கடந்த 2010 ம் ஆண்டில், புலம்பெயர் நாட்டில் மூன்று தேர்தல்களுக்கு தமிழ்மக்கள் முகம் கொடுத்திருந்தார்கள். ஒன்று வட்டுக்கோட்டை தீர்மானம், இரண்டாவது தமிழர் பேரவை,மற்றையது நாடுகடந்த தமிழீழம்.

மூன்றிற்குள்ளும் ஒன்றுக்குள் ஒன்று முறுகலில் இருந்தாலும் மக்கள் அந்த பிரிவினையை நோக்காது மூன்றிற்கும் வாக்களித்திருந்தார்கள். மூன்று அமைப்பினூடாகவும் தாயகத்து மக்களுக்கு ஒரு சிறிய விடிவென்றாகிலும் கிடைக்காதா என்ற ஏக்கத்தை எண்ணியே புலம்பெயர் தமிழ்மக்கள் மூன்று தேர்தல்களுக்கும் வாக்களித்திருந்தார்கள்.தற்போதைய நிலையில் இந்தத் தேர்தலினால் தெரிவு செய்யப்பட்டவர்கள் இது சார்ந்த என்னென்ன பணியில் இருக்கின்றார்கள் என்று மக்களும் கேட்பதுவுமில்லை. தெரிவு செய்யப்பட்டவர்கள் கூட தங்களிற்கான என்னென்ன பணி என்பதையும் வெளிப்படுத்தவுமில்லை. தாயகத்தில் தற்பொழுது தமிழருக்கெதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் மிகப்பெரிய யுத்தத்தைக் கண்டு கும்பகர்ணனாக உறங்கும் இந்த உறுப்பினர்கள் பற்றி சிந்திப்பது, மந்தைகளாக புலம்பெயர் தமிழ்மக்களை கணித்திருக்கும் நாங்கள் வாய் திறக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது.

தமிழீழத்திலே அதுவும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலே தற்பொழுது நடை பெற்றுக்கொண்டிருக்கும் யுத்தம் முள்ளிவாய்க்கால் யுத்தத்தைவிட கோரமானது. ஒட்டுமொத்தமாகவே இலங்கையில் தமிழ்மக்கள் வாழக்கூடாதென்ற நிலையை மகிந்த கொம்பனி எடுத்தாயிற்று. இதற்கு ஆதரவாக எமது மக்களில் சிலர் துணையிருப்பது இருப்பது பெரிய துயரம்.

யாழிலிருந்து அண்மையில் வெளிவந்த செய்திகளில் மனதை பிளக்கும் செய்திகள் சிலவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டியது கடமையாகும்.

* யாழ் போதனா வைத்திய சாலையிலே நாளொன்றுக்கு 14 வயதுக்கும் 17வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகள் 20 பேர் கருக்கலைக்கின்றனர்.

* இளையோர் மத்தியில் ஆபாசப்படங்கள் விநியோகிப்பு

* புதிய மதுக்கடைகள் திறப்பு

* மாணவர்கள் மத்தியில் போதைவஸ்துக்கள் அறிமுகம்

* கப்பம், களவு, கொள்ளை என்ற போர்வையில் தமிழ்ப் புத்திஜீவிகள் படுகொலை

* சுற்றுலாப்பயணிகள் என்ற போர்வையில் சிங்களமக்களின் கலாசார சீரழிவுகள்

14 வயது தமிழ்ச்சிறுமியின் பரிதாபம்

அண்மையில் வெளிவந்த, சாதாணமாக எந்தவொரு மனிதனின் மனத்தையும் உலுப்பிவைக்கும் செய்தியொன்றை நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஒரு17 வயது பாடசாலைத் தமிழ்ச்சிறுமி சுயமாகவே கொடுத்த வாக்குமூலத்தில் தன்னை சிங்களப் படைச்சிப்பாய்களின் பலவந்ததுடன் 76 பேர் வல்லுறவு கொண்டனர் என வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருந்தார். மேலும் அவரை வைத்தியப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது எயிட்ஸ் நோய் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்படியாக ஏராளமான சிறுமிகளுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. இது எஞ்சியிருக்கும் மீதித் தமிழர்களையும் ஒட்டுமொத்தமாக ஒழிப்பதற்கான சிங்களத்தின் திட்டமாக கொள்ளலாம்.குறிப்பாக ஒரு தமிழராவது இலங்கையில் மிஞ்சக்கூடாதென்ற முடிவை மகிந்த கொம்பனி சீக்கிரத்தில் எட்டிவிடும்.

இதற்கு என்ன வழி?

வழமையாக அரசியல் வாதிகள் கூறுவதுபோல, 'இதுக்கு எங்களால் என்ன செய்ய முடியும்' என்று இலகுவாக தட்டிக்கழிப்பதற்கு, புலம்பெயர் நாட்டிலே மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழர் அமைப்புகளுக்கு பல காரணங்கள் வசதியாக இருக்கலாம். இருந்தாலும் இவற்றை மனித நேயத்தோடும், இன நேயத்தோடும் நோக்கினால் மாத்திரமே தீர்வு காணலாம்.

ஈழத்திலே அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் உறவுகள் நிர்பந்தத்தின் இறுக்கத்தில் அரசுடனும் படையினருடனும் இணைந்ததுபோல் காட்டிக்கொள்ளலாம், ஆனால் உள்ளுணர்வாக அப்படியிருக்க முடியாது.எந்தவொரு பெற்றோருமோ தமது பெண்பிள்ளையை ஓநாயின் வாய்க்கு இரையாக்க தானம் வழங்க மாட்டார்கள். நீதிசெய்யவும், தட்டிக்கேட்கவும் எவருமே இல்லாத காரணத்தால் மெளனித்து அடிமைகளாக வாழ்கிறார்கள்.இத்தனை காலமும் பெரும் காப்பரணாக விடுதலைப்புலிகள் இருந்ததை எதிரிகள் கூட உணர்ந்திருப்பார்கள். இன்றைய நிலையில் அவர்களின் தியாகங்களை தளமாகக் கொண்டு புலம்பெயர் நாடுகளில் தேர்தலில் நின்று பதவிகள் பெற்றுக்கொண்டவர்கள் விடுதலைப்புலிகளின் சிறு பங்காவது ஏற்றுக்கொள்ள வேண்டியது அவர்களின் கடமையாகும். தாயகத்து மக்களும் மறைமுகமாக புலம்பெயர் தேர்தகளில் தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர்களையே நம்பியிருப்பது பலவழிகளிலும் புலனாகியிருக்கிறது.

இதுவரைக்கும் இந்த தேர்தல் உறுப்பினர்கள், தேர்தலுக்கு பின்னதாக பொதுமக்களைச் சந்தித்தவர்க்களுமில்லை. தமது கொள்கைகள் பற்றி மக்களுக்கு விளக்கம் கொடுத்தவர்க்களுமில்லை. இவர்கள் என் தெரிவு செய்யப்படவேண்டும் என்பது விசாலமாக நிற்கிறது. இவர்களால் என்ன பயன்?இடைக்கிடையே தாங்கள் இருப்பதைக் காட்ட அமெரிக்காவில் கூட்டமும்,பகிஸ்கரிப்பும், சண்டையும் நடைபெறும். கேட்டால் 'ஆறுதலாக நாங்கள் தமிழீழம் நோக்கி செல்கிறோம்' என்று நழுவிவிடுவது வழமையாகிவிட்டது.

வெறுமனே தேர்தலில் நின்றுவிட்டு போர்த்திப் படுத்துக்கொண்டிருக்கும் அங்கத்தவர்கள் உடனடியாக உங்கள் தூக்கத்தைக் கலைக்க வேண்டும்.

ஈழத்தமிழ்மக்களுக்கு எதிராக இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும் இந்த நிகழ்ச்சிகளை உலகறிய அரங்கத்துக்கு கொண்டுவரவேண்டிய கடமை இந்த தேர்தல் உறுப்பினர்களுக்கு உண்டு. தத்தம் நாடுகளிலுள்ள வெளியுறவு அமைச்சு, வெளிநாட்டுத் தூதராலயங்கள், மனித உரிமைகள் ஆர்வலர்கள் மையங்களுக்கு மக்களை ஒன்று திரட்டியோ அல்லது தனியாகவோ சென்று தாயகத்தின் அவலங்களை கொண்டுசென்று இலங்கை அரசுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டி தாயக உறவுகளுக்காக நீதி கேளுங்கள். உடனடியாக உங்கள் கடமைகளைச் செய்யுங்கள். வழமைபோல 'ஆறுதலாகச் செய்வோம்' என்று தட்டிக் கழிப்பீர்களானால் தாயகத்தில் வாழும் உங்கள் உறவுகள் உட்பட அனைத்துத் தமிழ் சிறுமிகளின் கைகளிலும் சிங்களத்தின் வாரிசுகள் தவழ்வதும் தப்பாது தமிழர் என்றொரு இனம் இல்லாமல்போவதும் தப்பாது.

நாகலிங்கம் மதியழகன்

நன்றி உயர்வு இணையம்.