இலங்கையில் நீண்டகாலமாக இருந்துவரும் இன முரண்பாட்டு வெளியின் தீர்வுக்கான அரசியல் திருத்தல்,  (fundamental mechanism )    இராசதந்திர நேர்மையுடன் பாகுபாடற்ற முறையில் அரசியல் ரீதியாக,   தீர்க்கவேண்டும் என்ற மனநிலை,
இலங்கை அரசியற் தலைமைகளிடம் இருந்திருப்பின்,   இலங்கையின் அமைதியை கெடுக்கும்வகையில் பகைமை ஒன்று உருவாகி கொடூர இனப்படுகொலையில் முடிந்திருக்காது.

படுகொலைகள் நடந்து முடிந்த பின்னரும்,  நடந்த தவறுகளை திருந்திக்கொள்ள முயற்சிக்காமல் வஞ்சகத்துடன் மூடி மறைத்தலும்  இழுத்தடிப்புக்களுமே தொடர்கிறது. மீண்டும் தப்பான செயற்பாடுகளை ஊக்கப்படுத்தும்வகையில் இந்தியா தமிழர் அரசியல் தலைமைகளின் அறியாமையை பயன்படுத்தி ஏமாற்றி தம் பிராந்திய நலனை முதன்மையாகக் கொண்ட புள்ளியை நோக்கி தந்தரமாக நகர முயற்சித்து வருகின்றது. 

இலங்கையில் வாழும் சிங்களவர்கள் போல தமிழார்களும் இலங்கையின் தேசிய உரித்துடையவர்கள் என்ற உண்மையை,   பிராந்திய அரசியல்நலன் தாண்டி மனிதாபிமானமாக ஏற்றுக்கொள்ளும் நாகரீகம் இந்தியா உட்பட உலக நாடுகளிடம் இருந்திருந்தால் நீதியான முறையில் பாகுபாடற்ற தீர்வுத்திட்டத்தை எப்போவே 1980 களில் பேச்சுவார்த்தைகள் மூலமாக நெறிப்படுத்தி சிறிய ஒரு நாட்டில் பெரும் இனப்படுகொலையை நடக்கவிடாமல் தடுத்திருக்க முடியும்.

போர் முடிந்த பிற்பாடாவது தீவிரவாதம் ஏன் பிறப்பெடுத்தது,  மீண்டும் தீவிரவாதம் தலை தூக்காத அளவிற்கு இலங்கையில் அனைத்தும் சீர்செய்யப்பட்டிருக்கிறதா என்பதை  ஸ்ரீலங்காவின் ஆட்சியாளர்கள் மற்றும் ஆலோசனை வழங்கும் பிராந்திய வல்லாதிக்கங்கள்  பகுப்பாய்ந்து மறுவாசிப்பு செய்திருக்கவேண்டும்,   சர்வதேச அமைப்புக்கள் முன்வைக்கும்  மனிதாபிமான கோரிக்கைக்கமைய பாகுபாடற்ற  விசாரணை நடத்தி படுகொலைகள் பாரபட்சமற்று மதிப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட முக்கியமான விடயங்கள் ஒரு கண்துடைப்பின் அடிப்படையில் ஐநா,  வரை ஒப்புக்கு பேசப்பட்டாலும்,  தர்க்கரீதியாக எவரும் ஈழப்படுகொலைகளை உணர்வுபூர்வமாக கணக்கில் எடுத்து நீதிவிசாரணைக்கு உட்படுத்த இருப்பதாக தெரியவில்லை,  எஞ்சியிருக்கும் மக்களுக்கான தீர்வுத்திட்டத்துக்கான வரைபு சட்டரீதியாக நிர்ணயிக்கப்படவில்லை.  நடந்த கொடுமைகள் அனைத்தையும் ஆழ மூடிவிட்டு அதன் மேல் நின்று தீர்வுத்திட்டம் என்ற போக்கு காட்டி,  போகாத ஊருக்கு வழிதேடும் ஆயிரம் வழிமுறைகள் அரசியல் என்ற பெயரில் கண்டங்கள் கடந்து ஐநா, வரை பெரும் எடுப்பில் முடிவின்றி விவாதிக்கப்படுகிறது.

இன்றைய திகதிக்கு அனைத்திற்கும் முகங்கொடுத்து உலக அரங்கின்முன் அரசியல் ரீதியாக ஈழப்பிரச்சினை அனைத்தையும் அக்குவேறு ஆணி வேறாக கொண்டுசென்று விவாதித்து நியாயமான தீர்வை பெறவேண்டிய தகுதி,   வாதிகள் தரப்பாக தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழர் தேசியக்கூட்டமைப்பின் அரசியல் தலைவர்களுக்கு மட்டுமே உண்டு.    ஈழத்தமிழர்களின் தெரிவாக இருக்கும் த தே கூட்டமைப்பை சர்வதேசமும் தமிழர்களின் பேரம்பேசவல்ல தரப்பாக ஏற்றுக்கொண்டிருக்கிறது.  இருந்தும் மதிநுட்பமில்லாத தமிழர் தேசியக்கூட்டமைப்பினர் என்றும் உறுதியற்ற தொங்குநிலையில் இருந்து கொண்டு மிதந்து வரும் எதையாவது பெற்றுவிடலாம் என்ற நோக்கோடு திடமற்ற அறிக்கை பேச்சாளர்களாகவே இருந்து வருகின்றனர்,

"இந்தியா என்ன சொல்லுகிறதோ சர்வதேசம் என்ன சொல்லுகிறதோ சித்தமாக ஏற்றுக்கொள்ளுகிறோம் என்று தேசியக்கூட்டமைப்பு தலைவர் சம்பந்தரின் பேச்சாளர் சுமந்திரன் திருவாய் மலர்ந்து அருளியிருக்கிறார்"

பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்குள்  நுழைவதானாலும்,  வெளியில் நிற்பதானாலும் இந்தியாதான் முடிவெடுக்கவேண்டும் என்கின்றனர்.  இந்தியா சொல்வதை ஏற்றுக்கொள்வதற்கும் சர்வதேசம் சொல்வதை ஏற்றுக்கொள்வதற்கும் இவர்கள் ஏன் அரசியல்வாதிகளாக இருக்கவேண்டும். எனது வீட்டின் நன்மை தீமைகள் என்னைத்தவிர அடுத்தவீட்டுக்காரனால் எப்படி புரிந்துகொள்ளமுடியும்?  எனக்கும் என் குழந்தைகளுக்கும் ஒவ்வாதவற்றை நான் நிராகரிப்பதுதானே தர்மம்,   எனது மனைவியின் குணம் எனக்குத்தானே தெரியும் அதுதானே உண்மை!   சர்வதேசமும் இந்தியாவும் தமக்கு சரி என்று பட்டதை செய்வதானால் நீ எதற்கு இருக்கிறாய்?   ஒரு முக்கிய விவாதத்தில் பங்கு பற்றி விவாதித்து  ஒவ்வாதவற்றை நேரடியாக நிராகரிக்கும் திடம் ஏன் இவர்களிடம் இல்லை.  இப்படிப்பட்ட இவர்களால் எப்படி ஒரு முக்கியமான விவாத அரங்கத்தை சந்திக்கமுடியும்?  இவர்கள் ஏன் தம்மை அரசியல்வாதிகள் என்று வரித்துக்கொள்ளுகின்றனர்.

வல்லரசு நாடுகளின் அளப்பரிய பலம் என்னவென்று கேட்டால் நிறைவேற்று அதிகாரங்களை விடவும் அந் நாடுகளின் நிராகரிக்கும் அதிகாரமே (veto power) வல்லரசுகளின் ஆதிக்கத்தை அடக்கவல்லதாக,  ஐநாவின் கட்டளையை புறந்தள்ள வல்லதாக (veto power) என்ற அதிகாரம்  இருந்துவருகிறது.  தனக்கு ஒவ்வாதவற்றை நிராகரித்தல்  அல்லது ஒத்துழையாமை என்று அதற்கு பொருள். இதை ஏன் என் இனிய த தே கூ புரிந்துகொள்ளவில்லை?.

ஈழத்தனிழினத்திற்கு 2009ல் முள்ளிவாய்க்காலில்  நடந்தவற்றை விட நடப்பதற்கு இன்னும் ஏதாவது கொடுமை இருக்கிறதா?

செத்துப்போன பிணங்களை புணர்ந்த சிங்கள இராணுவத்தலைவன் ராஜபக்க்ஷ, அவனுக்கு அனைத்திற்கும் அனுசரணையாக இருந்து தமிழினத்தை அழிக்க உதவிய குள்ள  நரிக்கூட்டம் இந்தியா. இந்த நாசகாரர்களின் வாய் வாக்குறுதிகளை எந்த அடிப்படை ஆதாரத்தை வைத்து தமிழன் ஏற்றுக்கொள்ள முடியும்?  60 ஆண்டுகளாக செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் சிங்களவர்களால் கிழித்து வீசப்பட்டிருக்கிறது.  25 ஆண்டுகளுக்குமுன் இன்னொரு நாடு தலையிட்டு வரையப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஒரு நாட்கூட வாழாமல் கிணற்றில் போட்ட கல்லாக காணாமல் போயிருக்கிறது.  ஏமாற்று பேச்சு வார்த்தை ஒன்று தொடங்கும்போது  இலங்கை இந்திய ஒப்பந்தம் என்று ஒவ்வொரு காலங்களிலும் விடுப்பு காட்டப்படுகிறது.  இந்த நஞ்சுக்கு மாற்றீடாகத்தானே தன்னாட்சி, சுயநிர்ணயம், தேசியம் முதன்மையாகவேண்டுமென்று பிரகடனப்பட்டது.  துப்பாக்கி ஏன் வந்தது என்பதை ஏன் கூட்டமைப்பு உணரவில்லை.

1958 ஆண்டு காலகட்ட நிலைக்கு திரும்பி சென்று,   எடுத்துச்செல்லப்படும் தீர்வு, சமரசம், வாக்குறுதி சாத்தியமாகுமா?

தமிழ் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில் காட்டிக்கொடுத்து சுகவாழ்வை அனுபவிப்பவர்களாகவும் அரசியல் ஆற்றங்கரையில் காத்துக் கொண்டிருப்பவர்களாகவுமே காணப்படுகின்றனர்.  கொள்கை,  அரசியல் சாணக்கியம் உறுதி உரிமை அனைத்தும் இங்கு கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது. உறுதியுடன் ஒவ்வாதவற்றை துணிச்சலுடன் நிராகரிக்கும் பக்குவம் எவரிடமும் காணப்படவில்லை.

இதில் குறிப்பிட விரும்பும் விடயம் என்னவென்றால் ஈழத்தமிழர்களின் நம்பிக்கைக்குரியவர்களான த தே கூட்டமைப்பினர்  இந்தியாவை மலைபோல் நம்பி  தமது தலையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு தீர்வு கையில் கிடைக்கும் பிடித்துவிடலாம் என்று காத்திருக்கின்றனர்.  "கடல் வற்றும் என்று கனவுடன் காத்திருந்த கொக்கு குடல்வற்றி செத்தது"  இந்தக்கதைதான் நினைவுக்கு வருகிறது.

இனி வரலாற்றில் ஒருபோதும் இந்தியாவால் ஈழப்பிரச்சினையை கையாண்டு தீர்க்கமுடியாது.   அதற்கான தகுதியும் இந்தியாவுக்கு இல்லை.  தீர்க்கும் நோக்கமும் இந்தியாவுக்கு   துளியும்  இல்லை.  புறச்சூழலும் அதற்கிசைவாக இல்லை.  ஒரு காலகட்டத்தில் ததேகூ இந்த உண்மையை அறிந்துகொள்ளக்கூடும்.  இந்தியா தனது பிராந்திய நலனுக்காக இடைச்சொருகலாக இருந்துகொண்டு  ஏதாவது ஏமாற்று வித்தையை தொடர்ந்து அரங்கேற்ற முடியுமே தவிர வெளிப்படையாக தமிழர் நலனுக்கு பணியாற்றும் சேவையை இந்தியா ஒருபோதும் செய்யமுடியாது.    2009ல் முள்ளிவாய்க்கால் ஈழப்படுகொலைக்குள் அனைத்தும் அமிழ்ந்து போய்விட்டது.     அதேபோல  தமிழ்நாட்டைப்பொறுத்தவரை கருணாநிதியின் கட்சிக்கும் அந்த தகுதி கடுகளவும் இல்லை.  இந்த இரண்டு சக்திகளும் ஈழத்தமிழர் பிரச்சினையிலிருந்து விலகினாலே தமிழீழத்தின் வாசல் திறக்கப்பட்டுவிடும். இந்த உண்மை ஈழத்தமிழர்கள் அனைவரும் ஏற்கெனவே உணர்ந்துகொண்டதுபோல கூட்டமைப்பினரும் உணர்ந்துகொள்ளும் காலம் வரும்   அன்று கூட்டமைப்பின் நிலை  விடுதலை கூட்டணியின் நிலைக்கு தள்ளப்பட்டும் இருக்கலாம்.

தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதை மீண்டுமொருமுறை ஞாபகப்படுத்திக்கொள்ளுவோம்.

கருணாநிதி இன்று தப்பித்தலுக்காக பல்முக வேடங்கள் கட்டி அரங்கேற்றும் நாடகங்கள் எவ்வளவோ,  அதேபோன்ற நாடகங்களைத்தான் மத்திய காங்கிரஸ் அரசும்,  மந்திரிகளையும்,   கொள்கை வகுப்பாளர்களையும் முன்னிறுத்தி வாக்குறுதிகள் மூலம் த தே கூட்டமைப்பை வைத்து ஏமாற்றுகிறது.

இந்திரா காந்தியின் காலத்தில் ஈழத்தமிழர் பற்றிய புரிதல் இந்திய அரசுக்கு ஓரளவு இருந்ததாகவே மானசீகமாக நம்பப்பட்டது.  அப்போதுகூட உள்ளூர இந்திய நலன்சார்ந்து காய்கள் நகர்த்தப்பட்டாலும் நம்பிக்கையூட்டும் வகையில் சில நகர்வுகள் நடந்தேறின, பார்த்தசாரதி என்ற தமிழர் கொள்கைவகுப்பாளராக இந்திராவால் நியமிக்கப்பட்டிருந்தார். இந்திய நலன்சார்ந்த நகர்த்தலுடன் சிங்கள அரசை மிரட்டும்விதமாக போராளிகளுக்கு இந்திய அரசும், எம்ஜீஆர் தலைமையிலான தமிழ்நாடு அரசும் ஒத்தாசையாக இருந்தது.  அன்றைய   இந்திரா,  எம்ஜீஆர் கொள்கை நிலை தொடரும் பட்ஷத்தில்,   இலங்கை அரசு ஒரு முடிவுக்கு கட்டுப்படவேண்டிய சூழல் உருவாகியிருக்கும்.   அன்றைய நிலைப்பாட்டின் தன்மைக்கும் இன்றைய இந்திய அரசின் கொள்கை நிலைக்கும் எந்தச்சம்பந்தமும் இல்லை.

ராஜீவ் இந்திய பிரதமரான மறு நிமிடமே   டிக்சித்,  என்ற இலங்கைக்கான தூதுவர் ஈழத்தமிழர்கள் மீது துவேஷத்தை வெளிப்படுத்தி பழைய நிலையை தலைகீழாக மாற்றினார். இந்திய புலனாய்வு பிரிவான றோ, விடுதலை போராளிகளை அழிப்பதற்கான நச்சு வலைகளை விரித்தது,  கோள்கை வகுப்பாளர்கள் வசதிக்கேற்றபடி மாற்றி அமைக்கப்பட்டனர். தமிழ்நாட்டின் ஒப்பற்ற உதவிக்கரமான எம்ஜீஆர் காலமானார். ஆலகால விஷமான கருணாநிதியின் கை ஓங்கியது.

ராஜீவ் காந்தி இறுமாப்புடன் ஒருதலைப்பட்ஷமாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தை கொண்டு வந்தார் 100 பக்கங்களுக்கு மேற்பட்ட அந்த ஒப்பந்தத்தில் இந்திய நலன் சார்ந்த சரத்துக்களே 90க்கு மேற்பட்ட பக்கங்களை அலங்கரிக்கின்றன.  இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் தீட்டப்பட்ட 13வது சரத்து சட்டத்தில் காணி காவல்த்துறை, கல்வி இந்த மூன்று அதிகாரங்கள்  மட்டுமே தமிழர்களுக்கு சாதகமாக இருந்தது.,  ஆனாலும் 25 வருடங்களாகியும் அந்த சட்டங்கள் எதுவும் நடைமுறையில் இருந்ததில்லை,   அந்த ஒப்பந்த கடதாசிகள் கைதுடைக்கவும் எவருக்கும் உதவியிருக்கவில்லை.  இப்போ அந்த நடைமுறையில் இல்லாத சட்டத்துக்கும் பிரியாவிடையாம். (நடைமுறையில் இல்லாத சட்டத்துக்கு பிரியாவிடை ஏன்?) இங்குதான் தேசியம்,   சுயநிர்ணயம்,   தன்னாட்சி போன்ற கோட்பாடுகள் ஏன் உதித்தன என்ற கேள்விக்கு விடை அறியக்கிடைக்கிறது. சுமந்திரன் சம்பந்தர் இவற்றை அறிவரோ இல்லையோ?

இவ்வளவு நிகழ்வுகளுக்குப்பின்னும் கொள்கைரீதியாக இந்திய அரசை நட்புச்சக்தியாகவே ஈழத்தேசியம் பாவித்துவந்தது. ஆனால் ஒரு முடிவு என்று வரும்போது ஏற்கக்கூடியவற்றை ஏற்கவும் ஒவ்வாதவைகளை நிராகரிக்கவும் தமீழீழத்தேசியம் பின் நின்றதில்லை,  இதனால் இந்தியாவின் கைகளில் மட்டும் தங்கியிருக்காமல் ஈழ தேசிய அரசியல் சர்வதேச அரங்குவரை சென்றுசேர்ந்து முடிவெடுக்கும் நிலைக்கு தகுதிபெற்றிருந்தது.  

ஆனால் வஞ்சகத்தின் மூலம் பின்வழியை தேர்ந்தெடுத்த இந்தியா சதி செய்து சிங்கள இனவாதிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமில்லை என்பதை காட்டிக்கொண்டதுமல்லாமல்,   சர்வதேசத்தின் உள்நுழைவை தடுத்து ஆட்கொள்ளுவதற்கேதுவாக தீர்வுத்திட்டம்பற்றி தமிழர் தரப்பான தேசியக்கூட்டமைப்பை தனது கொட்டடிக்குள் வைத்துக்கொள்ள முனைகிறது.

இதனால் தொலைநோக்கற்ற,   பரிதாபத்துக்குரிய,   திடமற்ற அரசியற் தலைமைகள் இருக்கும்வரை ஈழ தீர்வுத்திட்ட அரசியலும் முடிவற்று தொடரும் என்றே நடவடிக்கைகள் இடித்துரைக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் இந்த மாதம் அதாவது (ஒக்ரோபர்)  டில்லி பயணம் செய்து இந்திய பிரதமர் உள்ளிட்ட பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி திருப்தியுடன் திரும்பியுள்ள ஒருசில வாரங்கள் சென்ற நிலையில்,  அடுத்த மாதம் (நவம்பர்)  தமிழ் நாட்டிற்கு விஜயம் செய்ய உள்ளனர்  என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பயணம் உத்தியோகபூர்வ?? விஜயமாக  அமையும் என தெரிவிக்கப்படுகிறது.  அண்மையில்  தேசியக் கூட்டமைப்பினர் புதுடில்லிக்கு விஜயம் செய்து தீர்வுத்திட்டம்பற்றி ஏதாவது பேசினரோ இல்லையோ   தமது ஆளுமையை வெளிக்காட்டும் முகமாக  அரசியல் ரீதியாக ஏதாவது செய்யவேண்டும் என்பதற்காக தமிழக அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழ் அகதிகளை திரும்ப நாட்டுக்கு அனுப்புவது சம்பந்தமாக இந்திய வெளியுறவு மந்திரி எஸ் எம் கிருஷ்ணா, மற்றும் சிவ்சங்கர் மேனனுடன் சேர்ந்து சில முடிவுகளை எடுத்திருப்பதாக தெரிகிறது.

மறுபுறத்தே அதே மாதிரியான ஒரு திட்டத்துடன் கே.பியுடன் (குமரன் பத்மநாதன்)   தொடர்புகளை பேணிவரும் புலம்பெயர்ந்த தமிழர்களுடன் இலங்கை அரசாங்கம் விரைவில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளது. என்று ஸ்ரீலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஏற்கெனவே கே.பி. யை பயன்படுத்தி புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் பேச்சு நடத்தப்பட்டிருக்கிறது என்றும்.  இதுவரை நடத்தப்பட்ட பேச்சுக்கள் வெற்றியளித்துள்ளன என்றும் இதனூடாக அனைத்து புலம்பெயர் தமிழ் அமைப்புகளையும் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரவும் நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிக்கவும் முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்ததாகவும் அறியப்படுகிறது. (எது வெற்றியளித்தது என்பது தெரியவில்லை!)

இதிலிருந்து புரிவது என்னவென்றால் இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழர்களின் அரசியல் மையப்புள்ளியாக இருந்துவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு இந்தியாவை விட்டால் ஈழத்தமிழர்களுக்கான அரசியல்த்தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது என்ற நிலையில் இருப்பதாகவும்.  தமிழர் தேசியக்கூட்டைப்பை தங்கள் பிடிக்குள் வைத்திருப்பதால் மட்டுமே சீனாவின் அடர்த்தியை ஸ்ரீலங்காவுக்குள் குறைக்கக்கூடிய தந்திரத்தை செய்யமுடியும் இதற்கு உவப்பாக ஈழப்பிரச்சினையை பயன்படுத்தலாம்  என இந்தியா நம்புவதாகவும்,   இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் புலம்பெயர் அமைப்புக்களை புறந்தள்ளிவிட்டு எந்த முடிவையும் எட்டிவிட முடியாது என்ற நிலையில் இருப்பதாகவும் புரியப்படுகிறது.  இந்த பலவீனங்களை புரிந்துகொண்டாலே கணிசமான அரசியல் ஞானம் கிடைத்துவிடும். அந்த அடிப்படையில் காய் நகர்த்துவதே உண்மையான ஆரோக்கியமான அரசியலாகவும் இருக்க முடியும்.

முதலாவதாக தமிழர் தேசியக்கூட்டமைப்பு செல்ல முற்படும் வழியை பார்க்கலாம்: .

கடைசியாக தமிழர் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் தலைமையில் இந்த மாதம் (ஒக்ரோபர்) முற்பகுதியில் இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தது அனைவரும் அறிந்ததே. த தே கூட்டமைப்பினர் முன்னையைப்போல மாதக்கணக்கில் காத்திருக்காமல்  இம்முறை இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை எந்தத்தடையுமின்றி மிகவும் இலகுவாக சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியிருந்தனர் என்பதும் கவனிக்கத்தக்கது,  தொடர்ச்சியாக இந்திய வெளிநாட்டு அமைச்சர் கிருஷ்ணாவையும், முதன்மை கொள்கை வகுப்பாளர்களான நாராயணன், சிவ்சங்கர் மேனன் ஆகியோரையும் சந்தித்து அளவளாவி முடிவில் தமது நோக்கத்தில் பரிபூரண திருப்தி ஏற்பட்டதாகவும், இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கை அரசின் தீர்வு விடையத்தில் பொறுமை இழந்து கடுமையான நிலையெடுக்கும் நிலைப்பாட்டுக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் எப்போ வேண்டுமானாலும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக எதுவும் நடக்கலாம் என்ற முடிவுக்கு இந்தியா வந்து இருப்பதாகவும்,  சம்பந்தன் மட்டுமல்லாது செல்வம் அடைக்கலநாதன்,  சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோர் தமது மகா திருப்தியை தனித்தனி அறிக்கைகளாக பொலிவுடன் வெளியிட்டிருந்தனர்!!.

இந்தியாவின் வாக்குறுதியில் பூரண திருப்தியடைந்த  திரு சம்பந்தன் அவர்கள் முதல்க்கட்டமாக   தமிழ்நாட்டிலிருக்கும் அகதிகளை திரும்பவும் நாட்டுக்கு திரும்பி வந்து வாழலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டதாக அவரது அறிக்கை அமைந்திருந்தது.  அகதிகளை நாடு கடத்துவது தொடர்பாக சிவ்சங்கர் மேனன் எடுத்து வைத்திருக்கும் கருத்து வரவேற்கத்தக்கது என்று சம்பந்தன் அவர்கள் புகழ்ந்திருந்தார்.

இராணுவ குடியிருப்புக்களால் வீடு வாசல் இழக்கப்பட்டு அகதியாக்கப்பட்ட மக்கள் திரும்பி வந்து எங்கு குடியேறுவது என்பதுபற்றி அவர் சிந்தித்ததாகவோ இராணுவ நிலைகளுக்காக பறிக்கப்படும் நிலப்பறிப்பு அதுபற்றி பிரதமர் மன் மோஹன் சிங்குடன் ஒரு நடைமுறைப்படுத்தத்தக்க உத்தியோகபூர்வ முடிவுக்கு வந்ததாகவோ எந்த இடத்திலும் சுட்டிக்காட்டப்படவில்லை.  ஆனால் சம்பந்தன் அவர்கள் தனது இலக்கண சொல்லாடலில் குறிப்பிட்டதாவது "இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் நீதியாகவும், கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதை உறுதிப்படுத்துவதற்கான பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளதாக(!)   பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார்.  அத்துடன், இதற்காக என்ன செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்வேன் எனவும்  கூறினார்.   தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான இந்தியாவின் அணுகுமுறை சாதகமானதாக இருக்கின்றது. இப்பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான பொறுப்பை அவர்கள் விரைவில் பொறுப்பேற்றுக் கொள்வார்கள் என்றே நான் கருதுகிறேன்.  இந்தியாவுக்கு நாம் முன்னர் மேற்கொண்டிருந்த பயணங்களைவிட இம்முறை மேற்கொண்ட பயணம் மிகவும் உற்சாகம் அளிக்கக் கூடிய பயணமாக திருப்திகரமாக அமைந்திருந்தது என்றார்.

இலங்கை தமிழர் விடயத்தில் இந்தியா எப்பேற்பட்ட பொறிநிலையை பின்பற்றி வருகிறதென்பதை சற்று திரும்பிப்பார்க்கலாம்,

1984, அன்றைய இந்தியப்பிரதமர் இந்திரா காந்தியின் மறைவுக்குப்பின் பதவிக்குவந்த பிரதமர் ராஜீவ், கொள்கை வகுப்பாளர் ரொமேஷ் பண்டாரி கட்டுப்பாட்டில் தொடங்கிய திம்பு பேச்சுவார்த்தை முதல்,   நேற்றைய கூட்டமைப்பு மன்மோகன் ஜிங், சிவ்சங்கர் மேனன்,  கிருஷ்ணா சந்திப்புவரை  ஈழத்தமிழர்களுடைய நியாயமான ஒப்பீடுகளை காதில் வாங்கிக்கொண்ட திருப்பங்கள் எதுவும் இடம்பெறவில்லை.  அதி உச்சமான காலகட்டங்களான 2007, 2008, 2009 ஆண்டுகளில் இந்தியா வகித்த பாத்திரம் ஒன்றே இந்தியா எப்பேற்பட்ட பயங்கரமான மனநிலையை ஈழ கொள்கையில் ஈடேற்றி வருவதென்பதற்கு நல்ல சான்று.

திம்பு பேச்சுவார்த்தை 1985-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் தேதி தொடங்கி, 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள கால அட்டவணையைக் கொண்டிருந்தது. தமிழர்கள் தரப்பிலிருந்து 13 பேர் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். பேச்சு என்பது ஆக்கப்பூர்வமாக இல்லை.  தமிழர்கள் பயனடையக் கூடாத பேச்சுக்களையே சிங்கள அரசுத் தரப்பில் பேசினர்.  இந்தப் பேச்சுவார்த்தை குறித்து மறைந்த சி புஷ்பராஜா எழுதியிருப்பதாவது: "எப்பவுமே சிங்கள அரசாங்கத்தின் தலைவர்கள் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்னையைத் தீர்க்கும் விஷயத்தில் நேர்மையாக நடந்து கொண்டதில்லை. பிரச்னையைத் தீர்க்கப்போவது போன்று ஒரு மாயை ஏற்படுத்தி, காலத்தைக் கடத்துவது அவர்களது அரசியல் சூத்திரமாகும். இந்த நடவடிக்கையில் இலங்கை பிரதமர் டி.எஸ். சேனநாயக்கா தொடங்கி இதுவரை அதுதான் நடந்து வருகிறது. இனியும் அதே சூத்திரமே கையாளப்படும். இதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை'  என்று குறிப்பிட்டிருந்தார்.

2008, 2009 களில், பிரணாப் முகர்ஜி,  சிவ்சங்கர் மேனன். நிருபாமா ராவ் போன்ற உயர்மட்ட அதிகாரிகள் அனைவரும் சிங்கள இனவாதிகள் எப்பேற்ப்பட்ட  கொள்கையை கொண்டிருந்தனரோ அதைவிடவும் அதிக திருகுதாளங்களையும் வஞ்சகமான பொய்களையும் ஒப்புவித்து வந்திருந்தனர்.

சன்றாக சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் வெளியுறவு செயலாளரும் முந்நாள் இலங்கை தூதுவருமான நிருபாமா ராவு,  அவர்களை தமிழக பத்திரிகை ஒன்று விமானநிலையத்தில் நிறுத்தி கேட்ட சில கேள்விகளுக்கு,,    விடுதலைப் புலிகளுக்கு எதிராக மட்டுமே போர் நடக்கிறது. அப்பாவி மக்கள் மீது எங்களுக்கு என்ன கோபம்? விடுதலைப் புலிகள் மனித கேடயமாகப் பயன்படுத்திய சில நூறு அப்பாவிகள் மட்டுமே இறந்திருக்கிறார்கள்' என ஒட்டுமொத்த ராஜபக்ச அமைச்சரவையே சொன்னது. அதனை இந்தியா நம்பியது?  என்றும் இலங்கை என்பது இந்தியாவின் நட்பு நாடு. அதனால் அவர்களுக்கு இந்தியா சில உதவிகள் செய்ததாக அறிகிறேன்??. அண்டை நாடு என்ற முறையில் இந்தியா இலங்கைக்கு ஆலோசனை கூற முடியுமே தவிர ஆணையிட முடியாது.

''2009 இலங்கைப் போரில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என ஐ.நா. சபையே சொல்கிறது. போர் நடந்தபோது அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்ததும் போரில் இலங்கைக்கு இந்திய‌ அரசு உதவி செய்ததும் தார்மீக ரீதியில் சரிதானா?'' என்ற கேள்விக்கு, விடுதலைப் புலிகள் உடனான போரில் அப்பாவிப் பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படக் கூடாது. போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்' என இந்தியாவின் பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் வேண்டுகோள் வைத்தனர்(?). நானும் பாதுகாப்புச் செயலர் சிவசங்கர மேனனும் பல முறை அலரி மாளிகையில் இலங்கை அதிபரை இது தொடர்பாகச் சந்தித்துப் பேசினோம்.

''அப்படியென்றால் கொடூரமாகக் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான க‌ர்ப்பிணித் தாய்மார்களையும் பச்சிளங் குழந்தைகளையும்கூட விடுதலைப் புலிகள் என நம்பச் சொல்கிறீர்களா?'' என்ற கேள்விக்கு நீங்கள் ஒரு பத்திரிகையாளராக இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை என நினைக்கிறேன். தமிழர் என்ற உணர்வின் காரணமாகக் கேட்கிறீர்கள். இலங்கைப் போர் முற்றிலும் இந்தியாவின் கையை மீறி நிகழ்ந்த ஒன்று  என்று ஒரு சாதாரண கிராமத்து  குப்பாயி, மூக்காயி பதிலளிப்பதுபோல கூறிவிட்டு இந்தியாவின் அதே அரசியல் நாகரீகத்துடன் எஸ்கேப் ஆகியிருக்கிறார்.

சில மாதங்களுக்குமுன் தமிழ்நாட்டின் ஆலகால விஷ மரமான கருணாநிதி ஒரு இயலாமையின்போது கொடுத்த வாக்குமூலம்: நான் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதற்காகத்தான் அதிகாலையில் எழுந்து எவருக்கும் தெரியாமல் அண்ணா சமாதிக்கு அருகில் உண்ணாவிரதம் இருந்தேன் ஆனால் மதியமளவில் என்னுடன் தொடர்புகொண்ட பிரணாப் முகர்ஜி மற்றும் சிதம்பரம் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டுவிட்டதாக தொலைபேசி வழியாக பொய்த்தகவல் தந்ததால் நான் உண்ணாவிரதத்தை கைவிட நேர்ந்தது என்று கூறியிருந்தார்.

இவைகள் மட்டுமல்லாமல் இன்னும் ஆயிரம் விடயங்கள் கரும்புள்ளியாக ஈழத்தமிழனின் மனதில் நெருடிக்கொண்டிருக்கின்றன அவைகளில் ஒரு விடயமேனும் தமிழர் தரப்பு அரசியல்வாதிகளுக்கு நினைவில்லாமல் போயிருப்பது மிகவும் கவலைக்குரிய வரலாற்று பதிவாகவே பின்னய காலங்களில் உணரப்படலாம்.

தமிழர் தேசியக்கூட்டமைப்பு அரசியல் ரீதியாக தேவை ஏற்படும் பட்ஷத்தில் எவருடனும் பேச்சுவார்த்தையை வைத்துக்கொள்ளட்டும்.  அது அவர்களின் அரசியல் கருணா,  பிள்ளையான், கேபி, டக்கிளஸாகக்கூட இருக்கலாம்.  உறுதியான நிலையில் அரசியல் ரீதியாக பேசுவதில் எந்தத்தவறும் எவரும் சுமத்தமுடியாது.

உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் கட்சி அரசியல்வாதியான கருணாநிதியைகூட ஒரு தமிழர்களின் சக்தி என்று தமிழ்நாட்டில் அவருடைய கட்சிக்காரர்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்,  எனவே கூட்டமைப்பினர் கருணாநிதியுடன் கூட எப்பேற்பட்ட பேச்சு வார்த்தையையும் வைத்துக்கொள்வதில் தவறு கிடையாது, 

சிலுசிலுப்பையை புறந்தள்ளி பலகாரத்தை நோக்கி நகரவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டுள்ளதால் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கருணாநிதியுடன் கூட பேச்சுவார்த்தையென்று வந்தால் நேரடியாக சந்தித்து ஆற அமர அழவளாவலாம் தமிழீழ தீர்வு கொள்கைக்கு ஒவ்வாதவை எவையாயினும் நேரடியாக புறக்கணிக்கும் தைரியத்தை கொண்டுள்ளார்களாயின் மன்மோகன் சிங் ஆகட்டும்,  பான் கீமூன் ஆகட்டும்,  ராஜபக்க்ஷவாகட்டும் எமது நியாயமான உறுதியை கருத்தில்க்கொண்டு எம்மை நோக்கி அவர்கள் இறங்கி வருவதற்கு சந்தற்பம் உண்டு.  கடந்தகால தமிழர்தம் தேசியத்தின் வழி அதைத்தான் இடித்துரைத்து தமிழர் மனங்களில் நிறைவுடன் நிற்கிறது. 

ஈழதேசம் இணையத்திற்காக.

கனகதரன்.