Thursday, January 15, 2015

ராஜபக்‌ஷ தோற்றுப் போய்விட்டதால் இந்தியாவுக்கும், சர்வதேசத்துக்கும் பொறுப்பு முடிந்துவிட்டதாக கருத முடியாது.

சாந்தமான முகத்துடன் சர்வ அதிகாரமும் தன்னகத்தே கொண்ட புதிய சிங்கள அரசு தலைவர் ஒருவர் ஶ்ரீலங்காவில் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
சமத்துவ ஜனநாயக மரபுகளுக்கு உட்பட்டது போன்ற மாயையை வெளிப்படுத்தும் ஆட்சி முறைமை போல ஶ்ரீலங்காவின் அரசியல் அமைப்பு சித்தாந்தம் சர்வதேசத்துக்கு காட்டிக்கொண்டாலும் பௌத்த சிங்கள பாசிஷ முகாந்திரத்தை முன்னிலைப்படுத்தி அதற்கான அனைத்து அசைவாக்கத்தையும் தனி ஒருவர் எடுக்கக்கூடிய அதிகாரத்தை நடந்து முடிந்த தேர்தல் மைத்திரிபால ஶ்ரீசேனவுக்கு வழங்கியிருக்கிறது.
ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் தமிழர்களின் (அரசியல்) இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று வாக்குறுதி கொடுப்பதுபோல புதிய ஜனாதிபதி மைத்திரிபால ஶ்ரீசேன சொல்லாவிட்டாலும் கூட்டாளிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களும் மாவை சேனாதிராசா அவர்களும் மிகுந்த நம்பிக்கயுடன் அந்த வாசகத்தின் வெளியை நிறைவு செய்து புதிய அரசாங்கம் தமிழர்களின் நீண்டகால அரசியல் சிக்கலை தீர்த்து நிறைவு செய்யும் என்று நம்பிக்கையை பறந்தடித்து பகிரங்கப்படுத்தி அறுதியிட்டு கூறியிருக்கின்றனர்.
இலங்கையில் முக்கிய அரசியற் கட்சிகளாக அறியப்பட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய வெவ்வேறு கொள்கை சித்தாந்தத்தை பின்பற்றிவரும் இரு துருவங்களான இரண்டு அரசியற் கட்சிகளும் தமது சின்னங்களில் (கை, யானை) போட்டியிடவில்லை, மாறாக இரண்டு கட்சியையும் சார்ந்தவர்கள் ஒன்றாகவும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் எதிர் எதிராகவும் ஜனாதிபதி பதவியை குறிவைத்து போட்டியிட்டிருக்கின்றனர்.
தற்போதய ஜனாதிபதி மைத்திரிபால ஶ்ரீசேன அடிப்படையில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சார்ந்தவராகவும், அவருக்கு சகலவகையிலும் ஆதரவு வழங்கி அதே ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிரான நிலையை எடுத்து பதவியை மாற்றிக்கொடுப்பதற்கான அனைத்து வேலைகளையும் அடிப்படையில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஸ்தாபகர் எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்காவின் வாரிசான ராஜபக்‌ஷவுக்கு முன் பத்தாண்டுகள் ஜனாதிபதியாக பதவி வகித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா முன்னின்று செய்து பதவியை ராஜபக்‌ஷவிடமிருந்து பறித்து மைத்திரிபால ஶ்ரீசேனவுடம் மாற்றிக் கொடுத்திருக்கிறார்.
ஐக்கிய தேசியகட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனித்து நின்று ராஜபக்‌ஷவை எதிர்கொள்ளமுடியாத அரசியல் இயலாமையுடன் எதிரணியில் இருந்து அரசியல் செய்து வந்த சந்திரிகா, மைத்திரிபால ஶ்ரீசேன ஆகியோரது இராஜ தந்திரத்தை சிரம்தாழ்த்தி ஏற்றுக்கொண்டு மைத்திரிபால ஶ்ரீசேனவை ஜனாதிபதியாக்க தன்னாலான உதவியை செய்திருக்கிறார்..
அடிப்படையில் ஒரே கொள்கை கோட்பாடுகளுடைய கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த இருவர் வெவ்வேறு கோசங்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் யார் வெற்றிக்கனியை பற்றிக்கொள்ளுவார்கள் என்ற பதட்டம் நிலவிவந்தபோது, தமிழர்களின் வாக்குக்களே ஜனாதிபதிக்கான வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் நிலை மேலோங்கி நின்றது.
இனப்படுகொலை செய்த குற்றவாளி மஹிந்த ராஜபக்‌ஷ, அந்த இனப்படுகொலைக்கு அனைத்து இனப்படுகொலை காலங்களிலும் ஒன்றாக இருந்து துணைபுரிந்து முக்கிய மந்திரி பதவிகளை வகித்த குற்றவாளி மைத்திரிபால ஶ்ரீசேன, 2002ல் சமாதானம் என்ற பெயருடன் பெரும் சதி செய்து தமிழர்களின் அரசியலுக்கான அடிப்படையை நிர்ணயித்த போராட்டத்தை அழிப்பதற்கு திட்டமிட்டு காய் நகத்திய சதிகாரன் ரணில் விக்கிரமசிங்க. அதற்குமுன்னர் சமாதானப் புறா என்றும், வட்ட மேசை மகாநாடு தீர்வுப்பொதி என்றும், சமாதானத்துக்கான போர் என்றும் கதிர்காமரின் உதவியுடன் சர்வதேசத்தில் விடுதலை போராட்டத்தை தடை செய்யப்பட்ட இயக்கமாக வகைப்படுத்தி தமிழர்களின் அரசியல் வரலாற்றை அழிக்க உழைத்தவர் சந்திரிகா
நேற்றைய எதிராளி ராஜபக்‌ஷ, முந்த நாளைய எதிராளி சந்திரிகா, இருவருடனும் கூட இருந்தவர் மைத்திரி. சம்பந்தருக்கு கையில் சிங்கக்கொடியை கொடுத்து கௌரவித்தவர் ரணில் அதனாலோ என்னவோ ரணில் நின்ற பக்கத்துக்கு வாக்களிக்கும்படி சம்பந்தர் மற்றும் மாவை தமிழ் மக்களிடம் கேட்டுக்கொண்டனர், தமிழர்களின் வாக்குக்களை பெற்று வெற்றி பெற்றவர் மைத்திரிபால ஶ்ரீசேன,. தற்கரீதியாக இதன் நியாயம் அநியாயம் சம்பந்தன் தரப்பை தவிர வேறு எவரும் அறியமுடியாதவை.
கடும்போக்கு சிங்கள கட்சிகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்து அதிகாரத்தை கைப்பற்ற மட்டுமே போட்டியிட்டன. என்பது தவிர நாட்டு நலன், பொருளாதாரம், சமாதானம் குறிப்பாக இலங்கை தமிழர்களின் நீண்டகால சிக்கலாக இருந்துவரும் அரசியல் தீர்வு பற்றி எதுவும் பேசப்படவில்லை.
குறிப்பாக தமிழர்களின் அரசியல் சுய நிர்ணயத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏற்புடையதான சிவில் நிர்வாகத்தை அறிமுகப்படுத்தி இராணுவத்தை திரும்பப்பெறுவதற்கு புதிய ஜனாதிபதி ஒப்புக்குக்கூட ஒத்துக்கொள்ளவில்லை, நடந்து முடிந்த மனித உரிமை மீறல்கள் படுகொலைகள் தொடர்பாக மூன்றாம் தரப்பு விசாரணை நடத்துவதற்கும் தான் அனுமதிக்கப்போவதில்லை என்பதே அவரது தேர்தல் வாக்குறுதியாகவும் ஒளிவு மறைவு இன்றி விஞ்ஞாபனமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
ஶ்ரீலங்காவில் வாழும் சிங்களவர்கள் ஏதோ ஒரு காரண காரியங்களை மனதில்க்கொண்டு இந்த மாற்றத்தை கொண்டு வந்திருக்கின்றனர். தமிழர்களுக்கு இதில் என்ன இலாபம் என்பது தெரியவில்லை. ஆனாலும் ஆழமாக நோக்கினால் புதிய அரசுத்தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டு விட்டதால் அங்கு நடந்துவரும் இன முரண்பாட்டுக்கு ஒரு தீர்வு மெல்ல மெல்லவேனும் வந்து சேர்ந்துவிடுமா என்றால் இல்லை என்பதே உண்மை.
இருந்தும் அப்படி நடக்காது என்று சொல்லுவது தவறானது. அவசரத்தனமான கண்ணோட்டும், மெல்ல மெல்லத்தான் காரியத்தை சாதிக்கவேண்டும் என்றே சர்வதேசமும் தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள் தாங்கள் என்று சொல்லிக்கொள்ளும் அரசியல் ஞானிகளும் சொல்லக்கூடும்.
ஏனென்றால் சம்பந்தப்பட்டவர்கள் அல்லாத மூன்றாம் தரப்பினரின் கற்பிதம் அப்படித்தான் அறுபது வருடங்களாக திரும்பவும் ஒன்றிலிருந்து தொடங்கி போதித்துக்கொண்டிருக்கிறது..
வரவிருக்கும் காலங்களில் சிங்களத்தரப்பு தமது அரசியல் நகர்வுகளை 1948 லிருந்து நேற்றுவரை நடந்து முடிந்த வழமைபோலவும், தமிழர் தரப்பு தமக்கான அரசியல் நகர்வுகளை அறிக்கை மற்றும் உல்லாசப்பயணங்கள் மூலமாகவும் நகர்த்துவதற்கு முன்னிற்கும் என்பது இன்னும் சில காலங்களில் பகிரங்கமாக தெரியவரும் வேறு முன்னேற்றம் எதையும் புதிய ஜனாதிபதியானாலும் சரி தமிழ் தலைமைகளானாலும் சரி நிவர்த்தி செய்துவிடுவார்கள் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
அவர்களின் சிந்தனை அந்த வட்டத்தை விட்டு செல்லமாட்டாது என்பதும் என்போன்றவர்களின் பட்டறிந்த வரலாற்று உண்மை.
மறுபுறத்தே ஏற்கெனவே பாதிக்கப்பட்ட ஈழத்து தமிழர்களின் உறுதியான தலைமைத்துவம் இல்லாத வெற்றிடம், பற்றிப்பிடித்து தப்பிக்க ஒன்றும் இல்லாத இயலாமை, தொடர்ந்து வரும் இராணுவம் மற்றும் துணைக்குழுக்களின் எதேச்சதிகார அடக்குமுறை போன்றவற்றால் உண்டாகும் கலாச்சார சீரழிவு, வறுமை, அமைதியற்ற தன்மை, பயம் போன்ற கணிகள் மக்களை பெருத்த மன உழைச்சலை நோக்கி தள்ளும் என்பது காலப்போக்கில் உணரக்கிடைக்கும்.
சிங்கள கடும்போக்கு ஆட்சியாளர்களும் தமிழர்தரப்பிலிருந்து தொங்கு அரசியல் செய்பவர்களும், அண்டிப்பிழைப்பவர்களும் குளப்பத்தை உண்டுபண்ணும் பொய்யான பாதையை திறந்துவிட்டு தப்பித்தலுக்காக அதனூடே பயணிக்க முன்வருவர். மக்கள் அந்தப்பாதையூடே பயணிக்க விரும்பாமலும் காட்டிக்கொள்ளாமலும் தப்பித்தலில் மட்டுமே குறியாகி காலம் கரையும்.
இந்த நேரங்களில் இந்தியாவின் உதவி தேவைப்படுவதுபோலவும் சர்வதேச தலையீடு தேவை என்பதுபோலவும் காட்சி அமைக்கப்பட்டு உல்லாச பயணங்கள் தொடங்கப்பட்டு ஆங்காங்கே அரசியல் அரங்க மேடைகள் திறக்கப்பட்டு உணர்வு மயமான பிரசங்கங்கள் நிகழ்த்தப்படும். அந்த பிரசங்கங்கள் பொழுதுபோக்காக மட்டுமே முன்னய காலங்களைப்போல கடந்து போகும்.
ஆனால் இலங்கையில் தமிழர்களுக்கான அரசியலில் குறைந்த பட்ஷம் இராணுவ வெளியேற்றம் உறுதி செய்யப்பட்டு அங்கு வாழும் மக்களது வாழ்வில் ஒரு அமைதியான சூழ்நிலை உருவாகவில்லையென்றால் இந்தியாவுக்கும் சரி சர்வதேசத்துக்கும் சரி பொறுப்பு முடிந்துவிட்டதாக கருத முடியாது.
சர்வதேசத்தை சற்று தள்ளி வைத்தாலும் ஈழ தமிழர்களுக்கான அரசியல்த்தீர்வு ஒன்றை வரையறுத்து தீர்மானிப்பதன் மூலமே இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் உண்டாகக்கூடிய அரசியற் கொந்தளிப்பை மத்திய அரசாங்கம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். இலங்கையின் வடக்கே பெருக்கெடுத்து விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கும் இராணுவத்தை மட்டுப்படுத்தாதவரை தமிழக மீனவர்களின் பிரச்சினை தீர்வுக்கு வரப்போவதில்லை. புத்தளம் மன்னாரிலிருந்து மட்டக்களப்புவரை கடற்கரைகள் அனைத்தும் இராணுவ ஆதிக்கத்துக்குட்பட்டே இருக்கின்றன. இந்த இராணுவம் மட்டுப்படுத்தாதவரை இந்திய மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்க முடியாது.
மீனவர்கள் தாக்கப்படும்போது தமிழகத்திலுள்ள அரசியற் கட்சிகளின் போராட்டங்களும் மனக்கசப்புக்களும் தொடர்ந்து மத்திய அரசின்மீது தேவையற்ற விமர்சனங்களையும் நம்பிக்கையில்லாமையையும் தோற்றுவிக்கும். இதன் தொடர்ச்சி பல இயக்கங்கள் உருவாகி அவை அரசியற் கட்சிகளாக பரிமாணமெடுத்து இலகுவாக தமிழக மக்களின் மனம் கவரவல்ல தமிழ் ஈழ சார்பு அரசியல் கட்சிகளாகி இந்தியாவுக்குள்ளேயே பிரிவினையை தோற்றுவிக்கும் அபாயம் உண்டாகும்.
தமிழ்நாட்டை ஆழும் கட்சிகளான அதிமுக, மற்றும் திமுக ஆகிய கட்சிகள்கூட தமிழ் ஈழ அரசியலை புறந்தள்ளிவிட்டு அரசியல் செய்ய முடியாத நிலையிலேயே இருந்து வருகின்றன. அந்த அளவுக்கு ஶ்ரீலங்காவின் இராணுவ ஆதிக்கம் காரணமாக மீனவர்கள் தாக்கப்படுதல் ஈழத்தமிழர்கள்மீது நடாத்தப்படும் ஆக்கிரமிப்புக்கள் தமிழக மக்களின் மனங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. மத்திய அரசாங்கம் இவற்றை மனதில் கொள்ளாமல் புறந்தள்ளுமானால் விரும்பத்தகாத வெளிப்பாடுகள் உருவாகலாம்.
எதிர்வரும் மார்ச்சு மாதம் ஜெனீவாவின் மனித உரிமைகள் அமர்வு வித்தியாசமான தீர்மானங்களை வெளியிடலாம். அதற்கான ஆயத்தங்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உதவியுடன் மைத்திரிபால ஶ்ரீசேனவின் தூதுக்குழு ஜெனீவா அமர்வை குளிரவைக்க முயலுவர் என்பதும் தவிர்க்க முடியாமல் நடந்து முடியும். அதன் முன்னோட்டமாக சில அரசியற் கைதிகள் விடுவிக்கப்படலாம். விடுவிக்கப்பட்ட கைதிகள் தங்கள் சொந்த இடங்களுக்கு சென்று சுமூகமாக வாழக்கூடிய சூழ்நிலையை இராணுவ ஆதிக்கம் வழிவிட்டு விலகி நிற்கும் என்று சொல்லிவிட முடியாது.
இராணுவ ஆதிக்கத்திலிருந்து தப்பித்து வாழவேண்டுமானால் ஒரே தெரிவு ஒட்டுக்குழுக்களை ஒத்த குழுக்களாக்கி வாழப்பழகிக்கொள்ளவேண்டிய திண்டாட்டம் மட்டுமே இளைஞர்களின் தெரிவாக திணிக்கப்படும். மறு புறத்தே பாதுகாப்பு காரணங்களுக்காக நாடைவிட்டு தப்பிச்சென்று அடைக்கலம் கோரியவர்களை குறித்த நாடுகள் திருப்பி நாட்டுக்கு அனுப்பும் அபாயமும் ஒருங்கே கூடிவரும் என்பதையும் தமிழ் அரசியல் விற்பன்னர்கள் மனதில் கொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றனர்.
இன்றைய ஶ்ரீலங்காவின் அரசியல் தலைமை மாற்றத்தை பயன்படுத்தி ஆட்சி அதிகார நிர்வாக அலகுகளுக்கு வருவதற்கு முன்னதாக முதல் கட்டமாக தமிழர் பிரதேசங்களில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்தை திரும்ப பெற வைக்கும் வல்லமை தமிழர் அரசியல் தலைவர்களுக்கு இருக்குமானால் அவர்கள் ஏதோ ஒன்றை சாதித்துவிட்டார்கள் என்ற நம்பிக்கை தமிழர் மனங்களில் பதிவாகலாம்.
இராணுவம் வெளியேற்றப்படவில்லையென்றால் ததே கூ இருந்தும் ஒன்றுதான் இல்லாமல் போனாலும் ஒன்றுதான் என்ற பதிவு அழிக்க முடியாமல் த தே கூட்டமைப்பு கேள்விக்குறியாகிவிடும் என்பதுமட்டும் மறுப்பதற்கில்லை.
வடக்கு மாகாண சபை என்ன செய்யப்போகிறது? கிழக்கு மாகாண தமிழர்களின் அரசியல் எப்படியான நிலையை தோற்றுவிக்கும். என்பதெல்லாம் எதிர் காலத்தின் சுழற்சியைப்பொறுத்தே தீர்மான்மாகும்.
இருந்தும் ரணில், சந்திரிகா, ராஜபக்‌ஷ, இவர்களுடன் சரத் பொன்சேகா ஆகியோர் ஒன்று சேர்ந்து மைத்திரிபால ஶ்ரீசேனவை மிரட்டினாலும் அடுத்தடுத்து இரண்டு ஐந்தாண்டு பதவிக்காக மைத்திரிபால ஶ்ரீசேனவும் அவரது வாரிசுகளும் தயாராகிவிட்டனர் என்பது ஏற்கெனவே செய்தியாகிவிட்டது.
ஈழதேசம் செய்திகளுக்காக.
கனகதரன்.

No comments: