உலகிலுள்ள ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மொழி- இனம் சார்ந்த ஒதுக்கல், மதவேற்றுமை அல்லது தேசிய வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது என்பதே இனப் படுகொலை (Genicode) Genocide என வரையறுக்கப்பட்டுள்ளது. Genocide ஆக இருக்கும் ஒருவர்          எப்பேர்ப்பட்ட மனநிலை                  கொண்டவராக இருப்பார் என்பதை ஹிட்லர், முசோலினி, ருவாண்டாவின் அகஸ்டின் பிசிமுங், ஆகியோர உதாரணமாக கொள்ள முடியும்.

உலகின் மிகப்பெரிய இனப்படுகொலைகளாக *1905 ல் நமீபியா, *1915 ல் ஆர்மேனியா, *1932 ல் உக்ரைன், *1975 ல் கௌத்தமாலா, *1994  ல் ருவாண்டா, *1995 ல் – போஸ்னியா, என இனப்படுகொலையின் தொடர் பட்டியலை வரலாறு அவமானத்துடன் பதிவு செய்துள்ளது. அந்தகறுப்பு பட்டியலில் உள்ள ருவாண்ட இனப் படுகொலை தொடர்பாக அந்நாட்டு முன்னாள் ராணுவத் தளபதிக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஐநாவின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதேபோன்ற கோரமான இனப்படுகொலை நடத்தப்பட்ட நாடாக, கடைசியாக இனப்படுகொலை பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது அல்லது சட்டபூர்வமாக சேர இருப்பது மகிந்த ராஜபக்க்ஷ முப்படைத்தளபதியாக இருந்து இனப்படுகொலை நடத்தப்பட்ட ஸ்ரீலங்கா நாடு.

2009 ல் ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற ஈழ இனப்படுகொலை 21ம் நூற்றாண்டின் பெருத்த அவலம் என உலகின் பல பாகங்களிலிருந்தும் தரவுகள், சாட்சிகள் ஐநாவை நோக்கி நீண்டுகொண்டிருக்கின்றன. ஐநாவுக்குள்ளே அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் பரிந்துரை அறிக்கையும் அதை உறுதிப்படுத்துகிறது. இனப்படுகொலை குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு பல சர்வதேச சட்ட formalities களை தாண்டவேண்டிய தேவையும் இருக்கிறது.

ஸ்ரீலங்காவின் [ராஜபக்க்ஷ] இனப்படுகொலையாளிகள் தண்டனைக்குரிய குற்றவாளிகளாக இருந்தாலும், சட்டப்படி "Genicode" [குற்றவாளி] என பகிரங்கப்படுத்தி உண்மையை வெளிக்கொண்டுவர பல தடைகள் குறுக்கே நிற்கின்றன. விசாரித்து தீர்ப்பு வழங்கவேண்டிய பொறுப்பும் ஐநாவில் அங்கம் வகிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கே உண்டு. அதற்கான முழு முயற்சிகளையும் உலகிலுள்ள நியாயவாத மனிதவள அமைப்புக்கள் இடைவிடாது செய்துவருகின்றன.

இந்தநிலையில் பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் அவர்கள் மூடிசூடி அறுபதாண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இலண்டன்  பக்கிங்ஹாம் அரண்மனையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விழாவுக்கு இலங்கையின் இனப்படுகொலை சூத்திரதாரி மகிந்த ராஜபக்சவுக்கும் அழைப்பு விடுத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.

ஐரோப்பியரின் வருகையின் தொடரில் கடசியாக இலங்கையை ஆண்டவர்கள் பிரித்தானியர்கள். இலங்கை சுதந்திரம் அடைந்தபோது  முடிக்குரிய இளவரசியாக இருந்து இலங்கை தமிழரான சுந்தரலிங்கம் அவர்களிடம் கணக்கு பாடம் கற்ற இரண்டாம் எலிசபெத் மகாராணியார். இலங்கை இன விவகாரங்களை அறியாதவரல்ல. பிரித்தானியாவின் ஆளுகையின் கீழ் உலகிலுள்ள ஐம்பத்து ஆறு தேசங்களை பிரித்தானியா தனது ஆளுகைக்குள் வைத்திருந்தது அதில் இலங்கையும் ஒன்று. அந்த பாரம்பரியத்தின் உறவு முறையின் அடிப்படையில்  பிரித்தானிய மகாராணி எலிசபெத் அவர்கள் முடிதரித்த அறுபதாம் ஆண்டு  ஞாபக கொண்டாட்ட விழாவுக்கு சம்பிரதாய முறைப்படி இலங்கைக்கும் அழைப்பு அனுப்பவேண்டிய சம்பிரதாய முறைமையினாலான தேவை பிரித்தானியாவுக்கு இருந்திருக்கலாம் பங்குபற்றுபவர் இனப்படுகொலையாளியாக இருந்தாலும் நமக்கென்ன விழாவே முக்கியம் என்ற நிலையில் ஐக்கிய ராய்ச்சியம் இருப்பதாக படுகிறது.

ஜனநாயகத்தையும் மனித உரிமையையும் மதிக்கும் நாடு என காட்டிக்கொள்ளும் பிரித்தானியா, மனித உரிமைகளை குழிதோண்டி புதைத்து படு மோசமான இன அழிப்பை செய்துவிட்டு விட்டேந்தித்தனமாக எவருக்கும் கட்டுப்பட மறுக்கும் ஒரு பாசிச சர்வாதிகாரிக்கு விழாவுக்கான அழைப்பு அனுப்பியிருப்பது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் இது மனுதர்மத்தை- ஜனநாயகத்தை மீறிய ஒரு அரசியலாகவே பார்க்கப்படுகிறது.

இனப்படுகொலை குற்றவாளியான முன்னாள் பொஸ்னிய-சர்பிய இராணுவ கமாண்டர் ரட்ச்கோ மிலாடிச், கைது செய்யப்படுவதற்கு முன்பு ஒருமுறை விமான பயணத்தின்போது லண்டன் விமான நிலையத்தில் தரையிறங்கினால் தான் கைது செய்யப்படலாம் என்பதை எப்படியோ அறிந்து லண்டனில் தரயிறங்காமல் தப்பித்ததாக செய்தி வந்தது. அப்படியான வரலாற்று பின்னணி கொண்ட பிரித்தானிய அரசு இரத்தக்கறை படிந்த ஒரு இனப்படுகொலையாளியை மடல் அனுப்பி வரவேற்க முயற்சிப்பது அதிர்ச்சியளிக்கிறது.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்க்ஷ உரையாற்றுவதற்காகச் சென்றிருந்தபோது, அவருக்கு எதிராக மக்கள் திரண்டு பல நாட்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தியிருந்தனர். அமெரிக்காவிலும் ராஜபக்க்ஷவுக்கு எதிராக அப்படியான போராட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன. புலம்பெயர் தமிழர்கள் அரசியல் ரீதியாகவும் இங்கிலாந்தில் ஜனநாயக ரீதியாக போராடும் தகமையை பெற்றிருக்கின்றனர். ஐநா அமைப்பின் நிபுணர்கள் பரிந்துரைத்த பரிந்துரையின்படி இலங்கையில் இனப்படுகொலை நடந்திருக்கிறது என்பதை இங்கிலாந்து அரசும் உணர்ந்தே இருக்கிறது அந்த பின்னணியில் ராஜபக்க்ஷ விசாரணைக்குரிய குற்றவாளி என்பது ஊர்ஜிதமாகிறது. இவை அனைத்தும் தெரிந்தும் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் அவர்களின் கௌரவ விழாவில் பங்குபற்ற குற்றவாளி ராஜபக்க்ஷவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருக்குமாயின் பிரித்தானியாவை ஜனநாயகத்தை மதிக்கும் நாடாக ஏற்றுக்கொள்ள முடியாது.

2010ல் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற வந்த ராஜபக்க்ஷ பட்ட சிரமங்களிலும் பார்க்க இம்முறை அவர் அதிக சிரமங்களை சந்திக்கவேண்டியிருக்கும். ஒரு இரத்தக்கறை படிந்த இனப்படுகொலை குற்றவாளிக்கு வரவேற்பளித்த பழிச்சொல்லும் பக்கிங்ஹாம் அரண்மனைக்கும் இங்கிலாந்து அரசுக்கும் சென்று சேரும் என்பதை இங்கிலாந்து நிச்சியம் உணர்ந்து கொள்ளும். 

சமீபத்தில் த ஹேக்கில் அமைக்கப்பட்டுள்ள 'முன்னாள் யூகோஸ்லாவியாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில்' வழக்கு விசாரணை ஆரம்பமானபோது, ஜெனரல் மிலாடிச் முன்பு தான் நாட்டை காக்க போராடியதாகவும் இப்போ தன்னை காக்க போராடவேண்டியுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். அதே கருத்துப்படவே ராஜபக்க்ஷவும் கருத்து கூறிவருவதை பல இடங்களில் காணமுடிகிறது.

1948 இல் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை இனப்படுகொலையை உலக அளவில் தடைசெய்யபட்ட, தண்டணைக்குரிய குற்றச் செயலாக சட்ட விதிகளை அமைத்து அறிவித்தது. இதன்கீழ் ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மேற்கூறிய காரணங்களால், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லைப்படுத்துவது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தை பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது, வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றச் செயல்களாக, குற்றங்களாக சர்வதேச தடைச்சட்டம் நிர்ணயித்துள்ளது.

இன்று இலங்கையில் போர் நிறுத்தப்பட்ட மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் மேலே கூறப்பட்ட அனைத்து அடக்குமுறைகளும்  ஈழத்தில் தொடர்ந்து நடந்துவருகின்றன. குற்றத்தின்மேல் குற்றமாக ராஜபக்க்ஷ அரசு செய்துவருகிறது.

போலந்து நாட்டின் யூதச் சட்ட வல்லுநர் ரபேல் லெம்கின் Raphael Lemkin என்பவர் இனப்படுகொலை என்னும் கருத்துருவுக்கு முதன் முதலில் சொல்வடிவம் கொடுத்தவராவார். தனது கருத்தாக்கத்துக்கு சட்ட வடிவத்தை அமுல்படுத்த பல வழிகளிலும் போராடிய, லெம்கினின் வெற்றிகரமான பிரச்சாரங்கள் 1948 ஆம் ஆண்டில் இனப்படுகொலை அனைத்துலகச் சட்டங்களின் கீழ் குற்றமாக்கப்படுவதற்கு வழிவகுத்தன. தொடர்சியாக இனப்படுகொலை உலக அளவில் மிகப்பெரிய குற்றமாகவும், அதில் ஈடுபவர்களை தண்டிக்க அனைத்துலக குற்றவியல் நீதிமன்றமும் அமைக்கப்பட்டது.

1948 ல் இருந்து அறுபது வருடங்கள் கடந்த நிலையிலும் சட்டங்கள் சட்டங்களாகவே இருக்கின்றனவே தவிர அவற்றை அணுகக்கூடிய வகையில் வழிவிட்டுத்தர வல்லரசு நாடுகளுக்கு உடன்பாடு இல்லை என்பதே நடைமுறை.

ஈழதேசம் இணையத்திற்காக
கனகதரன்.