Monday, October 11, 2010

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன், அன்னையே.. என் அன்னையே.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு பலவீனமடைந்து காங்கிரசின் காலடியில் தன்னை சமர்ப்பித்துக் கொண்டுள்ளது திமுக. இந்த பலவீனத்திற்கான ஒரே காரணம், இன்று திமுகவை தன்னுடைய குடும்ப நிறுவனமாக மாற்றி வைத்துள்ள கருணாநிதி மட்டும் தான்.

தமிழகம் வருகை தந்துள்ள சோனியா, தன்னை வந்து சந்திக்காமல் போய் விட்டாரென்றால், கூட்டணியில் பிளவு என்று செய்திகள் வந்து விடுமோ என்று அஞ்சிய கருணாநிதி, திமுக காங்கிரஸ் கூட்டணி மிகுந்த பலமாக இருக்கிறது என்று காண்பித்துக் கொள்வதற்காகவே, தனது தன்மானத்தை அடகு வைத்துக் கொண்டாலும் பரவாயில்லை என்று, விமான நிலையத்திலேயே சென்று சோனியாவை சந்தித்து, தனது விசுவாசத்தை காண்பித்துக் கொண்டுள்ளார். இறுமாப்பான சோனியாவும், சிரித்துப் பேசி விட்டு, திருச்சி கூட்டத்தில், காங்கிரசை பலப்படுத்துங்கள் என்று சொன்னது மட்டுமல்ல, திமுகவை கடுமையாக விமரிசித்து, கருணாநிதியின் எரிச்சலை தினந்தோறும் கிளப்பிக் கொண்டிருக்கும், ஈவிகேஎஸ் இளங்கோவனை அருகில் அமர வைத்ததன் மூலம், கருணாநிதிக்கு, மறைமுகமாக செய்தியும் சொல்லியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியை எதிர்த்து, காங்கிரசை ஒழித்துக் கட்டுவோம் என்ற கோஷத்தோடு உதித்த திமுக, இன்று காங்கிரசின் தயவில், காங்கிரசிடம் மன்றாடிக் கொண்டு இருப்பது என்பது எவ்வளவு பெரிய வரலாற்று முரண் ?

நாகப்பட்டினம் கூட்டத்தில் கருணாநிதி பேசிய பேச்சு இவ்விடத்தில் குறிப்பிடுவது பொறுத்தமாக இருக்கும்.

“கூட்டணி இன்றைக்கு ஒன்றும் நிலையானது அல்ல. எனக்குத் தெரியும். கூட்டணிகள் சில கொள்கைகளின் அடிப்படையிலேயே சேருகின்றன. (ஊழல் செய்து சம்பாதிக்க வேண்டும் என்ற கொள்கை) திமுகவுக்கும் காங்கிரசுக்கும் கூட கூட்டணி எப்போது ஏற்பட்டது ? அன்னை என்று எல்லோராலும் புகழப்படுகின்ற தியாகத் திருவிளக்கு என்று நான் அடிக்கடி கூறுகின்ற சோனியா காந்தி அவர்களை அரசியலில் இருந்தே விரட்ட வேண்டும் என்று ஒரு கூட்டம் மதவாத கூட்டம் ஆர்ப்பரித்து எழுந்த போது, தெற்கே இருந்து ஒரு குரல், திருமதி சோனியா காந்தி அவர்களுக்கு ஆதரவாக அகட்டது. தெற்கே இருந்து ஒரு கரம் நீட்டப் பட்டது. அந்தக் கரம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சொந்தமான கரம்.

அந்தக் கரத்தை நீட்டியது நாம்தான். சோனியா காந்தி அவர்களை காப்பாற்றக் கூடிய வல்லமை படைத்தவர்கள் என்பதற்காக அல்ல, அந்தக் கரத்தை நாம் நீட்டியது. ஆண்டாண்டு காலமாக தமிழகத்தை மாத்திரமல்ல. இந்திய தரணியிலேயே மதவாதத்தை கிளப்பி, சாதி பேதங்களை உருவாக்கி மக்களை மௌடீகர்களாக ஆக்கி அதன் காரணமாக அந்த அடிப்படையில் அரசியலை நடத்தலாம் என்று எண்ணியிருந்த பாஜக போன்ற பிற்போக்கு இயக்கங்களுக்கு யாரும் ஆதரவு அளித்து விடக் கூடாது, அவைகளுக்கு எதிர்ப்பாக இருக்கின்ற நடவடிக்கைகளுக்கு நாம் பக்கபலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேதான் சோனியா காந்தி அவர்களுக்கு நாம் கரம் நீட்டி வலுவளித்தோம். பக்கத் துணையாக நின்றோம். இன்றைக்கும் பக்கத் துணையாக நிற்கிறோம்.

நேற்றைக்குக் கூட அம்மையார் அவர்கள் திருச்சியில் பேசும் போது கூட்டணி மகிழ்ச்சிகரமாக இருக்கிறது என்றுதான் சொன்னார்கள். ஆம் ! கூட்டணி மகிழ்ச்சிகரமாகத்தான் இருக்கிறது. திமுகழகத்திற்கும் காங்கிரசுக்கும் உள்ள கூட்டணி மகிழ்ச்சிகரமாக இருக்கிறது. இது மகிழ்ச்சிகரமாக இருக்கக் கூடாது எனறு எண்ணுகின்ற ஒரு சில சூழ்ச்சிக்காரர்களுக்கு அவர்கள் அளித்த விளக்கம்.

திமுக காங்கிரஸ் கூட்டணி என்று அவர்கள் பெயர் குறித்து விளக்கம் சொல்லாவிட்டாலும் கூட எங்கள் கூட்டணி என்று அவர்கள் சொன்னதிலிருந்து (ஏன் அது மத்திய அரசு கூட்டணியை குறிக்கக் கூடாதா ) இந்தக் கூட்டணி உதயமாகும் போது, சோனியா காந்தி அவர்களைப் பற்றி தமிழகத்திலே எதிர்க்கட்சித் தலைவர் என்னனென்ன சொன்னார்.. …. ….

அந்த சோனியா காந்தியைப் பார்த்து பதிபக்தி இல்லாதவர் என்று சொன்னவர்கள் இன்க்கு சோனியா காந்தியோடு நாங்கள் கூட்டணி சேர்வோம், அணி சேர்ந்து திமுகழக ஆட்சியை கவிழ்ப்போம் என்று கூறுகிறார்கள் என்றால், நாடு எப்படிப்பட்ட விசித்திரங்களையெல்லாம் சரித்திரத்திலே சந்திக்கிறது என்பதை தயவு செய்து நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இவர்களுடைய பேச்சை நம்புகிற அளவுக்கு இவர்களுடைய நாணயத்தை ஏற்றுக் கொள்கிற அளவுக்கு டெல்லியிலே உள்ளவர்கள் ஒன்றும் கண்களை மூடிக் கொண்டிருப்பவர்கள் அல்ல பச்சைக் குழந்தைகள் அல்ல. சரித்திரம் படித்தவர்கள் தான். வரலாறு தெரிந்தவர்கள் தான்.

1580083773_262b38544b_b

எனவே அரசியலிலே பதவிகள் வரலாம். போகலாம். ஆனால் நாம் பெற்றிருக்கின்ற சுயமரியாதையை என்றைக்கும் நாம் யாரும் இழந்துவிடத் தயாராக இருக்க மாட்டார்கள். அதுதான் பெரியார் எங்களுக்கு கற்றுக் கொடுத்த உணர்வு. அண்ணா எங்களுக்கு போதித்த அந்த உணர்வு சுயமரியாதைதான். “

நாடு எப்படிப்பட்ட விசித்திரங்களையெல்லாம் சரித்திரத்திலே சந்திக்கிறது என்கிறாரே கருணாநிதி … …. நாலு பண்டாரங்கள் சேர்ந்து கட்சி தொடங்கியிருக்கிறார்கள் என்று பாரதிய ஜனதா கட்சியை விமர்சித்து விட்டு, அதே பாரதிய ஜனதா கட்சியோடு கருணாநிதி கூட்டணி சேர்ந்து ஐந்து வருடங்கள் பதவி சுகத்தை அனுபவிக்க வில்லை ? இன்று தான் பாரதிய ஜனதா கட்சி மதவாத கட்சியாக தெரிகிறதா ? குஜராத்தில் நூற்றுக் கணக்கான இசுலாமியர்கள் படுகொலை செய்யப் பட்ட போது, அப்போது பாரதிய ஜனதா கட்சிக் கூட்டணியிலே இருந்ததனால், அது அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்று கருத்து தெரிவித்தவர்தானே இந்த கருணாநிதி. ஜெயலலிதாவின் பேச்சை டெல்லியிலே நம்புவதற்கு பச்சைக் குழந்தைகள் இல்லை என்றால், இவருடைய பேச்சை மட்டும் நம்பி விடுவார்களா ?

இறுதியாக பதவி முக்கியம் அல்ல, சுயமரியாதைதான் முக்கியம் என்று கூறும் கருணாநிதி இந்த சுயமரியாதையைத் தானே விமான நிலையத்தில் சென்று சோனியாவின் காலடியில் வைத்து விட்டு வந்தார் ?

