Saturday, February 22, 2014

சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி அவர்களை நோக்கிய ஒளி பிறந்தது, இருந்தும் அரசியற் சூது இன்னும் விலகவேண்டும். கனகதரன்‏.

veeluursirai

21.5.1991 அன்று,  முன்னாள் இந்தியபிரதமர் ராஜீவ்,  ஶ்ரீ பெரும்புத்தூரில் திட்டமிடப்பட்ட மனித வெடிகுண்டால் வெடிவைக்கப்பட்டு சிதறடித்து கொல்லப்பட்டார்.  

அந்த கொலை வழக்கில் உண்மையான குற்றவாளி யார் என்பது இன்னும் எவருக்கும் தெரியாத மர்மமாகவே இருந்து வருகிறது.

இந்திய அரசு தரப்பிலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகள் தான் ராஜீவ் கொலை குற்றவாளிகள் என்றும்,  மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ராஜீவ் கொலையை விசாரித்த அதிகாரிகள் ஓய்வு பெற்றபின் வழங்கிவரும் தகவல் வாக்குமூலங்களிலிருந்து  ஆட்சியாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலர் ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும்,  விடுதலைப்புலிகள் இயக்கம் அந்த கொலையில்  சந்தற்ப வசமாக பொருத்தப்பட்டிருப்பதாகவும்,  அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகளில் கொலைக்கான திட்டங்கள்   இந்திய அதிகார உயர் மட்டங்களால் தீட்டப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக இருந்து வந்தன.

மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவலாக ராஜீவின் ஆட்சிக்காலத்திலும் அதன் பிற்பாடும் தேசிய பாதுகாப்பு அதிகாரியாக இருந்த எம் கே நாராயணனுக்கு ராஜீவ் கொலையில் பங்கு இருப்பதாகவும் ராஜீவ் கொலைசம்பந்தமான ஆவணத்தை பதிவு செய்து வைத்திருந்த ஒளி நாடாவை அவர் திட்டமிட்டு அழித்துவிட்டதாகவும்,  நாராயணன் தவிர சுப்பிரமணிய சுவாமி,  மற்றும் சந்திரா சுவாமி ஆகியோர் ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் பல மட்டங்களில் இன்றும் உண்டு.

இந்திய பிரதமர் ராஜீவ் தன்னிச்சையாக இந்தியப்படையை இலங்கைக்கு அனுப்பி அங்குள்ள அப்பாவி தமிழர்கள் பலர் கொல்லப்பட காரணமாக இருந்தார் என்றும் பல தமிழ்ப் பெண்கள் இந்திய இராணுவத்தால் ஈவிரக்கமில்லாமல் கற்பழிக்கப்பட எழுவாயாக இருந்தவர் என்பதனால் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம்தான் முன்னாள் பிரதமரான ராஜீவை திட்டமிட்டு கொலை செய்து பழி தீர்த்துக் கொண்டனர் என்று இந்தியத்தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது,

அந்த கொலை சம்பந்தமாக ஈழ்த்தமிழர்கள் உட்பட பலர்மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.  ராஜீவை கொலைசெய்தவர்கள் என சந்தேகப்பட்டவர்கள்  உட்பட குற்றஞ்சாட்டப்பட்ட பலர் இன்று உயிருடன் இல்லை.

ஆரம்பத்திலிருந்து இந்த வழக்கை விசாரித்த உயர் அதிகாரிகள் உட்பட  வழக்கை விசாரித்த நீதிமன்றங்கள் வரை நடைபெற்ற  விசாரணைகள் அனைத்திலும் அரசியல் தலையீடு ஒருதலைப்பட்ஷமாக  இருப்பதாக பல மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்திருக்கின்றனர், அத்தகய நடைமுறைக்கு  பலதரப்பிலிருந்தும் மனித உரிமை கழகங்கள் மற்றும் மனிதாபிமான மனித உரிமை ஆர்வலர்களிடமிருந்து  பெருத்த எதிர்ப்பும் கண்டனங்களும் அவ்வப்போது  உண்டாகி பெருத்த வாதப்பிரவாதங்கள் பல்வேறுபட்ட தளங்களில் உருவாகி பல சந்தேகங்களை கிளப்பியிருந்தது,
அது சம்பந்தமாக பல இடங்களில் பல முறை பல பொதுநல வழக்குக்கள் பதிவாகியும் இருந்தன.

அதிர்ச்சி கரமான தகவலாக ஆரம்பத்தில் வழக்கை விசாரித்த அதிகாரிகள் பலர் அந்த கொலை வழக்கு விசாரணை நீதியாக நடைபெறவில்லையென்றும் உயர் மட்டங்களால் தாம் நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும்  சமீப காலங்களில் பகிரங்கமாக வாக்குமூலம்  கொடுத்திருந்தனர், சிலர் தமது எதிர்ப்புக்களை பகிரங்கப்படுத்தி புத்தகமாகவும் வெளியிட்டுள்ளனர்.

அரசியல் தலையீட்டை அவ்வளவு இலகுவாக புறந்தள்ளி  நடுநிலையான தர்ம நீதிக்கு உட்பட்டு வழக்கை முடிவுக்கு கொண்டுவர மனித உரிமை ஆர்வலர்களால் முடியாமல் போனது.

ஒரு கட்டத்தில் செங்கொடி என்ற மான தமிழச்சி வீரமங்கை அரசியற் தலையீட்டு அராஜகத்திற்கு எதிராக குரல் கொடுத்து வெறுப்படைந்து தீக்குளித்து தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்டார்,

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் ராஜீவ் கொலையில் குற்றவாளிகளாக உருவகப்படுத்தப்பட்டு மரண தண்னைக் கைதிகளாக இருபத்து மூன்று வருடங்கள் சிறையில் கழித்திருக்கின்றனர்.  அந்த மூவர் தவிர முருகனின் மனைவி நளினி,  ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன், ஆகியோரும் ஆயுட் கைதிகளாக இந்த இருபத்து மூன்று ஆண்டுகளை சிறையில் கழித்திருக்கின்றனர்.

இந்த நிலையில் 18.2.2014 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது மரண தண்டனையை ஆயுட் தண்டனையாக குறைத்து தீர்ப்பு வழங்கியது.

ராஜிவ் கொலை குறித்த வழக்கு, பூந்தமல்லி தடா நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

தடா நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.  அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், நளினி,   முருகன்  சாந்தன், பேரறிவாளன்  ஆகிய நான்கு பேரின் தூக்கு தண்டனையை உறுதி செய்தும்  ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன், ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும்,  மீதமுள்ள 19 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தது.

அந்தத் தீர்ப்பை எதிர்த்து, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களும் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தனர். மறு ஆய்வு மனுவினை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்து 8.10.1999 அன்று தீர்ப்பளித்தது.

அதனைத் தொடர்ந்து, மேற்கண்ட தூக்கு தண்டனை கைதிகள் தமிழக ஆளுநர் அவர்களுக்கு 17.10.1999 அன்று கருணை மனுக்களை சமர்ப்பித்தார்கள்.  அந்த கருணை மனுக்கள்  அரசியற் தலையீடு காரணமாக 27.10.1999 அன்று தமிழக ஆளுநரால் நிராகரிக்கப்பட்டன.

தமிழக ஆளுனரின் ஆணையினை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை கைதிகளால் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இவற்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரர்கள் தொடுத்த வழக்குகளை ஏற்று,  “கருணை மனுக்களை நிராகரித்த ஆளுநரின் ஆணையை தள்ளுபடி செய்ததோடு” , அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்று புதிய ஆணை பிறப்பிக்குமாறு ஆளுனருக்கு 25.11.1999 அன்று உத்தரவு பிறப்பித்தது.

இதற்கிடையில் ஏதோ அரசியற் காரணங்களை கருத்தில்க் கொண்டு ராஜீவின் மனைவி சோனியா நளினிக்கு தூக்கு தண்டனையிலிருந்து விதிவிலக்கு அளிக்குமாறு கேட்டிருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி, அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி தலைமையில் 19.4.2000 அன்று நடைபெற்ற அமைச்சரவை க் கூட்டத்தில்  தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நான்கு கைதிகளில் ஒருவரான நளினிக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதை கருத்தில் கொண்டு சோனியா கருணை காட்டும்படி கூறியதால் நளினி ஒருவருக்கு மட்டும் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும், 

மற்றவர்களைப் பொறுத்த வரையில் நீதிமன்றத்தின் முடிவை பின்பற்றி அவர்களது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்க கருணாநிதியின் அமைச்சரவை முடிவெடுத்தது.  

கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவிற்கு  அப்போதய தமிழக ஆளுநர் 21.4.2000 அன்று ஒப்புதல் அளித்தார். அதன்படி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை முடிவினால் அதிர்ச்சியடைந்த சாந்தன், முருகன் பேரறிவாளன் ஆகிய மூவரும் இந்திய ஜனாதிபதிக்கு கருணை மனுக்களை அனுப்பி வைத்தனர்.

கருணை மனுக்களை 28.4.20 00 நாளிட்ட கடிதத்தின் வாயிலாக தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. 28.4.2000 அன்று தமிழக அரசால் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் மீது 11 ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

12.8.2011 நாளிட்ட கடிதத்தின் மூலம், இந்திய ஜனாதிபதி அந்த கருணை மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்த மத்திய உள் துறை அமைச்சகம், இந்தத் தகவலை மேற்கண்ட கைதிகளுக்கு தெரியப்படுத்துமாறு தமிழக அரசை கேட்டுக் கொண்டதுடன். மூவருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் முன்னேற்பாட்டு வேலைகளையும் திரை மறைவில் தயாராகியது.  உள்த்துறை அமைச்சின் தூக்கு தண்டனை நிறைவேற்ற இருக்கும் தகவல்கள் சம்பந்தப்பட்ட கைதிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், பேரறிவாளன், சாந்தன் முருகன் ஆகிய மூன்று பேரையும் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தின.

செங்கொடி என்ற வீர மங்கை மத்திய அரசின் அதிர்ச்சியான முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து உயிர் நீத்தார்.

மேற்படி மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க முடியாது என்று தனது தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி  இவர்களை காப்பாற்ற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்திரிகைகளுக்கு பேட்டியளித்து அரசியல் செய்து வழமையான குத்துக்கரணத்தை அடித்தார்.

தமிழ்நாடு மக்களும் பல அமைப்புக்களும் மரணதண்டனை நிறைவேற்றக்கூடாது என்று பெரும் போராட்டத்தில் ஈடுபட்டன அதன் பின்னணியில் சாந்தன்  முருகன்  பேரறிவாளன்   ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தினை  முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கொண்டுவந்தார்,  

ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தீர்மானத்தின்மீது இரண்டரை ஆண்டுகளாக மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையால் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட  தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் வரை, அதாவது மார்ச் 2013 வரை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் தி.மு.க. அங்கம் வகித்தது.

காங்கிரஸ் ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கமாட்டார்கள் என்று தெரிந்த சாந்தன்,   பேரறிவாளன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

மனுக்களில், தங்களுடைய கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க 11 ஆண்டு காலதாமதம் ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டும், கடந்த 23 ஆண்டுகளாக சிறையில் இருப்பதைக் கருத்தில் கொண்டும். தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர். பின்னர் இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டன.

இது குறித்த விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற போது , இவர்களின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கூடாது என்று மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் சார்பில் ஆஜரான மத்திய தலைமை வழக்குரைஞர் எடுத்துரைத்தார்.

மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம்,  மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களுடைய தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 18.2.2014 அன்று தீர்ப்பளித்ததோடு, ஆயுள் தண்டனை என்பது வாழ்நாள் முழுவதும் சிறைவாசம் என்றும் எனினும் குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 432 மற்றும் 433 ஹ ன்படி, அரசு எடுக்கும் தண்டனை மாற்றுதல் அல்லது தள்ளுபடி செய்தல் நடவடிக்கைக்கு உட்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.  

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வெளிவந்தவுடன்,  அதுகுறித்து  9.2.2014, காலை முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.  அந்தக் கூட்ட த்தில் சாந்தன்,  முருகன் பேரறிவாளன் ஆகியோர் 23 ஆண்டுகளாக சிறைச்சாலையில் இருந்து வருவதைக் கருத்தில் கொண்டு, குற்ற விசாரணை முறைச் சட்டம் 432-ல் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், அவர்களை உடனடியாக விடுதலை செய்யலாம் என தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.

அத்துடன் ஆயுள் கைதியாக 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும்   நளினி , ராபர்ட் பயஸ், ஜெயகுமார்   ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்யலாம் என்று தமிழ்நாடு அரசில் முடிவு எடுக்கப்பட்டது.

இந்த வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பினால் (CBI) புலனாய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தடா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டதால், குற்ற விசாரணை முறைச் சட்டம் 435-ன்படி, தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவு குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என்ற சம்பிரதாயம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

எனவே மத்திய அரசின் கருத்தினைப் பெறும் வகையில்,   சாந்தன்,  முருகன், பேரறிவாளன் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்ற தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார்.

மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், இந்திய அரசமைப்புச் சட்டம் 432-ல் மாநில அரசுக்கு அளிக்கப் பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி சாந்தன், முருகன், பேரறிவாளன்  நளினி , ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்படுவார்கள் என்ற மகிழ்ச்சி கரமான செய்தியை முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்திருக்கின்றார்.

சாந்தன் முருகன் பேரறிவாளன் ஆகியோர் சந்தற்ப வசமாக ராஜீவ் கொலையில் சிக்கிய பலியாடுகள் என்று விமர்சனங்கள் வந்தாலும் காலச்சக்கர சுழற்சியில் தர்மம் வென்றிருக்கிறது.

நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து தனது அதிகார செல்வாக்கை பயன்படுத்தி  தண்டனை கைதிகளை விடுதலை செய்ய முயன்றிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையாரை மிகுந்த நன்றி உணர்வுடன் தமிழ்ச்சாதி சிரம் தாழ்த்தி வணங்குகிறது,

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே,
இருட்டினில் நீதி மறையட்டுமே,
தன்னாலே வெளிவரும் தயங்காதே,
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே,
என்ற  கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பாடலின் தத்துவம் இங்கே நிஜமாகியிருக்கிறது.
ஈழதேசம் செய்திகளுக்காக.

கனகதரன்.

Monday, February 3, 2014

2014, மார்ச் ஜெனீவா அமர்வில் தமிழர் தேசியக்கூட்டமைப்பின் நிலைப்பாடு எப்படிப்பட்டதாக இருக்கும்?‏


http://eeladhesam.com/images/eelam/kaddurai/2013/un%20tna.jpgநடப்பு ஆண்டு,  அதாவது 2014 மார்ச் முற்பகுதியளவில் ஜெனீவா மனித உரிமைகள் ஆணையத்தின் 25 வது கூட்டத்தொடர் ஆரம்பிக்க இருக்கிறது.
2012, மற்றும் 2013, ம் ஆண்டுகளில் சம்பிரதாயத்துக்காகவேனும் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டுவந்த தீர்மானங்களை விடவும் இம்முறை இலங்கைக்கு எதிரான நிலைப்பாடு ஜெனீவாவில் சற்று அதிகமாகவே காணப்படும் என்பதாகவே நம்பப்படுகிறது .

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின்படி குறிப்பிட்ட வேலைத்திட்டங்கள் உறுதி இறுதி செய்யும் பெறுபேறுகள் இன்னும் இலங்கை ஆட்சியாளர்களிடமிருந்து  நிறைவு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது,  எனவே இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளும் இணைந்து அமெரிக்க தீர்மானத்தை தாண்டி வேறு நிலைக்கு செல்வதற்கு முயற்சிக்கலாம்.

மனித உரிமை ஆணையாளர் திருமதி நவநீதம்பிள்ளை அவர்கள் சென்ற ஆண்டு இலங்கைக்கு சென்று நிலவரங்களை நேரில் விசாரித்து ஆராய்ந்து  திரும்பியபின், இலங்கை அரசுக்கு எதிராக எழுப்பியிருந்த கேள்விகள் பற்றிய ஆராய்வு ஒன்று நிச்சியம் ஜெனீவா விவாதத்தின்போது எடுத்துக்கொள்ளப்படும்,  அல்லது இணைத்துக்கொள்ளப்படும் என்பது இலங்கை அரசும் அறிந்து மாற்றீடுகளுடன் தயாராக இருப்பதாகவே கணிக்க முடிகிறது,

ஜெனீவா நெருக்கடிகளை கட்டுக்குள் கொண்டுவரும் முன்னோட்டமாக மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வில் ஶ்ரீலங்காவின் மனித உரிமைகள் முன்னேற்றம் தொடர்பிலான அறிக்கையை ஶ்ரீலங்கா சமர்ப்பிக்கவுள்ளதாகவும்  அந்த மீளாய்வு அறிக்கையின் தயாரிப்புப் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் இலங்கையின் வெளிவிகார அமைச்சின் செயலாளரான கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார்.

நவிபிள்ளை குறிப்பிட்ட சில விடயங்களில் அனேகமானவற்றை தாம் ஏற்கனவே பூரணப்படுத்தி விட்டோம் அவற்றில் சில நடைமுறைப்படுத்த முடியாதவை என்றும் ஶ்ரீலங்கா தெரிவித்திருக்கிறது.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் சென்ற ஆண்டு இலங்கைக்குச் சென்று திரும்பியபின் தனது அதிருப்தியை தெரிவித்து இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்,  மற்றும் மனித படுகொலைகள் இன்னபிற குற்றச்செயல்கள் பற்றிய விசாரணைகளை உடனடியாக விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்றும்,  ஜெனிவா அமர்வுக்கு முன்னதாக (மூன்று மாத அவகாசத்துக்குமுன்)   முன்னர் அவை நடத்தப்படவில்லையென்றால் சர்வ தேச விசாரணைக்கு அழுத்தங்கொடுக்கப் போவதாகவும்  சற்று கடுமையாக கூறியிருந்தார்.

அவை தவிர கனடா போன்ற நாடுகளின் அதிருப்தியும் இந்த மனித உரிமை அமர்வில் தாக்கத்தை உண்டுபண்ணும் என்பது சந்தேகம்மில்லை.

ஆழமான தமிழ்த் தேசிய உணர்வுடன் ஈழ அரசியலின் அடுத்த கட்ட நகர்வை கூர்ந்து நோக்குபவர்களுக்கு வரவிருக்கும் ஜேனீவா அமர்வு ஒரு ஆர்வத்தை தூண்டினாலும்,   தாயகத்தில் பொறுப்புக்களில் இருக்கும் தமிழ் அரசியற் தலைவர்களுக்கு வரவிருக்கும் ஜெனீவா அமர்வு பெருத்த  பலப்பரீட்சையுடன் கூடிய நெருக்கடி கொடுக்கவல்லதாகவே அமையவிருக்கிறது.

ஶ்ரீலங்கா ஆட்சியாளர்கள் ஜெனீவா மன்றத்தில்  தமது தரப்பு வாதப் பிரதிவாதங்களை தலையைக் கொடுத்தேனும் நியாயப்படுத்துவதற்கு தயாராகவே தயாரிப்பு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருப்பதும் பல வழிகளில் புரிந்து கொள்ளக்கூடியதாகவும் இருக்கிறது.

ஶ்ரீலங்கா அரச தரப்பு இந்திய,  சீன, ஜப்பான் நாடுகளின்  அறிவுறுத்தலுடன் நாட்டின் அபிவிருத்தியை முன்னிலைப்படுத்துவதுபோல ஒரு தோற்றப்பாட்டை சர்வதேச அரங்குக்கு கொண்டு சென்று நீண்ட கால அவகாசத்தை பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் இறங்கியிருக்கின்றனர் ஜப்பான், இந்தியா, சீனா போன்ற நாடுகள்  ஜெனீவாவில் ஶ்ரீலங்காவுக்கு உதவுவதற்கு தயாராக இருப்பதாக தெரிகிறது.

அமெரிக்கா கொண்டு வரவுள்ள பிரேரணையின் தாக்கத்தை குறைக்கும் வகையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்க, அமெரிக்காவில் அதுபற்றி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார் அப்பேச்சுவார்த்தைகளின்போது வடக்கு மாகாணசபை நிறுவப்பட்டது தமிழர்களுக்கான பெருத்த அரசியற் திருப்பமாக காட்டிக்கொள்ளப்படவிருக்கிறது.

கால அவகாசம் என்பது ஶ்ரீலங்கா ஆட்சியாளர்கள் தொடர்ந்து பாவித்து வரும் ஒரு தந்தரத் திட்டம் என்ற குற்றச்சாட்டு சர்வதேச மன்னிப்பு சபையால் ஏற்கெனவே சுட்டிக்காட்டி கண்டிக்கப்பட்டிருக்கிறது.

இருந்தும் ஶ்ரீலங்கா தரப்பு வடக்கு மக்களுக்கான ஆட்சி அதிகாரம் வழங்கியதை முன்னிலைப்படுத்தி ஜெனீவாவில் தப்பிக்க முயற்சிக்கும் என்பதில் வேறுபட்ட கருத்து இருக்க முடியாது.  அதன் தொடர்பான அபிவிருத்தி,  அவைகளுக்கு தேவையான கால அவகாசம் என்ற மாயையை முன்னிறுத்தி சர்வதேசத்துடன் ஜெனீவாவில்  மல்லுக்கட்டுவது என்ற முடிவில் மாற்றமில்லாமல் இருப்பது அனைத்து அசைவாக்கங்கள் மூலமும் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

அரச தரப்பின் அந்த நியாயப்படுத்தலை சர்வதேசம் உடனடியாக இலகுவாக ஏற்றுக்கொள்ளாது என்பதும் இலங்கை ஆட்சியாளர்களுக்கு தெரியாததுமல்ல.

அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின்படி ஶ்ரீலங்கா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு" (LLRC,)  தனது வேலைத்திட்டத்தை 2014ல் ஓரளவாவது நிறைவு செய்திருக்கவேண்டும்..  ஆகக் குறைந்த பட்ஷம் LLRC  யின் நகர்வு பொதுவாக ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் அவ் வேலைத்திட்டம் தொடங்கப்பட்டாவது இருக்கவேண்டும்.

வடக்கு மாகாணத்துக்கு தேர்தல் ஒன்று நடத்தப்பட்டது தவிர சொல்லிக்கொள்ளும்படி வேறு எதுவும் நடைபெறவில்லை.

தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்,  மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரன்,  ஆகியோரின் அனுசரணை ஜெனீவா அரங்கத்தில்  ஶ்ரீலங்காவை காப்பாற்றும் என்று நம்பப்படுகிறது.   அரசாங்கத்துடன் ஒத்துப்போவதுபோன்ற வெளிப்படுத்தல்  இணக்கப்பாட்டுடனான கருத்தொற்றுமை,   தொடரும் வேலைத்திட்டங்கள் திருப்தியளிப்பதுபோன்ற வழிமொழிதல் மூலம் இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் செல்வாக்கையும் பின் தள்ளி சர்வதேசத்தால் புறந்தள்ள முடியாத தரப்பினராக தமிழர் தேசியக்கூட்டமைப்பு ராஜபக்‌ஷவுக்கு உதவும் நிலையில் இருப்பது  சமீப அரசியல் அசைவுகளிலிருந்து எவரும் புரிந்து கொள்ள முடியும்.

ஜெனீவா அமர்வு அண்மிக்கப்போகும் காலகட்டத்தை கருத்தில்க்கொண்டு வடக்கு மாகான முதல்வர் விக்னேஸ்வரன் மற்றும் சம்பந்தன் ஆகியோரின் செவ்விகள், கருத்து மற்றும் நடவடிக்கைகள் சந்தேகத்துக்கு இடமாகவே இருந்து வருகிறது.

ஈழத்தில் இடம்பெற்ற யுத்தத்தின்போது  மக்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் "இன அழிப்பு என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம்"  எனவும் இனவழிப்புக்கு ஒப்பானது என்றோ,  அல்லது தக்கதான வேறு பதத்தை பாவிக்குமாறும் வட மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்ட இனவழிப்பை சர்வதேச விசாரணைகள் மூலம் அனைத்துலக சமூகத்திற்கும் வெளிப்படுத்த முன்வரவேண்டும் எனற பிரேரணையை மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்வைத்து இருந்தார்.

அப்போது இடை மறித்த விக்கினேஸ்வரன்,  இனவழிப்பு என்ற சொல்லை பாவிக்காமல் இனவழிப்புக்கு ஒப்பான வேறொரு பதத்தை பாவியுங்கள் இனவழிப்பு என்ற சொல்லினை பாவிக்கும் போது சில சட்டசிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னரே இங்கு நடைபெற்றது இனவழிப்பு என கூறமுடியும். அதுவரைக்கும் இங்கு நடைபெற்றது இனவழிப்புக்கு ஒப்பானது என்ற சொல்லினை பாவிப்பதே நன்று என விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார். எனவே  ஶ்ரீலங்கா அரசுக்கு ஆதரவான விக்கினேஸ்வரனின் கருத்து ஜெனீவாவின் விவாதங்களின்போது அறிக்கை வடிவத்தில் ஶ்ரீலங்கா ஜனாதிபதி ராஜபக்‌ஷ்வுக்கு பெருத்த உதவியாக அமையக்கூடும்.

வடக்கு மாகாண தேர்தலில் வாக்கு வேட்டையில் ஈடுபடும்போது இனப்படுகொலையை சர்வதேசத்துக்கு கொண்டு சென்று நியாயம் பெறுவோம் என்று வாக்குறுதி அளித்து போட்டியிட்டு வென்ற விக்கினேஸ்வரன் இன்று சக சபை உறுப்பினர்களுக்கு இப்படியொரு கோரிக்கையை முன் வைக்கிறார் என்றால் வரவிருக்கும் ஜெனீவா அமர்வும் அதன் பின்னணியில் ராஜபக்‌ஷ மற்றும் இந்தியா இருக்கிறது என்பதே அர்த்தமாகும்.

விசாரணைகளின் பின்னரே நடைபெற்றது இன அழிப்பு என்று கூறமுடியும் அதுவரைக்கும் இன அழிப்பு என்று கூறக்கூடாது என்று ராஜபக்‌ஷவின் நட்புச்சக்தியான  மூன்றாம் தரப்பினர் ஒருவர் வேண்டுமானால் கோரிக்கை வைக்க முடியும், 

அனைத்தையும் நேரில் பார்த்த தமிழினத்தில் பிறந்து நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டிய "வாதி"யாக  முன்னணியில் நிற்கவேண்டிய  வடக்கு மாகாண முதலமைச்சர் எதிரிக்கு சாதகமாக வழக்காடு மன்றத்தில் முறைப்பாடு செய்ய முயலுவது தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயத்தை குழி தோண்டி புதைப்பதற்கு சரியானது என்றே ஈழ ஆதரவாளர்கள் அச்சப்படுகின்றனர்.

ஈழ போரின் இறுதியில் முள்ளிவாய்க்கால் முட்டுக்குள் வைத்து குழந்தைகள் தாய்மார்கள்,  வயோதிபர்கள், போராளிகள்,  போராளிப் பெண்கள் என்று சகட்டு மேனிக்கு இலட்சக்கணக்கில் கொன்று குவித்தது இலங்கை இராணுவம், அவற்றை சர்வதேசமே ஏற்றுக்கொண்டிருக்கிறது.

அது இனப்படுகொலைகளா, மனிதப்படுகொலைகளா, போர்க்குற்றமா என்பதை வெளியிலிருந்து  (சர்வதேச) விசாரணை நடத்துபவர்கள் விசாரணைகளின்பின் முடிவுக்கு வரலாம் ஆனால் ஒவ்வொரு தமிழனுக்கும் அது இனப்படுகொலையா, தற்செயலான விபத்தா, மரபுசார்ந்த போர் மரணங்களா என்பது பகுத்து உணரமுடியாததல்ல.

வயது வேறுபாடின்றி பெண்களை கற்பழித்து,  இறந்த உடலங்களையும் இன வன்ம வெறியில் புணர்ந்தது தனது வெறியை தீர்த்துக்கொண்டதாக குற்றச்சாட்டுக்களும் ஶ்ரீலங்காவின் பாஷிச இராணுவத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கிறது,  சரணடைந்த நிராயுதபாணிகளை கை கால்களை கட்டி வெட்டவெளியில் இராணுவம் சுட்டுக்கொல்லுகிறது, ஊடகவியலாளரான இசைப்பிரியாவை சீரழித்து கொன்று வீசியிருக்கிறது. தேசியத்தலைவரின் மகனாகப்பிறந்ததனால் பாலச்சந்திரன் என்ற குழந்தை பலிகொடுக்கப்பட்டிருக்கிறது.

விக்கினேஸ்வரனின் சட்டம் இவற்றுக்கு என்ன பதில் சொல்லப்போகிறது என்று,   இழப்பை அறுவடை செய்த ஈழ மக்களின் கோபம் நாளை விசுவரூபம் எடுக்கலாம்..

தமிழ் இனத்தின்மேல்  திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த அழிப்பு  மூர்க்கத்தனமான இனப்படுகொலைதான் என்று பல்வேறு தரப்புக்களிடமிருந்து குற்றச்சாட்டுக்கள் குவிந்திருக்கின்றன.  அதற்கான அனைத்து சான்றுகளும் சாட்சியங்களும் மலைபோல் முன்னால் குவிந்திருக்கும்போது  சில வெளிநாட்டு சக்திகளையும் ஶ்ரீலங்கா ஜனாதிபதியையும் பாதுகாத்து தமிழினத்தை காட்டிக்கொடுக்கும் வண்ணம் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் நடந்து கொண்டால் இங்கிலாந்து கனடா போன்ற நாடுகள் எடுக்கவிருக்கும் இனப்படுகொலைக்கு எதிரான முயற்சியும் அடிபட்டுப்போகும் அபாயம் எவராலும் தவிர்க்க முடியாமல் போகலாம்.

ஶ்ரீலங்காவில் நடைபெற்றது genocide  தான் என்ற உலகறிந்த உண்மையை நியாய மன்றத்தில் வெளிப்படையாக விசாரணைக்கு வைக்கும்போது எங்கு சட்டச் சிக்கல் வருகிறதென்பதை சிங்கள கைக்கூலியான விக்னேசுவரன் போன்றவர்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும். 

தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இந்தியாவிலிருந்து வெளிவரும் இந்து நாளிதளுக்கு அளித்த செவ்வியும் ஜெனீவா அரங்கில் ராஜபக்‌ஷவை சர்வதேச விசாரணை வளயத்துள் விழவிடாமல் தப்புவிக்கும் கருத்தடங்கிய செவ்வியை வழங்கியிருந்தார்.

சம்பந்தரின் செவ்வி அதிர்ச்சியளிக்கும் விதமாக விடுதலை போராளிகளையும் இயக்கத்தையும் பயங்கரவாத இயக்கம் என்பதுபோல் விமர்சித்து இந்தியாவையும் ஶ்ரீலங்காவையும் மகிழ்ச்சிப்படுத்தியிருந்தார்.

சம்பந்தரின் துள்ளல் விரால் இல்லாத குளத்தில் குறவை துள்ளி விளையாடியதுபோல் நாளை கணிக்கப்படலாம்.

ஈழதேசம் செய்திகளுக்காக.

கனகதரன்.