2012 டிச 07 அன்று பாராளுமன்றத்தில்  2013ஆம் ஆண்டுக்கான இலங்கை அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட பாதுகாப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் அவர்கள், விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம் என்றும், அவர்கள் மனித உரிமைகளை மதிக்காத காரணத்தால் அழிந்து போனார்கள் என்றும்.  இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் நிலைகொண்டிருக்கும் இராணுவம் எக்காரணம் கொண்டும் வெளியேறவேண்டும் என்ற கொள்கை தமது கட்சிக்கு என்றைக்கும் இல்லையென்று, எந்த கூச்சமுமில்லாமல் பகிரங்கமாக வாக்குமூலம் கொடுத்திருந்தார். இது தமிழ் அரசியல் அரங்கில் ஞாபகசக்தி கம்மியானவர்களுக்கு பழைய செய்தியே,  இருந்தும் தாக்கம் தமிழினத்துக்கு மிக மோசமானது என்ற உணர்வின் பிரதிபலிப்பே இந்த பதிவு.
 
இராணுவத்தை தமிழர் குடியிருக்கும் பிரதேசங்களிலிருந்து விலக்கிக்கொள்ளும்படி தாம் ஒருபோதும் கோரவில்லையென்று, (எவராகினும் இந்தக்கருத்தின் எதிர்வினையை தயவுசெய்து ஒருமுறை மீட்டுப்பார்த்துக்கொள்ளவும்) இலங்கையின் இனவாத ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய மட்டும் வெளியிடும் கருத்துக்கு சற்றும் குறைவின்றி சிங்கள இன அழிப்பு கொள்கையை அப்படியே வழி மொழிந்து அதிர்ச்சிகரமாக கருத்தை திரு சம்பந்தன் தெரிவித்திருந்தார். இதற்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மற்றய கட்சிசார்ந்தவர்கள் கூட இன்றுவரை மெளனமாக இருந்து வருவது கவலையளிக்கிறது.
 
சம்பந்தர் அவர்களின் துரோகத்தனமான இன அழிப்பு கொள்கைக் கருத்து தமிழர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை உண்டுபண்ணியிருந்தது. சம்பந்தரின் பாராளுமன்ற பேச்சை கண்டித்து தமிழ் ஊடகங்கள்,  தேசிய  உணர்வில் உடன்பாடுகொண்ட புலம்பெயர் தேசங்களில் உள்ள இணையத்தளங்கள் தமது எதிர்ப்பையும் கண்டனங்களையும் அதிர்ச்சியையும் வெளியிட்டன.  தாயகத்தில் மக்கள் எந்த எதிர்வினையையும் காட்ட முடியாத இராணுவ அடக்குமுறை தொடர்வதால் தாயக மக்களின் மவுனத்தின்பால் எந்த கருத்துக்கும் வரமுடியாது என்பது நிதர்சனம்.  தொடர்ந்து ஈழத்தில் இதே அபல நிலை பேணப்படவேண்டும் என்பதே சம்பந்தரின் கருத்தாக எடுத்துக்கொளலாம் அல்லவா!
 
சில துரோகிகள் கூட சம்பந்தர் கூறியதுபோன்ற தமிழர் விரோத மோசமான இன அழிவு கருத்தை இதுவரை தெரிவித்திருந்ததாக தெரியவில்லை. சம்பந்தர் எந்தக்கூச்சமும் இல்லாமல் தமிழர்களை அழிக்கும்விதமாக பாராளுமன்றத்திலும் வெளி மேடைகளிலும் இப்படி முழங்குகிறார் என்றால் சம்பந்தர் மற்றும் அதற்கு துணை போபவர்களையும் பலமிக்க சக்திகளால் விலை கொடுத்து வாங்கப்பட்டுவிட்டனர் என்ற முடிவுதவிர வேறு முடிவுக்கு எவராலும் வரமுடியாது.  ஏனெனில் ஸ்ரீலங்கா சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகளாக எதற்காக தமிழர் தேசிய சக்திகள் போராடிவருகின்றனவோ அதற்கு விரோதமாக முதல் முதலாக ஒரு தமிழ் அரசியல்வாதியிடமிருந்து இப்படியான கருத்து வந்து விழும்போது எவருக்கும் வேறு எப்படி சிந்திக்க முடியும். டக்கிளஸ், கருணா, பிள்ளையான், கேபி அனைவரினது பாடங்களும் அதைத்தானே தமிழனுக்கு கசப்புடன் போதித்து போயிருக்கின்றன. அதன் எதிர்த்தாக்கம்தானே சிங்களக்குடியேற்றங்களை எதிர்க்கமுடியாத கையறு நிலை.  கேட்பாரற்ற அபலை பெண்பிள்ளைகளின் திட்டமிட்ட இராணுவ இணைப்பு .
 
சம்பந்தரின் உள்ளக்கிடக்கை 2012 டிச 07 அன்றுதான் வெளிவந்த ஒன்றாக கருத முடியவில்லை. வெவ்வேறு சந்தற்பங்களில் முரண்பட்ட  கருத்துப்பட அவரது பேச்சு கவனிக்கப்பட்டே வந்தும் இருக்க்கிறது. 2011 நவம்பரில் அமெரிக்க,  கனேடிய சுற்றுப்பயணத்தின்போது வடக்கு கிழக்கை நாம் எமது சொந்தம் என்று சோல்லவரவில்லை என்று தனது வக்கிரமான இன அழிப்பு கொள்கையை கனடாவில் தமிழர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தி வந்ததை தமிழுலகம் வெறுப்புடன் நோக்கியது.  அவர் மூப்பெய்திவிட்டதால் ஏறுக்கு மாறாக புரியாத்தனமாக பேசிவிடுகிறார் என்று சிலர் சமாதானம் செய்தும் வந்திருக்கின்றனர். ஆனால் சம்பந்தர் அவர்கள் ஏதோ பெரும் பின்னணியுடன் காய் நகர்த்துகிறார் என்பதை தமிழர்களுக்கான அரசியல் சக்திகள் ஒருநாள் உணரும்போது சம்பந்தரை இயக்கிக்கொண்டிருக்கும் பின்னணியும் அதற்குள் ஒளிந்திருக்கும் அரசியலும் காலதாமதமாக வெளிவரும். அப்போது   அனைத்தும் தொலைக்கப்பட்டு முதலிலிருந்து அனைத்தும் தொடங்கப்படவேண்டியிருக்கும்.
 
சம்பந்தரின் மனதில் இருக்கும் வக்கிர எண்ணத்தின் வெளிப்பாடாக இன்னும் ஒரு விடயத்தை குறிப்பிடவேண்டும்.  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் நண்பரும் தமிழர் விரோத தீயசக்தியாக தன்னை வெளிப்படுத்தி தமிழர் தேசியப்போராட்டத்தை சிதைப்பதற்காக தமிழர்களின் ஒரே காப்பரணான விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக சித்தரிப்பதற்கு சர்வதேச பிரச்சாரகராக செயற்பட்ட வெளிவிவகார மந்திரி லஷ்மண் கதிர்காமர், தனது நெருங்கிய நண்பர் என்றும் பகிரங்கமாக சம்பந்தர் தெரிவித்திருந்தார். கதிர்காமர் சம்பந்தருக்கு நண்பராக இருந்துவிட்டுப்போகட்டும்,  அந்த சம்பந்தர் எப்படி எனது இனத்தின் பாதுகாவலராக இருக்க முடியும் என்ற கேள்வி முள்ளிவாய்க்காலில்  குடும்பம்  பிள்ளை குட்டிகள் சிதைக்கப்பட்ட ஒரு குடும்பத்தலைவனுக்கு எழும் என்ற யதார்த்தம் ஏன் சம்பந்தரால் சிந்திக்கமுடியவில்லை. தமிழினத்தின் வாக்குக்களை பெற்று பதவி வகித்துக்கொண்டு அவ்வினத்துக்கே அள்ளிவைப்பதாக இப்பேற்பட்ட நட்பு அமையாதா?
 
கதிர்காமரின் பிரச்சாரத்தின்பால் தமிழர் தேசிய போராட்டத்தை பயங்கரவாதம் என்று விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்த அமெரிக்காவின் வெளியுறவு செயலராக பணியாற்றிய கிளாரி கிளிண்டன் ஒரு சந்தற்பத்தில் தாம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொள்கைகளை சரியாக புரிந்து கொள்ளவில்லையென்றும் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல என்பதை தாம் இப்போ புரிந்துகொள்வதாகவும் குறிப்பிட்டிருந்ததாக ஞாபகம்.
 
சம்பந்தரின் டிச 07  பாராளுமன்ற பேச்சு பழங்கதையாகிப்போன ஒன்றாகவே தமிழர் தேசியத்தை நேசிப்பதாக கூறிக்கொள்ளும் புலம்பெயர் சங்க அமைப்புக்கள் விட்டுவிட்டனவோ அல்லது சம்பந்தரின் கருத்தில் உடன்பாடு கொண்டு மவுனம் சாதிக்கின்றனவோ என்ற ஐயம் தேசியத்தை உயிராக நேசிக்கும் மூன்றாம் நிலையில் இருப்பவர்களிடம் நீறுபூத்த நெருப்பாக நெஞ்சில் கனன்று கொண்டிருக்கிறது.  ஏன் எனில் தேசியப்போராட்டத்தில் நேரடியாக வலியை சுமந்தவர்களுக்கும்,   இழப்புக்களை பெருவாரியாக பெற்றுத்தீர்த்தவர்களுக்கும் இதுபோன்ற காட்டிக்கொடுப்புக்கள் சாதாரணமாக ஜீரணிக்கக்கூடிய ஒன்றல்ல. நேரத்துக்கேற்ப நிறம் மாறி தம்மை வெளியே வெளிப்படுத்திக்கொள்ள முடிந்தவர்களுக்கு இது உறைக்கப்போவதுமில்லை. நிதர்சனத்தை மதித்து நிறம் மாறமுடியாதவர்களுக்கும் பண பலம் இல்லாமல் இன உணர்வுடன் சம்பந்தர் போன்றவர்களை நம்பிக்கையுடன் பின்பற்றியவர்களுக்கும் இது பெரும் அதிர்ச்சியே.
 
 "இயற்கை எனது நண்பன்… வாழ்க்கை எனது ததுவாசிரியன்…. வரலாறு எனது வழிகாட்டி" என்ற தீர்க்க தரிசனமான தேசியத்தலைவரின் (1984) ஒப்பற்ற தத்துவத்தை நம்பிக்கொண்டிருப்பவன் இப்பேற்பட்ட கழிவுகளுடன் தொடர்ந்து  பயணப்பட விரும்பமாட்டான்.
 
சர்வதேசத்தையும் இந்திய நன்பனையும் திருப்திப்படுத்தி இராஜதந்திர முறைமையில் தீர்வுப்பொதியை ராஜபக்க்ஷவிடமிருந்து பெறுவதற்காக சம்பந்தர் இராஜதந்திர நாடகம் ஆடுகிறார் என்று சம்பத்தரின் நட்பு வட்டத்தில் சமாதானம் சொன்னதாகவும் உறுதிப்படுத்த முடியாத வதந்தி ஒன்று உலாவுவதையும் கருத்தில்க்கொண்டு சிந்தித்தாலும்,   உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் சமாதான தூதுக்குழுக்களையும் ஏமாற்றக்கூடிய சிங்கள ராஜபக்க்ஷவுக்கு சம்பந்தர் நாடகம் ஆடி பதக்கத்தை வென்றுவருவார்  என்று நம்பினால்,  சம்பந்தரின் உற்ற கூட்டாளியான கருணாநிதி தமிழீழத்துக்காக உயிரை விடுவேன், தமிழீழம் கண்டுதான் கண் மூடுவேன்,   என்பதையும் சீரியஸாக எடுத்துக்கொள்ள முடியும்.    தமிழக முன்னாள் மூத்தவர் மு கருணாநிதி எப்பேற்பட்ட அரசியல் வியாபாரத்தை செய்கிறாரோ அதை பின்பற்றி சம்பந்தர் நகருவது வெளிப்படையாக தெரிகிறது.
 
நாடு கடந்த அரசு.
 
சிங்களப் படைகள் தமிழர் பிரதேசங்களிலிருந்து வெளியேறும் வரை இடைக்கால ஏற்பாடாக அனைத்துலகப் பாதுகாப்புப் பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டு தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும். இதற்கான அனைத்துலக மட்ட ஆதரவைத் திரட்டும் முயற்சிகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் என நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாட்டாளர் வி. உருத்திரகுமாரன்  தெரிவித்துள்ளார். தமிழர் தாயகத்தில் சிங்களப் படையினர் நிலைகொண்டிருக்கும் வரை தமிழ் மக்களுக்கு ஜனநாயகவெளியோ பாதுகாப்புணர்வோ கிடைக்கப்போவதில்லை. சிங்களப் படையினர் தமிழர் தாயகப் பகுதியில் இருந்து முற்றாக வெளியேறுவது அவசியமானதென அவர் மேலும் தெரிவித்திருந்தார். ஆனால் இலங்கையின் உள்ளக அரசியலில் நேரடி அங்கம் வகிக்கும்  தமிழர் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இராணுவம் எக்காரணம் கொண்டும் தமிழர் பிரதேசங்களிலிருந்து வெளியேறத்தேவையில்லை என்று பாராளுமன்றத்தில் சூழுரைத்து பதிவு செய்திருக்கிறார்.  நிகழ்வுகள் இப்படியிருக்கும்போது சம்பந்தரின் முரண்பாடான பேச்சு சம்பந்தமாக நாடு கடந்த அரசின் செயற்பாட்டாளர் உருத்திரகுமாரன் எந்த எதிர்வினையையும் இதுவரை தெரிவித்ததாக தெரியவில்லை. உருத்திரகுமாரன் அவர்களின் திட்டத்துக்கு சம்பந்தர் அவர்களின் கொள்கை நேரெதிரான முரண்பாட்டை நெத்தியடியாக ஒப்புவிக்கிறது.  சம்பந்தரின் கூற்றை புறந்தள்ளி நாடு கடந்த அரசுக்கு இலங்கை அரசோ சர்வ தேசமோ முக்கியத்துவம் கொடுக்குமா என்ற கேள்விக்கு யாரிடம் விடை கேட்பது?  அப்படியாயின் மக்களை ஏமாற்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு புள்ளியில் நின்று வாய்ப்பந்தல் போடுகின்றனரா என்பதை விட்டு வேறு எதை சிந்திக்கமுடியும்?
 
நாடுகடந்த அரசாங்க உறுப்பினர்களுக்கும் கேபிக்கும் தொடர்புகள் இருப்பதாக பலர் நீண்ட காலமாக குற்றஞ்சாட்டினாலும் சம்பந்தருக்கும் கேபிக்கும் இடையிலேயே அதிகமான கள்ளத்தொடர்பு இருப்பதாக மிக பலமாக அஞ்சவேண்டியுள்ளது.  சமிபத்தய நிகழ்வுகள் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துவதாகவே கட்டியம் கூறுகின்றன.
 
அவைகளை ஒரு புறம் தள்ளி வைத்தாலும் புலம்பெயர் தேசங்களில் உள்ள அமைப்புக்களில் "அனைத்துலக த்மிழர் மக்கவை"  என்ற ஒரே ஒரு அமைப்பு

மட்டும் சம்பந்தரின் கருத்துக்கு கண்டனத்தை தெரிவித்திருக்கிறது.   மற்றய அமைப்புக்களான "உலகத்தமிழர் பேரவை" இனப்படுகொலை மாநாடு நடத்திய "பிரித்தானிய தமிழர் பேரவை"  ஆகிய அமைப்புக்களுக்கு சம்பந்தரின் தமிழர் தேசிய விரோதகருத்து இன்னும் காதில் விழவில்லையோ என்றே படுகிறது.
 
அனைத்து அமைப்புக்களும்  வருடாவருடம் மாவீரர் தினத்துக்கு உரிமைகோரி துண்டு போட்டு அடம்பிடித்து இடம்பிடிக்க அடிபடுவதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உயிரினும் மேலான தாயக தேசிய விடுதலை கொள்கைக்கு கொள்ளிவைத்த சம்பந்தரை கண்டிக்க முடியவில்லை.  அல்லது துணிவுடன் சம்பந்தரின் கருத்தை திரும்பப்பெறும்படி கண்டிப்பாக கேட்டு கெளரவமாக நிர்ப்பந்திக்க கூட முடியவில்லை.  அல்லது அனைவரும் ஒரு ஆளியின் விசைக்கு ஆங்காங்கே இருந்து செயற்படுகின்றனர் என்று எண்ணவே தோன்றுகிறது.
 
உயிரினும் மேலான தேசியத்தை ஏற்றுக்கொள்பவர்கள் கறுப்பு ஆடுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
 
இராணுவம் தமிழர் தாயகத்திலிருந்து வெளியேறத்தேவையில்லை!.  விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள்!!.  வடக்கு கிழக்கு எமக்கு சொந்தமில்லை!!!.  சிங்கக்கொடியே எனது எனது சிறப்பு!!!!.  இலஷ்மன் கதிர்காமர் எனது பாசமுள்ள நண்பன்!!!!! இந்த கருத்து அனைத்தும் மிஸ்ரர் சம்பந்தனாருடையது.  இதே கருத்துத்தான் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ என்பவருடைய கருத்தும். இப்போ சொல்லுங்கள் யார் இந்த சம்பந்தர்?  இந்த சம்பந்தரின் கொள்கையை ஏற்றுக்கொள்ளுபவர்கள் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் கொள்கைக்கு விரோதமானவர்கள் என்பதே சாதாரண பார்வையாளர்களுக்கும் புரியப்படும் புரிதல். எனவே தலைவர் பிரபாகரன் அவர்களை ஏற்றுக்கொள்ளுபவர்கள் தியாக திருவிளக்குகளான மாவீரர்களை ஏற்றுக்கொள்ளுபவர்கள் சம்பந்தரின் கருத்துக்கு முரண்படவே செய்வர்.
 
போலி நோக்கத்தோடு,  ஈழம் என்ற சுலோகத்தை பெயர் பலகையில் எழுதிவைத்துக்கொண்டு   சுயலாபத்திற்காக மாவீரர் தினம் கொண்டாடுபவர்கள்,    ஈழம் என்ற ஒப்பற்ற தியாகத்துக்காக அனைத்தையும் துறந்து தம்மை அற்பணித்து  மாவீரகள் விட்டுச்சென்ற கனவுகளை  உதவியாக்கி  தமது இருப்பை மட்டும் தக்க வைப்பதற்கு வாழ முயற்சிக்கும் அனைத்து  அரசியல் சக்திகளும்  சம்பந்தர்களின் பிம்பங்களே  அந்த  கயமையை  நினைக்கும்போது அவை பற்றி விமர்சிக்க வார்த்தை இல்லை!

ஈழதேசம் செய்திகளுக்காக

ஊர்க்குருவி.