3

திருச்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைத் “திரட்டி” கூட்டத்தை நடத்திக் காட்டியிருக்கும் காங்கிரஸ் கருணாநிதிக்கு தூக்கமில்லா இரவுகளை தந்து கொண்டிருக்கிறது. சோனியாவோடு தனக்கு இருக்கும் நல்ல உறவால், கூட்டணி பேச்சு வார்த்தையை திறம்படி சமாளிக்கலாம் என்று கருணாநிதி எண்ணியிருப் பாரேயானால், அது பகல் கனவாகவே அமையும்.

காங்கிரஸ் இல்லாமல் திமுக சட்டமன்ற தேர்தலை சந்திக்க முடியாது என்பதை சோனியா நன்றாகவே அறிந்திருக்கிறார். தமிழகத்தில் ஒரு வலுவான காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டும் என்று சோனியா பேசியதில், பல அர்த்தங்கள் உண்டு.

சோனியா கருணாநிதியை சந்திக்காதது மட்டுமல்ல. தமிழகத்திற்கு மூன்று முறைகளுக்கு மேல் வருகை தந்திருந்தும், ஒரு முறை கூட, ராகுல் காந்தி கருணாநிதியை சந்திக்காததும் கருணாநிதியை பயத்தில் ஆழ்த்தியிருக்கிறது. திரிபுரா மாநில ஆளுனர், தமிழகம் வந்தால் கூட, கருணாநிதியை மரியாதை நிமித்தம் சந்திக்கும் போது, கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவரின் மகன், கருணாநிதியை சந்திக்காமல் சென்றது, மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

வரக்கூடிய சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி 100க்கு குறையாத இடங்களையும், துணை முதல்வர் பதவியையும் கேட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 100 கேட்டால், கருணாநிதி 80க்காவது ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியும், திமுக கூட்டணிக்கு வந்தால், கருணாநிதி பாடு மிக மிக திண்டாட்டமாகப் போகும்.

2004ல், தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கியிருந்த, கருணாநிதியை சோனியா வந்து சந்தித்தது ஒரு காலம். இன்று தானே சென்று சோனியாவை விமான நிலையத்தில் சந்திப்பது, தன்னுடைய வயதுக்கும் அனுபவத்துக்கும் அழகல்ல என்பது கருணாநிதிக்கு தெரியும் என்றாலும், விமான நிலையத்திற்கு சென்றதற்கான அர்த்தம் என்னவென்றால், நான் இன்னும் எவ்வளவு கேவலமாக வேண்டுமானாலும் நடந்து கொள்கிறேன், ஸ்பெக்ட்ரம் விசாரணையை மட்டும் நடத்தாதீர்கள் என்பதுதான் அது.

இதன் மற்றொரு வெளிப்பாடுதான், 20 நாட்களாக நடக்கும், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் வேலை நிறுத்தத்தில் இருந்து, திமுகவின் தொமுச மட்டும் திடீரென்று விலகிக் கொண்டது.

இதில் மிக மிக விசித்திரமானது என்னவென்றால், தனது தன்மானத்தை அடகு வைக்க சோனியாவை காண விமான நிலையம் சென்ற கருணாநிதி, அதற்கு காரணமாக, இலங்கைத் தமிழர்களின் பெயரை பயன் படுத்துவதுதான். சோனியாவை சந்திக்க கருணாநிதி சொன்ன காரணம், இலங்கையில் முகாம்களில் உள்ள தமிழர்களை உடனடியாக அவர்கள் வாழ்விடங்களில் குடியமர்த்த வேண்டும் என்பதுதான் அது.

கருணாநிதியின் இந்தக் கோரிக்கைக்கு, மத்திய அரசு நேரடியாக பதில் சொல்லாமல், செயலில் காட்டியிருக்கிறது. அது என்ன தெரியுமா ? காமன் வெல்த் விளையாட்டு நிறைவு விழாவிற்கு, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை அழைத்திருக்கிறது மத்திய அரசு. ஆயிரக் கணக்கான தமிழர்களை கொன்று அழித்த ராஜபக்ஷேவை அழைத்து கவுரவப் படுத்துவதை விட, கருணாநிதியையும், தமிழர்களையும் காங்கிரஸ் அரசு அவமானப் படுத்தவே முடியாது.

இந்த விழாவிலும், திமுகவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், வெட்கமில்லாமல் கலந்து கொள்ளத் தான் போகிறார்கள்.

திராவிட இயக்கம் என்று சொல்லிக் கொண்டு, அனைத்து கொள்கைகளையும் குழி தோண்டி புதைத்த கருணாநிதி திராவிட இயக்கத்தை இந்தியா முழுவதும் வளர்க்க வேண்டும் என்று நாகை கூட்டத்தில் பேசியிருப்பதுதான் விசித்திரத்திலும் விசித்திரம்
நன்றி சவுக்கு இணையம், http://www.savukku.net/index

No comments: