Tuesday, March 31, 2015

சம்பந்தர், மாவை தரப்பின் மாகாணசபை மீதான முரண்பாடு வித்தியாசமான வேறு ஒரு தலைமையை உருவாக்கக்கூடும்..

இத்தால் சகல ஈழ தமிழர்களுக்கும், ஈழத்தின் அடிமை தழையை உடைத்தெறிந்து விடுதலையை நோக்கிய சிந்தனையுடன் பயணம்செய்யும் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் சொல்லிக் கொள்ளுவது என்னவென்றால்.
இலங்கை சுதந்திரத்தின் பின் தந்தை செல்வநாயகம் அவர்களால் உருவாக்கப்பட்டு அர்ப்பணிப்புடன் தமிழினத்துக்காக பிறந்து வளர்ந்து போராடிய கட்சி “இலங்கை தமிழரசு கட்சி”
தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் ஒரு இக்கட்டான தருணத்தில் மிகுந்த மென் இழை ராஜதந்திர நோக்கோடு தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கம் பெற்று சர்வதேச அங்கீகாரத்தை தன்னகத்தே கொண்ட தமிழர்களின் தேசிய கட்சி “தமிழ் தேசியக்கூட்டமைப்பு”, இந்த இரண்டு கட்சிகளையும் உருவாக்கியதில் அல்லது வளர்த்ததில் சம்பந்தனுக்கு மாவை சேனாதிராசாவுக்கு துளியளவு பங்கும் இல்லை. என்னைப்போல உங்களைப்போல சம்பந்தனும் மாவையும் தமிழ் உணர்வுடன் இருந்து இருந்தாலும் கூடுதலாக இந்த இருவரும் குறிப்பிட்ட அமைப்புக்களின் உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்ற ஒன்று மட்டுமே கூடுதல் தகுதியாக கொள்ள முடியும்.
விரால் மீன் இல்லாத குளத்தில் குறவை மீன் துள்ளி விளையாடுவதுபோல தமிழரசு கட்சியையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியையும் தந்தரமாக சுவீகாரம் செய்து அக் கட்சிகளின் நிழலில் இன்று இன்புற்று வாழ்பவர்களாக இரா சம்பந்தன், மற்றும் சுமந்திரன், மாவை சேனாதிராசா மற்றும் சிலர். எந்த ஒரு குறிக்கோளும் இல்லாமல் சுயநலனே குறியாக துரோக அரசியல் செய்து பொழுது போக்கிக்கொண்டு இருக்கின்றனர்.
இரா சம்பந்தன் அவர்கள் தான் இன்றைக்கு என்ன செய்கிறேன் என்பதே தெரியாமல் ஒரு கோமா நோயாளிபோல சுமந்திரனின் வாய்ப்பாட்டை மட்டுமே தினமும் கேட்டு, வரத்து தண்ணீருடன் அடிபட்டு செல்லும் கிணற்று நீர்போல் சகதி, சாக்கடை, கழிப்பிடங்களை நோக்கி தாந்தோன்றித்தனமாக பாய்ந்து ஓடிக்கொண்டிருக்கிறார். பின்னால் சுமந்திரன் மாவை ஆகியோர் சன்பந்தன் கை பிடித்து திக்கு தெரியாத ஒரு திசை நோக்கி செல்லுகின்றனர். இவர்களுடன் ஒன்றி கலந்து பயணப்பட்ட வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மாறிவரும் மக்களின் மனவோட்டத்தை உணர்ந்து சம்பந்தன் தரப்பினரிடம் இருந்து சற்றே விலகி யதார்த்தத்தை புரிந்து கொண்டு தனது பார்வையையும் பாதையையும் மாற்றி அமைக்க முற்பட்டிருக்கிறார்.
பாராளுமன்ற பிரதிநிதுத்துவம் என்ற செல்வாக்கை வைத்துக்கொண்டு தமிழர்களின் அரசியல் பொருளாதார வாழ்வியலை தமது சுயநல கைப்பிடிக்குள் வைத்து எதுவும் செய்துவிடலாம் என்பது சம்பந்தன் குழுவினரின் கொள்கையாக இருந்து வருகிறது. சம்பந்தன் குழுவினரின் குடிமியை பிடித்து தொங்குவதால் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களின் பொல்லாப்புக்குள்ளாகி மக்களின் வெறுப்பை சம்பாதித்து முகவரி இல்லாமல் போய்விடுவோமோ என்ற யதார்த்தம் அறிந்து சூழல் அசைவாக்கத்தை பின்பற்றவேண்டிய நிலையை உணர்ந்தவராக முதலமைச்சர் விக்னேஸ்வரன் மாற்றம் பெற்றிருக்கிறார்.
சென்ற ஆண்டு எந்த கூச்ச உணர்வுமில்லாமல் ரணில் விக்கிரமசிங்கவை ஒரு கையிலும் சிங்க கொடியை இன்னொரு கையிலும் புளகாங்கிதத்துடன் தலைக்குமேல் தூக்கி இனத் துரோகியாக மாறிப்போய்விட்டவர் சம்பந்தன், இதன் பின்னணியில் கொழும்பு பிறப்பினரான சுமந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் இருந்ததாக உலகதமிழர்கள் மத்தியில் மோசமாக விமர்சனம் எழுந்தது.
இன்றைக்கு மகிந்த ராஜபக்‌ஷவின் ஒரு பிரிவினர் ராஜபக்‌ஷவை ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டு மைத்திரிபால ஶ்ரீசேன தலைமையில் புதிய மொந்தையில் அதே பழைய கள்ளை வைத்து புதிய அரசாங்கம் என்று விடுப்புக்காட்டி ஒரு ஆட்சியும் நடந்து வருகிறது அந்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வழிமொழிந்து பின்பற்றுவதன் மூலம் மாகாணசபையின் அசைவாக்கத்தை தமது பிடிக்குள் வைத்திருக்கவேண்டும் என்பதே சம்பந்தர் மாவை ஆகியோரின் குறியாக இருந்து வருகிறது.
போராட்டம் நிறுத்தப்பட்ட இன்றைய காலகட்டத்தில் பாராளுமன்ற அரசியற் கட்சிகள் என்னதான் ஆட்டம் ஓட்டம் போட்டாலும் இறுதியில் அதிகாரம் சங்கமமாகும் புள்ளியாக மாகாண சபை நிர்வாகமே மேலோங்கி நிற்கிறது, மாகாணசபையின் அசைவு ஒன்றுதான் தமிழர்களின் அடிப்படை இருப்பை தீர்மானிக்கும் இடமாக இருப்பதால் பாராளுமன்ற பிரதிநிதுத்துவத்தை விடவும் முன்னிலை வகிப்பது மாகாண சபையின் தீர்மானங்களும் வேலைத்திட்டங்களும் என்பதாகவே மக்களின் பார்வை மாற்றம் பெறத்தொடங்கிவிட்டது.. இந்த இடத்தில்த்தான் பாராளுமன்ற பிரதிநிதுத்துவமா மாகாணசபையின் ஆளுமையா என்ற கேள்வி அரசியல்வாதிகளிடம் போட்டியாக பூதாகரமாக எழும்பி நிற்கிறது.
அந்த ஈகோவின் வெளிப்பாடுதான் மாவை சேனாதிராசா விக்கினேஸ்வரன் மீது தொடுத்து நிற்கும் பகமை என்பதை புரிந்து கொள்ளலாம்.
வடக்கு மாகாண முதலமைச்சராகிவிட வேண்டுமென்ற பெரும் கனவிலிருத்த மாவை, கொழும்பிலுள்ள இந்திய தூதர் கொடுத்த அழுத்தத்தால் அந்த கனவு பதவியை துறக்கவேண்டிய நெருக்கடி ஏற்பட்டிருந்தது,
இருந்தும் மாகாண சபையை தமது கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு தன்னிச்சையாக செயற்படுவது என்பது சம்பந்தன் மாவை சுமந்திரன் என்ற மூவர் குழுவினரால் மனதளவில்க்கூட அனுமதிக்க முடியவில்லை. மாகாணசபையின் பெரும்பாலான உறுப்பினர்களின் நோக்கம், உலக தமிழர்களின் எதிர்பார்ப்பு இவைகளுக்கு உட்பட்டு இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் மாகாணசபையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களால் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானம் சர்வதேச அரங்கில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியதோ இல்லையோ சம்பந்தன் தரப்புக்கு நெருப்பு சுட்ட வேதனையை தோற்றுவித்துவிட்டதை கண்கூடாக காணுகின்றோம்.
விக்னேஸ்வரன் தலைமையிலான மாகாணசபை தன்னிச்சயாக செயற்படுவது புதிய ரணில், மைத்திரி அரசுக்கு எவ்வளவு நெருக்கடியோ அவ்வளவு வெறுப்ப்பு மூவர் குழுவுக்கும் இருந்து கொண்டே இருக்கிறது.
சமீபத்தில் வடபகுதிக்கு விஜயம் செய்த ஶ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஒன்று கூடலில் முக்கியமாக கவுரவப்படுத்த வேண்டிய வடக்கு மாகாண சபைக்கும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களுக்கும் சம்பிரதாயத்துக்குகூட அழைப்பு அனுப்பப்படவில்லை. மாகாணசபை உறுப்பினர்கள் எவரும் ரணிலின் வரவேர்பில் சங்கமமாகவும் இல்லை. மாவை சேனாதிராசா சுரேஷ் பிரேமச்சந்திரன், சரவணபவன் போன்றோர் கலந்து கொண்டு எதுபற்றி பேசினர் என்பது புரியாத புதிராக இருந்தாலும் இந்த ஒன்று கூடலின் மூலம் மாகாணசபையை மட்டம் தட்டிவிட்ட பெருமை தற்காலகமாக திருப்தியளித்தாலும் சம்பந்தன் ரணில் குழுவினருக்கும் மக்களாகிய தமக்கும் இடையே ஒரு கறுப்பு திரை விழுந்துவிட்டதாகவே விமர்சனங்கள் பெருகி வருகின்றன. .
இப்போ சம்பந்தன் தரப்பு மூன்று நான்கு அமைச்சர் பதவிகளை ரணில் அரசிடம் கேட்டு கையேந்தி நிற்கின்றனர் என்று தெரிய வருகிறது. மத்தியில் உள்ள அமைச்சர்கள் மூலம் மாகாணசபைக்கு கொடுக்கும் அதிகாரங்களை மட்டுப்படுத்தி மத்திய அரசாங்கத்திடம் தமிழர்களுக்கான அதிகாரங்களை பெறும் இடமாக பாராளுமன்ற பிரதிநிதுத்துவம் இருக்கவேண்டும் என்றும் அதன்மூலம் மாகாணசபையை தமது விருப்பத்துக்கு ஆட்டி வைக்கலாம் என்பதே மிகப்பெரிய இராஜ தந்திரமாக சம்பந்தன் மாவை தரப்பால் வலை பின்னப்படுகிறது.
சட்டம் படித்த முன்னாள் நீதியரசரான முதலமைச்சர் விக்னேஸ்வரன் மக்கள் பலத்துடன் இருப்பதால் சம்பந்தன் தரப்பினரின் சில்லறை தனமான இந்திய தரத்திலாலான அரசியல் நரி இராஜதந்திரம் அடிபட்டுப்போகும் என்றே உணரக்கிடைக்கிறது. இவர்களது ஈகோ தொடரும் பட்ஷத்தில் வடக்கே மக்கள் நலனுக்காக தொடர்ந்து போராடி வரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் தலைமையிலான “தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி” சிவாஜிலிங்கம் சார்ந்த கட்சிகள் இணைந்து விக்னேஸ்வரன் தலைமையில் ஒரு புதிய அமைப்பு உருவாக்கி மக்கள் செல்வாக்குடன் பாராளுமன்ற பிரதிநிதுத்துவத்தையும் கைப்பற்ற முயற்சியும் செய்யலாம். வெற்றியும் பெறலாம் என்பதே நிதர்சனமாகும். சமீபத்தில் ஒரு நேர்காணலின்போது வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் கூறும்போது நான் தமிழரசுக்கட்சி உறுப்பினனல்ல. அதனால் மாவையோ எவருமோ அக்கட்சியிலிருந்து என்னை நீக்கமுடியாதென தெரிவித்துள்ளார் என்பதும் இங்கு நினைவு கூறத்தக்கது.
ஈழதேசம் செய்திகளுக்காக.
கனகதரன்.

Thursday, February 19, 2015

மஹிந்தருக்காக ஐநாவில் வாய்தா வாங்கிய சிறிசேன.

அரசியல் ரீதியான உலக பஞ்சாயத்து பேச்சுவார்த்தைகள் தவிர்த்து, மனித குலத்தின் நெருக்குவாரங்களை வெளிக்கொண்டுவந்து தீர்வு தேடுவதற்கும் அழுத்தம் கொடுப்பதற்கும் நம்பிக்கைவாய்ந்த அமைப்புக்கள் என்று நம்பப்படுபவை சர்வதேச தொண்டர் அமைப்புக்கள். அவைகளில் பக்கச்சார்பற்ற நிலையை எடுத்து நியாயத்துக்காக குரல் கொடுக்கும் அமைப்புக்களாக International Crisis Group,amnesty international,Human Rights Watch,Global Centre for the Responsibility to Protect, ஆகியவை இருந்து வருகின்றன என்று நம்பிக்கொண்டு இருக்கிறோம்.
ஆனால் ஐநாவின் மனித உரிமை ஆணையம் எதிர்வரும் மார்ச் சமர்ப்பிக்கவேண்டிய இலங்கை அரசு தொடர்பான மனித உரிமை மற்றும் போர்க்குற்றம் சம்பந்தமான விசாரணை அறிக்கையை இலங்கை அரசு ஒருதலைப்பட்ஷமாக கேட்டுக்கொண்டவைக் கிணங்க குறிப்பிட்ட அறிக்கையை வெளிவராமல் தள்ளி வைத்து தமிழர்களுக்கு எதிரான ஒரு மனித உரிமை மீறலை செய்து அதையும் நியாயப்படுத்தியிருக்கிறது.
ஐநா சபையின் மனித உரிமை ஆணையம் 2015 மார்ச்சு அமர்வின்போது சமர்ப்பிக்க இருந்த போர் குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கையை மார்ச்சு மாதத்தில் சமர்ப்பிக்காமல் ஆறுமாதங்கள் பின் போட்டு செப்ரெம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கும்படி இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன கேட்டதற்கிணங்க அறிக்கையை செப்ரெம்பர் மாதத்தில் தாக்கல் செய்ய ஒப்புக்கொண்டு அதற்கான ஆணையை மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையாளர் Zeid Ra ad Zeid al Hussein,உத்தரவாக பிறப்பித்திருந்தார்.
‘போர்க் குற்றங்கள் குறித்து இலங்கை அரசு விசாரணை நடத்தி வருவதாலும்? அரசு புதிதாக பொறுப்பேற்று உள்ளதாலும், இன்னும் ஆறு மாதம் பொறுத்திருக்க வேண்டும்’ என ஶ்ரீலங்காவின் சிறிசேன அரசு, மனித உரிமைகள் ஆணையத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.
இலங்கையின் முக்கிய தமிழ் அரசியற் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு அதற்கு உடன்பாடு தெரிவித்ததால் அந்த பிரேரணை இலங்கை அரசின் விருப்பப்படி செப்ரெம்பருக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இன்று ஒரு (அரசியல்) ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இலங்கையில் வாழும் தேசிய தமிழினத்தின்மேல் தொடர்ந்து நடத்தப்பட்டுவரும் கட்டுக்கடங்காத அடக்குமுறையை களைந்து சுமூகமான ஒரு தெளிவு நிலையை தோற்றுவித்து அமைதியை கொண்டுவந்து மக்களை காப்பாற்றவேண்டிய பாரிய பொறுப்பில் கணிசமான பங்கு அந்த அரசுக்கு உண்டு. அந்த கருத்தில் எவருக்கும் தடுமாற்றம் இருக்க முடியாது.
இங்கு கவனிக்கவேண்டிய கவலைக்குரிய விடயம் என்னவென்றால் ஐந்து வருடங்களுக்கு முன் துடிக்கத்துடிக்க கொன்றொழிக்கப்பட்ட ஒரு மனித இனத்தின் அவலநிலையை விசாரணைக்குட்படுத்த சர்வதேசமும் ஐநா அமைப்பும் நீதி நியாயத்துடன் சரியான முனைப்பு காட்டியிருக்கவில்லை. ஏனோ தானோ என்று தட்டிக்கழிக்கவே காரணங்களை தேடிக்கொண்டிருந்தனர். புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ச்சியாக நடத்திய ஜனநாயக போராட்டங்கள் அழுத்தங்களுக்குப்பின் ஐநா சப்பிரதாயத்துக்கு ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டது.
அதன் பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட மூன்றுபேர் கொண்ட நிபுணர்குழு அறிக்கை சில விடயங்களை வெளிப்படுத்தினாலும் அவ்வறிக்கை சரியான தாக்கத்தை இன்றுவரை பூர்த்தி செய்யவில்லை.
இப்போ 2015 மார்ச் மாதம் சமர்ப்பிக்க இருந்த விசாரணை அறிக்கையும் உரிய காலத்தில் சமர்ப்பிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்படுகிறது என்றால் இன்னும் இன்னும் தமிழர்களுக்கு எதிரான ஏதோ ஒரு பெரிய திட்டமிடப்பட்ட சதி மேல் மட்டங்களில் திரை மறைவில் நடந்துகொண்டிருக்கின்றது என்பதையே காட்டுகிறது.
மார்ச்சு மாதம் அமெரிக்கா இலங்கை அரசுக்கு எதிராக ஒரு பிரேரணையை கொண்டுவரும் என்று ஊகம் கூறப்பட்டது பின்னர் அமெரிக்கா பிரேரணையை சமர்ப்பிக்கப்போவதில்லை என்று சொல்லப்பட்டது. முன்னரும் இரண்டு பிரேரணைகளை அமெரிக்கா ஐநா மனித உரிமை அமர்வின்போது பெருத்த சலசலப்போடு தீர்மானமாக கொண்டுவந்திருந்தது அதுபற்றிய சலனமே இன்றைக்கு இல்லை.
சிறிசேனவின் தலைமையில் புதிய அரசாங்கம் தனது பணியினை செய்வதற்கும், ஐந்து வருடங்களுக்கு முன் ராஜபக்‌ஷ அரசு செய்த இனப்படுகொலை சம்பந்தமான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் இடையே என்ன சங்கடம் இருக்கிறதென்பதை நீதி நியாயத்தை விரும்பும் உலகம் அறிந்துகொள்ள வேண்டும். இந்த விடயத்தை கண்டித்து சர்வதேச மன்னிப்பு சபை மட்டும் amnesty international தனது கவலையை தெரிவித்திருக்கிறது. அறிக்கை சமர்ப்பிப்பதை தள்ளிப்போட்டு காலதாமதம் ஏற்படுத்துவதால் குற்றவாளிகள் தப்பிக்க வழிவகுக்கும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் வலயப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் சபையின் அறிக்கையை பாதிக்கப்பட்டோர் அதிகளவில் எதிர்பார்த்திருந்த நிலையில், குறித்த அறிக்கை பிற்போடப்பட்டுள்ளமை ஏமாற்றமளிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கை அரசாங்கமானது ஐ.நா மனித உரிமைகள் சபையுடன் இணைந்து குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் கொண்டுவந்தால் மாத்திரம் இந்த அறிக்கை பிற்போடப்பட்டமை நியாயமுள்ளதாக அமையுமென அவர் மன்னிப்பு சபையின் நிலைப்பாட்டை தெளிவு படுத்தியிருக்கிறார்.
திரட்டப்பட்ட அறிக்கையை உரியகாலத்தில் சமர்ப்பிக்கவேண்டியது மனித உரிமை ஆணையத்தின் நியாயமான கடமை அது சம்பந்தமாக தொடர் வேலைத்திட்டங்களை எடுக்கவேண்டுய கடமை இலங்கை அரசுக்கு இருக்கிறது. இலங்கையின் முன்னைய அரசும் இப்படியான கால அவகாசங்களை பெற்றுக்கொண்டு சர்வதேசத்தையும் மனித குலத்தையும் ஏமாற்றிக்கொண்டிருந்தமை கருத்தில் கொள்ளவேண்டிய விடயமாகும்.
தமிழர்களுக்கு என்று ஒரு ஆட்சி அதிகாரம் இல்லாமையும் ஐநாவின் இந்த உதாசீனத்துக்கு ஒரு காரணமாக கொள்ளமுடியும். தமிழ் இனமும் பூமியில் வாழுகிறார்கள் என்று ஐநாவில் அங்கத்துவம் பெற்றிருப்பின் இன்று திரட்டப்பட அறிக்கை தள்ளிப்போவதற்கு முடியாமல் இருந்திருக்கலாம், ஆனால் அப்படி ஒரு அதிகாரம் இல்லாமையும் தற்போது தமிழர்களுக்கென்றிருக்கும் வலுவில்லாத ஊடலித்துப்போன தலைமைத்துவத்தாலும் யாராலும் எதுவும் செய்யமுடியவில்லை.
இலங்கையில் புதிய ஆட்சி நடைபெறுவது காரணமாக சில நிர்வாக நடைமுறைகளுக்கு கால அவகாசம் தேவை என்பதை ஓரளவு ஏற்றுக்கொண்டாலும் புதிய அரசுடன் சம்பந்தமில்லாத போர் சம்பந்தமான அறிக்கையை தடுத்து நிறுத்தவேண்டிய தேவை என்ன இருக்கிறது. அறிக்கையை தடுத்து நிறுத்துவதால் கொலைகாரர்களுக்கு சாதகமான காய் நகர்த்தல் ஒன்றுக்கு வழிதேடுவது தவிர வேறு என்ன ஒளிந்திருக்கமுடியும்?
உதாரணத்துக்கு ஒரு வீட்டில் பட்டப்பகலில் ஒருவன் பல படுகொலைகளை செய்தான். கொலைகாரன் யார் என்பதும் துல்லியமாக பல ஆயிரம் சாட்சியங்களுடன் வீடியோ பதிவுகளும் சேர்ந்து இனங்காணப்பட்டுவிட்டது கொலை சம்பந்தமாக அவன்மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு நடந்து வருகிறது. கொலைகாரன் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுவிட்டான். அனைத்தும் தெரிந்துகொண்டு புதிதாக ஒருவர் வீட்டுக்கு குடியிருக்க வருகிறார் கொலை நடந்து ஆறு வருடங்களுக்குப்பின் புதிதாக குடி வந்தவர் வழக்கை தவணை போட்டு தள்ளிவைக்கும்படி ஏன் மனுச்செய்து மல்லுக்கட்டவேண்டும் இது எங்கோ இடிப்பதாக தெரியவில்லையா. இதை ஏன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இடிக்கவில்லை. சம்பிரதாயத்துக்கேனும் ஏன் தமிழர் பிரதிநிதிகள் எதிர்ப்பு காட்டவில்லை.
சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு உச்ச பட்ச அரசியல்தீர்வை இந்தியாவை சார்ந்து இந்தியா மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என்று ஏதோ காரணங்களுக்காக கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
மோடி அரசும் சரி, முன்னைய காங்கிரஸ் அரசும்சரி சம்பந்தன் தரப்பை ஒரு சல்லிக்காசுக்கு மதிப்பதாக தெரியவில்லை. இந்திய தரப்பினர் ராஜபக்‌ஷவையும் ஶ்ரீசேனவையும் பூர்வீகரீதியாக தமது சந்ததி வாரிசுகளாக கருதி அரசியல் செய்து வருகின்றனர். சிங்களப்படைகள் தமிழகத்து மீனவர்களை கொன்று குவித்தபோதும் இந்திய அரசு இதுவரை ஶ்ரீலங்கா அரசை கண்டித்ததோ தண்டித்ததோ கிடையாது.
ஐநா அறிக்கை தள்ளி வைக்கப்பட்டதற்கான நெம்புகோல் இந்தியாவின் அழுத்தத்திலிருந்தே தொடங்கப்பட்டிருக்கிறது. அறிக்கை தள்ளிவைக்க கோரிக்கை வைக்கப்பட்ட மறுநாள் சிறிசேன இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈழதேசம் செய்திகளுக்காக.
கனகதரன்.