Sunday, March 3, 2013

ஜெனீவா மனித உரிமை கவுன்ஸிலின் அமர்வில் "சம்பந்த, ராஜபக்‌ஷ" வின் பங்களிப்பு என்ன.‏

2013,ம் ஆண்டுக்கான ஐநாவின் 22 வது மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஜெனீவாவில் தொடங்கியிருக்கும் தருணத்தில் எதிர்பார்த்ததும்,  எதிர்பாராததுமான பல சம்பவங்கள் நடந்து முடிந்தும்,  நடந்துகொண்டும்,   "நடக்கவும் இருக்கின்றன".
சனல் 4, வெளியிட்ட தேசியத்தலைவரின் இளைய மகன் பாலச்சந்திரனின் படுகொலை பற்றிய விவரணப்படம்.   உலகத்தை உறையவைத்ததோடு  உலகின் பலபாகங்களிலும் இலங்கையின் இராணுவ ஆட்சியின் அடக்குமுறைக்கு எதிராக பெருத்த கண்டனங்கயும் உருவாக்கியிருக்கிறது,

ஐரோப்பிய, பிரித்தானிய முக்கிய அரசியற்கட்சிகளின் எதிர்வுகூறல், தமிழக முதலமைச்சர்,   இந்திய மத்திய அரசையும் சர்வதேசத்தையும் நோக்கி எழுப்பியிருந்த கண்டன அறிக்கை,  தொடர்ந்து தமிழக,  ஈழ ஆதரவு அரசியற்கட்சிகளும்,  மக்களும் தமிழ்நாட்டில் காட்டிவரும் உணர்வுமயமான எதிர்ப்பு அதிர்வலைகள்.  டில்லியில் கூடவிருக்கும் கருணாநிதியின் டெசோ மாநாட்டு பற்றிய ஆரவாரமான பிரச்சாரங்கள்.  அமெரிக்கா மீண்டும் கொண்டுவர இருக்கும் தீர்மானம் பற்றிய முன்னோட்டம்.   ஐநா மனித உரிமை ஆணையாளர் திருமதி நவநீதம்பிள்ளை அவர்களுடைய கருத்து,  பத்திரிகை ஊடகங்களின் பாலச்சந்திரன் பற்றிய ஆழமான அலசல்கள்,  இன்ன பிற காரசாரமான விவாதங்களும் எதிர்வினைகளும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

ஶ்ரீலங்காவின் சிங்களத் துவேஷ இராணுவ அரசால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட  மனித உரிமைமீறல்கள்,  இனப்படுகொலைகள்,   போர்க்குற்றம், ஆகிய மானுட விழுமியங்களை விஞ்சிய கொடூர செயல்களிலிருந்து  ஶ்ரீலங்கா ஆட்சியாளர்களை ஒருபோதும் தப்பிக்கவிடாமல் தண்டிக்கவேண்டுமென்பதே சர்வதேச முக்கியநாடுகளின் தலைவர்களின் நிலைப்பாடாக  இருந்துவருகிறது.  (அந்த நிலைப்பாடுகளுக்கு ஏதுவாக தமிழர் தேசியக்கூட்டமைப்பு பயணிக்குமாகவிருந்தால் குறிப்பிட்ட  இலக்கை இலகுவாக அடைந்துவிடமுடியும்.)

தமிழர் தேசியக்கூட்டமைப்பு தமிழர்களுக்கான அரசியற்கட்சியென்று தப்பான ஒரு அபிப்பிராயம் உலகநாடுகளிடம் உண்டு.  ஆனால் தமிழர் தேசியக்கூட்டமைப்பு இந்தியாவுக்கும் ராஜபக்‌ஷவுக்குமான ஒத்தாசைக்கட்சி என்ற உண்மை தமிழர்களிலேயே பலர் இன்னும் அறிந்துகொள்ளவில்லை.

சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படங்களின் தாக்கம்,   உலக அரங்கில் உளப்பூர்வமாக புரியப்பட்ட அதிர்ச்சி, ஊடகங்களின் கருத்து கண்ணோட்டம் அனைத்தும் ஶ்ரீலங்காவுக்கு நேரெதிராக இருப்பதால் மனித உரிமை கவுன்சிலின் இந்த கூட்டத்தொடரில் அமெரிக்கா புதிதாக கொண்டுவர இருக்கும் தீர்மானத்தில்  அதிகமான மாற்றம்,  மற்றும் கண்டிப்பு இருக்கும் என நம்பப்படுகிறது.

இருந்தும் இவை அனைத்திற்க்கும் பின்னே திரைமறைவில் ராஜதந்திரம் என்ற பெயரில் தத்தமது நாட்டு அரசியற் கலாச்சாரத்துக்குட்பட்டு பெருத்த சதிவேலையை இந்தியா,    ஶ்ரீலங்கா ஆட்சியாளர்களால் தயாரிக்கப்பட்டுக்கொண்டிருப்பது ஜெனிவாவின்  இறுதி அமர்வின் பின்னர் தெரியவரும்.

இப்போதைக்கு அனைத்துமட்டங்களிலும் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரே ஒரு விடயம் அமெரிக்கா,   ஶ்ரீலங்காவுக்கு எதிராக இரண்டாவது தீர்மானத்தை கொண்டுவரப்போகிறது அத்தீர்மானம் ஐநா சபையில் நிறைவேற்றப்படும் பட்சத்தில் இலங்கை பெருத்த நெருக்கடிகளை  எதிர்நோக்கும் என்பதே.

ஆனால் அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் அந்த தீர்மானத்தை செயற்பாடற்றதாக ஆக்கிவிடவேண்டும் என்பதில் இந்தியா முனைப்புடன் ஈடுபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

தொட்டதற்கெல்லாம் விசாரணைக்குழு அமைத்து விடயத்தை காலதாமதப்படுத்தி நீர்த்துப்போகச்செய்து அந்தியட்டி செய்து பழக்கப்பட்ட இந்திய அரசியல்வியாதிகள்,   அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டுவரவிருக்கும் தீர்மானத்தையும் வட்டமேசை அமைத்து விசாரணை கமிஷன் போல விவாதித்து முடிவுக்குவரவேண்டுமென்று கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

அமெரிக்கா தமது பிரேரணையில் முன்வைத்துள்ள சில சரத்துக்கள் இந்தியாவினால் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றும்,  அதனால் இலங்கைக்கு எதிராக இந்த முறை அமெரிக்கா,   மனித உரிமைகள் மாநாட்டில் கொண்டு வரவுள்ள பிரேரணை தொடர்பில், ""அமெரிக்காவும், இலங்கையும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்"" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இக்கருத்தை  இந்தியா சார்பாக இந்திய வெளியுறவுகள் துறை அமைச்சர் சல்மான் குர்ஜித் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா தயாரித்த பிரேரணை குறித்து இரண்டு தரப்பும் பேசிக்கொள்வதன் ஊடாக, முறையான இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் புதிய கண்டுபிடிப்பொன்றை தெரிவித்துள்ளார்.  அப்படியொரு திட்டத்தை முன்மொழிந்து இடைத்தரகராக இந்தியாவே இருந்து ஒரு காலதாமதத்தை உண்டாக்கி இழுத்தடித்து   திசைதிருப்பிக்கொள்ளலாம் என்பது இந்தியாவின் கள்ளத்திட்டம்.

பிரேரணையில் அமெரிக்கா முன்வைத்துள்ள சில சரத்துக்கள் இந்தியாவினால் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று புரியப்படுமானால் அவைபற்றி இந்தியா விரிவாக தெளிவுயப்படுத்தியபின்  பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கலாம்.  அது இந்தியாவின் கொள்கை சார்ந்த விடயம்.  இந்தியா ஶ்ரீலங்காவுக்கு எதிராக வாக்களிக்காமல் தப்பிப்பதற்கு இதுமட்டுமல்லாமல் பல நியாயப்படுத்தல்களை எடுத்துவைக்க முடியும்,  இந்தியா,   அமெரிக்க தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்காவிட்டாலும்  அமெரிக்க தீர்மானம் தோற்றுவிடப்போவதில்லை. ஆனால் அமெரிக்காவின் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க இருக்கிறோம் சில சரத்துக்கள் ஏற்றுக்கொள்ளமுடியாதவை என்று சொல்லும்போது, அமெரிக்கா நேரிடையாக இந்தியாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவருவதுபோலவும் அதற்கு இந்தியா எதிர்ப்பதுபோலவும் படங்காட்டப்படுகிறது.

அடுத்தவருடம் வரவிருக்கும் தேர்தலை நினைவில்க்கொண்டு இலங்கைக்கு எதிராக வாக்களிக்கவேண்டிய சங்கடமும் இந்திய அரசுக்கு முட்டுக்கட்டையாக நிற்கிறது.

சென்ற வருடம் அமெரிக்காவால் வைக்கப்பட்ட தீர்மானத்தில் A9,   பாதை திறந்து விட்டது தவிர வேறு எந்தவிடயமும் தொட்டும் பார்க்கப்படவில்லை என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்,  சமீபத்தில் கவலை தெரிவித்திருந்தார். A9,  பாதை திறக்கப்பட்டதுகூட இராணுவத்தினரின் போக்குவரத்துக்கும் வழங்கலுக்கும் திறக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.  அமெரிக்க தீர்மானம் குறிப்பிட்ட வேறு எந்த விடயமும் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.   போர்க்குற்றம் புரிந்தவர்கள் விசாரிக்கப்படவேண்டும் என்ற விடயம் தொட்டுப்பார்க்கப்படவில்லை என்பது அமெரிக்காவின் முக்கிய குற்றச்சாட்டாக இருக்கிறது இதற்கு ஏன் இந்தியா குத்தி முறியவேண்டும் என்பது தெரியவில்லை.

இன்றைக்கு மட்டுமல்ல நீண்ட நெடுங்காலமாக இலங்கை தமிழர் பிரச்சினைக்குள் தேவையற்ற தலையீடுகள் செய்து  குதர்க்கம்புரியும் நேர்மை நாகரீகமற்ற நாடாக இந்தியாவே இருந்து வருகிறது.  அயலுறவு அரசியலின் இயலாமையை சரிக்கட்ட ராஜபக்‌ஷவை நண்பனாக வரித்துக் காட்டிக்க்கொள்ளுவதன்மூலம் தப்பித்துக்கொள்ளலாம் என நினைக்கும் இந்தியா,   தமிழ்நாட்டில் வாழ்ந்துவரும் ஏழு கோடி தமிழ் மக்களையும் வேற்றுக்கிரக மக்களாக அனைத்து விடயத்திலும் புறக்கணிப்புக்குள்ளாக்கி பிரிவினைக்கு வித்திட்டு நிற்கிறது.  இந்தியாவுக்குள் மிக விரைவில் பிரிவினைவாதம் தலையெடுக்கும் அபாயம் இருப்பதை வட இந்தியா இன்னும் புரிந்துகொள்ளவில்லை.

சர்வதேசத்தில் உருவாகும் அரசியல் மாற்றங்கள்,  விஞ்ஞான தொழில்நுட்ப, கலாச்சார மாற்றங்கள் அனைத்தும் திரண்ட ஒரு உருவாக உலக அரசியல் பரிமணிப்பதை இந்தியாவால் இன்னும் உணர்ந்துகொள்ள முடியவில்லை அல்லது அந்த மாற்றங்களுடன் அனுசரித்து போக இந்தியாவால் முடியவில்லை என்பது இந்திய வெளியுறவு மந்திரி சல்மான் குர்ஜித்தின் பேச்சின்மூலம் உணர முடிகிறது.

உலகமே பார்த்துக்கொண்டிருக்கும்போது ஶ்ரீலங்கா நாட்டில்  பட்டப்பகலில் பலமாதங்களாக தமிழர்கள் மீது ஒரு இரக்கமற்ற இனப்படுகொலை நடத்தப்பட்டிருக்கிறது.  அது சம்பந்தமாக ஐம்பதாயிரம் முறைப்பாடுகள் ஐநா மன்றத்தை நோக்கி சமர்ப்பிக்கப்பட்டபின்,   ஐநாவின் மூவர் அடங்கிய நிபுணர்கள் குழு ஒரு ஆண்டு காலத்தை செலவுசெய்து ஆராய்ந்து மிகத்துல்லியமாக தமது வாக்குமூலத்தை அறிக்கையாக சமர்ப்பித்திருக்கிறது. செயற்கைக்கோள் புகைப்படங்கள்,  ஒளிப்படங்கள்,   வீடியோக்கள்,  சம்பந்தப்பட்டவர்களிடம் பலதரப்பட்ட வாக்குமூலங்கள் விசாரணைகளின் பிற்பாடு ஐநா மன்ற அரங்கில் பல நாடுகள் இணைந்து நாடு ஒரு நாட்டின் ஆட்சியாளர்களுக்கு எதிராக  ஒரு தீர்மானத்தை மனித உரிமை மன்றத்தில் கொண்டுவருகிறது.   கொண்டுவரப்பட்ட தீர்மானம்கூட ஶ்ரீலங்காவின் ஆட்சியாளர்களால் நிறுவப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு முன்மொழிந்த விடயத்தை பின்பற்றியே அமைந்திருக்கிறது,  அவற்றை நடைமுறைப்படுத்துங்கள் என்று மட்டுமே அமெரிக்க தீர்மானம் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு குறுக்கே நிற்கவேண்டிய தேவை இந்தியாவுக்கு என்ன இருக்கிறது?

இதிலிருந்து முற்றுமுழுதாக இனப்படுகொலையில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு இருக்கிறதென்பது தவிர வேறு முடிவுக்கு வரமுடியாது. தனது குற்றச்செயலை மறைப்பதற்காக ஈழத்தமிழர்களை இந்தியா முற்றுமுழுதாக அழித்துவிட திட்டமிட்டிருக்கிறது என்பதே உண்மை.

2009 க்கு பின் ஈழத்தமிழர்களுக்காக வாதாடவல்ல சோரம்போகாத வல்லமையுள்ள,   அரசியற் தலைமை ஒன்று இருந்திருந்தால் அந்த விடயங்களை ஜீரணித்திருக்க முடியாது.  ஐநா மன்றத்துக்கு தொடர் அழுத்தம் கொடுத்து விவாதித்து பகிரங்கமாக இந்தியாவின் தோலை உரித்து நியாயத்தின்பால் வெற்றிபெற்றிருக்க  முடியும்.  துரதிர்ஷ்ட வசமாக அந்தக்கொடுப்பனவும் தற்போது தமிழீழத்துக்கு இல்லை.

சம்பந்தன்,   றோவின் கைக்கூலியாக, ராஜபக்‌ஷவின் உடன் பிறவாத அண்ணனாக "சம்பந்த ராஜபக்‌ஷ"  வாக சிகப்பு துணி தோழில் போடாமல் மன்மோகன்போல தலைப்பாகை கட்டாமல் செயற்பட்டு வருகிறார் என்பதே சத்தியமான நிதர்சனமான உண்மை. தமிழ்நாட்டில் ஒரு கருணாநிதி,   இலங்கையில் ஒரு சம்பந்த,

அனைத்துக்கும் பின்னணியில் சாத்தான் இந்தியா இருந்துகொண்டிருக்கிறது.  இந்தியாவின் கைகளுக்குள் தமிழர் தேசியக்கூட்டமைப்பு இருந்து வருகிறது.  இந்தப்பின்னணியில்த்தான் இலங்கை தனது நட்பு நாடு என்று இந்தியா அடிக்கடி சொல்லுவதிலிருந்து அனைத்தையும் புரிந்துள்ளமுடியும்.

ராஜபக்‌ஷவும் சம்பந்தனும் மன்மோஹனின் உற்ற நண்பர்கள்.  ஜெனீவா கூட்டத்தொடரில்  ராஜபக்‌ஷ காப்பாற்றப்படுவார் என்பதும் எப்படி காப்பாற்றப்பட்டார் என்பதும் 22வது கூட்டத்தொடர் முடிந்த மறுநாள் பகிரங்கத்துக்கு வரப்போகிறது.

இறுதி போர் நடந்தபோது  மக்களை காப்பாற்றாமல் ஐநா பாராமுகமாக இருந்தது என்ற குற்றச்சாட்டும் தலையெடுத்திருக்கிறது.  மனித உரிமை கவுன்ஸிலின் முக்கிய அமர்வுக்கு முந்திய முன்னெடுப்பு சம்பவங்களெல்லாம் ஶ்ரீலங்காவுக்கு எதிராக மையம் கொண்டுவருவதாகவே  கள நிலவரங்கள் சான்று பகர்கின்றன.

இந்த இறுக்கமான நிலமையை தகர்த்து ஒரு காலதாமதத்தை ஏற்படுத்தி இழுத்தடிக்கும் தந்தர உத்தியை  பெறவேண்டும் (time and space)  என்பதே ஶ்ரீலங்கா ஜனாதிபதி ராஜபக்‌ஷ மற்றும் அவரது கூட்டாளிகளியான இந்திய அரசின் ராஜதந்திரமாக இன்றய பகீரதப்பிரயத்தனம் இருப்பதாக பலவழிகளிலும் புரியக்கிடைக்கிறது. அதற்கு தமிழர் என்ற  போர்வையிலிருந்து சம்பந்த'ன் முற்று முழுதாக மறைமுகமாக உதவுவார் என்பதில் எவரும் சந்தேகப்படத்தேவையில்லை.

2012,ல் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவந்தது அமெரிக்கா.  அடுத்து 2013 ம் இந்த ஆண்டும் பழைய 2012ம் ஆண்டின் தீர்மான கொள்கையின் அடிப்படையில் இன்னும் இறுக்கமான புதிய தீர்மானத்தை கொண்டுவர இருப்பதும் அமெரிக்கா. அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க பலநாடுகள் தயாராக இருப்பதாகவே அறியக்கிடைக்கிறது.  ஐநா மன்ற அமர்வுகளின் முடிவில் நிலவரங்கள் எப்படி அமையும் என்பதுபற்றி ஶ்ரீலங்கா மிகத்தெளிவாக புரிந்தும் இருக்கிறது.

அமெரிக்கா கொண்டுவர இருக்கும் தீர்மானம் கொள்கைரீதியாக ஆளுமையை தன்னகத்தேகொண்டு தமிழர்களுக்கான அரசியல் வெளியை நிரப்பவல்ல அடித்தளத்தை உண்டுபண்ணுகிறதோ இல்லையோ,  மனித உரிமை கவுன்ஸிலில் இயற்றப்படவிருக்கும் தீர்மானத்தை இலேசுவில் தடுத்துவிடமுடியாது.  அதை ஶ்ரீலங்காவாக இருக்கட்டும்,  இந்தியாவாக இருக்கட்டும் புரியாமலுமில்லை.  2012 ம் ஆண்டு எப்படி தந்தரமாக பிரச்சினையை ஶ்ரீலங்காவை காப்பாற்ற இந்திய அரச தரப்பினர் சுற்றி வளைத்து மூக்கை தேடும் தந்தர உத்தியை கையாண்டார்களோ அதே நரித்தனமான தந்தரத்தை இம்முறையும் கையாள இந்தியா இருப்பதாக தெரிகிறது.

வரவிருக்கும் தீர்மானத்தை ஏற்பதுபோல் காட்டிக்கொண்டு தீர்மானத்தை நீர்த்துப்போகச்செய்யவேண்டுமானால் ஒரேயொரு வழி தமிழர்களுடைய அரசியற் தீர்வுக்கான சமரசத்துக்கு சிங்களத் தரப்பும் தமிழர்தரப்பும் இணங்கிவிட்டதாக காட்டிக்கொண்டால் மட்டுமே சாத்தியமாகும்.   முன்பும் பலமுறை 13வது சரத்துக்கு அப்பால் சென்று  தமிழருக்கான அதிகாரங்கள் வழங்கப்படும் என்றும் சம்பந்தரை அலரிமாளிகைக்கு அழைத்து தேசிய விருந்து கொடுத்து ராஜபக்‌ஷ பிரச்சாரம் செய்தவற்றையும் இத்தருணத்தில் நினைவில்க்கொள்ளவேண்டும்.  இம்முறையும் கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம்,

ஏனெனில் சம்பந்தன் தமிழுக்குள் இல்லை!.  அவர் உயிர்ப்புடன் இருந்திருந்தால் பாலகன் பாலச்சந்திரனின் படுகொலை காட்சிகளை சனல் 4 திருப்பித்திருப்பி காட்டியபோதும் உலகம் குமுறி கொந்தளித்தபோதும் சம்பந்தன் கற்சிலையாகவே கண்மூடி  கொழும்பில் உட்கார்ந்து சூப் குடித்துக்கொண்டிருந்ததாக செய்திகள் சொல்லின.

தென் ஆபிரிக்கா சென்றார்,  இங்கிலாந்து சென்றார், நோர்வேக்கு சென்றார், கனடாவுக்கு சென்றார். இலங்கை பாராளுமன்றத்துக்கும் சென்றார், அனைத்து இடங்களிலும் தமிழினத்துக்கு அள்ளிவைக்கும் கருத்துக்களை உளறினாரே தவிர ஆக்கபூர்வமாக மனோ கணேசனின் ஆதங்கம் ஆத்திரம் சம்பந்தனிடம் இல்லை. அடுத்துவரும் காலங்களில் ஈழ மக்கள்தான் அவரது இடத்தை இனித்தீர்மானிக்கவேண்டும் என்று மட்டும் சொல்ல முடிகிறது.

இந்தியாவின் ஒப்புதல் இல்லாமல் ஜெனீவாவின் பிறவேலிக்குக்கூட சம்பந்தன் போகமாட்டார் என்பதே உண்மை,. தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜெனீவாவுக்கு சென்றிருப்பதால் ஒப்புக்கு எவராவது ஒருவரை கூட்டமைப்பு சார்பாக அனுப்பக்கூடும்.

ஜெனீவாவில் விவாதம் காரசாரமாக இடம்பெறும் பட்சத்தில்,   எங்காவது ஒளிவிடத்திலிருந்து  சம்பந்தன்,  ராஜபக்‌ஷவுடன் அரசியற் தீர்வு இணக்கப்பாட்டுக்கு மானசீகமாக வர இருப்பதாக அறிக்கைவிட்டு இந்தியாவுடன் இணைந்து அமெரிக்க தீர்மானத்தை வலுவற்றதாக்க சதி செய்யப்படும் என்பதும் ஊகமாக இருந்தாலும் அதுவும் நடைபெறலாம்.
2009 ம் ஆண்டிலிருந்து ஈழத்தமிழர்களின் அரசியல் பொதுவெளியில் பல அரசியற்க்கட்சிகளும் புலம்பெயர் அமைப்புக்களும் இடைவெளி இல்லாமல் இனப்படுகொலை குற்றவாளியை தண்டிப்பதற்காக போராடிவருகின்றன.  நோக்கம் ஒன்று என்பதால் இறுதிசெய்யும் மையமாக தேசியத்தலைவரால் ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை அனைத்து தரப்பும் முன்மொழிந்தும் வந்திருக்கிறது.   ஆனந்தசங்கரிக்கு இருந்த செல்வாக்கில் ஐந்தில் ஒருபங்கும் இல்லாத சம்பந்தன்,   விரால் இல்லாத குளத்தி


ல் குறவை மீனாக துள்ளிக்குதிக்க முடிகிறது.  தமிழ் தேசியத்தை நேசிக்கும் ஒரு சிலர் தேசிய கூட்டமைப்புக்குள் இல்லை என்று சொல்லுவதற்குமில்லை.  சம்பந்தன் கூட்டமைப்புக்கு தலையாரியாக இருக்கும்வரை ராஜபக்‌ஷவையும் இந்தியாவையும் யாரும் குற்றம் சொல்லி பலனில்லை.

ஏனெனில் தேசியத்தலைவர் ஒரு கால் நூற்றாண்டுக்குமேலாக தமிழனை சென்ற இடமெல்லாம் தலைநிமிர்த்தி நடக்க வைத்திருந்தார். சம்பந்த என்ன செய்திருக்கிறார் என்பதை மக்களே முடிவு செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ஈழதேசம் செய்திகளுக்காக.

கனகதரன்.

No comments: