Saturday, September 28, 2013


 

ஈழத்தமிழர்கள்மீது இலங்கை அரசு நடத்தி முடித்த மோசமான மனித உரிமை மீறல்,  கற்பழிப்பு,  இனப்படுகொலை,  உள்ளிட்ட  அனர்த்தத்துக்கான நீதி மற்றும் அரசியல் தீர்வு சம்பந்தமான விவகாரங்களை  ஶ்ரீலங்காவின் உள்நாட்டு சட்டத்துக்கமைய ஶ்ரீலங்காவுக்குள்ளேயே தீர்வுகாணவேண்டுமென்று இந்தியாவின் ஆலோசனைக்கேற்ப ஐநா, 
உட்பட பல உலகநாடுகள் இலங்கைக்கு சார்பாக ஒருதலைப்பட்ஷமாக பிரச்சாரம் செய்து வருகின்றன.  ஜெனீவா மனித உரிமை அமர்வுகளின்போது வரையப்பட்ட அமெரிக்காவின் தீர்மானமும் அதை ஓரளவு வலியுறுத்தியிருக்கிறது. அது சரியான அணுகுமுறைதானா,  அல்லது பிழையான முன்னுதாரணமா எனற தெளிவு தமிழ் அரசியல்வாதிகள் உட்பட இன்னும் பலருக்கு புரியப்படவில்லை.

ஐநா,வையும் அமெரிக்காவையும் இராசதந்திர ரீதியாக எதிர்கொள்ளக்கூடிய தலைமத்துவம் இல்லாத பலவீனம் உள்ளதால், ஶ்ரீலங்காவுடன் முரண்பட்டு நிற்பவர்கள் தமது கொள்கை சார்ந்த கருத்தை சர்வதேச மட்டத்தில் வலிமையானதாக்க முடியாதவர்களாக இந்தியா மற்றும் உலகநாடுகளின் தவறான வழிகாட்டுதலில் தொங்கி பயணப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். இருந்தும் சர்வதேச மனித உரிமை ஆணையம் மட்டும் சற்று வித்தியாசமான பார்வையுடன் நியாயமான கருத்துக்களை தெரிவித்து வருகிறது.

இந்தியா உட்பட பல உலகநாடுகளின் பிழையான வழிகாட்டுதல் ஶ்ரீலங்கா ஆட்சியாளர்களை மிக மோசமான சர்வாதிகார போக்கை நோக்கிப்  பயணப்பட வைத்திருக்கிறது. நடத்தி முடிக்கப்பட்ட அனைத்து அநீதிக்கும் குறைந்தபட்ஷ நீதி சார்ந்து முகங்கொடுக்காவிட்டாலும்,  வருங்காலங்களில் தமிழர்களுக்கான அடிப்படை உரிமைகளை சீர்செய்து மக்கள் மனங்களையும் உலக நாடுகளையும்  திருப்திப்படுத்தும் தன்மைகொண்ட இராசதந்திரத்தை பிரயோகிக்காமல் மீண்டும் மீண்டும் இனப்பகையை நீடிக்கும்வகையிலான தப்பின்மேல் தப்பை செய்து சர்வதேச சட்டத்தின் பொறியில் வீழக்கூடிய செயற்பாடுகளையே கூர்மையடையக்கூடிய செயற்பாடுகளை ஶ்ரீலங்கா கண்மூடித்தனமாக முன்னெடுத்து வருகிறது.

1987 ல் இந்தியாவால் ஒருதலைப்பட்சமாக திணிக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் தமிழர் நல்வாழ்வுக்கு ஒன்றும் இல்லையென்றாலும்,  இந்திய ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்ட 13, வது திருத்த சட்டமூலம் ஏதோ ஒன்றை பெற்றுத்தரும் என்று சிலரால் நம்பப்படுமளவுக்கு பேசப்பட்டு வந்தது. 13, வது திருத்த சட்டத்தில் குறிப்பிட்ட சரத்துக்களில் வடக்கு கிழக்கு மாகாண ஒன்றிணைப்பு, காணி அதிகாரம் மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் குறிப்பிட்டு சொல்லக்கூடியவைகளாக இருந்தன, அவை தவிர கல்வி நிர்வாகம்,  நீதி பரிபாலனங்களும் 13, வது திருத்த சட்டத்தினுள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக முன்னர்  கூறப்பட்டது.  இருந்தும் தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு முக்கியம் வாய்ந்ததாக கூறி மக்கள் மன்றத்தில் அரசியல் செய்துவந்தபோது

வடக்கு-கிழக்கு மாகாண இணைப்பானது சட்டவிரோதமான ஒன்றென  ராஜபக்‌ஷவின் கட்டுப்பாட்டிலுள்ள சிங்கள நீதிமன்றத்தின் மூலம் தமிழர்கழுக்கு எதிராக சர்வாதிகார தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கு மாகாணங்களை தனித்தனியாக பிரிக்குமாறு கோரி ஜே.வி.பி கட்சியினரால் சிங்கள அரசின் பின்னணியில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணையின் பின்னரே 16 October 2006.  வடக்கு கிழக்கு இணைப்பு சட்ட விரோதமானது என்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை- இந்திய  (சர்வதேச) ஒப்பந்தத்தின் அடிப்படையில் 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் 1987,ம் ஆண்டு ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தன.

2006,ம் ஆண்டு சிங்கள நீதிமன்றத்தின் மூலம் வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டபின் தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் ஒப்பந்தத்தில் மீதமுள்ள காணி பொலீஸ் அதிகாரங்களை முன் வைத்து பிரச்சாரம் செய்து வந்தனர். அந்த பிரச்சாரத்துக்கும் மரண அடி கொடுப்பதுபோன்ற தீர்ப்பொன்றை ராஜபக்‌ஷ தனது நீதிமன்றம் மூலம் 26, செப்டம்பர் 2013,  வியாழக்கிழமை,  தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது,  காணி அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திற்கு மாத்திரமே உரித்தானது என சிங்கள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இலங்கை அரசியலமைப்பின்படி  இந்தியா கொண்டுவந்த 13, ஆம் திருத்தச் சட்டத்தின் கூற்றுக்கமைய மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்கள் வழங்க முடியாது என, சிங்கள நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

இந்திய ஒப்பந்தப் பிரகாரம் மீதம் இருக்கும் பொலீஸ் அதிகாரத்தைப்பற்றி இனிமேல் தமிழ் அரசியல்வாதிகள் பேசுவார்களாக இருந்தால் அடுத்த தீர்ப்பாக பொலிஸ் அதிகாரத்துக்கு அடி விழும் என்பது தமிழ் அரசியல் விற்பன்னர்களுக்கு சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது.

இறுதியாக தமிழர் தரப்பு வாய் திறக்க முடியாதவாறு செய்யும் விதமாக தேர்தல் விஞ்ஞாபனம் சம்பந்தமாக தேச விரோத குற்றம் சாட்டி   தமிழ் தேசியக்கூட்டமைப்பு செயலாளர் மாவை சேனாதிராசா அவர்களுக்கு 02,ஒக்ரோபர் 2013 அன்று கோர்ட்டில் சமூகமளிக்கும்படி  சிங்கள உயர் நீதிமன்றம் கட்டளை அனுப்பியிருக்கிற்து.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டிருந்த வடக்கு மாகணசபை தேர்தல் விஞ்ஞாபனம் மூலம் இலங்கைக்குள் தனிநாட்டை உருவாக்க முயற்சிக்கப்பட்டுள்ளது என்றும்  தமிழ் மக்களுக்கு சுய தீர்மானங்களை எடுக்கும் மாகாண அரசு அவசியம் எனவும் "சுயநிர்ணய உரிமை தமிழ் மக்களுக்கு இருப்பதாகவும்"  கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது   இதன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு  தேசவிரோத முரண்பாடாக இலங்கைக்குள் தனிநாட்டை உருவாக்க முயற்சித்தது என  நீதிமன்றத்தில் சிங்கள அரசின் பின்னணியில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவை மட்டுமல்லாது இனி வரும் காலங்களில் ராஜபக்‌ஷ தவிர வேறு எவரும் இலங்கைக்குள் அரசியல் பேசாதிருக்க வேண்டுமென்று நீதிமன்றம் தீர்ப்பெழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆனால் இந்த சர்வாதிகாரப்போக்கே சர்வதேச பொறிக்குள் ராஜபக்‌ஷ அரசை கொண்டு சென்று சேர்க்கும் எழுவாயாக அமையும் வல்லமை கொண்டதாக எண்ணத்தொன்றுகிறது.
 

ஊர்க்குருவி.
ஈழதேசம் இணையம்

ஈழ மக்களுக்கான அரசியலை துணிச்சல் மிக்க கண்ணியமானவர்களும் காலமும்தான் தீர்மானிக்க முடியும்.‏

வடக்கு மாகாணத்துக்கான மாகாணசபைத் தேர்தலில்   அனைவரும் எதிர்பார்த்தவாறு  பெரும்பான்மை பலத்துடன் தமிழர் தேசியக்கூட்டமைப்பு வெற்றி பெற்றிருக்கிறது,  
தமிழர் தேசியக்கூட்டமைப்பு தலைமைப்பீடம் உத்தியோகபூர்வமாக சீவி விக்னேஸ்வரன் அவர்களை வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக அறிவித்திருக்கிறது.  சபை உறுப்பினர்களுக்கான பிரமாணம் இன்னும் செய்யப்படவில்லை, சபை இயங்குவதற்கான இடமும் இதுவரை திட்டமிடப்படவில்லை,  இருந்தாலும் முதலமைச்சராக விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்படுவார் என்பது முடிந்த முடிவாகியிருக்கிறது.

நடைபெற்ற இந்த அரசியல் நகர்த்தல் மேலோட்டமாக ஈழத் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் நிகழ்வாக தோற்றப்படுத்தபட்டாலும்,  ஈழ அரசியலின் பட்டுணர்வுத் தன்மையை மனதிற்க்கொண்டு  உணர்ச்சிவசப்பட்டு திருப்திப்படக்கூடிய முடிவான முடிவுக்கு எவரும் வந்துவிட முடியாது என்பது அனைவருக்கும் புரிந்த ஒன்று. 

சர்வதேசத்தையே ஏமாற்றும் தந்திரம் தெரிந்திருந்த ராஜபக்‌ஷவின் கைகளிலேயே அனைத்து அதிகாரங்களும் இருப்பதால் விக்னேஸ்வரன் சம்பந்தன் ஆகியோரின் சலசலப்பு எந்த அளவுக்கு ராஜபக்‌ஷவை மிரட்டும் என்பது பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஈழத் தமிழர் வரலாற்றில் இன்று நிகழ்ந்திருக்கும் வடக்கு மாகணசபை என்ற அரசியல் திருப்பம் இன்னும் ஒரு சில மாத, அல்லது வருட பயணப்பாட்டின் பிற்பாடான காலப்பகுதியில் அனைவரது வேஷமும் வெளுத்து மக்கள் மத்தியில் வெட்ட வெளிச்சமாகும் என்பது தவிர்க்கமுடியாமல் போனாலும்  மாகாணசபை நகர்ந்து செல்லும் ஏற்ற இறக்கங்களையும் மாகாண சபையின் பயணத்தின் பாதை மற்றும் தன்மையையும் பொறுத்து சபையின் விளைச்சல் எப்பேற்பட்ட பலனை தரும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்பதே பொருத்தமானதாக இருக்கும்.

ஆரம்பத்தில் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒரு தோற்றப்பாட்டையும்,  மக்களின் மனநிலை வேறொரு தளத்தை நோக்கிய சிந்தனையையும், விக்னேஸ்வரன்,  சம்பந்தன்,  போன்றோரின் அவ்வப்போதான சுய விருப்பான செவ்வி பேச்சுக்கள் வெவ்வேறு ஒரு மாறுபாடான போக்கையும் மக்கள் மத்தியில் ஒரு நிச்சியமற்ற தளம்பல் நிலையை தோற்றுவித்து வந்தது.  இருந்தும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அமோக வெற்றி பெறும் என்பது நிச்சியமாக அனைவராலும் உணரக்கூடியதாகவே இருந்தது.  இருந்த பொழுதும் தமிழர் தரப்பின் வெற்றியில் இரு வேறுபட்ட கருத்து எவரிடமும் இருக்கவில்லை. 

ஏனெனில் இது தமிழர்களுக்கான கன்னித்தேர்தல் என்பது ஒரு முக்கிய காரணமாக கொள்ள முடியும்.  உலக வரலாற்றில் கன்னித் தேர்தல்கள் என்றைக்கும் தோல்வியை தழுவியதில்லை.

தேர்தல் அண்மித்த காலங்களிலும் தேர்தல் முடிவுகள் கிடைத்தபின்னும் புலம்பெயர் தேசங்களிலிருக்கும் தேசியக்கூட்டமைப்பின் ஒரு சில பிரச்சார செய்தி ஊடகங்கள் தனித்தமிழ் ஈழத்தை சிங்களவனிடம் இருந்து பெற்றுவிட்ட உணர்ச்சிப்பெருக்குப்போல புளகாங்கிதத்துடன் செய்திகளையும் தொலைபேசி செவ்விகளையும் விளையாட்டு வர்ணனைபோல பறந்தடித்து வழங்கிக்கொண்டிருக்கின்றன,

இன்றைய கட்டத்தில் வடக்கு மாகாணசபைக்கான தேர்தலில் மக்கள் வாக்களிக்கும்வரை,    தமக்கான தேசிய அரசியல் உரிமைக்கமைய தேர்தல் ஒன்றில் வாக்களிப்பதற்கான உரிமையை பெற்றுக்கொள்ளவேண்டும்,  தமக்கான அடிப்படை தேசிய ஜனநாயகத்தை பெற்றுத்தரக்கூடிய ஒரு ஜனநாயக அரசியல்  வெளியை உலக அரங்கத்துக்கு எடுத்துச்சென்று,  உலக அங்கீகாரம் பெறுவதற்காக உருவாக்கப்பட்டு களமிறங்கியிருக்கும் தேசியக்கூட்டமைப்புக்கு முற்று முழுதான ஆதரவை கொடுத்து சிங்கள ஏகாதிபத்திய அரசுக்கு முழு எதிரான மக்கள் மனநிலையை உலக அரங்குக்கு காண்பிக்கவேண்டும்,  தமது ஒற்றுமையை எவ்வாறாவது வெளிக்காட்ட வேண்டும் என்ற உணர்வின் வெளிப்பாடே  வடக்கு மாகணசபை தேர்தலில் அதிக ஈடுபாட்டுடன் மக்களை ஒன்று திரள வைத்திருக்கிறது. இதில் சிங்களவனை எதிர்ப்பதற்கான மனநிலை மட்டுமே உணர்வு மயமாக வெளிப்பட்டிருக்கின்றது என்பதில் எவரும் ஐயம் கொள்ளவேண்டியதில்லை.

இத்தேர்தல் மூலம் மக்கள் கொடுத்த ஆதரவை மிக கவனமாக கையாண்டு சிங்கள அரசுடன் அடுத்த கட்டத்தை நோக்கி போராடவேண்டிய பொறுப்பை ஈழத் தமிழ் அரசியற் தலைமைகளுக்கு மக்கள் வழங்கியிருக்கின்றனர். தவிர மாகாணசபை ஒன்றின் ஊடாக ஒற்றை இலங்கைக்குள் சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கான உரிமையை பகிர்ந்து கொடுத்துவிடுவார்கள் என்பதற்கான எந்த நம்பிக்கையும் எந்த இடத்திலும் காணப்படவில்லை.  அதற்கான் கள நிலையை நிச்சியமாக மாகாணசபை நிவர்த்தி செய்யும் என்று ஒருபோதும் நம்பமுடியாது என்பதும் அனைவரும் புரிந்து அறிந்த உண்மையாகும்.

முதலமைச்சராக பதவியேற்கவிருக்கும் விக்னேஸ்வரன் அவர்கள் மிகச் சாதாரணமாக சொல்லுவதுபோல  (இலங்கையின்)  சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அனைத்தையும் இலங்கை அரசாங்கத்திடமிருந்து மாகாணசபை மூலம் மிக இலகுவாக பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியிருப்பது  நெருக்கடிகளை சந்தித்து சுதந்திரக்காற்றை சுவாசிக்க துடிக்கும் சாதாரணமான ஒரு ஈழத் தமிழனால் நம்பக்கூடியதாக இல்லை.   சட்டதிட்டங்களை மதித்து நடக்கும் நாடுகளுக்கும் வாக்குறுதிகளை காப்பாற்றக்கூடிய நெறியை பின்பற்றும் அரசுகளுக்கும் அந்த விதிமுறை பொருந்தக்கூடியதாக இருக்கும் என்பது மறுப்பதற்கில்லை. 

விக்கினேஸ்வரன் அவர்கள் நீதித்துறையின் உச்ச பதவியில் ஒரு சில வருட காலங்கள் பணியாற்றியவர் என்ற முறையில் சட்டத்தைப்பற்றி அவர் பேசும்போது இடை மறித்து நியாயம் கற்பிக்கும் தகுதி நமக்கில்லாவிட்டாலும்,  இலங்கையில் இதுவரை வாழ்ந்து வந்த சட்டம்,  நீதி நியாயம்,  என்னவிலைக்கு போகிறதென்பது நீதித்துறை போன்ற உயர் பதவியிலிருப்பவர்களை விடவும் கீழ் மட்டத்திலிருக்கும் பாமரனுக்கே அதிகம் அனுபவத்துடன் புரிதலுக்கு அவ்வப்போது கிடைத்திருக்கிறது.

கடந்த கால அனுபவங்கள் அந்தகைய நம்பிக்கையீனத்தைத்தான் மக்கள் முன் விதைத்து  பெருத்த அறுவடையாக முள்ளிவாய்க்கால்வரை இலவசமாக நாங்கள் பெற்றிருக்கின்றோம். அவை மட்டுமல்லாது சர்வதேச சட்டங்களின் விலையையும் ஐநா மன்றம்வரை நாம் பெற்றுக்கொண்ட அனுபவமும் உண்டு.

தமிழீழம் தான் இறுதியான முடிவு என்ற நிலைக்கு ஈழத்தமிழினம் இன்றைக்கு அல்ல தந்தை செல்வநாயகம் அவர்களின் காலத்திலேயே தள்ளப்பட்டுவிட்டது. அதற்கான காரணங்கள் ஒன்று இரண்டு, ஒன்பது அல்ல பல பல்லாயிரம் முறை விரிவாக அதுபற்றி விளக்கப்பட்டுமிருக்கிறது. தமிழீழம் வேண்டாமென்று ஒருவன் சொல்லுவானாக இருந்தால் அவன் ஒன்று ஶ்ரீலங்கா அரசாங்கத்தில் துணைப்படையின் உறுப்பினராக இருக்கவேண்டும் அல்லது சிங்கள ஆட்சியாளர்களின் கைக்கூலியாக இருக்க வேண்டும். அவைகளை தாண்டி ஒருவன் சொல்லுவானாக இருந்தால் அவன் சாதாரண சிங்களவனாக இல்லாமல் கடும்போக்கு கொண்ட  காடை சிங்களவனாக மட்டுமே இருக்க முடியும்.

ஈழத்தமிழர்களுக்கான எதிர்கால வாழ்க்கைக்கான அரசியல் ஒருபக்கமிருக்க,   ஈழத்தமிழர்கள் சந்தித்த மிகக்கடுமையான கடந்தகால வாழ்க்கை சம்பந்தமான மிக முக்கியம் வாய்ந்த (இனப்படுகொலை) அரசியல் ஒன்றும் இருப்பதை எவரும் மறந்துவிட முடியாது. சம்பந்தன் ஐயா அவர்களுக்கும் விக்கினேஸ்வரன் அவர்களுக்கும் ஈழத்தமிழர்கள் கடந்தகாலங்களில் அணுவணுவாக  அனுபவித்த வாழ்க்கை அனர்த்தங்களை கழித்துக்கொண்டு அரசியல் வங்குரோத்து நிலையில் மீண்டும் சிங்களவர்களுடன் சமரச அரசியலுக்குள் வீழ்ந்துவிட்டதாகவே ஐக்கிய இலங்கை தீர்வுத்திட்டம் என்ற கோசம் அச்சப்பட வைக்கிறது

இலங்கை அரசியல் சட்டதிட்டங்களுக்கமைய சட்டப்படி தமிழர்களுக்கான உரிமையை பெற்றெடுக்க இருப்பதாகவும்,  தமிழ் ஈழம் என்ற கோட்பாடு தமது கொள்கை இல்லை,  ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுய நிர்ணய சபை மூலம் தமிழர்களுக்கான உரிமையை வென்றெடுக்கலாம் என்று பகிரங்கமாக பிரகடனம் செய்திருப்பது 1970, களுக்கு முன்னைய அரசியல் அரிச்சுவடிக்கு அவர்கள் திரும்பியிருப்பதை உணர்த்துகிறது.  இருந்தும் காலம்தான் அனைத்தையும் தீர்மானிக்கும் வல்லமை கொண்டது என்பது அனைவரும் புரிந்து கொள்ளும் காலம் வரும்.  சில காலங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.
 

ஈழதேசம் செய்திகளுக்காக.

கனகதரன்.

Tuesday, September 3, 2013

செத்த தாய் முலை கொடுத்தாள்.

 
விண்முட்ட விஞ்ஞானம்
வினைத்திறனாய் ஆராய்ச்சி
கண் மாற்ற கால் மாற்ற
கலர் மாற்ற- தலை
மயிர்மாற்ற
கணக்கில்லா பெரு சிகிச்சை.
புல்லுக்கு வயதென்ன
பூண்டுக்கும் உயிர் உண்டோ
நத்தைக்கும் எறும்புக்கும்
சித்தங்கலங்காமல்
மெத்தப்படித்த பலர்
சுற்றி நின்று நடைப்பயிற்சி,
நில்லாமல் நெடு வழியும்
நீண்ட நேய மனம்.
நல்லோர் புதிய யுகம்
நாம் காண்போம் என்று குரல்.
நல்லாய்த்தான் இருந்தாலும்
நாங்கள் இதில் சேர்ப்பில்லை,
ஓசோனில் ஓட்டை
உலகெங்கும் மாநாடு
தென் துருவ பனி கரைய
திகைப்புடனே ஆய்ந்தறிவு
பல நூறு ஆண்டு -முன்
செத்த படு குழிக்கு
மெத்த நூதனமாய்
அகழ்வாய்வு ஒரு பக்கம்.
நல்லாய்த்தான் இருந்தாலும்
நாங்கள் இதில் சேர்ப்பில்லை,
பூவுக்கும் வேருக்கும்
நோகாமல் பிடுங்கி எழ
நூறுக்கும் மேலான
நிபுணர் குழு கூட்டம்.
காடழிக்கக்கூடாது.
கடலழியக்கூடாது.
காட்டு விலங்குகளும்
கவலை கொள்ளக்கூடாது.,
நல்லாய்த்தான் இருந்தாலும்
நாங்கள் இதில் சேர்ப்பில்லை,
போர் செய்யக்கூடாது
புகை கூட ஆகாது
மாடிக்குடியிருப்பில்
அமைதி கெடக்கூடாது.
கூவி குழந்தைகளை
குலைய வைக்க கூடாது
தாயும் குழந்தைகழும்
சங்கடம் கொள்ளாகாது,
ஐநா அறிக்கையது
அரசுகளின் கொள்கையது
நல்லாய்த்தான் இருந்தாலும்
நாங்கள் அதில் சேர்ப்பில்லை.
கொத்துக்குண்டுகளும்
கோர ரசாயனமும்
நித்தம் மனுவுடலை
நின்றழிக்கும் நஞ்சுகளும்
சித்தம் கலங்கிவிடும்
செயல் கொண்ட
அணு குண்டும்
எத்திக்கும் தடை செய்வோம்
எதிற்பவரை அழித்திடுவோம்,
வாய் பேச்சும் வரைவுகளும்
நல்லாய்த்தான் இருந்தாலும்
நாங்கள் இதில் சேர்ப்பில்லை,
வெட்டி வீழ்த்திய என்
விடலை மகன் தலை மீது-தேர்
சில் ஏற்றி சிதைத்த
சண்டாள சங்காரம்,
குட்டி பெற இருந்த
குஞ்சம்மா குடல் கிழிந்து
கக்கி கரு நசிந்து
ரத்தச்சகதியிலே தெருவோரம்
 
விட்டு விடை பெற்ற பெருந்துயரம்,
செத்த தாய் முலையில்
சிதறிய தலையுடனே -பசி
மெத்த எடுத்த பிஞ்சு
பால் குடித்த பரிதாபம்,
செத்து பலர் நாட்கள்
பதுங்கி இரு குழியில்
ரத்தம் மலம் சகதி -மொத்தம்
இருந்த நீர் குடித்து
பசி தீர்த்த அநியாயம்,
கொத்துக்கொத்தாக
குஞ்சு தாய் தகப்பன்
மொத்த பரம்பரையும்
செத்து கருகிய துயர வரலாறு,
எல்லாம் எம் தலையில்
எவரும் சேர்ப்பில்லை,
கவிதை, 2009 மே 19, ஒரு வருட வக்கிரத்தின் குமுறல்,
கனகாம்பிகை கதிர்காமன்