Sunday, April 27, 2014

காட்டுமிராண்டிகளின் கூடாரத்துள் கற்பழிக்கப்பட்ட நீதி. ஏழுபேரின் விடுதலை கனவாக தொடர்கிறது.ககனகதரன்.


முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ், 1991 ல் தமிழ்நாட்டில் வைத்து இனந்தெரியாத சிலரால் குண்டு வைத்து கொலை செய்யப்பட்டார். அது ஒரு திட்டமிட்ட கொலை என்றும், துன்பியல் நிகழ்வு என்றும் கவலையுடன் நினைவு கூரப்பட்டது.

1987ல் ராஜீவ் ஜெயவர்த்தன ஒப்பந்தத்தையடுத்து அமைதிப்படை என்ற பெயரில் தமிழீழத்தில் தரையிறக்கப்பட்ட  இராணுவம் கண்மூடித்தனமாக பல ஈழத்தமிழர்களை கொன்று குவித்தது,  பல பெண்களை பலாத்காரம்செய்து கற்பழித்து கொலைசெய்தது.  அதனால் ஈழத்து மக்கள் இந்தியாவின்மீதும் இந்திய இராணுவத்தின் மீதும் குறிப்பாக ராஜீவ் மீதும் கடும் கோபமடைந்தனர்.  விடுதலைப்புலிகள் இயக்கம் முடிந்தவரை தமிழர்களை காத்து காப்பரணாக நின்று இந்திய இராணுவத்தை எதிர்த்து போராடியது அது வரலாறு,

1990ல் இந்திய இராணுவம் மீட்டெடுக்கமுடியாத  கறையுடன் தோல்வியை தழுவி ஈழத்திலிருந்து வெளியேற்றப்பட்டது.

இந்திய இராணுவம் வெளியேற்றப்பட்டாலும்,  அப்போதய இந்திய பிரதமர் ராஜீவ்,  ஈழத்தமிழினத்தின் காவலர்களாக இருந்த விடுதலைப்புலிகளை அழிப்பதற்கான நாசகார அரசியலில் ஈடுபட்டார். அதனால் விடுதலைப்புலிகள் இந்தியாவில் வைத்து ராஜீவை 1991ல் படுகொலை செய்தனர் என்று காங்கிரஸ் காரர்களால் கூறப்படுகிறது.

அரசியற் செல்வாக்குள்ள பல பெருங் கைகள் ராஜீவ் கொலையில் பங்களித்ததாக அதிர்ச்சிகரமான தகவல்கள்,  முறைப்பாடுகளாகவும் புத்தகங்களாகவும்,  சாட்சியங்களாகவும்,  பல ஆவணங்கள் தொடர்ச்சியாக இன்றுவரை  வழி மொழிகின்றன.  இன்றையவரை ராஜீவ் கொலை எவரால் நிகழ்த்தப்பட்டது என்பதற்கு பூர்வாங்க விசாரணைகள் மூலம் அறுதிப்படுத்தப்பட்ட ஆதாரம் இல்லை.

ராஜீவ் கொலையில் முற்று முழுதான அரசியற் தலையீடு இருப்பதால்,  காங்கிரஸின் திட்டமிட்ட ஒருவழிப்பாதையால் வழக்கு கொண்டுசெல்லப்பட்டது. அதை நியாயப்படுத்துவதற்கு காங்கிரஸ் அரசின் உயர்மட்ட அதிகாரிகள் பெருமுயற்சியுடன் இன்றுவரை வேலைசெய்து வருகின்றனர்.

ராஜீவை கொல்லுவதற்கு நேரடியாக முயற்சித்தவர்கள் என்று கூறப்படும் தனு, மற்றும் ஒற்றைக்கண் சிவராசன் போன்றோர் அப்போதே மரணமாகிவிட்டனர். சந்தேக நபர்களான இன்னும் சிலர்  ஏற்கெனவே இறந்துவிட்டனர்.

சந்தேகம் என்ற பேயரில் கைது செய்யப்பட்டு சித்திரவதை மற்றும் அச்சுறுத்தி வாக்குமூலம் பெறப்பட்ட சிலரே இன்று உயிருடன் இருக்கின்றனர்.
ராஜீவ் கொல்லப்பட்ட வழக்கு முற்று முழுதாக அரசியல்க்கப்பட்டு 23 வருடங்களாக முடிவில்லாமல் இழுபறியில் இருந்து வருகிறது.

குற்றவாளிகள் என வாக்குமூலம் பெறப்பட்ட முருகன், மற்றும் சாந்தன், பேரறிவாளன், ஆகியோருக்கு  அரசியல்த் தலையீட்டின் பின்னணியில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.   மற்றும் தொடர்புடையவர்கள் என சித்தரிக்கப்பட்ட , முருகன் மனைவி நளினி, ரவிச்சந்திரன், றொபேர்ட் பயஸ், மற்றும் ஜெயக்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.   ஏழு பேரும், 1991 முதல், வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன்  மூவரும், ஜனாதிபதியிடம் கருணை காட்டும்படி கேட்டு மனுச்செய்திருந்தனர்.  அரசியற் தலையீட்டினால் கருணைமனு  பதினொரு வருடங்கள் கவனிப்பாரற்று உதாசீனப்படுத்தப்பட்டது.

ஆயுள்தண்டனை என்பதே பதினெட்டு,  இருபது வருடங்கள்தான் என்று சொல்லப்படுகிறது, ஆனால் கருணை கோரிக்கைகாரர்களால்  அனுப்பி வைக்கப்பட்ட கருணை மனு அரைவாசிக்கும் மேலான ஆயுட் தண்டனை காலம்வரை அரசியற் தலையீட்டினால் வனவாசம் செய்யப்பட்டது. கருணை மனுவுக்கு முந்திய காலம்வரை கணக்கிடும்போது ஒவ்வொருவரும் பூரணமான ஆயுட்கால தண்டனையை ஏற்கெனவே அனுபவித்து இந்திய சட்டத்தில் இடமில்லாதவாறு சட்டத்துக்கு புறம்பாக உதிரியான காலத்தில் சிறைக்குள் இருந்துவருகின்றனர்.

பதினொரு வருடங்கள் ஜனாதிபதி முடிவெடுக்க காலதாமதம் ஆனதால் தங்களை விடுவிக்க வேண்டும் என கைதிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2014 பிப்ரவரி 18ல், தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
ஆயுள்தண்டனை என்பதே பதின்எட்டு முதல் இருபது வருடகாலம்தான் என்பதால் கைதிகள் ஏற்கெனவே இருபத்து மூன்று ஆண்டுகளை சிறையில் தண்டனை அனுபவித்துவிட்டதால் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி  கைதிகளை ஆட்சி செய்யும் அரசு முடிவெடுக்கலாம் என்று அந்த தீர்ப்பு விதந்துரைத்தது. கைதிகளை நிர்வகிக்கும் பொறுப்பு தமிழக அரசே என்பதால் கைதிகள் பற்றிய முடிவை செய்யவேண்டிய தகுதி தமிழக அரசுக்கு இருப்பதாக உச்ச நீதிமன்ற சட்டவாளர்கள் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுகின்றனர்.

அந்த தீர்ப்பின் பிரகாரம் பிப்ரவரி 19ல்,  ஜெயலலிதா தலைமையில் கூடிய தமிழக சட்டசபை கூட்டத்தில், அந்த மூவரின் ஆயுள் தண்டனை மற்றும் அந்த வழக்கில் தொடர்புடைய நால்வரின் ஆயுள் தண்டனையையும் ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது குறித்து பதிலளிக்குமாறு, மத்திய அரசுக்கு, தமிழக சட்டசபை கடிதம் அனுப்பியது.

ஆனால், மத்தியில் ஆளும் சோனியா தலைமையினாலான காங்கிரஸ் அரசு இந்த விவகாரத்தை அரசியற் தலையீட்டிலிருந்து விடத் தயாராக இல்லை. காங்கிரசை சேர்ந்தவர்கள்  ராஜிவை கொன்ற கொலையாளிகளை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தது. அதில், மத்திய அரசு சட்டங்களின் படி தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு கிடையாது என விதண்டாவாதமாக வாதிக்கப்பட்டது.

இதையடுத்து  அரசியற் தலையீட்டை மீறமுடியாத உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பெப்ரவரி 20ல், தடை உத்தரவு பிறப்பித்து சுப்ரீம் கோர்ட்,  கைதிகள் ஏழு பேரையும் விடுவிக்க தடை விதித்தது.  அதை தமிழக அரசு எதிர்த்தது.  இந்த வழக்கில் நேற்று 25 ஏப் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.
நியாயப்படி கைதிகளுக்கு சாதகமாக சூழ்நிலை இருப்பதாகவே உச்சநிலையில் இருக்கும் சட்டம் தெரிந்தவர்களும் அவதானிகளும் கருத்து தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்ற நீதியரசர் சதாசிவமும் அப்படி ஒரு முடிவில் இருந்ததாகவே நம்பப்பட்டது.

இம்மாதம் 25ம் திகதிக்கு முன் தீர்ப்பு வெளியிடப்படும் என இருந்த நிலையில்,   இம்மாதம் ஓய்வுபெற இருக்கும் நீதிபதி சதாசிவம் தனது ஓய்வின் பின் லோக்பால் அமைப்பின் தலைவராகவோ, மாநில ஆளுனராகவோ ஆகவேண்டும் என்ற சுயநல பேரவாவை மனதில்க்கொண்டு முதலமைச்சர் ஜெயலலிதாவை மகிழ்விக்கும் நோக்குடன் கோவையில் நடந்த ஒரு விழாவின்போது ஏழுபேர்களின் தீர்ப்பு 25ம் திகதிக்குமுன் வெளிவரும் என்று ஆர்வக்கோளாறின் நிமித்தம் விழாவின்போது கூறியிருந்தார்.

அதிமுக தலைவி ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக்காலத்தில் தமிழ்க் கைதிகள் விடுவிக்கப்பட்டால் அதல பாதாளத்தில் வீழ்ச்சியில் இருக்கும் கருணாநிதி தனது கட்சியும் குடும்பமும் அரசியல் அனாதை ஆகிவிடுவோம் என்பதை அறிந்து தனது வழமையான தந்திரத்தை பாவித்து நச்சுத்தனமாக குத்திவிடும் வேலையை கருணாநிதி என்ற பதர் கீழ்க்கண்டவாறு செய்தது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையிலே உள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்று, தமிழகத்திலே உள்ள பல கட்சிகளும் நீண்ட நாட்களாகக் கோரிக்கை வைத்து வருவதும், அதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வந்தபோது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அவர்களை விடுவிக்க முடியும் என்ற கருத்தினை அறிவித்து -அதனையொட்டி தமிழக அரசும் சட்ட விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றாமல் அவசர அவசரமாக மேற்கொண்ட நடவடிக்கையில், அதற்கு மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் ஒப்புதல் தர வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருந்தார். மத்திய அரசு அதற்கு ஒப்புதல் வழங்காததோடு, தமிழக அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்திலேயே ஒரு மனுவினைத் தாக்கல் செய்து, அந்த வழக்கின் தீர்ப்பினைத் தான், நேற்றையதினம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள் வரும் 25ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று கோவையில் நடைபெற்ற ஒரு விழாவிலே வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்.

நீதி மன்றத்திலே அல்ல. சதாசிவம் அவர்கள் கோவையிலே நடைபெற்ற ஒரு விழாவில், “விரைவில் தீர்ப்பு வழங்கப்படும்’’ என்று தெரிவித்து, அந்தச் செய்தி எல்லா நாளேடுகளிலும் வெளி வந்துள்ளது.

வரும் 24ஆம் தேதியன்று நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில், நீதியரசர் சதாசிவம் அவர்கள் தான் ஓய்வு பெறவுள்ள இந்த நேரம் பார்த்து, 25ஆம் தேதிக்குள் ஒரு முக்கியமான வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று கூறியிருப்பது அரசியல் ரீதியான விளைவினை தமிழகத்திலே ஏற்படுத்துமோ என்ற ஐயம் பலருக்கும் எழுந்துள்ளதோடு, வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
முக்கியமான இந்த வழக்கின் தீர்ப்பு – நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு வரும் என்று, உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதியே ஒரு பொது விழாவிலே அறிவித்திருப்பது எத்தகைய சாதக பாதகங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதையும், அந்த அறிவிப்பு நீதிமன்ற மரபுகளுக்கு உகந்தது தானா என்பதையும் எண்ணிப் பார்த்து, அதற்கேற்ப முடிவு செய்வது நீதி மன்ற நெறிகளைக் காப்பாற்றப் பயன்படும் என்பதுடன் அனைவருக்கும் நலன் பயக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு நீதிபதி. அவர்தான் தீர்ப்புக் கூறவேண்டியவர் அவர்தான் சதாசிவம். சதாசிவத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியும்.

நான் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்க மாட்டேன்!!. சதாசிவம் எனக்கெல்லாம் தெரிந்த நண்பர்தான்?. அவர் ஒரு முக்கியமான இடையிலே விடுபட்டுப் போன – நடக்காது, என்ன ஆகுமோ தெரியாது என்ற அளவிற்கு தத்தளித்துக் கொண்டிருக்கின்ற ஒரு தீர்ப்பைப் பற்றி நீதிபதியே நாளைக்கு நீதிமன்றத்திலே அமர்ந்து; ஜட்ஜ்மெண்ட் சொல்ல வேண்டிய ஒரு நீதிபதியே அதைப் பற்றி வெளியிலே உறுதி அளிப்பாரானால், இது நல்ல விஷயமா?  அல்லது திசை திருப்பக் கூடிய ஒரு விஷயமா? அந்தத் திட்டத்தினால் தங்களுக்கு ஏதாவது கிடைக்காதா என்று எதிர்பார்ப்பவர்களுக்கு நன்மை செய்வதற்காக, அவர்களுக்கு உதவி செய்வதற்காக செய்யப்பட்ட காரியமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

நான் பொதுமக்களைக் கேட்டுக் கொள்ளவில்லை. விஷயம் தெரிந்த, சட்டம் படித்த சட்ட வல்லுனர்கள், வக்கீல்கள், நீதிபதிகள் அல்லது நீதிமுறைகளை உணர்ந்தோர் அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.திரு. சதாசிவம் அவர்கள் எனக்கும் வேண்டியவர்தான். தெரிந்தவர்தான். ஆனால் சமீப காலமாக அவருடைய போக்கு இப்படி மாறியிருக்கிறதோ என்ற சந்தேகம் வழக்கறிஞர்கள் மத்தியில் தோன்றுகின்ற அளவுக்கு ஏன் நடக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. எப்படி ஒரு மூத்த ஜட்ஜாக அமர்ந்திருக்கின்ற ஒருவர், தான் சொல்லப் போகும் தீர்ப்பைப் பற்றி வெளிப்படையாக இந்தத் தேதிக்குள் தீர்ப்பு வெளி வரும் என்று சொல்லுகிறார் என்றால், அது எங்கே போய் முடியும் என்பதை தயவு செய்து நீதியை உணர்ந்தவர்கள், நீதிக்கு மதிப்புக் கொடுப்பவர்கள், நீதித் தராசில் எல்லோரும் சமம்தான் என்று எண்ணுகின்றவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? என்ற அந்தக் கேள்வியை மாத்திரம் இந்த மாபெரும் பொதுக்கூட்டத்திலே எழுப்புகிறேன்.

இப்படி கருணாநிதி என்ற பதர் குட்டையை குளப்பி விட்டது.
விளைவு

நீதியரசர் சதாசிவம் அந்த ஏழு கைதிகளின் மனநிலை,  சந்தேக கைதிகளான அவர்கள் தண்டிக்கப்பட்ட காலம்,  நீதி நெறிமுறை எதுபற்றியும் கவலைப்படாமல், இந்திய அரசியற் கலாச்சார வழித்தடத்தை மட்டும் பின்பற்றி தனது எதிர்கால பதவி கனவுகளை மனதில்க்கொண்டு.   அரசியல் தலையீட்டுக்கு சிரம் தாழ்த்தி வழிவிட்டிருக்கிறார்,

கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பதை அரசியல் சாசன பெஞ்ச் ஆராய்ந்து முடிவு செய்யும்’ என தெரிவித்து,  கழுவிய மீனில் நழுவிய மீனாக தப்பித்துவிட்டார்.
இப்போ வழக்கு முற்று முழுதான அரசியலுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

அப்படியாயின் இந்தியாவில் ஏன் நீதிமன்றங்கள் இருக்கின்றன என்ற கேள்வியை  யாரும் கேட்பாராயின்.

அதுதான் இந்தியா.

இந்தியாவில் ஏன் நீதிமன்றங்களால் தீர்ப்பு வழங்கமுடியாது என்றால்.

அதுதான் இந்தியா.

இருபத்து மூன்று ஆண்டுகள் சேடமிழுத்துக்கிடந்த நீதி முச்சுவிடும் என்று எதிர்பார்த்த தமிழர்களின் மனதில் இந்திய அரசியலும் நீதியும் அரசியல்வாதிகளின் பாலினமும் அம்மணமாக நிற்பதுமட்டும் நிர்மலமாக தெரிகிறது.


ஈழதேசம் செய்திகளுக்காக, 


கனகதரன். 

ஜனநாயக குரல்வளையை நெரிக்கும் ராஜபக்‌ஷவின் தடை உத்தரவு. ஒத்துக்கொள்ளுமா உலக ஜனநாயகம்.‏



“தமிழீழ விடுதலைப்புலிகள்”  இயக்கம் உட்பட ஈழத்தமிழர்கள் அங்கம் வகிக்கும் 16,  ஜனநாயக தமிழ் அமைப்புக்களை பயங்கரவாத அமைப்புக்கள் என்று முத்திரை குத்தி ஶ்ரீலங்கா அரசாங்கம் தடை செய்து விஷேட அரச வர்த்தமானி பத்திரிகை மூலம் சட்டபூர்வமானதாக பிரகடனப்படுத்தியிருக்கிறது.

இந்த தடையின் மூலம் இனி வெளிநாடுகளிலிருக்கும் புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்குள் வரமுடியாத நெருக்கடியும்,  வெளிநாடுகளிலிருக்கும் தமிழர்களுடன் தாயகத்தில் வாழும் தமிழர்கள் தொடர்பு கொள்ளமுடியாத அளவுக்கு அச்சுறுத்தலும் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னம் உள்ள காலங்களை தவிர்த்தாலும்.   2009 ம் ஆண்டிலிருந்து ஏதாவது ஒரு போராட்டத்தின் நிமித்தம் புலம்பெயர் தமிழர்கள் தெருவுக்கு வந்து போராட்டங்களில் கலந்திருக்கின்றனர் அந்த போராட்டங்களின் ஒளிப்பதிவுகள் ஶ்ரீலங்கா புலனாய்வு பிரிவினராலும்,  புலம்பெயர் நாடுகளில் வாழும்  ஶ்ரீலங்காவின் துணைப்படை ஒற்றர்களாலும் அவ்வப்போது பதிவுசெய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டே வந்திருக்கிறது.

2001 செப்டம்பர் அமெரிக்காவில் இடம்பெற்ற இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடை ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானம் 1373 பயன்படுத்தி பயங்கரவாத அமைப்புகள் என இனம் காணப்படும் அமைப்புகளை அமெரிக்காவின் புலனாய்வு அறிக்கையின் சரத்தின்படி வெளிநாடுகளில் பயங்கர வாதச் செயலில் ஈடுபடுபவை என்று தடை செய்யப்படுடிருக்கின்றன.

2001 செப்டம்பர் 11 ஆம் தேதி அன்று நியூயார்க் இரட்டை கோபுரங்கள் மீது தாக்குதல் நிகழ்வின் பின், அதே ஆண்டு செப்டம்பர் 28 ல் இருந்து இந்நடைமுறைகள் அமுலில் உள்ளன,

அதன் அடிப்படையில் ஶ்ரீலங்கா சிங்கள அரசு தமிழர்கள் சார்பாக ஜனநாயக ரீதியில் செயல்ப்படும் அமைப்புகள் அனைத்தையும் உள்ளடக்கி மனித உரிமைச் சபையின் ஐ.நா.தீர்மானம் 1373  மேற்கோள் காட்டி வெளிநாட்டுகளில் பயங்கர வாதத்தை ஊக்குவிக்கும் அமைப்பாக பிரகடனப் படுத்த முயலுகின்றது

விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்ய அப்போது இந்தியா மும்முரமாக முயன்றுகொண்டு இருந்து. தமிழர்களின் போராட்ட நடவடிக்கையை துடைத்தழிக்க இலங்கை- இந்தியா திட்டமிடப்பட்டபொழுது அமெரிக்கா இச்சட்டத்தை கொண்டுவருவதற்கு பாதுகாப்புச்சபையை கூட்டி விவாதித்தது.  இச்சந்தற்பத்தை சரியாக பயன்படுத்தி  இந்தியா அப்போது வெற்றியும் பெற்றது.

உடனடியாக இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது. தொடர்ச்சியாக அமெரிக்கா, ஐரோப்பா என்று தடை உத்தரவு தொடர்ந்ததால் விடுதலைப்புலிகள் இயக்கம் பெருத்த நெருக்கடியைச் சந்தித்தது, அதுவே தமிழரின் போராட்ட வீழ்ச்சியின் ஆரம்பம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இப்போ அண்ணளவாக 13,  ஆண்டுகளின் பின் ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குழுவின் புதிய தலைவராக இந்தியாவின் தூதர் ஹர்தீப் சிங் பூரி,  தேர்வு செய்யப்பட்டு்ள்ளார்.

இத் தெரிவில்க்கூட இந்தியாவின் அரசியல் ஊடுருவல் இருப்பதாக சொல்லப்படுகிறது,  ஐநா பொதுச்செயலாளர் பான் கீ மூன் இதற்கு பச்சைக்கொடி காட்டியிருப்பதாகவே சந்தேகங்கள் உண்டு.

பயங்கரவாத தாக்குதல்களை தடுப்பது,  அப்படிப்பட்ட அமைப்புகளை ஒடுக்குவது தொடர்பாக ஐ.நா.வின் பாதுகாப்பு பேரவை 2001, ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எண் 1373, 2005ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எண் 1624 ஆகியவற்றின் அடிப்படையில் செயல்படும். இக்குழுவின் தலைவராக இரண்டு ஆண்டுகளுக்கு ஹர்தீப் சிங் பூரி இருப்பார்.

தனது பதவியை பயன்படுத்தி  சர்வதேச அளவில் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய சட்ட திட்டங்களை வகுக்க முடியும் என்று குழுவின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு ஹர்தீப் சிங் புரி தெரிவித்திருக்கிறார்.

பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு அனைத்து நாடுகளின் ஒத்துழைப்பும் அவசியம். ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் அனைத்துமே ஒருமித்த குரலில் எவ்வித மாற்று கருத்துமின்றி பயங்கரவாதத்தை எதிர்க்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனால் பயங்கரவாத செயல்களைக் கடுமையான சட்டங்கள் மூலம் தடுக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை இந்தியா முனைப்புடன் மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

அனைத்து உறுப்பு நாடுகளும் மாநாட்டுத் தீர்மானம் 1373-ஐ உறுதியுடன் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்தந்த நாட்டு சட்டங்களுக்கு உள்பட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டள்ளது.

பயங்கரவாத குழுக்களுக்கு நிதி அளிப்பதை தடுக்க வேண்டும், இத்தகைய குழுக்களின் வங்கிக் கணக்குகளை உடனடியாக எவ்வித தாமதமும் இன்றி முடக்க வேண்டும், பயங்கரவாத குழுக்களுக்கு எத்தகைய உதவியும் செய்யக் கூடாது, பயங்கரவாதிகளின் புகலிடமாக எந்த நாடும் இருந்துவிடக்கூடாது, பயங்கரவாத குழுக்கள் தொடர்பான தகவல்களை தொடர்ந்து பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். பயங்கரவாத குழுக்களின் சதித் திட்டம் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பன இந்த தீர்மானத்தின் முக்கிய அம்சங்களாகும்.

அனைத்து நாடுகளும் அந்தந்த நாடுகளின் புலனாய்வு அமைப்புகள், காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். பயங்கரவாதிகளை கைது செய்வது, உரிய நாட்டிடம் ஒப்படைப்பது, இது தொடர்பான தகவல்களை அளிப்பது உள்ளிட்டனவும் தீர்மானத்தில் அடங்கும்.

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கடந்த வாரம் அமெரிக்கா கொண்டு வந்த பிரேணை வெற்றிபெற்ற நிலையில், அரசாங்கம் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது அதுவும் ஐ.நா பாதுகாப்பு சபைக்கு அமெரிக்காவினால் 28.9.2001ல் கொண்டுவரப்பட்ட பிரேரணை எண் 1373 மூலமாக இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

ஐநாவின் பயங்கரவாத தடைச்சட்டம் எண் 1373 பின்பற்றி ஶ்ரீலங்கா தமிழர் அமைப்புக்களை தடை செய்திருக்கிறது. பின்னணியில் பெரிய சக்தியாக இந்தியா இருப்பதனால் ஶ்ரீலங்கா இத்திட்டத்தின்மூலம் கணிசமான வெற்றியை காணும் என்பதில் சந்தேகமில்லை.

தொடர்ச்சியாக தமிழ்நாட்டிலிருந்து செயற்படும் ஈழத்தமிழர் ஆதரவு அரசியற் கட்சிகள், புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்பாடலை தடுக்கும் வேலைத்திட்டமும் ஈடேற வாய்ப்பிருக்கிறது.

தடை செய்யப்பட்ட அமைப்புக்களாக அறிவிக்கப்பட்ட
1.தமிழீழ விடுதலை புலிகள்
2.தமிழ் புனர்வாழ்வு அமைப்பு
3.தமிழ் ஒருங்கிணைப்பு குழு
4.பிரித்தானிய தமிழர் பேரவை
5.உலக தமிழ் இயக்கம்
6.கனேடிய தழிழ் காங்கிரஸ்
7.அவுஸ்திரேலிய தழிழ் காங்கிரஸ்
8.உலக தமிழர் பேரவை
9.கனேடிய தழிழர்களுக்கான தேசிய பேரவை
10. தேசிய தழிழ் பேரவை
11.தமிழ் இளைஞர் அமைப்பு
12.உலக தழிழர் ஒருங்கமைப்பு குழு
13.தழிழீழ நாடு கடந்த அரசாங்கம்
14.தழிழீழ மக்கள் பேரவை
15.உலக தழிழ் நிவாரண நிதியம்
16.தலைமை காரியாலய குழு

ஆகியவற்றில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தவிர,  மற்ற அமைப்புக்கள் அனைத்தும்  இயங்கும் குறிப்பிட்ட நாடுகளின் சட்டதிட்டங்களுக்கமைய அவ்வவ் நாடுகளின்  ஜனநாயக முறைமைகளை பேணி உரிமைப்போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

முக்கியமான சந்திப்புக்களை அவ்வமைப்புக்கள் அவ்வவ் நாட்டு அரசுகளுடனும் அதிகாரிகளுடனும் ஆலோசனைகள் செய்து பின்னரே தமது போராட்ட நடவடிக்கைகளை செய்து வருகின்றன, பிரித்தானிய பேரவை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அவர்களுடன் பல வேலைத்திட்டங்கள் பற்றிய கலந்துரையாடலை நடத்தி இருக்கின்றன,

தமிழ் ஒருங்கிணைப்பு குழு,.  பிரான்ஸ் முகவரி, பிரித்தானிய தமிழர்,. பேரவை லண்டன் முகவரி.  உலக தமிழர் பேரவை,. கனடா முகவரி, நாடு கடந்த அரசு அமெரிக்கா முகவரி ஆகிய இடங்களில் இருந்தே சட்டபூர்வமாக இயங்கி வருகின்றன,   தலைமறைவாக எந்த அமைப்பும் நிழல் நிர்வாகம் செய்வதாக தகவலில்லை.

அமெரிக்கா மூன்றாவது முறையாக ஜெனீவா மனித உரிமை பேரவையில் கொண்டுவந்த தீர்மானம் இந்தியாவால் முடிந்தளவு சாரம் குறைக்கப்பட்டு பெயரளவுக்கு தீர்மானமாக வெளியிடப்பட்டிருக்கிறது.  அத் தீர்மானத்தை வைத்துக்கொண்டு ஶ்ரீலங்கா அரசை எதுவும் செய்ய முடியாது என்பது இந்தியா-  ஶ்ரீலங்கா மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆகியவற்றிற்கு தெரியும்.

ஆனால் புலம்பெயர் அமைப்புக்கள் சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் சர்வதேச நீதிமன்றத்துக்கு ராஜபக்‌ஷவை கொண்டு நிறுத்த வேண்டுமென்றும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்,

சர்வதேச தீர்ப்பாயத்துக்கு இனப்படுகொலையாளியை எடுத்துச்செல்ல சில சம்பிரதாய சட்டச்சிக்கல் இருக்குமென்றால் மனித உரிமை ஆணையாளர் திருமதி நவநீதம்பிள்ளை அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் ஐநாவில் சிறப்பு நீதிமன்றத்தை அமைத்து இனப்படுகொலைக்  குற்றவாளிகள்  விசாரிக்கப்படவேண்டும் என்பதில் குறிப்பிட்ட அமைப்புக்கள் உறுதியாக இருக்கின்றன.

இனப்படுகொலை விசாரணையை துரிதமாக்கும் தீவிரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிர்ந்து  இலங்கைக்குள் இருந்து எழமுடியாது என்று ராஜபக்‌ஷ நம்புகிறார்.

இந்தியாவின் பெட்டிப்பாம்பாகி ஶ்ரீலங்கா ஜனாதிபதியின் மகுடிக்கு வளைந்து நெளிந்து ஆடிக்கொண்டிருக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு  ராஜபக்‌ஷவின் நாதத்துக்கு கட்டுப்பட்டு மவுனமாகி இருந்தாலும் புலம்பெயர் அமைப்புக்கள் பிரச்சினையை உறக்கநிலையில் வைத்திருக்க விடமாட்டாது என்பதும்,  

புலம்பெயர் அமைப்புக்களின் மனநிலையை கொண்ட வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான அரசியற் போராளிகள் சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன்,  தமிழ் தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரின் வீரியத்தை வெளிவராமல் வெட்டுவதே குறிப்பிட்ட அமைப்புக்கள் பயங்கரவாத அமைப்புக்கள் என்று தடை செய்திருப்பதற்கான மூல காரணமாகும்.

ஒன்று அடைக்கப்பட்டால் இன்னொன்று திறக்கப்படுவதுதான் விதி.  புலம்பெயர் அமைப்புக்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு பாதையை அமைத்து இதுவரை போராடிக்கொண்டிருந்தன இந்த தடையின் மூலம் குறிப்பிட்ட அமைப்புக்கள் ஒருமித்து பயணிப்பதற்கான சந்தற்பத்தையும், புதிதாக இன்னும் சில அமைப்புக்கள் பிறப்பதற்கும் மகிந்தவின் தடை உத்தரவு வழி கோலிக்கொடுத்திருக்கிறது.


காலம்தான் மாற்றங்களை தீர்மானித்துக்கொண்டிருக்கிறது.

ஈழதேசம் செய்திகளுக்காக. 
 
கனகதரன்.