ்வில் கலந்துகொண்டு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று (21.02.2011) நள்ளிரவு 12.30 மணியளவில் கொழும்பு சென்றபோது. எமது குழுவினரை வல்வெட்டித்துறைக்கு அழைத்துச் செல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விமான நிலையத்தின் வெளியே காத்திருந்ததாகவும். கொழும்பு விமான நிலையத்தில் ஸ்ரீலங்கா அரசின் குடிவரவுத் துறை அதிகாரிகள் வழிமடக்கி, இலங்கைக்குள் நுழைய அனுமதியில்லை. இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள் என்று கூறினர் என்று கூறியிருக்கிறார்.

உறவினர்கள் எவரும் அருகில் இருக்க சந்தற்பமில்லாத சூழலில், பாரிசவாத நோயாளியாக மிக சிரமப்பட்டு மருத்துவத்திற்காக தமிழ்நாட்டுக்கு சென்ற எங்கள்தேசத்தின் அன்னை பார்வதி அம்மாவை, விமான நிலையத்தில் வைத்து நெஞ்சில் ஈரமில்லாமல் திருப்பி அனுப்பிய கருணாநிதியின் கைத்தடி திருமாவை சிங்களவன் திருப்பி அனுப்பியதில் எமக்கு மனக்கிளர்ச்சி வேதனை எதுவுமில்லை, அம்மாவை மருத்துவத்திற்கு அனுமதிக்காத இந்திய அரசாங்கத்தில் இரண்டறக்கலந்து அங்கம் வகிக்கும் ஒரு விரும்பத்தகாத ஒருவராகவே திருமாவை காலமும் சந்தற்ப சூழல்களும் முடிவு செய்திருக்கிறது.

முற்றுமுழுதான சுயலாபநோக்கோடு தேர்தல் விளம்பரம் தேடி வந்த ஒருவரை வரவேற்க தமிழர் தேசியக்கூட்டமைப்பினர் வந்திருந்தால் அவர்கள் முகத்திலும் கரிபூசப்பட்டிருக்கிறது, இனியாவது தேவையற்ற காவடிகளை த தே கூ அமைப்பினர் ஆர்வக்கோளாறுகாரணமாக அவசரப்பட்டு ஆரவாரஞ்செய்யமாட்டார்கள் என நம்புவோம்.

நாங்கள் பிரபாகரன் அவர்களின் தாயாரின் இறுதி வணக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே வந்திருக்கிறோம். வேறெதுவும் உள்நோக்கம் இல்லை. ஆகவே எங்களை அனுமதிக்க வேண்டும் என்று வாதாடினோம். இயலாது. நீங்கள் வந்த அதே விமானத்தில் திரும்பிச் செல்லுங்கள் என்று வற்புறுத்தினர்.

நான் ஏற்கனவே பலமுறை இலங்கைக்கு வந்திருக்கிறேன். இந்திய நாடாளுமன்றக் குழுவிலும் ஓர் உறுப்பினராக வந்து போயிருக்கிறேன். நான் சமூக விரோதி அல்ல. இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் எனக்கு மதிப்பளிக்காவிட்டாலும்????, இந்திய அரசுக்காவது நீங்கள் மதிப்பளிக்க வேண்டும். இது தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட அவமானம் என்பதைவிட ""இந்திய அரசுக்கும், இந்திய தேசத்திற்கும் இழைக்கும் பெரும் அவமதிப்பே ஆகும்"". இதை இந்திய நாடாளுமன்றத்தில் ஓர் உரிமைப் பிரச்சினையாக எழுப்புவேன்? என்றும் எச்சரிக்கை விடுத்தேன் என்று தனது புலமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்திய அரசியல்வாதிகளால் 176,000 கோடி ஊழல் புரிந்த குடும்பங்களின் கையில் ஆட்சியை வைத்து மன்னராட்சி நடத்தும் ஏழைகளின் நாட்டில் தினந்தினம் கடலில் ஸ்ரீலங்கா ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்படும் மீனவர்களை காப்பாற்ற வக்கற்று ஏனென்று கேட்க தைரியமில்லாத நாடாளுமன்றத்தில் இந்த விடயத்தை ஓர் உரிமைப் பிரச்சினையாக எழுப்புவேன் என்றும் எச்சரிக்கை விடுத்து வந்திருக்கும் திருமா அவர்கள் அது நடக்கக்கூடிய காரியமா என்பதை சிறிதேனும் சிந்திக்கவில்லை, #அன்புடையீர்! திருமா கூறியவற்றை குறித்துவைத்துக்கொள்ளுங்கள் கடுகளவு முன்னேற்றத்தை திருமா பெற்றாலும் அது கடலளவாக கருதக்கூடியதே.

மேலும் தன்னையும் தன்னுடன் வந்தவர்களையும் எதற்காகத் திருப்பி அனுப்புகிறீர்கள் என்பது தொடர்பாக எழுத்து பூர்வமான அறிக்கையினை அளிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார் திருமா . அதெல்லாம் வழங்க முடியாது என்று மறுத்ததோடு வலுக்கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்யிருக்கின்றனர்.

மேதகு பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமின்றி இனமான உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் அன்னையாய் விளங்கும் பார்வதி அம்மாளுக்கு அஞ்சலி செலுத்துவதற்குக்கூட அனுமதிக்காத, ஈவிரக்கமில்லாத கொடுங்கோலன் ராஜபக்சேவையும் சிங்கள இனவெறி அரசையும் விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. என்று திருமா அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

இனமானமுள்ளவர்களுக்கு நிச்சியம் அது பொருந்தும்,, ஐயா திருமா அவர்கள் அந்த உணர்வுகளுக்கு கிட்டவும் நீங்கள் நெருங்கமுடியாத இடத்தில் இருப்பதாக ஈழத்தமிழினம் முடிவுகட்டி நீண்ட நாட்களாகிவிட்டன இனியாவது திருமா அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அன்னை பார்வதி அம்மாள் இறப்பையொட்டி ஈழத்தில் கறுப்புக்கொடிகள் ஏற்றக்கூடாது எனவும் ஆங்காங்கே அவரின் திருவுருப்படங்களை வைத்து அஞ்சலி செலுத்தக்கூடாது எனவும் சிங்கள இனவெறியன் ராஜபக்சேவின் இராணுவ கொடுநெறி அரசு கெடுபிடி செய்து வருகிறது. என்றும் அன்னை பார்வதி அம்மாளுக்கு தமது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தத் துடிக்கும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்குக்கூட அஞ்சுகிற வகையில் ராஜபக்சேவின் இராணுவம் மக்களை அச்சுறுத்தி வருகிறது என்று அழுதுகொண்டிருக்கும் திருமா அவர்களே,, அதற்கு என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதென்று ஈழத்தில் ஒரு பழமொழியுண்டு, திருமா அவர்கள் அதற்கு மேலேயும் கற்பனையில் பயணஞ்செய்வது புரிகிறது.

நாங்கள்தான் அவற்றையும் பார்த்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம், உள்ளூரில் ஓரளவுக்கு உயிர்வாழும் மக்களை உங்கள் உசுப்பேத்தல் வாய்ப்பந்தல் மூலன் விரும்பத்தகாத பக்கவிளைவுகளை உண்டுபண்ணிவிடாதீர்கள், நீங்கள் படங்காட்டுவதற்காக சென்னையிலுள்ள ஸ்ரீலங்கா தூதரகவாசலில் துள்ளாட்டம் போட்டுவிட்டு கலைந்து போய்விடுவீர்கள், அல்லது பொலிஸைக்கொண்டு கைது பண்ணவச்சு படம்பிடித்துக்கொண்டு ஒருமணி நேரத்தில் கலைஞர் வீட்டுக்குப்போய் கதை முடிப்பீர்கள், ஆனால் ஐயா எங்கள் இனத்திற்கு உயிர்சம்பந்தப்பட்ட பிரச்சினை. சிங்கள இராணுவம் பழிவாங்க உங்கள் உயிரை எடுக்கப்போவதில்லை. ஒன்று பாவப்பட்ட ஏழை மீனவர்கள் அல்லது நாங்களும் எங்கள் சகோதரிகளும் பலியாகிவிடுவோம் தயவுசெய்து நீங்கள் எதிர்ப்புத்தெரிவிக்கவேண்டிய இடம் கருணாநிதியின் வாசஸ்தலம் /சட்டசபை /பாராளுமன்றம் /பிரதமரின் வாசஸ்தலம் போன்ற இடங்களே.

அதிலும் பலன் கிடைக்காதென்றே வரலாறு சொல்லியிருக்கிறது ஏனெனில் 29 ஜனவரி 2009 அன்று காலை உண்மையான மொழி-இன-மான-உணர்வுள்ள தமிழன் முத்துக்குமார் உங்கள் ஆட்சியாளர்களின் ஆளுனர் மாளிகை வாசலில் எத்தனை கோரிக்கைகள் எழுதி வைத்துவிட்டு தீக்குளித்து செத்தானே, ஏதாவது அசைந்ததா, பூச்சியம் தானே பலன்?

கடுகளவும் கருணையில்லாத கொடூரன் ராஜபக்சேவின் இத்தகைய தமிழர் விரோதப் போக்கு எல்லையற்று நீண்டுகொண்டே போகிறது. ஈழத்தமிழர்களுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் இந்திய ஆட்சியாளர்களுக்கும் சவால் விடுகிற வகையில் ராஜபக்சேவின் அணுகுமுறைகள் தொடர்கின்றன.

இலட்சக்கணக்கான மக்களைக் கொன்றுகுவித்த இனவெறிபிடித்த கொலைவெறியன் ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் இந்திய அரசை ஓர் பொருட்டாகவே மதிப்பதில்லை என்பது இந்திய நாடாளுமன்ற உறுப்பினரான என்னை திருப்பி அனுப்பியதிலிருந்தே அறியலாம். இந்நிலையில் இந்திய, தமிழக அரசுகள் ராஜபக்சே கும்பலைக் கடுமையாக எச்சரிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது. மேலும் தமிழகத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துகிறது.என்று அவரது அறிக்கை நடக்க முடியாதவற்றை புலம்பியிருக்கிறது.

காலம் மெல்ல மெல்ல எல்லோரையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது புலனாகிறது,

ஈழதேசம் இணையத்திற்காக
கனகதரன்,


1 comment:

Unknown said...

THIRUMAVALAVAN YOU ARE A ANIMAL.U DONT HAVE BRAIN