Monday, February 3, 2014

2014, மார்ச் ஜெனீவா அமர்வில் தமிழர் தேசியக்கூட்டமைப்பின் நிலைப்பாடு எப்படிப்பட்டதாக இருக்கும்?‏


http://eeladhesam.com/images/eelam/kaddurai/2013/un%20tna.jpgநடப்பு ஆண்டு,  அதாவது 2014 மார்ச் முற்பகுதியளவில் ஜெனீவா மனித உரிமைகள் ஆணையத்தின் 25 வது கூட்டத்தொடர் ஆரம்பிக்க இருக்கிறது.
2012, மற்றும் 2013, ம் ஆண்டுகளில் சம்பிரதாயத்துக்காகவேனும் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டுவந்த தீர்மானங்களை விடவும் இம்முறை இலங்கைக்கு எதிரான நிலைப்பாடு ஜெனீவாவில் சற்று அதிகமாகவே காணப்படும் என்பதாகவே நம்பப்படுகிறது .

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின்படி குறிப்பிட்ட வேலைத்திட்டங்கள் உறுதி இறுதி செய்யும் பெறுபேறுகள் இன்னும் இலங்கை ஆட்சியாளர்களிடமிருந்து  நிறைவு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது,  எனவே இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளும் இணைந்து அமெரிக்க தீர்மானத்தை தாண்டி வேறு நிலைக்கு செல்வதற்கு முயற்சிக்கலாம்.

மனித உரிமை ஆணையாளர் திருமதி நவநீதம்பிள்ளை அவர்கள் சென்ற ஆண்டு இலங்கைக்கு சென்று நிலவரங்களை நேரில் விசாரித்து ஆராய்ந்து  திரும்பியபின், இலங்கை அரசுக்கு எதிராக எழுப்பியிருந்த கேள்விகள் பற்றிய ஆராய்வு ஒன்று நிச்சியம் ஜெனீவா விவாதத்தின்போது எடுத்துக்கொள்ளப்படும்,  அல்லது இணைத்துக்கொள்ளப்படும் என்பது இலங்கை அரசும் அறிந்து மாற்றீடுகளுடன் தயாராக இருப்பதாகவே கணிக்க முடிகிறது,

ஜெனீவா நெருக்கடிகளை கட்டுக்குள் கொண்டுவரும் முன்னோட்டமாக மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வில் ஶ்ரீலங்காவின் மனித உரிமைகள் முன்னேற்றம் தொடர்பிலான அறிக்கையை ஶ்ரீலங்கா சமர்ப்பிக்கவுள்ளதாகவும்  அந்த மீளாய்வு அறிக்கையின் தயாரிப்புப் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் இலங்கையின் வெளிவிகார அமைச்சின் செயலாளரான கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார்.

நவிபிள்ளை குறிப்பிட்ட சில விடயங்களில் அனேகமானவற்றை தாம் ஏற்கனவே பூரணப்படுத்தி விட்டோம் அவற்றில் சில நடைமுறைப்படுத்த முடியாதவை என்றும் ஶ்ரீலங்கா தெரிவித்திருக்கிறது.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் சென்ற ஆண்டு இலங்கைக்குச் சென்று திரும்பியபின் தனது அதிருப்தியை தெரிவித்து இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்,  மற்றும் மனித படுகொலைகள் இன்னபிற குற்றச்செயல்கள் பற்றிய விசாரணைகளை உடனடியாக விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்றும்,  ஜெனிவா அமர்வுக்கு முன்னதாக (மூன்று மாத அவகாசத்துக்குமுன்)   முன்னர் அவை நடத்தப்படவில்லையென்றால் சர்வ தேச விசாரணைக்கு அழுத்தங்கொடுக்கப் போவதாகவும்  சற்று கடுமையாக கூறியிருந்தார்.

அவை தவிர கனடா போன்ற நாடுகளின் அதிருப்தியும் இந்த மனித உரிமை அமர்வில் தாக்கத்தை உண்டுபண்ணும் என்பது சந்தேகம்மில்லை.

ஆழமான தமிழ்த் தேசிய உணர்வுடன் ஈழ அரசியலின் அடுத்த கட்ட நகர்வை கூர்ந்து நோக்குபவர்களுக்கு வரவிருக்கும் ஜேனீவா அமர்வு ஒரு ஆர்வத்தை தூண்டினாலும்,   தாயகத்தில் பொறுப்புக்களில் இருக்கும் தமிழ் அரசியற் தலைவர்களுக்கு வரவிருக்கும் ஜெனீவா அமர்வு பெருத்த  பலப்பரீட்சையுடன் கூடிய நெருக்கடி கொடுக்கவல்லதாகவே அமையவிருக்கிறது.

ஶ்ரீலங்கா ஆட்சியாளர்கள் ஜெனீவா மன்றத்தில்  தமது தரப்பு வாதப் பிரதிவாதங்களை தலையைக் கொடுத்தேனும் நியாயப்படுத்துவதற்கு தயாராகவே தயாரிப்பு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருப்பதும் பல வழிகளில் புரிந்து கொள்ளக்கூடியதாகவும் இருக்கிறது.

ஶ்ரீலங்கா அரச தரப்பு இந்திய,  சீன, ஜப்பான் நாடுகளின்  அறிவுறுத்தலுடன் நாட்டின் அபிவிருத்தியை முன்னிலைப்படுத்துவதுபோல ஒரு தோற்றப்பாட்டை சர்வதேச அரங்குக்கு கொண்டு சென்று நீண்ட கால அவகாசத்தை பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் இறங்கியிருக்கின்றனர் ஜப்பான், இந்தியா, சீனா போன்ற நாடுகள்  ஜெனீவாவில் ஶ்ரீலங்காவுக்கு உதவுவதற்கு தயாராக இருப்பதாக தெரிகிறது.

அமெரிக்கா கொண்டு வரவுள்ள பிரேரணையின் தாக்கத்தை குறைக்கும் வகையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்க, அமெரிக்காவில் அதுபற்றி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார் அப்பேச்சுவார்த்தைகளின்போது வடக்கு மாகாணசபை நிறுவப்பட்டது தமிழர்களுக்கான பெருத்த அரசியற் திருப்பமாக காட்டிக்கொள்ளப்படவிருக்கிறது.

கால அவகாசம் என்பது ஶ்ரீலங்கா ஆட்சியாளர்கள் தொடர்ந்து பாவித்து வரும் ஒரு தந்தரத் திட்டம் என்ற குற்றச்சாட்டு சர்வதேச மன்னிப்பு சபையால் ஏற்கெனவே சுட்டிக்காட்டி கண்டிக்கப்பட்டிருக்கிறது.

இருந்தும் ஶ்ரீலங்கா தரப்பு வடக்கு மக்களுக்கான ஆட்சி அதிகாரம் வழங்கியதை முன்னிலைப்படுத்தி ஜெனீவாவில் தப்பிக்க முயற்சிக்கும் என்பதில் வேறுபட்ட கருத்து இருக்க முடியாது.  அதன் தொடர்பான அபிவிருத்தி,  அவைகளுக்கு தேவையான கால அவகாசம் என்ற மாயையை முன்னிறுத்தி சர்வதேசத்துடன் ஜெனீவாவில்  மல்லுக்கட்டுவது என்ற முடிவில் மாற்றமில்லாமல் இருப்பது அனைத்து அசைவாக்கங்கள் மூலமும் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

அரச தரப்பின் அந்த நியாயப்படுத்தலை சர்வதேசம் உடனடியாக இலகுவாக ஏற்றுக்கொள்ளாது என்பதும் இலங்கை ஆட்சியாளர்களுக்கு தெரியாததுமல்ல.

அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின்படி ஶ்ரீலங்கா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு" (LLRC,)  தனது வேலைத்திட்டத்தை 2014ல் ஓரளவாவது நிறைவு செய்திருக்கவேண்டும்..  ஆகக் குறைந்த பட்ஷம் LLRC  யின் நகர்வு பொதுவாக ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் அவ் வேலைத்திட்டம் தொடங்கப்பட்டாவது இருக்கவேண்டும்.

வடக்கு மாகாணத்துக்கு தேர்தல் ஒன்று நடத்தப்பட்டது தவிர சொல்லிக்கொள்ளும்படி வேறு எதுவும் நடைபெறவில்லை.

தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்,  மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரன்,  ஆகியோரின் அனுசரணை ஜெனீவா அரங்கத்தில்  ஶ்ரீலங்காவை காப்பாற்றும் என்று நம்பப்படுகிறது.   அரசாங்கத்துடன் ஒத்துப்போவதுபோன்ற வெளிப்படுத்தல்  இணக்கப்பாட்டுடனான கருத்தொற்றுமை,   தொடரும் வேலைத்திட்டங்கள் திருப்தியளிப்பதுபோன்ற வழிமொழிதல் மூலம் இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் செல்வாக்கையும் பின் தள்ளி சர்வதேசத்தால் புறந்தள்ள முடியாத தரப்பினராக தமிழர் தேசியக்கூட்டமைப்பு ராஜபக்‌ஷவுக்கு உதவும் நிலையில் இருப்பது  சமீப அரசியல் அசைவுகளிலிருந்து எவரும் புரிந்து கொள்ள முடியும்.

ஜெனீவா அமர்வு அண்மிக்கப்போகும் காலகட்டத்தை கருத்தில்க்கொண்டு வடக்கு மாகான முதல்வர் விக்னேஸ்வரன் மற்றும் சம்பந்தன் ஆகியோரின் செவ்விகள், கருத்து மற்றும் நடவடிக்கைகள் சந்தேகத்துக்கு இடமாகவே இருந்து வருகிறது.

ஈழத்தில் இடம்பெற்ற யுத்தத்தின்போது  மக்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் "இன அழிப்பு என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம்"  எனவும் இனவழிப்புக்கு ஒப்பானது என்றோ,  அல்லது தக்கதான வேறு பதத்தை பாவிக்குமாறும் வட மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்ட இனவழிப்பை சர்வதேச விசாரணைகள் மூலம் அனைத்துலக சமூகத்திற்கும் வெளிப்படுத்த முன்வரவேண்டும் எனற பிரேரணையை மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்வைத்து இருந்தார்.

அப்போது இடை மறித்த விக்கினேஸ்வரன்,  இனவழிப்பு என்ற சொல்லை பாவிக்காமல் இனவழிப்புக்கு ஒப்பான வேறொரு பதத்தை பாவியுங்கள் இனவழிப்பு என்ற சொல்லினை பாவிக்கும் போது சில சட்டசிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னரே இங்கு நடைபெற்றது இனவழிப்பு என கூறமுடியும். அதுவரைக்கும் இங்கு நடைபெற்றது இனவழிப்புக்கு ஒப்பானது என்ற சொல்லினை பாவிப்பதே நன்று என விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார். எனவே  ஶ்ரீலங்கா அரசுக்கு ஆதரவான விக்கினேஸ்வரனின் கருத்து ஜெனீவாவின் விவாதங்களின்போது அறிக்கை வடிவத்தில் ஶ்ரீலங்கா ஜனாதிபதி ராஜபக்‌ஷ்வுக்கு பெருத்த உதவியாக அமையக்கூடும்.

வடக்கு மாகாண தேர்தலில் வாக்கு வேட்டையில் ஈடுபடும்போது இனப்படுகொலையை சர்வதேசத்துக்கு கொண்டு சென்று நியாயம் பெறுவோம் என்று வாக்குறுதி அளித்து போட்டியிட்டு வென்ற விக்கினேஸ்வரன் இன்று சக சபை உறுப்பினர்களுக்கு இப்படியொரு கோரிக்கையை முன் வைக்கிறார் என்றால் வரவிருக்கும் ஜெனீவா அமர்வும் அதன் பின்னணியில் ராஜபக்‌ஷ மற்றும் இந்தியா இருக்கிறது என்பதே அர்த்தமாகும்.

விசாரணைகளின் பின்னரே நடைபெற்றது இன அழிப்பு என்று கூறமுடியும் அதுவரைக்கும் இன அழிப்பு என்று கூறக்கூடாது என்று ராஜபக்‌ஷவின் நட்புச்சக்தியான  மூன்றாம் தரப்பினர் ஒருவர் வேண்டுமானால் கோரிக்கை வைக்க முடியும், 

அனைத்தையும் நேரில் பார்த்த தமிழினத்தில் பிறந்து நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டிய "வாதி"யாக  முன்னணியில் நிற்கவேண்டிய  வடக்கு மாகாண முதலமைச்சர் எதிரிக்கு சாதகமாக வழக்காடு மன்றத்தில் முறைப்பாடு செய்ய முயலுவது தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயத்தை குழி தோண்டி புதைப்பதற்கு சரியானது என்றே ஈழ ஆதரவாளர்கள் அச்சப்படுகின்றனர்.

ஈழ போரின் இறுதியில் முள்ளிவாய்க்கால் முட்டுக்குள் வைத்து குழந்தைகள் தாய்மார்கள்,  வயோதிபர்கள், போராளிகள்,  போராளிப் பெண்கள் என்று சகட்டு மேனிக்கு இலட்சக்கணக்கில் கொன்று குவித்தது இலங்கை இராணுவம், அவற்றை சர்வதேசமே ஏற்றுக்கொண்டிருக்கிறது.

அது இனப்படுகொலைகளா, மனிதப்படுகொலைகளா, போர்க்குற்றமா என்பதை வெளியிலிருந்து  (சர்வதேச) விசாரணை நடத்துபவர்கள் விசாரணைகளின்பின் முடிவுக்கு வரலாம் ஆனால் ஒவ்வொரு தமிழனுக்கும் அது இனப்படுகொலையா, தற்செயலான விபத்தா, மரபுசார்ந்த போர் மரணங்களா என்பது பகுத்து உணரமுடியாததல்ல.

வயது வேறுபாடின்றி பெண்களை கற்பழித்து,  இறந்த உடலங்களையும் இன வன்ம வெறியில் புணர்ந்தது தனது வெறியை தீர்த்துக்கொண்டதாக குற்றச்சாட்டுக்களும் ஶ்ரீலங்காவின் பாஷிச இராணுவத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கிறது,  சரணடைந்த நிராயுதபாணிகளை கை கால்களை கட்டி வெட்டவெளியில் இராணுவம் சுட்டுக்கொல்லுகிறது, ஊடகவியலாளரான இசைப்பிரியாவை சீரழித்து கொன்று வீசியிருக்கிறது. தேசியத்தலைவரின் மகனாகப்பிறந்ததனால் பாலச்சந்திரன் என்ற குழந்தை பலிகொடுக்கப்பட்டிருக்கிறது.

விக்கினேஸ்வரனின் சட்டம் இவற்றுக்கு என்ன பதில் சொல்லப்போகிறது என்று,   இழப்பை அறுவடை செய்த ஈழ மக்களின் கோபம் நாளை விசுவரூபம் எடுக்கலாம்..

தமிழ் இனத்தின்மேல்  திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த அழிப்பு  மூர்க்கத்தனமான இனப்படுகொலைதான் என்று பல்வேறு தரப்புக்களிடமிருந்து குற்றச்சாட்டுக்கள் குவிந்திருக்கின்றன.  அதற்கான அனைத்து சான்றுகளும் சாட்சியங்களும் மலைபோல் முன்னால் குவிந்திருக்கும்போது  சில வெளிநாட்டு சக்திகளையும் ஶ்ரீலங்கா ஜனாதிபதியையும் பாதுகாத்து தமிழினத்தை காட்டிக்கொடுக்கும் வண்ணம் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் நடந்து கொண்டால் இங்கிலாந்து கனடா போன்ற நாடுகள் எடுக்கவிருக்கும் இனப்படுகொலைக்கு எதிரான முயற்சியும் அடிபட்டுப்போகும் அபாயம் எவராலும் தவிர்க்க முடியாமல் போகலாம்.

ஶ்ரீலங்காவில் நடைபெற்றது genocide  தான் என்ற உலகறிந்த உண்மையை நியாய மன்றத்தில் வெளிப்படையாக விசாரணைக்கு வைக்கும்போது எங்கு சட்டச் சிக்கல் வருகிறதென்பதை சிங்கள கைக்கூலியான விக்னேசுவரன் போன்றவர்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும். 

தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இந்தியாவிலிருந்து வெளிவரும் இந்து நாளிதளுக்கு அளித்த செவ்வியும் ஜெனீவா அரங்கில் ராஜபக்‌ஷவை சர்வதேச விசாரணை வளயத்துள் விழவிடாமல் தப்புவிக்கும் கருத்தடங்கிய செவ்வியை வழங்கியிருந்தார்.

சம்பந்தரின் செவ்வி அதிர்ச்சியளிக்கும் விதமாக விடுதலை போராளிகளையும் இயக்கத்தையும் பயங்கரவாத இயக்கம் என்பதுபோல் விமர்சித்து இந்தியாவையும் ஶ்ரீலங்காவையும் மகிழ்ச்சிப்படுத்தியிருந்தார்.

சம்பந்தரின் துள்ளல் விரால் இல்லாத குளத்தில் குறவை துள்ளி விளையாடியதுபோல் நாளை கணிக்கப்படலாம்.

ஈழதேசம் செய்திகளுக்காக.

கனகதரன்.

No comments: