Wednesday, February 9, 2011

விடுதலைப் புலிகள் இயக்கம் சாதாரணமானவர்களால் கையாளக்கூடிய ஒன்றல்ல,,-ஈழதேசம் இணையத்திற்காக. ஆரணி ,

30 ஆண்டுகளுக்கு மேலாக தேர்தலைக்காணாமல் இருந்த வன்னி, மற்றும் பல உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு 2011 மார்ச் மாதம் நடுப்பகுதியில் கிளிநொச்சி யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக பல தமிழ் அரசியல்க்கட்சிகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. இத்தேர்தலில் பிரதான தமிழ்க்கட்சியான தமிழர் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆனாலும் தமிழர் தேசியக் கூட்டமைப்பை சரியான வழிநடத்தி கொண்டு செல்லுவதற்கான ஆளுமையுள்ள தலைமைத்துவத்தை காணமுடியவில்லை, சம்பந்தன் அவர்களின் உடல் நலக்குறைவும்,அவரது இந்தியசார்பு கொள்கை வியூகமும், மாவை அவர்கள் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் எடுத்து வைக்கும் நகர்வுகளும், சுரேஸ் பிறேமச்சந்திரன் தனது பழைய சகாவான வரதராசருடன் இன்னொருபக்கமும், சிறிதரன் வேறொருபக்கமுமாக ஓடிக்கொண்டிருப்பதால் கட்சி இப்போ யாழ்ப்பாணத்து ஒடியல் கூழ் கலவையாக மாறியிருக்கிறது.

கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரி, புளொட் சித்தாத்தன். ஈபி.ஆர்.எல்.எஃப் வரதராசப்பெருமாள் என,,கற்பனை பண்ணிப்பார்க்க முடியாத முரண்பட்ட, கூட்டு ஒன்று சேர்ந்திருக்கிறது, தொடர்ச்சியாக இவர்கள் கருணாவையும் பிள்ளையானையும் டக்கிளஸையும், ராஜபக்க்ஷ ரனிலையும், சேர்த்து தமிழையும் தமிழீழத்தையும் நிச்சியம் வென்றாலும் ஆச்சரியமல்ல!? நடக்கப்போகும் அதிசயம் பாவப்பட்ட தமிழினத்துக்கு தாமதமாக புரியலாம்,, ஒன்றுமட்டும் தெளிவாகத்தெரிகிறது, எது எப்படிப்போனாலும் பரவாயில்லை தமது இருப்புக்கு பங்கம் வரக்கூடாது என்பதில் தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் உசாராக இருக்கின்றனர்.

ஈழ தாயகத்து மக்கள் தடை முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும், இராணுவ கொட்டடிகளிலும், இந்திய அகதிமுகாம்களிலும், இந்தியச் சிறைகளிலும், மலேசியநாட்டு வீதிகளிலும், இந்தோனேசிய காடுகளிலும், தாய்லாந்து தடைமுகாம்களிலும், அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ்தீவின் அடிமைகளின் கொட்டகைகளிலும், எங்கே சென்றடைவோம் எனத்தெரியாமல் கடலிலும், கண்காணாத இன்னும் பல தேசங்களிலும், காற்றுப்போல் அலைந்து கொண்டிருக்கின்றனர். உள்ளூரில் யாழ்ப்பாணத்தில் வாழவே முடியாமல் தத்தளிக்கின்றனர், இந்த அனர்த்தம் எந்த அரசியல் வாதிகளாவது அறிந்திருக்கின்றனரா? என்பதும் சந்தேகம்.

தேசியத் தலைவர் பிரபாகரன், அவர்கள் ஈழத்தில் காவலனாக இருந்தவரை, இப்படியான அனர்த்தத்தை ஈழத்தமிழன் பெரும்பாலும் சந்திக்கவில்லை. தற்போதய பின்னடைவு தமிழர்களிடையே விரக்தியையும் தனிமைப் படுத்தப்பட்ட வெறுமையும், ஒருவித பீதி உணர்வையும் தோற்றுவித்திருக்கின்றது என்பதை அதிகமானோர் வெளியில் சொல்லவில்லை, விரைவில் பொழுது புலர்ந்து மாற்றம் வரும் என்ற நம்பிக்கையுடன் பொறுமை காக்கின்றனர், தலைவரின் வெளி வரமுடியாத இடைவெளியை நிமிர்த்த வேண்டிய தலையாய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களுக்கும், தமிழ் அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு.

ஆனால் இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வட்டம் கட்டி, மாறுபட்ட கருத்தை முன்மொழிந்து எங்கே போகிறோம் என்பது அவர்களுக்கும் புரியாமல் மக்களையும் சிக்கலில் சொருகியிருக்கின்றனர்.

தன்னையும் தமிழன் எனக்கூறும் கருணாநிதி ஆட்சிசெய்யும் தமிழகத்தின், செங்கல்ப்பட்டு சிறப்பு முகாம் என அழைக்கப்படும், சித்திரவதை முகாமில் பல வருடங்களாக இலங்கை தமிழர்கள் விசாரணை எதுவுமின்றி அடைத்து சித்திரவதை செய்யப்பட்டு கொடுமைப் படுத்தப் படுகின்றனர். கைதிகள் தம்மை விசாரணைக்கு உட்படுத்தும்படியும், அல்லது விடுதலை செய்யும்படியும், மன்றாடி வேண்டி பலவழிகளிலும் போராடி வருகின்றனர். தமிழ் நாட்டின் அரசியல் அதிமேதாவி கருணாநிதி அதுபற்றி கிஞ்சித்தும் கவனிக்காமல் குடும்பமே குறியாகி, எல்லாவற்றையும் திசைதிருப்பும் விதமாக புதிது புதிதாக நாடக அரங்கங்களை திறந்து வசனம் பேசுவதுடன் கடிதம் எழுதி காலத்தை போக்குகிறார்.

சமீபத்தில் தேர்தல் கவர்ச்சித்திட்டமாக தமிழ்நாட்டிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளின் நலன் பேணல் மற்றும் மேம்பாட்டிற்கு நூறுகோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்று அறிவித்து தனது தேர்தல் வெற்றிக்கு வலை விரித்திருக்கிறார்.

வரப்போகும் தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு மக்களை கவரும் விதமாக இடைக்கால வரவு - செலவுத்திட்டம் ஒன்றை தமிழ்நாடு மாநில சட்டப்பேரவையில் சென்றவாரம் தாக்கல் செய்யப்பட்டது. அதன்போது நிதியமைச்சர் அன்பழகன் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துப் பேசும்போது,, தமிழ்நாட்டிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம்களின் வசதிகளை மேம்படுத்த, நூறு கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். அதன் முதல்கட்டமாக முப்பது கோடி ரூபா பெறுமதியான பணிகள் தற்போது முடியும் தறுவாயில் உள்ளன என்றும்??. தமிழக மக்களுக்கு மட்டும் இதுவரை செயற்படுத்தப்பட்ட இலவச தொலைக்காட்சி? மற்றும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம், திருமண உதவித்திட்டம் என்பனவும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளது என்றும் தெரிவித்தார். இந்த இலவசம் என்கிற திட்டத்தை தாண்டி கருணாநிதியால் வேறு எதுவும் சிந்திக்கக்கூட முடிவதில்லை.

ஆக தமிழக அரசியல்வாதிகள், ஈழ அகதிகள் பெயரால் 10 கோடி செலவுசெய்தது போக, 90 கோடி ஈழத்தமிழர் பெயரால் ஸ்வாகா செய்துவிட்டனர் என நம்பலாம். தமிழர்கள் மீது கருணாநிதிக்கு உண்மையான கரிசனை இருக்குமானால் எந்த விசாரணையுமில்லாமல் சிறப்பு முகாம்கள் என அழைக்கப்படும் சித்திரவதை கொட்டகைகளில் தற்கொலை செய்துகொண்டும், போராடிக்கொண்டுமிருக்கும் அப்பாவிகளுக்கு ஒரு தீர்வை கொண்டுவர முயலவேண்டும். ஊழல் செய்வதற்கான நலத்திட்டங்களை அறிவித்துக்கொண்டிருக்கத் தேவையில்லை,

மறுபுறம் கருணாநிதி நேரடியாக ஸ்ரீலங்கா அரசுத்தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் நெருங்கிய நட்பைப் வளர்ப்பதாகவும் தெரிகிறது. இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொள்வதாக டெய்லி மிரர் பத்திரிகை தெரிவித்துள்ளது. அரச தகவல்களின் படி கருணாநிதிக்கும் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் தொலைபேசி வழி உரையாடல்களும் இடம்பெறுகின்றன என நம்பப்படுகிறது. தமிழ்நாட்டு முதல்வர் கருணாநிதிக்கும் சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான இந்த உறவினை கலைஞரின் மகள் கனிமொழி ஊடாக ஆறுமுகன் தொண்டமான் சாத்தியமாக்கியுள்ளதாகவும் ஆந்த நட்பின் வெளிப்பாடாக அதிபர் ராஜபக்சவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட நாட்காட்டிகளைப் தமிழகத்து பாடசாலைகளில் விநியோகிக்கும் அளவிற்கு கருணாநிதி ராஜபக்க்ஷ நட்பு உயர்ந்திருக்கின்றது.இந்த இரட்டை வேடத்தைத்தான் அதிகமாக அரசியலில் இருப்பவர்கள் செய்துகொண்டிருக்கின்றனர்.

ஈழத்தின் இறுதிப்போரின்போது பொங்கியெழுந்த தமிழ்நாட்டை பலவழிகளிலும் கருணாநிதி அடக்கி வைத்திருந்து ஈழ அழிப்பிற்கு தன்னாலான அனைத்தையும் செய்து ராஜபக்க்ஷவுக்கு பேருதவி வழங்கியிருந்தார்.தற்போது உலக நாடுகளால் ராஜபக்க்ஷ யுத்தக்குற்றவாளியாக குற்றஞ்சுமத்தப்பட்டிருக்கும் நிலையில்,கருணாநிதியின் பயமெல்லாம் ராஜபக்க்ஷ தன்னையும் காட்டிக்கொடுத்து விடுவாரோ என்ற கலக்கம்,தினமும் ராஜபக்க்ஷவுடன் தொலைபேசியில் நலன் விசாரிக்குமளவுக்கு கீழ்த்தரமாக இறங்க வைத்திருக்கிறது.

இலங்கைக்குள் அமெரிக்காவின் ஆதிக்கமும், சீனாவின் பெருவாரியான ஆக்கிரமிப்பும், இந்தியாவின் சொல்லுக்கு கட்டுப்படாத ராஜபக்க்ஷவும், இந்திய ஆட்சியாளர்களுக்கு சமீபத்தில் மிகவும் வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜபக்க்ஷவை கட்டுக்குள் கொண்டுவரக்கூடிய கடுமையான அரசியல் நகர்வுகளையும் இந்தியாவால் எடுக்கமுடியவில்லை என்பதே உண்மை.ஈழத்து அழிப்புக்கு இலங்கை கேட்குமுன்னே எடுத்துக்கொடுத்த யுத்த வியூகங்களும் வஞ்சக நோக்கோடு இந்தியாவால் வழங்கப்பட்ட தடைசெய்யப்பட்ட ஆயுதங்களும், இன்று சர்வதேசத்தில் தமக்கு அவப்பெயரை உண்டாக்குவது மட்டுமல்லாது, ஐநா பாதுகாப்பு கவுன்ஸிலின் நிரந்தர நாடாக இந்தியா இணைவதற்கு போட்டிருந்த கனவுத்திட்டத்திற்கும் இது பெருந்தடையாக உருவெடுத்துவிடும் என்றபயம் இந்தியாவை அச்சப்படுத்தி அரசியல் ரீதியாயான தோல்வியில் தள்ளவைத்திருக்கிறது.

தமிழகத்து மீனவர்களின் கடற்கொலைகள், ஏற்கெனவே ஈழப்படுகொலைகளினால் தமிழக மக்களிடையே வெறுப்பை சம்பாதித்திருக்கும் மத்திய அரசு மானில அரசுகளுக்கு இது தேர்தல்க்காலம்.மீனவர்களின் படுகொலை ஈழப்பிரச்சினையையும் கிண்டி கிளறி தமிழக அரசியல்க்கட்சிகள் மக்களை திருப்பிவிடுவார்கள் என்கிற அச்சம் தோன்றியிருக்கும். இந்நிலையில் அவற்றை பூசி மெழுகும் வகையில் நிருபாமா ராவ் ஸ்ரீலங்கவுக்கு அவசரமாக அனுப்பட்டிருந்தார்.

சிறீலங்கா வந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபாமா ராவ் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தெரிவித்திருந்த கருத்துக்கள் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சகத்தை கடும் விசனம் கொள்ளவைத்துள்ளது.தேர்தலுக்காக இந்தியா ஸ்ரீலங்காவிற்கு ஏற்படுத்திவரும் அழுத்தங்களை முறியடிப்பதற்கு சிறீலங்கா அரசு தமிழ் நாட்டையே மிஞ்சிவிடும் வகையில் தந்திர நகர்வாக தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்துவது போன்ற பாசாங்கு மேற்கொண்டுவருவதாக தெரிகிறது. இந்த பேச்சுக்கள் பல தமிழ்கட்சிகள் என விரிவுபடுத்தப்பட்டு நீண்டகாலம் நடைபெறும் நிலையில் இந்தியாவின் அழுத்தம் மழுங்கிப்போய்விடும் என சிறீலங்கா அரசு நம்புகின்றது, இதனிடையே மகிந்த ராஜபக்க்ஷவின் தாளத்திற்கு ஏற்ப இலங்கையின் தமிழ் கட்சிகள் தமது இருப்பை தக்கவைப்பதற்கு ஆடும்நிலையில் உள்ளதால், சிறீலங்கா அரசிற்கு தற்போதைய திட்டம் ஒருதற்காலிக வெற்றியை எட்டலாம். ஆனால் தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமை உலகம் அறிந்த ஒன்று என்பதால் தமிழ் மக்களுக்கு தீர்வு எதுவும் வந்து சேரப்போவதில்லை.

newsதமிழர் தேசியக்கூட்டமைப்பின் கொள்கையற்ற நிலைப்பாடு, ஸ்திரமற்ற தலைமை ஆளாளுக்கான முரண்பட்ட கருத்தியல் வெளிப்பாடு. ஆகியவை ஒருபுறமும், அரசியலில் 100% தமிழர்களால் நிராகரிக்கப்பட்டு அஞ்ஞானவாசம் சென்றிருந்த திரு வீ. ஆனந்தசங்கரி மற்றும் தமிழர்களிடையே மிக முரண்பட்ட இந்திய புலனாய்வு அமைப்பின் வளர்ப்பு ஆடாக வர்ணிக்கப்படும் வரதராஜப்பெருமாள் ஆகியோரை தமிழர் தேசியக்கூட்டமைப்பு தத்தெடுத்து உள்வாங்கியிருக்கிறது, அல்லது தமிழர் விடுதலைக்கூட்டணிக்குள் கூட்டமைப்பு புகுந்திருக்கிறதென்று கொள்ளலாம். ஆனால் இவர்கள் தமிழர் நலனில் உண்மையான அக்கறை உடையவர்களாயிருப்பின், இன்றல்லாவிட்டாலும் ஒரு நல்ல புரிதலின்பின் இதயசுத்தியுடன் ஒருகொடியின்கீழ் மேலான நோக்கோடு அனைவரும் அரசாங்கத்தை எதிர்த்து சேவையாற்ற வேண்டும், அப்படி சுயநலன் மறந்து உள்ளூராட்சி மன்றங்களை செவ்வெனவே வழிநடத்துவாராயின் தமிழ்மக்களுக்கு அதைவிட பேருதவி எதுவும் இருக்க முடியாது என்பதை நம்பலாம்.

சிலகாலங்களுக்கு முன் அரசியல் அரங்கம் ஒன்றை இவர்கள் ஏற்படுத்தியிருப்பதாக நகைச்சுவையான செய்தி ஒன்று றக்கை கட்டிப்பறந்தது, நகைச்சுவை என்னவென்றால். டக்ளஸ் தேவானந்தா, வரதராஜப்பெருமாள், புளொட் சித்தாத்தன் தேசியக்கூட்டமைப்பு, விடுதலைக்கூட்டணி, இவற்றில் டக்கிளஸ் மட்டும் பிரிந்துபோய் விட்டதாகவும். மற்றவர்கள் ஒன்றாக தொடர்ந்து இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

ஒற்றுமைதான் இன்று தமிழினத்திற்கு தேவை. ஆனால் நச்சு வேர்களாக தமிழர்கள் மனதில் என்றும் ஆழமாகப்பதிந்துவிட்ட புளொட் சித்தாத்தன், வரதராஜப்பெருமாள் என்பவர்களின் பின்னணி என்ன என்பதை கூட்டமைப்பு ஏன் உணரவில்லை என்பதும் கேள்விக்குரியதே.மக்களின் பொதுவான நிலைப்பாட்டை இந்த அரசியல்வாதிகள் நிறைவேற்றப் போகிறார்களா அல்லது சம்பந்தரின் இந்தியசார்புக்குட்பட்ட வரதராஜப்பெருமாள், சித்தாத்தன் ஆகியோருடன் வழிப்போகும் சுரேஸ் பிறேமச்சந்திரன் மாவை, ஸ்ரீதரன் அவர்களின் திருப்திக்கு கட்சியையும் மக்களையும் கொண்டு செலுத்தப்போகின்றனரா? என்பது இந்த உள்ளூராட்சி தேர்தல் முடிந்து மூன்று மாதங்களில் தெரியவரும்.

ஆனந்தசங்கரி அவர்களின் அரசியல் மறுபிரவேசத்தின்போது அவர் அரசாங்கத்தின்மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் நியாயமனவைகளே, இன்றைய நிலையில் தமிழ் மக்கள் பிச்சையெடுக்கும் சூழலையே இந்த அரசாங்கம் உருவாக்கியுள்ளது. யுத்தத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களே சின்னாபின்னமாக அழிக்கப்பட்டது. இப்பகுதியில் ஒரு சில பகுதிகளிலேயே மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மக்களுக்கு அதைக் கட்டிக்கொடுக்கிறோம், இதைக்கட்டிக் கொடுக்கிறோம் என மக்களை ஏமாற்றி வருவதுடன் உலக நாடுகளையும் இந்த அரசாங்கம் ஏமாற்றி வருகிறது என அரசாங்கத்தை சாடியுள்ளார்.

வெளிநாட்டுத் தூதுவர்கள் தமிழ் மக்களுக்கு வீடுகளையோ அல்லது ஒரு கிராமத்தையோ கட்டிக்கொடுக்க முன்வரும்போது இந்த அரசாங்கம் தாம் கட்டிக் கொடுக்கிறோம் பணத்தைத் தருமாறு கேட்கிறது. இவ்வாறான நிலையில் நாம் என்ன செய்ய முடியும், என வெளிநாட்டுத் தூதுவர்கள் கேட்கின்றனர்.வெளிநாடுகளின் உதவியுடன் ஒருசிலவற்றைக் கட்டிக்கொடுக்கின்றபோது அதை தாம் கட்டியதாக விளம்பரப்படுத்துகிறார்கள். யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதும் ஓமந்தை முதல் யாழ்ப்பாணம் வரையிலான ஏ9 வீதி மற்றும் ஏ35 வீதி, முல்லைத்தீவு - கிளிநொச்சி பிரதான வீதிகள் எங்கேயாவது புனரமைப்புக்கென கற்கள் பறிக்கப்பட்டுள்ளதா? இவற்றைச் செய்யாது வடக்கில் வசந்தம் வீசுகிறது என அரசாங்கம் தெரிவிக்கிறது. ஆனால் இங்கு புயலே வீசுகிறது. என்ற யதார்த்தத்தை உளப்பூர்வமாகப்பதிவு செய்திருந்தார். அந்த வகயில் ஆனந்தசங்கரி அவர்களின் சிந்தனை வரவேற்கக்கூடிய ஒன்றாகும்.

மஹிந்தவை தமிழ் கட்சிகளின் அரங்கத்தினூடாக இறுதியாகச் சந்தித்தபோது பயங்கரவாதம் அழிக்கப்பட்ட போது அழிக்கப்பட்ட பகுதிகளை நாம் மீளவும் கட்டித்தருவோமென தெரிவித்தீர்கள் அதனைச் செய்யலாமே எனக் கேட்டோம். அதற்கு "அது எனது தேர்தல் பிரசாரமே" எனப் பதிலளித்தார். இவ்வாறான ஜனாதிபதி ராஜபக்ஷ, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வினைத் தருவாரா? இன்றைய சூழலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பல கட்சிகள் ஒன்றிணைந்துள்ளோம். இந்த இணைவு தொடர்ந்து நீடிக்கும். எனவே இந்த உள்ளூராட்சித் தேர்தலில் நாம் கட்சி பேதங்களை மறந்து ஒருமித்த குரலாக போட்டியிட்டு அனைத்து பிரதேச சபைகளையும் வென்றெடுப்போம். என்றும் கூறியிருந்தார், அவரது எண்ணம் நிறைவேற பிரார்த்திப்போம்.

முக்கியமாக கட்டுரையில் சுட்டிக்காட்ட விளையும் விடயம், கருத்து வேறுபாடு ஒற்றுமையின்மை காட்டிக்கொடுப்புக்களும் எம்மினத்திடையே காலாகாலமாக இரத்தத்தில் ஊறிவிட்ட ஒன்று. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் தமிழீழதேசம் இருந்தபோது நகமும் சதையும் போல் இருந்தவர்கள்கூட பதவி பணம் அதிகார மோகத்தில் தன்னிலை மறந்து பாதிக்கப்பட்ட மக்கள் நலனை சிந்திக்காமல் இந்திய ஆதிக்கத்தின் மாயைக்குள்ளும், இலங்கை அரசாங்கம் விரித்து வைத்துள்ள வலைக்குள்ளும், தெரிந்தோ தெரியாமலோ தாம் புதையுண்டுபோவதும் போதாமல். மக்களையும் சிக்கிவிட எடுகோலாகி கொண்டிருக்கின்றனர்.

சுதந்திரமடைந்த இலங்கைக்குள் ஈழத்தமிழர்கள் விடுதலையைத்தேடி பற்றிய ஆயுதம் பலசக்திகளின் சதியால் வெற்றியின் விளிம்பில் தடுக்கப்பட்டுள்ளது.தற்போது ஈழத்தில் களம் அனுசரணையாக இல்லாவிட்டாலும் புலம்பெயர் தேசங்களில் போராட்டத்தின் குறியீட்டை எட்டுவதற்கான வழிகள் போராட்டக்காலத்தில் தேசியத்தலைவரால் ஏற்படுத்தப்பட்டே இருக்கின்றன. போராட்ட முறைகள் மாற்றப்பட்டிருக்கலாம் ஆனால் அதன் உத்வேகம் எவரிடமும் குறைந்து போனதாக அறியமுடியவில்லை. அந்தவகையில் மஹிந்த ராஜபக்க்ஷவின் லண்டன் பயணத்தின்போது புலிக்கொடியுடன் வெற்றிகரமாக ராஜபக்க்ஷவை தமிழர்கள் விரட்டிய நிகழ்வு போராட்ட நோக்கத்தின் புள்ளியை அடைவதற்கான சிறந்த பொறிமுறையில் ஒன்றாகக்கொள்ளமுடியும். இப்படிப்பட்ட நடைமுறைகளை சமய சந்தற்பங்களுக்கு ஏர்ப்ப மாற்றி வெற்றி கொள்ளவேண்டும் என்பதுதான் விழுந்து எழுந்து நிற்கும் தமிழினத்தின் ஆவல்.

இன்று ஆளாளுக்கு சந்திக்கு சந்தி சங்கங்களையும், அரசாங்கங்களையும், அரங்கங்களையும், உருவாக்கி, மலிவு விலையில் ஈழதேசத்து விடுதலை கிடைக்க கடைகள் திறக்கப்பட்டுள்ளன. வேறு தேசத்து மக்களும் பங்காளிகளாக சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இது எங்கு போய் முடியும் என்பது இந்த முதலாளிகள் அறிந்திருக்கின்றனரோ என்பதும் ஐயம்தான், கவர்ச்சிகரமாக தந்திரசாலி கருணாநிதியின் வழிமுறையை பின்பற்றி உடனடி வாடிக்கை காரர்களைத்தானே இந்தச்சங்கங்கள் தேடுகின்றன, எதை எவர் செய்ய முனைந்தாலும் விடுதலைப்புலிகள் என்ற முகமூடியை மட்டும் எவரும் இழக்க விரும்பவில்லை.

தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் நோர்வே, அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், இந்தியா, என்று சர்வதேசத்தையும் நட்புச்சக்தியாக உள்வாங்கிய ஆளுமையை காணலாம். தலைவர் எவரையும் உறுப்பினராக முண்டுகொடுக்க இணைத்துக்கொண்டதில்லை. இந்தியாவினதும் தமிழ்நாட்டினதும் ஆதரவை தலைவர் அவர்கள் எப்போதும் வேண்டியே வந்திருக்கிறார், ஆனால் தமிழ்நாட்டின் எழுச்சியை ஆதரவை உள்வாங்கி குழுநிலையாக இணைந்து செயற்பட அவர் ஒருபோதும் முயற்சிக்கவில்லை, கல்லெறி தூரத்திலிருந்த தமிழகத்து ஆதரவை தவறான வழியில் தூண்டிவிட்டு உறுப்புரிமை அளித்து அவர்களின் உதவியுடன் போராட்டத்தை நகர்த்த ஒருபோதும் நினைக்கவுமில்லை.

அதற்கான காரணங்களும் உண்டு, இந்தியாவுக்குள் பிரிவினையை தூண்டிவிட்ட அவப்பெயர் வரலாற்றில் விடுதலைப்புலிகளுக்கு வந்துவிடக்கூடாது என்பதில் தலைவர் உறுதியாக இருந்ததைக்காணலாம், அதுவே தலைவர் அவர்களின் வெளிப்படையான கொள்கையாகவும் இருந்தது.வாழ்வோ சாவோ போராட்டம் எல்லாம் எங்களுடனேயே இருக்கட்டும் ஆதரவு சக்திகளாக அனைத்து உலகத்தையும் இணைத்துக்கொள்ளுவோம் என்பதே தலைவரின் அறுதி இறுதியான கொள்கையாக இருந்தது இதை உலகமும் நன்கு அறியும்.

இந்த நடைமுறையே தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு சர்வதேசத்தில் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கிடைக்க காரணமகியிருந்தது. தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள்,,, இயக்கத்தின் மையப்புள்ளியிலிருந்துதான் பல கிளை அமைப்புக்களை உருவாக்கியிருந்தார், இது சிலருக்கு பிடிக்காமலிருந்ததுமுண்டு, ஆனாலும் அவரது தீர்க்கமான தொலைநோக்கு சர்வதேச அரங்குவரை ஈழப்போராட்டத்தையும் விடுதலைப்புலிகளின் உறுதிவாய்ந்த கொள்கைகளையும் கொண்டுசென்றிருந்தது.அந்த ஒருமுகப்பட்ட தலைமத்துவத்தால் தான் போராட்டம் சிதையாமலும் நடத்தை ஒழுக்கம் கட்டுப்பாடுகளையும் பேணமுடிந்தது, அத்துடன் ஆதரவு சக்திகளை அவர் அரவணைக்காமல் உதாசீனப்படுத்தியதுமில்லை.

இன்றைய தமிழ் அரசியல்வாதிகள் போல் பலதரப்பட்ட குழுக்களை திறந்துவிட்டு காய்நகர்த்தும் தந்திரத்தை தலைவர் பிரபாகரன் என்றைக்கும் விரும்பியதாகத் தெரியவில்லை, கல்லெறி தூரத்திலிருக்கும் தமிழ்நாட்டுக்குள் மூன்றாம் தர அரசியல்வாதியாக கலவரத்தை தூண்ட அவர் ஒருபோதும் எத்தனிக்கவில்லை.

ஈழத்து இறுதி அழிப்பின்போது இந்திய அரசும் தமிழக அரசும் நடந்துகொண்ட மனித நாகரீகம் கடந்த அராஜகம் சீமானைகொதித்து கோபப்பட வைத்தது. கூட்டங்கூட்டமாக மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்டதை சகிக்கமுடியாத இயலாமை, போராட்டம் சிதைக்கப்பட்ட சினம், உணர்வுள்ள சீமானை நான் தமிழர் இயக்கத்தை தோற்றுவிக்கத்தூண்டியது. தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் மீது சீமானுக்கிருந்த மதிப்பு, தமிழ்மக்கள் மீதான இனப்பற்று விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தீவிர ஆதரவாளனாக்கியிருக்கிறது, அவரது ஆதரவை தலைவரும் சரி, ஈழ மக்களும் சரி,இன்று வெளியிலிருந்து வேலை செய்யும் இயக்க உறுப்பினர்களும் சரி, மனமார ஏற்றுக்கொள்ளுகிறார்கள் என்பது நடைமுறையில் புரிந்துகொள்ளலாம்.

ஆனாலும் சீமான் மேற்கொள்ளும் அரசியல்,, தமிழ்நாட்டின் உள்ளூர் அரசியல் என்பதுடன் சீமானின் சுய சுதந்திரத்துடன் அவரது பிராந்திய சூழலுக்குட்பட்ட அரசியல் இராசதந்திரமாகவே ஈழமக்கள் எடுத்துக்கொள்ளவேண்டும். அதுதான் யதார்த்தமுமாகும். சீமானின் அரசியலில் ஈழத்தை மூன்னிறுத்தி கருத்து ஒன்றை முன்வைத்து கவிஞர் தாமரை அவர்கள் தாலையீடு செய்திருந்தார் ,தாமரை அவர்கள் ஈழப்போராட்டத்தை காரணம் காட்டி சீமானின் அரசியலில் தலையிட்ட விதம் ரசிக்கக்கூடியதல்ல.

இந்திய-தமிழ்நாட்டு அரசியல் ஈழத்தவர்களால் இலகுவில் புரிந்துகொள்ளக்கூடியதுமல்ல திராவிடக்கட்சிகளின் இடியப்ப சிக்கலான கொள்கைகள் அவர்களைத்தவிர வேறு எவராலும் புரிந்துகொள்ள முடியாத அடி முடியற்ற ஒன்று, அதே நடைமுறையை இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பின்பற்றத்தொடங்கியிருக்கிறது, தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் குடியிருப்பதால் அவர்களும் தமிழ்நாட்டின் அரசியல் மனோநிலைக்குள் வீழ்ந்துவிட்டனர் என்றே கொள்ள முடியும்.

இரத்தமும், சதைகளும், எண்ணற்ற இளம் பிஞ்சுகளின் தியாகமும்,,, ஒளிவட்டத்தை கொண்ட ஒப்பற்ற தலைவனின், உன்னத வழிநடத்தலில் உருவான விடுதலைப்புலிகள் இயக்கம் சாதாரணமானவர்களால் கையாளக்கூடிய ஒன்றல்ல, காப்பரண்களான மூலங்கள் மறைந்தும் நிமிர்ந்தும் வழிநடத்துவர் விடுதலைப்புலிகள் இயக்கம் இருந்துகொண்டேயிருக்கும்.

ஈழதேசம் இணையத்திற்காக
ஆரணி,

No comments: