Thursday, August 16, 2012

3 ம் போர்க்குற்றவாளி கருணாநிதிக்கு புதிய டெசோ பரிமாணம் பற்றி ஒரு பகிரங்கமான பதிவு.


என்றும் எங்கள் மனதின் மறக்க முடியா நினைவில் நிறைந்து நிற்கும் மூத்த அரசியல்வாதி கருணாநிதி அவர்களுக்கு!
உங்கள் நலம், மற்றும் உங்கள் சித்தம் நாம் நன்றாக அறிவோம்.  இருந்தும், இன்னும் நீங்கள் உங்கள் குடும்பங்களுடன் இனிதே நீண்ட காலம்
வாழவேண்டும் என்பதே எமது ஆவல்!. அதற்கு நீங்கள் ஒளித்து கும்பிட்டு வணங்கும் எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் புரிவாராக!..

இன்றைய சூழலில் நீங்கள் வேசமிட்டு பாசாங்கு செய்து நிமிடத்துக்கு நிமிடம் மாறுவேடமிட்டு நடித்து, ஒளித்து மறைக்கும்  ஈழம் பற்றிய உங்கள்  புதிய நாடக செய்திகள் பலவற்றை, உங்களுக்கும் தமிழ்ச்சமூகத்திற்கும்  விபரணப்படுத்திக் கொண்டிருக்கவேண்டிய தேவை இருப்பதாலும்,  புதிதாக நீங்கள் மூட்டிக்கொண்ட டெசோ என்ற புகை மூட்டத்தினுள் மறைக்க முயலும் முக்கியமான சில உண்மைகளை விபரித்து சொல்லவேண்டிய கட்டாயம் இருப்பதாலும்,    இந்தப்பதிவை எழுதி உங்களுக்கும், எனது அன்பான தமிழினத்திற்கும் பகிரங்கப்படுத்தவேண்டிய  சூழ்நிலையில், இந்தப்பதிவு மூலம் உங்கள் கறைபடிந்த வரலாற்று பாதையின் சில பகுதியினை சத்தியத்துடன் பதிவு செய்து கொள்ளுகின்றேன்!.

உங்கள்மீது, எனக்கோ எனது இனத்துக்கோ தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது.  உங்களை விரோதியாக பார்க்கவேண்டிய தேவையும் அடிப்படையில் எங்களுக்கு இருந்ததில்லை.  ஆரம்பகாலங்களில் உங்களை ஒரு கதாநாயகனாக விரும்பி வரவேற்றவர்கள்தான் ஈழத்தமிழர்கள். காலமாற்றமும் உங்கள் நடத்தையும் அனைத்தையும் புரட்டி போட்டிருக்கிறது. இன்று ஈழத்தமிழினம் உங்களை துரோகியாகவே உருவகப்படுத்திவிட்டது.. டெசோ மாநாடுகள் மட்டுமல்ல நீங்கள் தூக்கு போட்டு செத்து நியாயப்படுத்தி காட்டினாலும் இனி வரும் காலத்தில் எவரும் உங்களுக்காக கவலைப்படப்போவதுமில்லை உங்களை நம்பப்போவதுமில்லை. நீங்கள் தியாகி முத்துக்குமரனின் மரணத்தின்போது கூறியதுபோலவே கருணாநிதிக்கு ஏதோ கெட்ட நோய் பிடித்து விட்டதால் தூக்கில் தொங்கி செத்துப்போனார் என்றே கூறுவர்.

சில பத்து வருடங்களாக உங்கள் சுயநலம் சார்ந்த சூழ்ச்சி அரசியல், எங்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கி இதயம் புண்ணாக்கியிருக்கிறது, தேவையில்லாமல் உங்கள் சுயநலச் சதி எங்கள் சமுதாயத்தை கொடுமைப்படுத்தியிருக்கிறது. எதிரியான சிங்களவனின் செயற்பாட்டை நேரிடையாக நாங்கள் எதிர்கொண்டாலும், உங்களது துரோகத்தனமான சூழ்ச்சிக்கு தப்பிப்பதே எங்களுக்கு பெரும் போராட்டமாகிவிட்டது.  உங்கள் அந்திம காலத்திலும் அது தொடர்கதையாக தொடர்வதுதான் எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இந்தியா - தமிழ்நாட்டின், மொழி, அரசியல்-பொருளாதார,  மற்றும் குடிமக்களின் சிறுமை நிலைக்கு நீங்கள்தான் முழு மூல காரணகர்த்தா. 
என்றும்,  மொழிப்பெயராலும், இனப்பெயராலும் ஏமாற்றி அரசியல் செய்து உலகத்தர பணக்கார குடும்பங்களின் தலைவன், உலகப்பிரசித்தி பெற்ற மகா ஊழல்வாதி என்றும் பல ஆதார தரவுகள் மூலம் உங்கள்மீது பெருவாரியான குற்றச்சாட்டு உண்டு,  உள்ளூர் ஊடகங்கள் மட்டுமல்லாது முன்னணியிலுள்ள VICKI LEEKS, WASHINGTON POST,  NEW YORK TIMES,  GUARDIAN , BBC,  போன்ற சர்வதேச ஊடகங்களும் அவற்றை அவ்வப்போது ஆதார பூர்வமாக உறுதிப்படுத்தியிருக்கின்றன.

இன்றைக்கும் நீங்கள் மக்களை குழப்பி தூண்டிவிடும் தந்திர அரசியலை சாதுரியமாக செய்து உங்கள் அழுக்குக்களை மறைக்கவே முன்னுரிமை கொடுத்து வருகிறீர்கள்.  உங்கள் கேள்வி பதில், மற்றும் உ பி கடிதங்கள், அறிக்கைகள் மூலம் சகலரும் உங்கள் மனநிலையை நன்கு அறிவர். உங்களுக்கு அந்த செயற்பாடுகள் ஒரு மன நிறைவை தந்தாலும் பொதுவில் அவை நகைச்சுவையாகி இருக்கின்றன. அவைபற்றி நான் விலாவாரியாக அறிந்திருந்தாலும் எனக்கு நேரடியான பாதிப்பு அனுபவம் இல்லாதமையினால் அதுபற்றி ஆழமாக தொட்டு செல்லுவதை விரும்பாவிட்டாலும், உங்கள் சுயநல ஊழல் சூழ்ச்சி அரசியல், கடல் கடந்து எங்களையும் எங்கள் தேசத்தையும் மோசமாக பாதித்துக் கொண்டிருக்கிறது, 

நீங்கள் உங்கள் உள்நாட்டு அரசியலை எப்படிச்செய்தாலும்  பரவாயில்லை, அதில் ஓரளவு நியாயங்களும் இருக்கக்கூடும்,  பல வருடங்களாக பாதிக்கப்பட்டு நொந்துபோய் ரணமாக இருக்கும் எங்கள்மீது நீங்கள் இடைவிடாது இனிப்பு கலந்து நஞ்சு தெளிப்பதும், சிரித்துக்கொண்டு தீயால் சுடுவதும், எவராலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உங்கள் சுய ரூபம் அனைவரும் அறிந்து கொண்டு விட்டார்கள். உங்கள் கிலிசகேடான சூழ்ச்சி வஞ்சக அரசியலால்  எனது இனம் எவருக்கும் மண்டியிடாமல் கணிசமான அளவு முள்ளிவாய்க்கால் முட்டுக்குள் உயிரை விட்டு செத்து அழிந்து போய்விட்டது,. இருக்கும் மிச்சம் சொச்சமும் உங்கள் சூழ்ச்சிக்குள் மூழ்கி அழிக்கப்பட்டுவிடுமோ, தேவையற்ற இடைச்செருகலான நீங்கள் ஏலம் கூறி எங்கள் அடையாளங்களையும் உரிமைகளையும் எங்களையும் விற்றுவிடுவீர்களோ என்ற பயம் ஒவ்வொரு ஈழத்தமிழனிடமும் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. அந்த பேரபாயத்தை எதிர்நோக்கிய பயமே  வெளிப்படையான இந்த பதிவு.

நீண்டகாலமாக உங்கள் பதவிவெறி, குடும்ப நலன் காப்பதற்காக நீங்கள் நடத்தும் கபட சூழ்ச்சி அரசியல், அதற்காக உங்கள் வஞ்சக வலையை எங்கள்மீது  வீசி வந்தபோதும்  தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன், அவர்கள்  உங்கள் பிறவிக் குணமறிந்து முரண்படாத வகையில் எங்கள் அரசியல்த்தளத்தை உங்கள் சதி வலையில் சிக்காதவண்ணம் தப்பித்து எடுத்துச்செல்லவே முயன்று வந்திருக்கிறார். இருந்தும் உங்கள் கூட்டாளியான இந்திய மத்திய அரசின் விஷமமான வெளியுறவு சதி, மற்றும்  உங்கள் தலைமையிலான தமிழக அரசின் திட்டமிட்ட சதித்திட்டத்தால், இறுதியில் சர்வதேச அரசியற் களம் உங்கள் சதிவலையிலும் எங்களை சிக்க வைத்ததுண்டு, அந்த நேரங்களில் குறிப்பாக முள்ளிவாய்க்கால், முற்றுகையின்போது தமிழீழ மக்களின் மோசமான அவல உயிர் அழிவுக்கும், தமிழ் ஈழ எழுச்சி போராட்டத்தின் வீழ்ச்சிக்கும், நீங்கள்தான் முக்கிய காரணி என்பதை உலகம் அறியும், நாங்களும் வேதனையுடன் நினைவு கூருகிறோம்.

அதுபற்றி பல நலன் விருப்பிகள் பலமுறை உங்களிடம் கருணை கோரிக்கை வைத்து ஏமாந்ததும் உண்டு!.  இன்னும் பலர் நிதர்சனத்தை எடுத்து சொல்லி உங்களை நியாயமாக நடக்கும்படி கேட்டு பல  வேண்டுகோள் வைத்து உங்கள் செயலுக்காக காத்து ஏமாந்து போனதுமுண்டு!. பலர் அழுதும், திட்டியும் தீர்த்திருக்கின்றனர். தமிழ் நாடே கொதித்து போராடி தோத்துப்போனதும் நீங்கள் மறந்திருக்க முடியாது. தெருத்தெருவாக தீக்குளித்து உயிர் விட்டவர்களை நீங்கள் மனிதர்களாக கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை, இன்று நான் மட்டுமல்லாது முன்பே பல தமிழகத்து அரசியல் அறிஞர்களும், கல்விமான்களும் அதுபற்றி நேரடியாகவே சான்றுகளுடன் கடுமையான கண்டனமாக அவற்றை பதிவுசெய்திருக்கின்றனர். அதை மூடிமறைக்க நீங்கள் பற்பல அவதாரங்கள் எடுத்து புதிய சூழ்ச்சிகள் மூலம் எத்தனை நாடகங்கள் ஆடினாலும் இனியும் தமிழினம் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பதே நிதர்சனம்,. அதனால் ஒட்டுமொத்த தமிழினத்தின் வெறுப்புக்கும் வெட்க்கக்கேடான பழிப்புரைக்கும் நீங்கள் ஆளாகியிருக்கிறீர்கள்.  மாபெரும்  சூழ்ச்சிக்காரன், பச்சோந்தி தனமான மனிதன் கருணாநிதி என்றே இன்றைக்கு அகில உலக தமிழ் இனம் நம்புகிறது.

இன்று மட்டும் புதிய டெசோ என்ற மயக்க புகையை மூட்டி குறளிவித்தை காட்ட இந்த வயதிலும் உங்களால் எப்படி முடிகிறது. உங்களுக்குள் இருக்கும் இதயம் மனிதனுக்குரியதுதானா என்ற கேள்வி எவரிடமும் எழுவது தவறென்று எவராவது வாதாட முடியுமா?

தமிழ் ஈழ மக்களின் தொன்மையான வரலாற்று விபரமறிந்த பலர் தமிழகத்திலிருந்தும், தமிழ் ஈழத்திலிருந்தும், ஈழமக்களின் விபரிக்க முடியாத இன்னல்களையும் எங்கள் அரசியல் சூழ்நிலைகளையும்  முக்கியமான சமையங்களில் உங்களை நம்பாவிட்டாலும் சம்பிரதாய முறைக்கேனும்  நீங்கள் ஒரு அரசியல் வியாதி என்ற முறையிலும் அப்போதய முதலமைச்சர் என்ற முறையிலும்  உங்களுக்கு தெரியப்படுத்தியே வந்திருக்கின்றனர். தவிரவும்  செய்தி ஊடகங்களும் தொலைக்காட்சிகளும்  ஈழத்து மக்களின் முள்ளிவாய்க்கால் அவலநிலையை பதட்டத்துடன்  நிமிடத்துக்கு நிமிடம் உலகத்தின் கடைசி புள்ளிவரை கொண்டு சேர்த்துமிருக்கிறது, அத்தனைக்கும் தமிழகத்தின் முதலமைச்சராக, மத்திய அரசின் நடத்துனராக, அதிகாரத்துடன் இருந்த நீங்கள் அனைத்திலும்  எதிர்மறையான செயலையே 2009 மே 19 வரை மனிதத்தன்மையில்லாமல் முள்ளிவாய்க்காலில் ஈடேற்றி முடித்தீர்கள்.

கருணாநிதி மத்திய அரசுக்கு ஒரு மிரட்டல் மூலமே  இறுதிப்போரை நிறுத்தியிருக்கலாம், அதற்கான அனைத்து அதிகாரங்களும் சக்தியும் அவரிடம் இருந்தது, மத்திய மானில அரசுப் பதவிகளை தக்க வைப்பதற்காகவும் ஊழல்களை மூடி மறைக்கவும்,  வேண்டுமென்றே காலங்கடத்தி விடுப்புக்காட்டி மத்திய அரசின் ஈழ அழிப்பு சதிக்குள் விழுந்து கருணாநிதி துணை போய்விட்டார் ஆனாலும் மத்திய அரசுதான் முக்கிய காரணி என்று விபரமறியாத பலர் கூறுவதுமுண்டு. கருணாநிதியால் இதற்குமேல் முடியவில்லை பலமுனைகளில் பாடுபட்டு தோத்துப்போனார் என்றும் திருமா போன்ற காங்கிரஸ்+ திமுக ஆதரவாளர்கள் கூறுவதுண்டு.

1) ஆனால் உண்மை என்னவென்றால் விடுதலைப்புலிகள் இயக்கம் இருந்தால் கருணாநிதி தன்னிச்சையாக சூட்டிக்கொண்ட தமிழின உலகத்தலைவர் பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள முடியாது நாளடைவில் அது தன்னாரவாரம் பறிபோய்விடும் என்ற உள் எரிவும்,

2) எந்த நெருக்கடி நிலையிலும் தேசியத்தலைவன் பிரபாகரன் வந்து தனது காலடியில் விழுந்து யாசகம் கேட்கவில்லை, ஈழத்தமிழினமும் பிரபாகரனை நம்பிக்கையுடன் பின்பற்றி கருணாநிதியை மதிக்கவில்லை என்ற ஓர வஞ்சகம்.

3) 30 ஆண்டுகள் தாண்டியும் போராட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் இயக்கம், ஊழல் மோசடி எதுவுமில்லாமல் நேர்மையாக ஒழுக்கமாக இருந்து முப்படைகளையும் வைத்து ஆட்சி நடத்தி வருகிறார்களே தமிழ்நாட்டு தமிழர்களும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை தார்மீக தமிழர் தலைவனாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டார்களே என்ற தாங்க முடியாத வயிற்றெரிச்சல் காழ்ப்புணர்ச்சியும்,

4) இவ்வளவு நெருக்கடியான நேரத்திலும் தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவியிலிருந்த கருணாநித்யை ஒரு பொருட்டாக மதிக்காமல் தமிழக தமிழர்கள அனைவரும்  ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அனைவரும் ஒரே அணியாக பிரபாகரனை ஆதரித்து நிற்கிறார்களே என்ற பொறாமையும்.

5)  ஈழத்தமிழர்களை காப்பாற்றப்போனால் சோனியாவை சந்திக்க நேரம் கிடைக்காமல் போகும், மத்தியில் நிச்சியம் பசையுள்ள மந்திரிப்பதவிகள் பறிக்கப்பட்டுவிடும், படிப்பறிவு குறைந்த அழகிரியை வரலாற்றில் மந்திரி ஆக்கிவிட முடியாது, செல்வ மகள் கனிமொழிக்கு மானிலங்களவை எம்பி என்ற பதவியை எதிர்பார்க்க முடியாது. அதி உச்சமாக 2G ஊழலில் சட்டச்சிக்கலிலிருந்து தப்பிக்க முடியாது. 

6)  தமிழக மக்களையும், எம்ஜீஆர் அவர்களையும், நெடுமாறனையும், வைகோவையும், சீமானையும் முன்னிலையில் மதிக்கும் ஈழத்தமிழர்கள் ஒரு பெரிய கட்சித்தலைவரான கருணாநிதியை கணக்கெடுக்கவில்லை என்ற வயிற்றெரிச்சல் தமிழீழத்தை எரிய துணை நின்றதென்பதே உண்மை.

இன மொழி இராணுவ அடக்குமுறை விரோதத்தை வென்றெடுக்க  ஈழத்தமிழன் 30 ஆண்டுகளாக சிங்களவனுடன் போராடினான் ஆனால் சிங்களவனால்  தமிழனை இலகுவாக வெல்ல முடியவில்லை,  ஆனால் கருணாநிதி  எரிச்சல், பொறாமை, இயலாமை, காழ்ப்புணர்வு  ஆகிய கீழ்த்தரமான உணர்ச்சிகழுக்காக சூழ்நிலையை சாதகமாக்கி சுயநலனுக்காக ஈழத்தை எரிக்க வஞ்சகமாக தீமூட்டினார், என்பதே உண்மை. இது ஆயிரம் ஆண்டு கடந்தும் வரலாற்றில் நிலைத்து நிற்க்கும்.

ஒருவேளை கருணாநிதி நீங்கள் உங்கள்  குறுகிய பார்வையை களைந்து சுயநலன் மறந்து மாற்றிச்சிந்தித்து செயற்பட்டு, முள்ளிவாய்க்கால் போரை நிறுத்தியிருந்தால்! இன்றல்ல என்றைக்கும் உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக, முத்தமிழ் வித்தகராக, கலைஞர் கருணாநிதியே நீங்களே திகழ்ந்திருக்க முடியும். இன்று சுயமாக கருணாநிதியும் சில ஆதரவாளர்களும் கருணாநிதியை மேற் சொன்ன அடைமொழி கொண்டு ஒரு சமாதனத்திற்க்காக விளித்தாலும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் வரலாறு இல்லை என்பதே நிதர்சனம்,..

கருணாநிதி நீங்கள் ஒரு பெருத்த கோடீஸ்வரர் என்ற முறையிலும், முக்கியமான கட்சி அரசியல் நடத்தும்  தலைவர் என்ற முறையிலும், ஈழத்தின் அயல் நாட்டின் ஒரு மானிலத்தில் முதலமைச்சராக இருந்தவர் என்ற முறையிலும், வயதில் மூத்தவர் என்ற முறையிலும் ஈழத்தமிழர்களின் சூழலை நீங்கள் கொஞ்சமேனும் அறிந்திருக்க நியாயமுண்டு, அந்த வகையில் மனிதத்தன்மையுடன் எங்கள் இடரை அவல நிலையை அறிந்து உதவி செய்யாவிட்டாலும், உபத்திரவம் செய்யாமல் விலகி நிற்பீர்கள் என நாங்கள் எதிர்பார்த்து தொடர்ச்சியாக ஏமாந்து போனோம்,. உங்களை எவராலும் இலகுவாக புரிந்து கொள்ள முடியாது என்பதும், பிடிகொடுக்காமல் பேசுவதில் அழிப்பதில் வல்லவர் என்பதும் நன்கு தெரிந்தவைதான்.

எங்கள் ஈழ அரசியல், போராட்ட விடயங்களில் இடைச்செருகலாக நீங்கள் புகுந்து தொடர்ச்சியாக செய்த சதி அரசியல், ஈழமக்களுக்கு சோதனையாகவும், வேதனையாகவும், துன்பமாகவும் அமைந்து பல இலட்சம் மனிதப் படுகொலையில் முடிந்திருக்கிறது. படுகொலைகளின் பின்னும் தப்பித்தலுக்காக  உங்களுக்கு சாதகமான நியாயப்படுத்தல்களை தொடர்ந்து வெளியிட்டபோதும் எவரும் உங்களை நம்பி உங்கள் பின்னால் வர விரும்பவில்லை,  உங்கள் வஞ்சகமான அணுகுமுறைகளால் பல இலட்சம் மக்கள் கொல்லப்பட்டதையும் நீங்கள் மறுக்க முடியாது!  அனைத்து சந்தற்பங்களிலும் உங்களை திருத்திக்கொள்ளும்படி சுட்டிக்காட்டி   கடுமையாக விமர்சித்து உண்மை நிலைகளை உங்களுக்கு புரிய வைப்பதற்காக பல மனிதாபிமான அமைப்புக்கள் மற்றும் மனித நலன் விரும்பிகள் தனி மனிதர்கள் இடைவிடாது  பலமுறை பல பகிரங்க மடல்களை எழுதி, பத்திரிகைகள் மூலமாகவும் வேறு பல ஊடகங்கள் மூலமாகவும் கடிதங்கள் மூலமாகவும், ஈழத்தின் நிதர்சனத்தை உங்களுக்கும் உங்கள் கட்சிக்கும் சொல்லியிருக்கின்றனர். எதையும் நீங்கள் உள் வாங்கிக்கொண்டதாக தெரியவில்லை.

மனைவியின் பெயருக்கு வந்த கடிதத்தை அனுமதியில்லாமல் கணவன் பிரித்து படிப்பதும், கணவனின் நாட்குறிப்பை அனுமதியில்லாமல் மனைவி படிப்பதும் அவ்வளவு அநாகரீகம் என்பது எங்களது கருத்து.  அதேபோலத்தான் எங்கள் அரசியலில் நீங்கள் ஊடுருவி விட்டேந்தியாக தலையிடுவதாக நாங்கள் நினைக்கின்றோம். அதை நாங்கள் எவரும் விரும்பவுமில்லை உங்கள் புதிய டெசோ அரங்கத்தின் அமர்வுகளில்  அவற்றை புரிந்து கொண்டிருப்பீர்கள் என்றே நம்புகிறோம். தொல்காப்பியர் எழுதிய காப்பியத்துக்கும், வள்ளுவரின் குறளுக்கும் சிலாகித்து பூங்காவனம் எழுதிய உங்களுக்கு அவை புரியும் என்று நினைக்கிறோம்.

கடைசியாக நீங்கள் கெட்டு வீழ்ந்த வீழ்ச்சியை இட்டு கட்டி நிரப்புவதற்காக, போர் முடிந்து மூன்று வருடம் கழித்து ஈழ மக்களுக்கு மருந்து தடவுகிறேன், என இடைச்செருகலாக புகுந்து ஈழத்தமிழர்களை கலந்து ஆலோசிக்காமல்,  தமிழர்கள் அல்லதா உங்கள் வட நாட்டு வட்டத்தை கூட்டி, வஞ்சக மாநாடு நடத்தியது, திறந்த வீட்டிற்குள் ஏதோ நுழைந்துவிட்டதுபோன்ற உணர்வை எமக்கு ஏற்படுத்தி அருவருப்புடன் எரிச்சலடைய வைக்கிறது. நீங்கள் அவசரப்பட்டிருக்கவேண்டிய காலம், 2008/ 2009 ம் ஆண்டுகள், இன்று சூரிய அஸ்தமனத்தின்பின் உங்களுக்கு ஞானம் பிறந்ததுபோல் நடிப்பதால் உங்கள் பிறவிக்குணம் மாறிவிடாது என்பதும் எங்களுக்கு தெரியும்.

ஊழல் கூற்றச்சாட்டில் சிக்கி உங்கள் மகள் திஹாரில் இருந்தபோது நீங்கள் பட்ட பதகழிப்பும், பதட்டமும் இலட்சக்கணக்கான மக்கள் ஈழத்தில் செத்து சுடுகாடானபோது நீங்கள் காட்டியிருக்கவில்லை, இரும்புபோல, கருங்கல்போல, மரம் தடிபோல, செத்த பிணம் கணக்காக இதயமின்றி கிடந்தீர்கள்.  இப்போ மட்டும் எதற்காக குறளிவித்தை, அங்கே ஈழத்தில் மருந்து தடவுவதற்கு இப்பொழுது போர் நடக்கும் காலமல்ல. போர்க்குற்றவாளிகளை இனங்காட்ட நாங்கள் சர்வதேச ஆதரவை பெற்றுக்கொண்டிருக்கிறோம், நடந்த போருக்கு நீங்களும் முக்கிய சூத்திரதாரி என்பதை சர்வ தேச நீதிமன்றம்வரை கொண்டு செல்ல நாங்கள் தயாராகி போராடும் இந்த நேரத்தில், நானும் கூட என்று நீங்கள் புகுந்துகொள்வதை யாரால் அனுமதிக்க முடியும்? போர்க்குற்றவாளி (1, ராஜபக்க்ஷ, -(2 இந்திய மத்திய அரசு, -(3, அன்றைய தமிழக முதலமைச்சரான நீங்கள்தான் எங்கள் குறிக்கோள்)

எங்கள் போராட்டம் எவ்வளவு நியாயமானது என்பதை உங்களையும், உங்கள் கூட்டாளி அன்னை சோனியாவின் கட்சியும் தவிர, தமிழகத்தில் அனைவரும் அறிவர், நேற்று நீங்கள் டெசோவுக்கு விருந்தாளியாக அழைத்திருந்த உங்கள் நண்பன், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான்: இலங்கைத் தமிழர்கள் பிரச்னையை, வடமாநிலத்தவர்கள் அறிந்து கொள்ளவே இல்லை. ஈழத் தமிழர் என்றால் விடுதலைப் புலிகள்; பயங்கரவாதிகள் என்றே கருதி வருகின்றனர். எனவே, ஈழத் தமிழர்களின் உண்மை நிலையை விளக்க, வடமாநிலம் முழுவதும் கூட்டங்களை, "டெசோ' அமைப்பு நடத்த வேண்டும். "அமைதியான வழியில் போராடி அதனால் பயன் கிடைக்காமல் போகவே, விடுதலைப்புலிகள் கையில் ஆயுதங்களை எடுக்கவேண்டி இருந்தது என்ற உண்மை" தமிழக மக்களை தவிர மற்ற மாநில மக்களுக்கு தெரியவதில்லை. என்று கூறியிருந்தார் (டெசோ அரங்கில் உங்களுக்கு தெரியாமல் பஸ்வானுக்கு அந்த தகவலை யாரோ தெரிவித்திருக்கின்றனர்.) அவர் வேற்று மொழிக்காரரக இருந்தாலும் விடுதலைப்புலிகளையும் ஈழ விடுதலைப்போரையும் குறுகிய நேரத்தில் அறிந்தளவுக்கு  நீங்கள் தெலுங்கரானாலும் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து தமிழர்களால் ஐந்துமுறை முதலமைச்சராகி பல பில்லியன் கோடி சொத்து சேர்த்து வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கும்  நீங்கள் நீண்ட காலத்தில் உணரவில்லை அல்லது அறிந்திருக்கவில்லை.

நேற்றைய முன்தினம் 12-08-2012 அன்று நீங்கள் எவ்வளவோ பிரயத்தனப்பட்டு எங்களின் பெயரால் கூட்டி முடித்திருந்த அடுத்த சூழ்ச்சித்திட்ட நாடகமான புதிய டெசோ, ஈழ மக்களின் வாழ்வியல் சீரழிப்பு, மாநாடுபற்றி நாங்கள் உள்ளூர விரும்பாவிட்டாலும், எதுவும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஏனென்றால் நாங்கள் இதைவிட பல பெரிய எதிர்ப்புக்களையும் சிறுமைகளையும் சந்தித்து வந்தவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அத்துடன் நீங்கள் சாகும்வரை எமக்கு எதிராக இப்படி ஏதாவது செய்து கொண்டிருப்பீர்கள் என்பதும் நாங்கள் எதிர்பார்த்ததுதான். அது இன்று நேற்று உள்ள கதையல்லவே நீங்கள் பிறந்ததே எங்களுக்கு வலிதானே.  மறைந்த மாமனிதன் எம்ஜீஆர் அவர்கள் எவ்வளவு தீர்க்க தரிசனமாக உங்களை தீய சக்தி என்று வர்ணித்து மிகச்சரியாக பட்டஞ்சூட்டியிருந்தார்,

பண்டாரவன்னியனுக்கு காக்கை வன்னியன்போல, கட்டபொம்மனுக்கு எட்டப்பன்போல, எங்களுக்கு நீங்கள் வந்து பிறந்திருக்கிறீர்கள்.   எட்டப்பன், காக்கை வன்னியன் என்ற பெயரை தமிழர்கள் எவரும் குழந்தைகளுக்கு சூட்டுவதில்லை அதுபோல உங்கள் பெயரையும் இப்போ ஈழத்தமிழர்கள் எவரும் குழந்தைகளுக்கு சூட்டுவதில்லை. வருங்காலத்தில் எட்டப்பன், காக்கை வன்னியன், என்ற பெயர்கள் வரிசையில் கருணாநிதி என்ற பெயர்கள் தமிழ்த்துரோகிகளின் பெயர்களாக நிலைத்து நிற்கும் என்பதை உங்கள் உள் உணர்வாகுதல் ஏற்றுக்கொண்டிருக்கும். என்று நம்புகிறோம். உங்கள் பெயரை சொன்னாலே எமது மக்கள் காறித்துப்புகிறார்கள். சிலபேர் உங்களின் செயற்பாட்டால் தமக்கு தாய் தந்தையரால் பிறந்தபோது சூட்டப்பட்ட கருணாநிதி என்ற பெயரை மாற்றிக்கொண்டு விட்டனர்  கருணாநிதி என்ற பெயரை உடைய சிலர் ஈழத்தில் தற்கொலை செய்து கொண்டதுமுண்டு. அவ்வளவுக்கு உங்கள் பெயர் ஈழதமிழர் மத்தியில் அருவருப்பையும் வெறுப்பையும் தோற்றுவித்திருக்கிறது. 

நீங்கள் சாகும்வரை உண்ணாவிரத நாடகம் நடத்தியபோது அது பச்சைப்பொய் என்பதை எல்லோரும் அறிந்தே இருந்தனர். ஆனால் எனது ஊரில் ஒரு சில சிறுவர்கள் நீங்கள் உண்ணாவிரதம் இருந்தபோது தியாகி திலீபனைபோல நீங்களும் உண்ணாவிரதமிருந்து செத்துப்போவீர்கள் என எண்ணி கவலைப்பட்டு வீணாகிப்போனதுமுண்டு. சில விபரமறியாத தாய்மார்கள் இந்த சந்தற்பத்திலாவது நாசமாப்போவான்  செத்துப்போகட்டும் என்று மகிழ்ந்ததையும் நான் கண்ணார கண்டிருக்கிறேன். ஏமாளியான நான் கூட நீங்கள் ஒரு 24 மணி நேரமாவது ஊண் ஒறுத்து உட்காருவீர்கள் என நம்பி ஏமாந்துபோனேன்.

இறுதியாக ஒன்றையும் பதிவு செய்ய விரும்புகிறேன் என்ன நடந்தாலும் ஏது நடந்தாலும் எங்கள் தலைவர் பிரபாகரன் அவர்கள் என்பதை உங்களுக்கு மட்டுமல்லை உலகத்திற்கும் நாங்கள் சொல்லிக்கொள்ளுகின்றோம் ஈழ மக்கள் வேறு விடுதலைப்புலிகள் வேறல்ல, லண்டனில் கோபி சிவந்தன் உண்ணாவிரதம் இருந்தாலும் அதன் முன்புறமும் பின்புறமும் விடுதலைப்புலிகள்தான் என்பதை புரிந்துகொள்ளுங்கள். நடைப்பயணம் தொடர்ந்தாலும், பேரணி நடந்தாலும், விமான நிலைய போராட்டம் நடத்தினாலும், எங்கள் கையில் புலிக்கொடியே தவழும் அது எங்கள் இலட்சியம், எங்கள் தேசியக்கொடி என்றால் அது புலிக்கொடிதான் அதை எமது சர்வதேச போராட்டங்களில் நீங்கள் கண்கூடாக கவனித்திருக்க முடியும் இந்தியா தடை செய்திருக்கிறது என்பதற்காக நாங்கள் வேறு கொடி பிடிக்கவோ வேறு பெயரைச்சொல்லவோ நாம் தயாராகவில்லை. தமிழகத்தில் சீமான், அண்ணன் வைகோ, நெடுமாறன் ஐயா அவர்களுமே தயாராக இல்லை என்பதை நீங்கள் அறிந்தே இருப்பீர்கள் சகோதர யுத்தம் என்று குளப்பிவிடும் தீய் சக்தியே நீங்கள்தான். தயவு செய்து எங்களை விட்டு தூர விலகிவிடுங்கள் புண்ணியமாப்போகும்.

அடுத்த அதிர்ச்சி செய்தியாக உங்கள் புதிய டெசோவை ஆர்ஜண்டீனாவில் கூட்டுவதற்கு நீங்கள் முயற்சிப்பதாக அறிந்தேன் உள்ளூரில் விலைபோகத சரக்கை வெளியூரில் விற்கலாம் என்பது அறிவீனம், ராஜபக்க்ஷவுக்கு லண்டன் விமானநிலையத்தில் அடித்த ஆப்பு உங்களுக்கு நினைவிருக்கலாம். இருந்தும் ரஜபக்க்ஷ ஓடி தப்பிக்கக்கூடிய ஆரோக்கியம் உள்ளவர் உங்கள் நிலையையும் ஐயோ கொல்றாங்களே என்று ஒரு இரவு நீங்கள் அலறிய காட்சிமட்டும் எனது ஞாபகத்திற்கு வருகிறது நீங்கள் வேண்டுமானால் டில்லிக்கும் சென்னைக்கும் விமானப்பயணம் செய்யுங்கள் ஐரோப்பா அமெரிக்க நாடுகளுக்கு பயணம் செய்ய யோசிப்பீர்களானால் அது உங்களுக்கு மிகுந்த சவாலாகவே அமையும்  சிலவேளை போர்க்குற்றவாளி 3, என்று சர்வதேச பொலிசாரால் கைது செய்யப்படவும் கூடும்.

ஈழதேசம் இணையத்திற்காக ஊர்க்குருவி.

No comments: