Monday, July 9, 2012

'வெட்டிரும்பு' கருணாநிதியின் மாய மான் "ரெசோ"வை ஒன்று கூடி புறக்கணிப்போம்.

ஈழத்தமிழர்களின் வாழ்வின் என்றும் மறக்கமுடியாத வடு,   காலத்தால் அழியாத துரோகசக்தி, கரும்புள்ளி மு.கருணாநிதி, தனது படு பாதாள வீழ்ச்சியிலிருந்து எழுந்து நிற்பதற்கான முயற்சிகளாக  ஈடேறாத எண்ணற்ற வாக்குமூலங்களையும் தினம் ஒரு தந்தர நாடகங்களையும் அப்பாவித்தனமாக நடித்து மக்கள் முன் வீசி தப்பிக்க நினைப்பது அனைவரும் அறிவோம்.

கருணாநிதி தனது அரசியல்                    வாழ்க்கையை 1950 களில் எந்த இடத்தில் தொடங்கினாரோ அந்த இடத்திலிருந்து அவர் சார்ந்த சமூகத்தை   நகர்த்த எந்த முயற்சியும் இன்றுவரை               எடுக்கவில்லை  என்பதும், தனது குடும்பத்தை மட்டுமே நாசுக்காக நகர்த்தி உலக             உச்சத்துக்கு கொண்டுபோயிருக்கிறார் என்பதையும் அனைவரும் அறிவர்.

தமிழ் தமிழ் என்று            தமிழர்களை முறுக்கேற்றி இந்தி எதிர்ப்பு சுலோகத்தை தூண்டி மக்களை முட்டாள்களாக்கி கருணாநிதி தொடங்கிய அரசியல் இன்றும் அதே இடத்தில் அசையாமல் திகைப்பில் ஆழ்ந்து                   கிடக்கிறது, நிலமை பரிதாபமாக தலைகீழாக மாறி கருணாநிதியின்        கட்டளைப்பீடம்  டில்லியாக மாறியிருக்கிறது.                             இன்று  இத்தாலிய     அன்னையின் காலடியில் "தியாகத்திருவிளக்கு" என்ற       பட்டத்தை வெட்கமில்லாமல் சுமந்தவண்ணம் எண்சான் கிடையாக மண்டியிட்ட                   நிலையில் கருணாநிதியும் அவரது குடும்பமும் டில்லியின்        கட்டளையை சிரமேற்று நிறைவேற்றும் பச்சோந்தி அடிமையாக வீழ்ந்து கிடக்கிறது.

அதிகாரம்              இருந்தபோது முள்ளிவாய்க்காலில் வைத்து ஈழத்தமிழர்களை அழிப்பதற்காக திரண்டிருந்த                           அனைத்து சக்திகளுக்கும் எந்த குற்ற உணர்வுமில்லாமல்                         மிருகத்தனமாக துணை நின்றவர் கருணாநிதி, குழந்தைகள், கர்ப்பிணிகள் குடிநீர் உணவின்றி          செத்து சிதறியபோது, இந்தி நடிகைகளின் நடன அசைவுகளுக்கு சமுத்திரீகா சாஸ்த்திர இலட்ஷணத்தின்   இலக்கணம் கூறிக்கொண்டிருந்தார். அதிகாரம்  பறிக்கப்பட்டு        ஒதுக்கப்பட்டு விட்டோம் என்பதை உணர்ந்தபோது   இன்று மிகச்சாதுரியமாக             இரட்டை வேடமிட்டு தமிழீழ விடுதலை என்று பிலாக்கணம் பாடி மீண்டும் அதே     நஞ்சு தந்திரத்தை எந்தவித வெட்கமும் இல்லாமல்    மேடையேற்றி           வருகிறார்.

விவேகத்துடன் கூடிய சமயோசிதமான தந்தரம்தான் அரசியல் என்பது மறுப்பதற்கில்லை. இலட்சியத்துடன் கூடிய விட்டுக்கொடுப்புக்களும் பகிர்ந்துகொள்ளல்களும் புதிய ஒரு அத்தியாயத்தை தோற்றுவிக்கும் என்பதுதான் நிதர்சனம். கருணாநிதியின் காலடிச்சுவடுகள் இன்றுவரை இலட்சியத்துக்கான நோக்கத்திற்காக ஒரு ஊசி முனையளவுகூட எடுத்துவைக்கப்படவில்லை என்பதை கடந்த கால வரலாறு தீர்க்கமாக பதிவுசெய்திருக்கிறது.

பல்லாயிரம் கோடி ஊழல் செய்தார், நாட்டை கொள்ளையடித்து குட்டிச்சுவராக்கினார், தனிமனித ஒழுக்கம் இல்லாமல் கண்டதே காட்சி என வாழ்ந்து களித்தார், போகமும், இச்சையும், குடும்பமும்தான் கொள்கையென வாழ்ந்தார் என்பது உலகறிந்த உண்மை. கவியரசு கண்ணதாசன் அவர்கள் அவற்றை சரித்திர ஆவணமாக பதிவு செய்து வைத்திருக்கிறார், அவை அனைத்திற்கும் அவர்சார்ந்த மக்கள் தீர்ப்பெழுதிக்கொள்ளட்டும், அவை சமூகத்தால் பொறுக்கமுடியாத பெரும் கீழமை என்றாலும் வேறு வழியின்றி புறந்தள்ளிவிடலாம். ஆனால் கருணாநிதி தனது தப்பித்தலுக்கான ஆதாரமாக முழு சுயநலத்துடன் தொடர்ந்து கையில் எடுத்து ஏமாற்றிக்கொண்டிருப்பது அவருக்கு எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாத  ஈழவிடுதலை என்ற சுலோகம், அது கருணாநிதியின் கையிலிருந்து பறித்தெறியப்பட வேண்டும் என்பதே தர்மம்,

கருங்காலிகளும் கபட தந்தரவாதிகளும்  தன்னிச்சையாக எழுந்தமானத்தில் ஈழப்போராட்டத்தினுள் உள் நுழைந்து பஞ்சாயத்து செய்ய இது ஒன்றும் தமிழ் நாட்டு கழக அரசியலும் அல்ல,, தேவையற்ற உள்ளீடுகளை பகுப்பாய்ந்து கொள்ளாமல் உயிர்ப்பான இலட்சிய போராட்டத்தினுள் புல்லுருவிகளை அனுமதிக்கவும் முடியாது. ஈழ விடுதலைக்கென்று திட்டமிட்டு வகுக்கப்பட்ட ஒரு விதி இருக்கிறது, ஈழவிடுதலைப்போராட்டத்தின் கொள்கையும் தேசியத்தலைவரின் இலட்சியமும் எந்த உள்ளீடுகளுக்கு  இடங்கொடுக்கவுமில்லை.

தின்றோம் படுத்தோம், திசைதிருப்ப கரகரத்து குரல்கொடுத்தோம், நன்றே கொழுத்தோம், நாய்போல் புணர்ந்திளைத்தோம் என்று தொடங்கப்பட்டதல்ல தமிழ் ஈழ விடுதலை புரட்சி.

வாழ்வும், மரணமும், வீரமும், இலட்சியமும் கொண்டு ஆசாபாசங்கள் அனைத்தையும் புறந்தள்ளி மேல் நோக்கோடு செப்பனிட்டு வளர்க்கப்பட்ட ஒரு தியாக வரலாறு, வெடிமருந்தையும், நஞ்சையும், மரணத்தையும் துணையாக கொண்ட உலகத்தின் அரசியல் அதிசயம்.

இன்று கண்டங்கள் தாண்டி அகில உலக அரங்கில் ஈழவிடுதலைப்போராட்டம் களங்கமற பரிமாணித்து நிற்கிறது என்றால் கூத்துக்காட்சிகளின் இடையே வரும் கோமாளிகளுக்கும் பவூன்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில் ஈழப்போராட்டம் இல்லை என்பதை எல்லோரும் அறிவோம். இதயபூர்வமாக உணர்வுபூர்வமாக இணைந்தவர்களை நாடு கடந்தும், கண்டம் கடந்தும், ஈழப்போராட்டம் என்றென்றும் நம்பிக்கையுடன் நினைவில் வைத்துக்கொண்டுதான் இருக்கிறது. அரவணைத்தும் போகிறது.

கருணாநிதிக்கு வயது 90 ஆகிறது அவரால் சுயமாக என்றைக்கும் அவரது குடும்பம் தாண்டி சிந்தித்து முடிவெடுக்க முடிந்ததில்லை.  தற்போது தனது இருப்பை நிலைநிறுத்தவேண்டிய இக்கட்டான தேவை ஒன்று மட்டுமே அவரை ஆட்க்கொண்டிருக்கிறது. இது அடிக்கடி நிகழ்ந்து வரும் ஒன்றுதான். கருணாநிதி பதவியில் இருந்தபோது அதிகாரம் குவிந்துகிடந்தபோது நடந்துகொண்ட முறைக்கும் இன்று தனிமைப்படுத்தப்பட்டு தப்பிக்க அவர் வீசும் வஞ்சக தந்திரங்களையும் சிறு குழந்தையும் பகுத்தறிந்து கொள்ளமுடிகிறது.

அதிகபட்சம் நல்லவற்றை மனதளவில் ஏற்றுக்கொள்ளுவோம் வரவேற்போம்.  நம்பிக்கையற்ற எதையும் கவனத்தில்க்கொள்ளத்தேவையில்லை என்ற நிலையில்த்தான் ஈழத்தமிழர்களின் போராட்டம் + அரசியலாக இருந்து வருகிறது. முப்பது வருட போராட்டக்கால அரசியலும் அதைத்தான் படிப்பினையாக தந்து பிரகரித்து சென்றிருக்கிறது.

இறந்தகாலமாகிப்போன முன்னைய 30 ஆண்டுகளுக்கு முன் கருணாநிதி ஈழம் சார்ந்து செய்துகொண்டிருந்த சுத்துமாத்து அரசியல் அனைத்தையும் கை கழுவி கழித்துவிட்டு, 2009 ஜனவரி தொடங்கி 08 07 2012 இன்றுவரை கருணாநிதி செய்த நயவஞ்சக அரசியல் கழிவுகளை குறுக்கி எழுதுவதென்றாலே ஒரு 3000 பக்க புத்தகமாக பிரசுரிக்கலாம்.

தயவுசெய்து 2008 ல் இருந்து 2009 மே 19 வரை முள்ளிவாய்க்கால் பரப்பில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். குழந்தைகள், தாய்மார்கள், கர்ப்பிணிகள், இளம் குருத்துக்கள், வயோதிபர்கள், போராளிகள், மண், பொருள் என்று அத்தனையையும் இழந்து இன்று திக்குத்தெரியாத காட்டில் நிற்பதுபோன்ற நிலை ஈழத்தமிழினத்துக்கு வர முக்கிய காரணி யார்?

இப்படியான கயமைவாதிகளை நம்பலாமா அல்லது இப்படி விஷ மனநிலை கொண்ட ஒரு நரகாசுரனை பின்பற்றத்தான் முடியுமா? மனித இனத்தில் இப்படி ஒருவன் பிறந்து தன்னிச்சியாக சமூக நியதியை சிதைக்கும் சிறுமையை அனுமதிக்கலாமா?  சிந்திப்போம் செயற்படுவோம்!

விழுப்புரத்தில் நடத்த திட்டமிட்டிருந்த,  (செத்தவீடு) தமிழ் ஈழ ஆதரவு (ரெசோ)  (Tamil Elam Supporters Organigation).மாநாட்டை சென்னையில் நடத்த, தி.மு.க.,   கருணாநிதி முடிவு செய்துள்ளதாக தன்னிச்சையாக அறிவித்திருக்கிறார்.

வரும் ஒகஸ்ட் 5ம் திகதி, இம்மாநாட்டை விழுப்புரத்தில் நடத்த முன்னதாக, தி.மு.க., திட்டமிட்டிருந்தது. என்றும் இப்போது இம்மாநாடு, சென்னை ராயப்பேட்டை வை.எம்.சி.ஏ., திடலில், ஒகஸ்ட் 12ம் தேதி கருணாநிதியின் தி.மு.க., நடத்த முடிவு செய்துள்ளது என்றும். மாநாட்டில் இலங்கை உட்பட பல நாடுகளில் இருந்தும்(?), இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இருந்தும் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். எனபதால் இம்மாநாடு சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும், மாநாட்டின் வரவேற்புக் குழுவில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், பொன்முடி, ஏ.வ.வேலு, ராதாகிருஷ்ணன், டி.ஆர்.பாலு ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர் என்றும், இம்மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, காஷ்மீரைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மே.வங்க முதல்வர் மம்தா பனர்ஜி, மத்திய அமைச்சர் சரத்பவார், "இலங்கை எம்.பி., சம்மந்தன்" மற்றும் விடுதலைப் புலிகள், ரெலோ போன்ற தமிழ் ஈழ விடுதலை அமைப்புகளின் முன்னணி பிரமுகர்கள் ஆகியோருக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதியே நேரடியாக அழைப்பு அனுப்பியுள்ளார் என்றும் விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது!!.

இது தேவையா? பொண்டாட்டி செத்த ஒழுக்கமற்ற ஒருவனது வீட்டில் குமரை அடகு வைக்கலாமா?

1985ஆம் ஆண்டு மே 15 ல் மக்கள் திலகம் எம்ஜீஆர் அவர்களின் செல்வாக்கை உடைப்பதற்காக வஞ்சகத்திட்டத்துடன் கருணாநிதியால் உருவாக்கப்பட்டது 'ரெசோ' என்ற (வெட்டிரும்பு) அமைப்பு.

எப்போதெல்லாம், தனக்கும், குடும்பங்களுக்கும், திமுகவுக்கும் சிக்கல் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் ஈழத் தமிழர் பிரச்னைக்காக நொந்து உருகுவது கருணாநிதிக்கு வாடிக்கை. இப்போது கடைசியாக வீட்சியிலிருந்து மீட்சிபெற அவர் மீண்டும் எடுத்துள்ள ஆயுதம் தான் நவீன ‘ரெசோ’. என்ற வெட்டிரும்பு.

ஈழ தமிழர் பகுதி எங்கும் 2009 ல் ராஜபக்க்ஷ +இந்திய அரசு கடுமையான ராணுவத் தாக்குதல்களை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, கண் மூடி கங்கிரஸுக்கு அடை காத்த மகாபானுவரான கருணாநிதி, இப்போது ‘தமிழ் ஈழ மக்களுக்க்காக இரத்தக்கண்ணீர் வடிக்கிறார். ஈழத்துக்கு என்றும் உறுதுணையாக இருப்போம்; அவர்களது போராட்டத்தை முன்னெடுப்போம்; தமிழ் ஈழ அரசை மலரச் செய்வோம்’ என்று கூறிக்கொண்டு, 1985 ல் உருவாக்கப்பட்ட ரெசோ அமைப்பை மீண்டும் துவங்கி தூசுதட்டி குளிர்காய இருக்கிறார். கேப்பையில் நெய் வடிந்து ஆறாக ஓடுகிறது என்று அவர் முன்பு சொன்ன போதெல்லாம் உருகிய அவரது தொண்டர்கள் எல்லாம் இப்போது நக்கலாக சிரித்துக் கொள்கிறார்கள்.

செத்து கருமாதி செய்யப்பட்ட ரெசோ என்ற உக்கிப்போன வேலைகாரன் தடிக்கு சூடு மிதிப்பு இல்லாத இந்த நேரத்தில் என்ன தேவை?

அதற்கு முன், ‘ரெசோ’ என்றால் என்ன என்று முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். 1980 களில் பல பத்து போராளிக்குழுக்களை கொண்டிருந்த தமிழீழப்போராட்டத்தில் அனைத்து போராளிக்குழுக்களையும் புரிந்துணர்வின் அடிப்படையில் மோதல் போக்கு இல்லாமல் ஒன்றிணைத்து தமிழீழம் மலர ஆதரவளிப்பது என்பதுதான் 1985 ல் ரெசோ உருவானதன் முதன்மை தத்துவம்.என்று கூறப்பட்டது.  சரி அப்படியிருந்தாலும் இன்றைக்கு அப்படியான தேவை ஏதாவது இருக்கிறதா 'யாருக்காவது ஏதாவது புரிகிறதா"?

1984 – 85 காலகட்டத்தில் இந்திய பிரதமராக இந்திராவும் தமிழக முதல்வராக எம்.ஜி.ஆரும் இருந்தனர். அப்போது இலங்கையில் தனிநாடு கேட்டுப் போராடிய விடுதலைப்புலிகள், ரெலோ போன்ற குழுக்களுக்கு தமிழகத்தில் போர்ப்பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. 1984 ல் இந்திராவின் மறைவை அடுத்து ராஜீவ் பிரதமரான போது இந்திய கொள்கை வகுப்பாளர்களான மலயாளிகள்/ இலங்கைக்கான இந்திய தூதுவர் டிக்சித் போன்றவர்கள் இலங்கை அணுகுமுறையில் மாற்றம் கொண்டுவந்தனர். அதற்கமைய தமிழகத்தில் ஈழப் போராளிகளுக்கு பயிற்சி அளிக்கக் கூடாது; அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று ராஜீவ் தலைமையிலான மத்திய அரசு உத்தரவிட்டது. அப்போது எம்.ஜி.ஆர் உடல்நலம் குன்றி அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்தார்.

அந்தக் காலகட்டத்தில் கருணாநிதியின் திமுக மிகவும் பலவீனமாகி கட்சி அழியும் நிலையில் இருந்தது. எம்ஜீஆர் என்ற மாபெரும் பிம்பத்தின் தலைமையிலான அதிமுகவின் அசுர சக்தியின் முன் செய்வதறியாது பெட்டிப்பாம்பாகக் கிடந்த திமுகவுக்கு, இந்த விவகாரம் பெரும் வரப்பிரதாசமாக கிடைத்தது. அப்போது தான் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு (Tamil Eelam Supporters Organaisataion – TESO) அமைப்பை கருணாநிதி காரியம் சாதிக்கும் உள் நோக்கத்துடன் அவசர அவசரமாக தோற்றுவித்தார். திக வீரமணி, தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் பழ நெடுமாறன், தமிழ்நாடு பார்வர்ட் பிளாக் அய்யண்ணன் அம்பலம்; ஆகிய அமைப்புகள் அதன் உறுப்பினர்களாக இருந்தன. 1985, மே 13 ல் ரெசோ துவங்கப்பட்டது. இதன் கொள்கைகளாக ஐந்து முக்கிய நோக்கங்கள் வலியுறுத்தப்பட்டன.

1. இலங்கையில் தமிழ் ஈழம் மலர ஆதரவு.?

2. இலங்கைத் தமிழருக்கு நிலையான உரிமையும் நிரந்தரப் பாதுகாப்பும் கிடைக்கும் வரை போராடுவது.??

3. போராளிகளுக்கு அடைக்கலம் தரும் கடமையிலிருந்து தவறாமல் இருப்பது.???

4. தமிழினத்தின் பாதுகாப்புக்காக எந்தத் தியாகமும் செய்யத் தயாராக இருப்பது.????

5. இந்தக் கடமைகளைச் செய்யும்போது  மத்திய,  மாநில அரசுகளின் அடக்கு முறைகளை  இன்முகத்துடன் எதிர்கொள்வது.?????

(திரும்ப இன்னுமொருமுறை அந்த ஐந்து கட்டளைகளையும் திரும்ப படித்துக்கொள்ளுங்கள்! தலையை கிறுகிறுத்தால் தண்ணீர் குடித்து ஆசுவாசப்பட்டுக்கொள்ளுவது தவிர வேறு வழியுமில்லை!)

எம்ஜீஆர் உயிருடன் இருக்கும்வரை அரசியலில் வேலை எடுபடாமல் இருந்த கருணா மாநிலம் முழுவதும் ரெசோ பேரணிகளை நடத்தினார் அதில் இந்த ஐந்து நோக்கங்களையும் (எம்ஜீஆர் அவர்களை சிக்கலில் மாட்டுவதற்கென்றே) உறுதிமொழியாக ஏற்கச் செய்வது கருணாநிதியின் வழக்கமாக இருந்தது. அதன் உச்சகட்டமாக, மதுரையில் 1985 , மே 4 -ல் பிரமாண்டமான மாநாடு நடத்தப்பட்டது.

இந்த மாநாட்டில், இலங்கையிலிருந்தும் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்  ரெலோ, ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தோர் சம்பிரதாயத்திற்காக பங்கேற்றனர். அப்போதும் ஈழத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் கரம் தான் ஓங்கி இருந்தது. 

இந்த இடத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தைத் தெளிவுபடுத்தவேண்டும். ஈழத்தில் பல போராளிக்குழுக்கள் இருந்தன. அவர்கள் தமிழகத்தில் இயங்கியபோது ஒவ்வொரு அமைப்பையும் தமிழகத்தின் ஒவ்வொரு அரசியல் கட்சிகள் ஆதரித்து நின்றன. சில அமைப்புகளை பல கட்சிகள் ஆதரித்தன. குறிப்பாக, விடுதலைப்புலிகளை எம்.ஜி.ஆர் தீவிரமாக ஆதரித்தார்.  கி. வீரமணி, பழ.நெடுமாறன் போன்றவர்கள் ஈழப்போராளிகள் பலருடனும் தொடர்புகள் வைத்துக் கொண்டாலும் புலிகளையே தீவிரமாக ஆதரித்தனர்,. ரெலோ இயக்கத்தை திமுகவும் கருணாநிதியும் ஆதரித்தனர். கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈபிஆர்எல்எவ் பத்மநாபாவை ஆதரித்தனர். கம்யூனிஸ்ட் கட்சியிலேயே தீவிரமாக செயல்படக்கூடிய சிலர் வே பாலகுமாரன் தலைமையிலான ஈரோஸ் இயக்கத்தை ஆதரித்தனர். பெருச்சித்திரனார் உள்ளிட்ட சிலர் உமாமகேஸ்வரன் தலைமையிலான PLOTE இயக்கத்தை ஆதரித்தனர்.

ஆயினும், அமெரிக்காவில் இருந்து அவசரமாகத் திரும்பிய எம்.ஜி.ஆர், ராஜீவுடன் பேசி போராளிகள் மீதான தடையை நீர்த்துப் போகச் செய்தார். தொடர்ந்து அவரே இலங்கைப் போராளிகளுக்கு தார்மிக உதவியும் செய்தார். எனவே, கருணாநிதியின் ரெசோ திட்டம் செல்லுபடியாகவில்லை. இதை வைத்து தமிழகத்தில் அதிமுகவுக்கு எதிராக மக்களைத் திரட்ட முயன்ற கருணாநிதி தோல்வியே கண்டார். எனினும், அவரது இருப்பை நிலைநாட்டிக்கொள்ள அப்போது ரெசோ ஒரு சிறிய வாய்ப்பளித்தது எனலாம்.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் நேரிட்ட குளப்பங்களால் 1989ல் மீண்டும் முதல்வரான கருணாநிதிக்கு ரெசோ போன்ற குறளிவித்தையை காட்டி மக்களை திரட்டவேண்டிய சங்கடம் இருக்கவில்லை ,   அத்துடன் ‘ரெசோ’வும் கலைக்கப்பட்டது. மத்தியில் ஆட்சியில் இருந்த ராஜீவைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற காரணத்துக்காக பிறகு ரெசோ அமைப்பையே கருணாநிதி மறந்தும் போனார்.

அதன்பிறகு தமிழக அரசியல் வானில் எவ்வளவோ மாற்றங்கள். திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆட்சியைப் பிடித்தன; மத்திய ஆட்சியிலும் இரு கட்சிகளும் பங்கேற்றன. அப்போதெல்லாம், இலங்கைத் தமிழர் நலன் குறித்து கருணாநிதிக்கு கிஞ்சித்தும் நினைவு வரவில்லை. உச்சகட்டமாக, 2009 ல் விடுதலைப்புலிகள் வஞ்சகமாக சுற்றிவளைக்கப்பட்டு முள்ளிவாய்க்காலில் லட்சக் கணக்கான ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

அதுகண்டு தமிழகமே கொந்தளித்தது. போராட்டங்கள் இடம்பெற்றன தீக்குளித்து மக்கள் கருகி செத்தனர் அனைத்தையும் கருணாநிதி வஞ்சகமாக அடக்கி மத்திய அரசை காத்தருள் செய்தார், ஸ்பெக்ட்ரம் ஊழலில் பெற்ற பல்லாயிரம் கோடி ஊழலுக்கு நன்றிக் கடனாக இருதயத்தை இரும்பாக்கி அமைதி காத்த கருணாநிதி. அப்போது திமுகவின் ஆதரவுடன்தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மன்மோகன் ஆட்சி நிலைத்திருந்தது. கருணாநிதி நினைத்திருந்தால் ஒரே மிரட்டலில்  இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரை தமிழ்ப்படுகொலைகளை நிறுத்துமாறு இந்திய அரசை நிர்பந்தித்திருக்க முடியும். நிறுத்தியிருக்க முடியும் அரசியல் தாண்டி கருணாநிதி அதைத்தான் செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. அவர் செய்ததெல்லாம், வாரிசுக்களுக்கான மந்திரிப்பதவியை பெற்றுக்கொண்டு சோனியாவுடன் பேசி ஒப்பந்தம் செய்துகொண்டபடி மூன்று மணி நேர உண்ணாவிரதமும், பிரதமர் மண்மோகனுக்கு கடிதங்கள் எழுதியதும் மட்டுமே. ஈழத்தமிழர்களின் செத்தவீடுகள் வீடு வாசல் இல்லாமல் தெருவிலும் சகதியிலும் நாறி சிதம்பி மண்ணோடு மண்ணானது. இவற்றையெல்லாம் வசதியாக கருணாநிதியால் எப்படி மறக்க முடிந்தது?.

தாய் மண்ணில் ஆட்சி செய்த தமிழீனத் தலைவர் உதவமாட்டாரா? என்று கடைசி வரை எதிர்பார்த்து ஏமாந்து லட்சக் கணக்கான தமிழ் மக்கள் ஈழத்தில் செத்து மடிந்தார்கள். இந்தியாவிலோ, கூட்டணியை உறுதிப்படுத்தி, ‘இந்தியாவின் மருமகளுக்கு’  தியாகத்திருவிளக்கே வருக சொக்கத்தங்கமே வருக என்று நிர்வாண நிலையில் பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டிருந்தார் கருணாநிதி. இலங்கைத் தமிழருக்காக தன்னை தீயிட்டு மாய்த்துக் கொண்ட முத்துக்குமாரின் மரணத்தை கேலி பேசி நக்கலடித்த கருணாநிதி, விடுதலைப் புலிகளை உணர்வுபூர்வமாக ஆதரித்த சீமானை கைது செய்து தேசியப்பாதுகாப்பு சட்டத்தில் சிறைப்படுத்திய கருணாநிதிக்கு, இப்போது மக்களால் புறக்கணிக்கப்பட்டதாலும் நில அபகரிப்பு வழக்குகளில் கைத்தடிகள் மாட்டிக்கொண்டு தவிப்பதாலும் ஈழ விடுதலைமீது திடீர் ஞானோதயம் வந்திருக்கிறது.

முன்னெப்போதும் காணாத படுதோல்வியில் வீழ்ந்து, மக்கள் நம்பிக்கையையும் தொண்டர்களின் ஆதரவையும் இழந்து தவிக்கும் கருணாநிதிக்கு எப்படியாவது அதிலிருந்து மீள வேண்டும் என்ற வெறி ஏற்பட்டிருக்கிறது. அதற்காக புதிய மொந்தையில் அதே ‘ரெசோ’ என்ற பழைய கள்ளை ஊற்றிக் கொடுக்கிறார். ஆனால், இம்முறை அவருக்கு ஏமாற்றமே காத்திருக்கிறது. சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் (26.04.2012) கருணாநிதி, ”தனித் தமிழ் ஈழம் காணாமல் இந்த உலகை விட்டுப் போக மாட்டேன்” என்று சபதமும் செய்திருக்கிறார்.

“தமிழ் ஈழம் அமைக்க ஐக்கிய நாடுகள் சபை பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதை இந்தியா ஆதரிக்க வேண்டும்” என்று ரெசோ அமைப்பு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இது நடைமுறைக்கு சாத்தியப்படக்கூடியதா பத்திரிகைகள் தன்னை மறந்துவிடக் கூடாது என்பதற்காகவும் மக்களை ஏமாற்றுவதற்காகவும்  நடத்தும் நாடகமாக ரெசோ-வை அவர் தொடர்ந்து பயன்படுத்தினால், கடைசி காலத்தில் பூய்ச்சியமும் கூடவராது.

இலங்கைப் போரின்போது, ”போர் என்றால் அப்பாவிகள் சாவது சகஜாமனது தான் ” என்று அதிமுக தலைவி ஜெயலலிதா மமதையாக கூறியதை மறக்க முடியாது. அதே போல, ”மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்ற கருணாநிதியின் புகழ் பெற்ற காழ்ப்புணர்ச்சி வாக்கியத்தையும் யாரும் மறக்க மாட்டார்கள். அவரது மூன்று மணிநேர உண்ணாவிரதத்தால் நிறுத்தப்பட்ட (?) இலங்கைப் போர் மீண்டும் துவங்கியபோது அவர் கூறிய விளக்கம் இது.

நண்பர்களே உறவினர்களே தோழர்களே இதுதான் ஈழத்தமிழனின் ஆதங்கம் பட்டுணர்ந்த பாடம் "கிட்டதாயின் வெட்டெண மற"  "துட்டனென்றால் தூர விலகிவிடு" இந்த பழமொழியை அனேகர் அறிந்திருக்க வாய்ப்புண்டு. எனவே கருணாநிதி என்ற தீயசக்தி தனது வசதிக்கு ஏற்ற வகையில் எத்தனை ரெசோவை வெண்டுமென்றாலும் கூட்டட்டும் தமிழகத்து மக்கள் கருநாநிதியை இப்போது நன்கு அறிந்திருக்கிறார்கள். அவர்கள் கருநாநிதிக்கான சரியான தண்டனையையும் கொடுத்திருக்கிறார்கள். எங்கள் பங்களிப்பை நாமும் சரியாக செய்யவேண்டிய கட்டாயத்தில் எமது கடமை இருக்கிறது.

ஒகஸ்ட் 12ம் திகதி கருணாநிதியின் தி.மு.க., நடத்த முடிவு செய்துள்ள "ரெசோ" என்ற கருணாநிதியின் தப்பித்தல் சுயநல மாநாட்டை கருத்தில் எடுக்காமல் இருப்போம். பச்சோந்தி கருணாநிதியின் செயற்ப்பாட்டை தமிழகத்து அரசியல் கட்சிகள் மற்றும் ஈழ ஆதரவு அமைப்புக்கள் நிச்சியம் கவனத்தில் கொள்ள மாட்டார்கள் என்று நம்பலாம். ஈழத்து தமிழ் அரசியல்வாதிகளும் வடுக்களை மறந்து சூடுபோட்டுக்கொள்ள முன்வரமாட்டார்கள் என்பதே நம்பிக்கையாக இருக்கிறது.

மறக்கமுடியாத நினைவுக்கு ஒரு விடயம்: 2008 ம் ஆண்டு (மாதம் திகதி நினைவுக்கில்லை) ஒரு மிக முக்கியமன தருணத்தில் தேசியத்தலைவர் அவர்களின் அனுமதியுடன் இந்திய மத்திய அரசை சந்தித்து போர் நிறுத்தம் சம்பந்தமாக சில பேச்சுவார்த்தை நடத்த தமிழர் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான ஒரு குழு தமிழகம் சென்றிருந்தது, தமிழகம் சென்ற தேசியக்கூட்டமைப்பினர் மத்திய அரசிடம் பேசுவதற்கு ஒரு நேரத்தை பெறுவதற்கு அப்போதய முதலமைச்சராக இருந்த கருணாநிதியை அணுக முயற்சி செய்திருந்தனர் ஆனால் ஒரு சில மாதங்கள் முயற்சி செய்தும் கருணாநிதியின் கோவாலபுரம் வீடு வாசலிலும் ஆள்வார்ப்பேட்டை CID கொலனி குடியிருப்பு வாசலிலும் தவமிருந்து எந்தப்பலனுமில்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பியிருந்ததை இன்றும் வெறுமையாக நினைவு கொள்ள வேண்டிய தருணம். தமிழர் தேசியக்கூட்டமைப்பினர் திரும்பியதும் கருணாநிதி வெளியிட்ட கொமண்ட் "ராஜபக்க்ஷவை அனுசரித்து போவதை விடுத்து இங்கு என்னத்துக்கு வருகிறார்கள்" என்று காறித்துப்பியிருந்தார்.

இன்று அரசியல் அனாதையாகி வில்லங்கம் சூழ்ந்த ஒரு காலகட்டத்தில் தன்னை நிலை நிறுத்துவதற்காக போலியான ஒரு பிம்பத்தை சுமந்து ஏமாற்றுவித்தை செய்ய துணிந்து நிற்கும் பச்சோந்தியான கருணாநிதியை இனங்காட்ட வேண்டாமா. கருணாநிதி வேண்டுமென்றால் தனது நாட்டு அரசியலை முன்வைத்து மாநாடு பேரணி நடத்தட்டும் முடிந்தால் வெற்றிபெறட்டும் அதற்கு அவருக்கு உரிமை இருக்கக்கூடும் தவிர்த்து கருணாநிதிக்கு சம்பந்தமில்லாத ஈடுபாடில்லாத தமிழீழம் என்ற விடயத்தை ஒரு தீய சக்தி கையில் எடுப்பதை தடுப்போம் அல்லது ஒத்துழையாமை மூலம் புறக்கணிப்பை பதிவு செய்துகொள்ளுவோம். இது ஒன்றுதான் முள்ளிவாய்க்கால் முற்றுகையில் கொல்லப்பட்ட உறவுகளுக்கும் தன்மானத்துக்கும்  நாம் கொடுக்கும் முதல் மரியாதையாக இருக்கும்.

ஈழதேசம் இணையத்திற்காக,
கனகதரன்.

Thursday, June 28, 2012

முறிகண்டி, முறுகண்டிய என்று மாற்றமடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!!!

தமிழ் ஈழத்தின் துயர் நிறைந்த இனப்படுகொலையின் "கறுப்பு அடையாளமாக" சர்வதேச அரங்கில் புளக்கத்தில் இருப்பது. "முள்ளிவாய்க்கால்"
உலகத்தால் என்றும் மறக்க முடியாத 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஆசிய இனப்படுகொலை -  சிங்கள இனவெறி அரசால் நடத்தப்பட்ட மிகப்பெரிய மனித அவலமும் படுகொலைகளைத் தாங்கிய முள்ளிவாய்க்கால் என்ற பெயரும் அந்த நிலப்பிரதேசமும் உலகத்தின் மனக்கண்ணின் முன் என்றும் அழியாதவை.  

அவை ஒருபுறம் இருக்க, போர் முடிவுக்கு வந்த கையோடு கொலைக்களத்திலிருந்து தத்தளித்து தப்பி வெளியேறிய ஈழத்தமிழர்களின்
வாழ்விடங்களை பறித்து தமிழர் அடையாளங்களை அழிக்க ஸ்ரீலங்கா சிங்கள அரசு தெரிவுசெய்த இடங்கள் பல இருந்தாலும், நிலப்பறிப்பின் குறியீடாக முன்னிலைப்படுத்தப்பட்டது "முறிகண்டி",  

சிங்கள அரசு முறிகண்டியை தெரிவு செய்வதற்கு தமிழர் தாயகத்தின் நிலப்பரப்பை ஓரளவு அறிந்த ஒட்டுக்குழுக்களின் தலைவர் டக்கிளஸ் தேவானந்தாவும் ஒரு முக்கிய காரணகர்த்தா என்பதும் பலர் அறிந்திராத உண்மை. போர் முடிவுக்கு வந்தவுடன் நிலக்குகையியிலிருந்து வெளியே வந்த டக்கிளஸ் பொதுமக்கள் முன் முதல் முறையாக காட்சியளித்தது முறிகண்டி பிள்ளையார் கோவில் முன்பாக.

இன்று போர் முடிவுக்கு வந்துவிட்ட நிலையிலும், எதிர்ப்பு காட்டாத ஒரு காலத்தில் அமைதியை எதிர்கொண்டிருக்கும் தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களான குடியிருப்புக்களை திட்டமிட்டு பறிமுதல் செய்து சிங்கள மயமாக்கும் திட்டத்தில் முன்னணி வகுத்து  முறிகண்டி கிராமத்தின் பெயர் சர்வதேச அரங்குக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது.

வன்னியையும் யாழ்க்குடா நாட்டையும் இணைக்கும் மையப்புள்ளியாக ஆணையிறவு இருப்பதுபோல, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கிளிநொச்சியையும், தென் இலங்கையின் போக்குவரத்து நடமாட்டங்கள் அனைத்தையும் கண்காணித்து இலகுவாக இனங்கண்டுகொள்ளும்  நுழைவாயிலாக, கேந்திர மையமாக திருமுறிகண்டி அமைந்திருக்கிறது. 

ஏற்கெனவே "வெலிஓயா" என்று சிங்களப்பெயர் சூடப்பட்ட மணலாறு பிரதேசத்தை சிங்கள காடையர்களின் இருப்பிடமாக்க சிங்கள அரசுகள் படு பிரயர்த்தனப்பட்டன, அதில் சிங்கள ஆட்சியாளர்கள் ஓரளவு வெற்றியும் கண்டனர். தமிழர் தாயக நிலப்பரப்பின் கழுத்துப்பகுதி துண்டாடப்படுவதை தடுத்து நிறுத்துவதற்கு தேசியத்தலைவர் அவர்கள் மிக முக்கியத்துவம் கொடுத்து புவியியல் ரீதியாக பயிற்றுவிக்கப்பட்ட தனிப்படையை கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக மணலாறு பிரதேசத்தில் நிறுத்தி வைத்திருந்தார். 

போராட்டக்காலத்தில் விடுதலைப்புலிகள் மற்றய இடங்களையும் விட மணலாற்றை தக்கவைத்து பாதுகாப்பதற்காக நிறைய வளங்களை செலவு செய்திருந்தனர். மணலாறு சிங்கள நாட்டின் எல்லையில் இருக்கும் கிராமமானதால் சிங்கள குடியிருப்புக்களை  ஊடுருவல் செய்வதற்கு ஆட்சியாளர்களுக்கு இலகுவாகவும் இருந்தது. அத்துடன் குடியிருப்புக்களை அசதாரணமான  பொதுவானதாக அரசியல் ரீதியான நியாயப்படுத்தல்களுக்கும் அதிக சிரமங்கள் சிங்கள ஆட்சியாளர்களுக்கு இருக்கவில்லை. மணலாற்றில் விடுதலைப்புலிகளின் வீர வரலாறு மிக மிக அதிகம், ஆனால் துரதிஷ்டவசமாக அரசியல் செய்யும் அனேக ஈழத்தமிழர்களுக்கு மணலாற்றின் மண்மீட்பு அத்தியாயங்கள் பல இன்னும் அறியப்படாத செய்தியாகவே இருந்துவருகிறது. இன்றும் சிலர் வெலிஓயா வேறு, மணலாறு வேறு என்று நினைப்பில் இருப்பவர்களையும் காணக்கூடியதாக இருக்கிறது.

மணலாற்று பிரதேசத்திற்காக போராளிகள் சிந்திய இரத்தமும், உயிர் தியாகம் செய்து விதையான மாவீரர்களின் தொகையையும் கணக்கிட்டு நினைவுப்படுத்தினால் திரு முறிகண்டி கைவிட்டுப்போக எவராலும் அனுமதிக்க முடியாது. முறிகண்டியை இராணுவமயப்படுத்தி நிரந்தரமாக மக்களை கட்டாயப்படுத்தி வெளியேற்ற நினைக்கும் சிங்கள அரசு, தமிழீழத்தின் வேறு இடங்களில் மக்கள் மத்தியில் இவ்வளவு அழுத்தமாக நிலப்பறிப்புக்கான அகந்தையை  காட்டியிருக்கவில்லை. யாழ் பலாலி பகுதியில் கால் நூற்றாண்டுக்கு மேலாக நிலை கொண்டிருக்கும்  இராணுவம் படிப்படியாக குறைக்கப்பட்டு  மக்கள் குடியிருப்புக்களை திரும்ப வழங்குவோம் என்றே அரசாங்கம் ஒப்புக்கேனும் சர்வதேசத்திற்கு சொல்லிவருகிறது. முறிகண்டி விடயத்தில் அப்படிச்சொல்லப்படவில்லை. ஏன் என்பதற்கு இரண்டு வலுவான காரணங்கள் இருக்கின்றன.

முறிகண்டிக்கு தெற்காக ஒருசில கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் கொக்காவில் என்ற இடத்தில் தொலைக்காட்சி பரிவர்த்தனை கோபுரம் ஒன்றை இலங்கை ரூபவாகினிக்கூட்டுத்தாபனம் 1970 களில் அமைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளை வடக்கு தமிழீழம் அனைத்துக்கும் ஒளிபரப்பியது. 80 களில் தமிழர் கிளர்ச்சி தொடங்கியதும் தொலைக்காட்சி சேவை நிறுத்தப்பட்டு கொக்காவில் தொலைக்காட்சி கோபுரம் அமைந்த பகுதி இராணுவ முகாமாக மாற்றப்பட்டு இருந்த சமயம் விடுதலைப்புலிகளால் வளைக்கப்பட்டு ஒரு இரவில் அழித்தொழிக்கப்பட்டது. அதன்பின் வந்திறங்கிய இந்திய இராணுவம் அந்தபிரதேசத்தில் குடிகொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. முறிகண்டிக்கு வடக்காக இரண்டு மூன்று கிலோமீற்றர் தொலைவில் உள்ள 156 ம் கட்டை பகுதியிலுள்ள  கிரவல் குழி பகுதியிலும் 70 பதுகளில் பிற்பகுதியில் ஒரு பாரிய தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டு (வயர்லெஸ் ரவர்) என்று அழைக்கப்பட்டது அந்த ரவர், சேவை எதையும் தொடங்காத நிலையில் நீண்டகாலம் இருந்து வந்து 87, 90 களில் இந்திய சீக்கிய இராணுவத்தின் முக்கிய முகாம்களில் ஒன்றாக வயர்லெஸ் முகாம் அமைந்திருந்தது.

இந்திய இராணுவம் வெளியேறிய பின் அவ் இரு இடங்களும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அவ்விரு இடங்களும் எதிரிகளால் இலகுவாக இனங்காணக்கூடிய சாத்தியம் இருந்ததாலோ என்னவோ, புலிகள் அந்த இடங்களில் சொல்லத்தக்க முகாம்கள் அமைத்து நிலைகொண்டிருக்கவில்லை. இருந்தும் அவ்விடங்களை தமது பூரண கட்டுப்பாடுக்குள் வைத்திருந்து வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இன்று ஸ்ரீலங்கா சிங்கள அரசு குறிப்பிட்ட அந்த இடங்கள் ஸ்ரீலங்காநாட்டின் பாதுகாப்புக்கு உகந்த கேந்திரம் என ஒரு மாயையை சர்வதேச மட்டத்தில் தோற்றுவித்து, திசை திருப்பும் சதி தொடங்கப்பட்டிருக்கிறது.  வவுனியாவிலிருந்து வடக்கு நோக்கி தொடரும் ஓமந்தை, புளியங்குளம், கனகராயன்குளம், மங்குளம், பனிக்கங்குளம், கொக்காவில், முறிகண்டி. இவை அனைத்தும் பழைய கிராமங்களாக இருந்தாலும், அதிக சனத்தொகையற்ற வலுவற்ற சிறிய கிராமங்கள். யாழ் பிரதான வீதிக்கு கிழக்காக முல்லைத்தீவுவரை காடுகள் பரந்து விரிந்து கிடக்கின்றன.  தெருவுக்கு மேற்காகவும் கணிசமான காட்டு பிரதேசங்கள் உண்டு. இந்தக்காடுகள் அரசகாணிகளாகவே இருந்துவருகின்றன. இந்தக்காடுகள் தமிழர் போராட்டத்தில் அதிக பங்களிப்புக்களை வழங்கியிருந்தன. [ இந்த காடுகளை கணக்கில் கொண்டுதான் இலங்கை இந்திய சாக்காட்டு ஒப்பந்தமான 13வது திருத்த சட்டமூலம் மறுக்கப்பட்டுவருகிறது. 13வது சரத்து சட்டமூலத்தினுள் காணி அதிகாரம் காவல்த்துறை (பொலிஸ்) அதிகாரமும் உள்ளடக்கப்பட்டிருக்கிறது, (கொடுக்காத ஒப்பந்தத்தில் எதை உள்ளடக்கித்தான் என்ன பயன்) ]

வளமான இந்த பல இலட்சம் ஏக்கர் காடுகளை மெல்ல மெல்ல சிங்கள குடியிருப்பாக மாற்றுவதே ராஜபக்க்ஷ அரசின் திட்டம். இராணுவ முகாமை அமைத்து அருகாமையில் சில நூறு இராணுவக்குடியிருப்புக்களை அமைத்துவிட்டாலே தமிழர்கள் அங்கு குடியிருக்க விரும்பமாட்டார்கள் என்பதுவும் சிங்கள அரசின் கூடுதல் நம்பிக்கை. முறிகண்டியை விட்டுவிட்டு குடியிருப்புக்கள் இல்லாத கொக்காவில் போன்ற மக்கள் நடமாட்டமற்ற இடங்களில் இராணுவமுகாம்களை நிறுவி சிங்கள குடியிருப்புக்களை தொடங்கலாமே என்ற கேள்வி பலருக்கும் எழலாம். அப்படி செய்யப்போனால் இருக்கும் பிரச்சினையுடன் புதிய பிரச்சினையாக இவைகளும் இணைந்து அரசியலாக்கப்பட்டு  பிரச்சினை  சர்வ தேசம்வரை சென்றடைந்துவிடும் என்ற அச்சம் சிங்கள அரசுக்கு உண்டு. இலங்கையில் இருக்கும் சர்வதேச தொண்டர் அமைப்புக்களே அரசாங்கத்தின் மீது குற்றஞ்சுமத்தும் அபாயம் வந்துவிடும் என்ற தந்திரமே தற்போது இராணுவம் நிலைகொண்டிருக்கும் பகுதியை கண்காணிப்புக்கு வலையமாக பிரகடனப்படுத்தப்படுத்தி தக்கவைத்து நிரந்தரமாக்கி தொடர்ந்து குடியிருப்புக்கள் விஸ்தரிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

முறிகண்டியில் தொடங்கப்பட்டிருக்கும் தமிழர்களின் நில மீட்பு போராட்டம் வெற்றி பெற்று தமிழர்களின் குடியிருப்பு காணிகள் திருப்பி பெறப்பாட்டாலும் சிங்கள அரசு தோத்துப்போனதாக அர்த்தம் கொள்ள முடியாது. அதையே காரணமாக்கி நல்ல  சாட்டாக எடுத்துக்கொண்டு சற்று பின்வாங்கி 200 -300 மீற்றர் தெற்காக நகர்ந்து இராணுவ முகாம் அமைக்கப்படும் சாத்தியம் இருப்பதாகவே படுகிறது. கலகம் இல்லாமல் வழி பிறப்பதில்லை கலகம்தான் சில விடயங்களை நியாயப்படுத்த உதவும் விளம்பரம் என சிங்கள அரசு நம்பி கலகத்தில் ஈடுபட்டிருக்கிறது.

முறிகண்டியில் குடியிருக்கும் குடியிருப்பாளர்களில் 80 சதவீதமானவர்கள் மலையக தமிழர்கள் என்பதாலும் தற்போதைக்கு கேட்க ஆளில்ல என்ற நிலையில்  அவர்களின் வறுமையையும் இலங்கையின் மூன்றாம்தர பிரஜைகள் என்ற முத்திரையையும் அவர்கள்மீது குத்தி அவர்களை வழிக்கு கொண்டுவரலாம் என்பதும் சிங்கள அரசுக்கு கூடுதல் நம்பிக்கையை தந்திருக்கிறது. இந்த தரவுகள் அனைத்தையும் சிங்கள அரசுடன் இணைந்து இயங்கும் ஒட்டுக்குழுவின் தலைவர்களின் அனுமதியுடன் அரசாங்கம் செய்து வருகின்றதென்பதும் வரும் காலங்களில் முறிகண்டிக்கு வரவிருக்கும் ஒட்டுக்குழுக்களின் வரவிலிருந்து உணர்ந்து கொள்ளமுடியும்.

முறிகண்டிக்கும் கொக்காவிலுக்கும் மத்தியில் அமைந்திருக்கும் பகுதியை கையகப்படுத்தி நிரந்தர இராணுவ முகாமாக மாற்றி அதன் தொடர்ச்சியாக முல்லைத்தீவுவரை சிங்கள குடியிருப்புக்களை உண்டுபண்ணி வன்னிப்பகுதியை இரண்டாக பிளப்பதற்கான சதித்திட்டத்தின் ஆரம்ப முதன் முயற்சியாக முறிகண்டியில் கை வைக்கப்பட்டிருக்கிறது. பிரச்சினையை பிரச்சினையாக்கி அதிக எதிர்ப்பின்றி நியாயப்படுத்தலுடன்,, நியாயத்துக்கு கட்டுப்பட்டு சற்று பின்வாங்குவதுபோல் ஒரு நெகிழ்வை முன்வைத்து மூல நோக்கத்தை அடையலாம் என்பதன்  சூழ்ச்சியே செறிவு குறைந்த பலவீனமான மக்கள் வாழும் இடமான முறிகண்டி தெரிவு செய்யப்பட்டிருப்பதன் சூத்திரம்.

கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து மாங்குளம் வரை இருந்த நிலப்பரப்பு அனைத்தும் 1970 களில் காடாக இருந்தவை இரணைமடுச்சந்தியிலிருந்து கிழக்காக 500 -600 மீற்றர் தொலைவில் இருந்த கனகாம்பிகை குளம் சிறு பயிர் நீர்ப்பாசனத்துக்கு தகுதியானதென்று காணப்பட்டதால் மெயின் வீதியின் ஓரத்தில் உள்ள உயர்வான நிலங்களை தவிர்த்து  உட்புறமாக ஒரு மைல் தள்ளி கனகாம்பிகைக்குளம் நீர்ப்பாசன மூன்று ஏக்கர்த்திட்டம் படித்த வாலிபர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. 1972 - 1973 களில் கனகாம்பிகை குளம் சேவீஸ் வீதிக்கும் லக்ஸபான மின்சார ரவருக்கும் இடைப்பட்ட பகுதி சேவீஸ்வீதி குடியேற்றத்திட்டம் என்ற பெயரிலும், அடுத்து டிப்போ சந்தியிலிருந்து தென்மேற்காக ஒரு கிலோ மீற்றர் தொலைவில் கந்தன் குளம் குடியேற்றத்திட்டம் என்ற பெயரிலும் 1/2 ஏக்கர் வீதம் காடுகள் வழங்கப்பட்டு மக்கள் குடியேற்றப்பட்டனர்.   இந்த குடியேற்றங்கள் உருவான பின்புதான் கிளிநொச்சி பஸ் நிலையம்-சந்தையை தாண்டிய பகுதிகளில் சன நடமாட்டம் அதிகரிக்கப்பட்டு புளக்கத்தில் வந்திருந்தன.

70 - 80 பதுகளில் மலையகத்திலிருந்து விரட்டப்பட்ட மக்கள் பாதுகாப்பாக தஞ்சமடைந்திருந்த இடங்களில் கிளிநொச்சி நிலப்பரப்பு முதல்த்தரமாக இருந்தது. கிளிநொச்சிப்பகுதியில் கூலி வேலை செய்து வாழ்ந்த இந்திய வம்சாவழி மலையக மக்கள் இரணைமடுச்சந்தியிலிருந்து மேற்காக காடாக இருந்த இடங்களில் தன்னிச்சையாக குடியேறினர். அந்த இடத்துக்கு பாரதிபுரம் என்று பெயரும் சூட்டியிருந்தனர், பாரதிபுரத்தை விடவும் சற்று மேடாக முறிகண்டி பகுதி அமைந்திருந்ததனால் 85 வரை முறிகண்டியை சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் குடியிருக்க முனைப்பு காட்டியிருக்கவில்லை. பின்வந்த காலங்களில் மலையக மக்களில் வரவும் அதிகரித்திருந்தது, வந்திறங்கியவர்கள்  மேட்டு நிலமாக இருந்தாலும் தமக்கு சொந்தமாக குடியிருப்புக்களை உருவாக்க ஆர்வம் கொண்டிருந்தனர், 

போராட்டம் முனைப்பு பெற்றிருந்த நேரமாதலால் போலிஸார் மற்றும் காணி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்டவிரோத குடியேறிகளை தடுத்து நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அரச நிர்வாக இயந்திரம் குறுக்கப்பட்டு அலுவலக மட்டத்திலேயே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. வெளிக்கள நிர்வாகம் அனைத்தும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் மெல்ல மெல்ல கொண்டுவரப்பட்டிருந்தன. இந்த சூழல் குடியேற்றவாசிகளுக்கு சாதகமாக அமைந்திருந்தது. 90களின் பின், தமிழீழ நிர்வாகத்தின் பணிப்பின்பேரில் அனைத்து குடியிருப்பாளர்களும் கிராமசேவகர் மட்டத்தில் காணிகளை பதிவு செய்து முறைப்படுத்தப்பட்டிருந்தது, கிராம சேவையாளரின் பதிவு அரச அதிபர்வரை சென்று சேரவேண்டும் என்பதுதான் இலங்கையின் சட்டவிதி.

முறிகண்டியை சுற்றியுள்ள பகுதி குடியிருப்பாளர்களின் காணிகள் முழுவதும்  முறையாக காணி அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு குடியிருப்பதற்கான அனுமதியை (Permit) பெற்றுக்கொண்டவர்களாக இருக்க முடியாவிட்டாலும், அனைவரும் கிராம சேவையாளர் அலுவலகத்தின்மூலம் அரசாங்க அதிபர் காரியாலயத்துக்கு முறைப்படுத்தப்பட்ட குடியிருப்பாளர்களாகவே இருக்க முகாந்திரம் இருக்கிறது.

காணி அலுவலகத்தில் பதிவு செய்திருந்தாலும் பலர் கிராமசேவகர் மட்டத்தில் பதிவு செய்த ஆதாரத்துடன் இருபது இருபத்தைந்து ஆண்டுகளாக அங்கு வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர். 90 களின் பின் கிளிநொச்சி மாவட்டம் முழுவதும் தமிழீழ நிர்வாக நடைமுறைக்கு உட்பட்டு அரசாங்க அதிபர் பணிமனை, காணி அலுவலகம் அனைத்தும் மக்கள் நலன்சார்ந்து சீராகவே இயங்கி வந்திருக்கின்றன, அம்மக்களுக்கான உணவு முத்திரை, குடும்ப அட்டை இன்ன பிற ஆதார ஆவணங்கள்  அனைத்தும் வழங்கப்பட்டேயிருக்கிறது.

போர் நடந்தபோது தற்காலிகமாகக் முறிகண்டியில் தரித்த இராணுவம் இன்று நிரந்தரமாக நிலைகொள்ள ஏன் முனைகிறது என்பதை ஆய்வாளர்களும், கல்விமான்களும், தமிழ் அரசியல் விற்பன்னர்களும் சிந்திக்கவேண்டியவர்களாக இருக்கின்றனர். ஒன்று எதிர்வினை இல்லை, அரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கு, இரண்டு பலவீனமான மக்களின் நிலை, மூன்றாவது வன்னியை இரண்டாகப்பிளந்து சிங்கள குடியேற்றத்தை நிறுவ போடப்பட்டிருக்கும் திட்டமிட்ட பெருத்த சிங்களச் சதி.

எது எப்படியிருப்பினும் முறிகண்டியிலோ, கொக்காவிலிலோ இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்படுமானால், அது முல்லைத்தீவுவரை பரந்து கிடக்கும் காடுகள் அனைத்தும் சிங்கள குடியேற்றமாக மாற்றப்படுவது எவராலும் தடுக்க முடியாமல் போகலாம். தமிழ் அரசியல்வாதிகள் கொழும்பிலும், தமிழ்நாட்டிலும் குடியிருந்துகொண்டு தீர்வுக்கான பொதிகளை கட்டி அவிழ்த்து விளையாடிக்கொண்டிருக்க சத்தமில்லாமல் தமிழீழம் சிங்கள குடியிருப்பாக மாறி ஒரு காலகட்டத்தில் அரசியலுக்கு வேலையில்லாமல் போய்விடும்.

ஈழதேசம் இணையத்திற்காக.
கனகதரன்.