Monday, March 24, 2014

இனப்படுகொலை, தடுப்புமுகாம், இராணுவ பயிற்சி சித்திரவதை வல்லுறவு, சிங்கள விஸ்தரிப்பு, படைமுகாம்கள் பரவலாக்கம், இவைகளை தடுக்க வழியில்லை 2014 புதிய ஜெனீவாவில் தீர்மானம்?‏


dcp5155832 
 
இம்முறையும், (2014, மார்ச்) ஜெனீவா அமர்வு தன்னிசைவுக்கு ஒத்தாற்போல் போர்க்குற்ற விசாரணையை திசைதிருப்பும் அனைத்து முயற்சியிலும் ஶ்ரீலங்கா அரசாங்கம் வெற்றி பெற்றுவிட்டதாகவே கிட்டத்தட்ட  நடந்து முடிந்த நிகழ்வுகள் கோடி காட்டியிருக்கின்றன. 

ஜெனீவா அமர்வின் மூலம் ஏற்படவிருக்கும் சர்வதேச விசாரணை என்ற அச்சுறுத்தலுக்கு ஶ்ரீலங்கா அரசாங்கம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்றும் ஜெனீவா அமர்விலிருந்து வெற்றியுடன் வெளிவருவோம் என்றும் அதற்கு தயாரான நிலையில் தாம் இருப்பதாக ஏற்கெனவே ஶ்ரீலங்கா ஜனாதிபதி ராஜபக்‌ஷ, மற்றும் ஜி எல் பீரிஸ் ஆகியோர் கூறியிருந்தனர்.

ராஜபக்‌ஷ கூறியதன் உள் அர்த்தம் என்ன என்பது அப்போது புரியாத புதிராக தென்பட்டாலும், தமிழர் தரப்பிலிருந்துதான் இனப்படுகொலையாளியை பிணையெடுப்பதற்கான காய் நகர்த்தல்கள் இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் கசிந்து அதிர்ச்சியூட்டக்கூடிய சில தகவல்கள் இப்போ வெளிவந்து கொண்டிருக்கிறன.

அனைத்து வாத பிரதிவாதங்களும் இறுதி செய்யப்பட்டு இன்னும் சில நாட்களில் ஜெனீவா விவாத அரங்கு வழமைபோல இறுதி வாக்கெடுப்பு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவடைய இருக்கிறது. ஆனால் எதிர்பார்த்ததுபோல போர்க்குற்றத்துக்கான சர்வதேச விசாரணை  என்ற பதம் தள்ளி வைக்கப்பட்டுவிட்டதாகவே கணிப்பீடுகள் வெளிவருகின்றன.
இதுவரை சம்பிரதாய பூர்வமாக அனைத்து தரப்பினதும் வாதப்பிரதிவாதங்கள் உள்வாங்கப்பட்டு பரிசீலனை முடிவெடுத்தல் என்ற கட்டத்தில் நிலுவையில் இருந்துகொண்டிருக்கிறது.

இதுரை நடந்து முடிந்த தமிழ் அரசியற் தலைமைலின் அரசியற் சதித்திட்டங்கள் அனைத்தும் பல ஆய்வுகளில் எழுதப்பட்டுவிட்டதால் அவைகள் இங்கு சுட்டிக்காட்டப்படவில்லை.

இங்கு முக்கியமாக கவனிக்கக்கூடியது  ஶ்ரீலங்கா அரச தரப்பின் நிலைப்பாடு, மற்றும் தமிழர்தரப்பு எடுத்துவைக்கும் வாத பிரதி வாதங்கள், அத்துடன் சர்வதேச மனித உரிமை ஆணயாளரின் பகுப்பாய்வு அறிக்கை மற்றும் மனித உரிமை மீறல், போர்க்குற்றத்துக்கான ஆதாரங்கள் ஆவணங்கள், அடுத்து சர்வதேச நாடுகளின் விவாத அழுத்தங்களும் சார்பு வாக்கெடுப்பு நிகழ்வும் இடம்பெறும்.

2012, ம் ஆண்டு ஜெனீவா அமர்வு தமிழர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை அப்போது தோற்றுவித்திருந்தது. இருந்தும் தமிழ் அரசியற் தலைவர்களின் கபடம் மற்றும் இந்தியாவின் சூழ்ச்சி ஆகியவை மேலோங்கி தீர்மானம் அடிபட்டு போயிருந்தது. தொடர்ச்சியாக வந்த 2013 தீர்மானமும் உள்ளுடன் அனைத்தும் வஞ்சகமாக உறிஞ்சப்பட்டு  வெற்றுக் கூடு ஒன்று மட்டும் உருப்படி என்ற கணக்கில் தீர்மானம் என்ற பெயரில் வெளியிடப்பட்டு காலம் கடத்தப்பட்டு ஏமாற்றப்பட்டு விட்டது.

நடப்பிலிருக்கும் ஜெனிவா அமர்வு இனப்படுகொலை குறித்து சர்வதேச தலையீட்டுடன் சர்வதேச தீர்ப்பாயத்தை நோக்கிய காத்திரமான ஒரு நிலைப்பாட்டை வெளிக்கொண்டுவரும் என்று முள்ளிவாய்க்கால் முற்றுகைக்குள் கொல்லப்பட்ட மற்றும் காணாமல்ப்போன குடும்ப உறுப்பினர்களும் அரசியல்வாதிகள் தவிர்ந்த மனிதாபிமானிகளும், எதிர்பார்த்து காத்திருந்தனர்,

தடுப்பு முகாம்களில் இருப்பவர்களும்,  இராணுவப்பயிற்சி என்றபெயரில் வலுக்கட்டாயமாக கொண்டுசெல்லப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு பாலியல் வன் கொடுமைகளை அனுபவித்துவரும் பெண் பிள்ளைகளின் பெற்றோரும் ஜெனீவா மன்றம் தீர்மானிக்க இருக்கும் முடிவையொத்து தங்களுக்கான நீதி கிடைக்குமென்று வானளாவ எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அவைதான் ஈழத் தமிழ் மக்களின் மனவோட்டம் என்பது திரும்பவும் இங்கு சொல்லித் தெரிய வேண்டிய விடயமல்ல.  ஜெர்மன் நாட்டின்  பிரேமன் நகரில் கூடிய மக்கள் தீர்ப்பாயமும் 2013 டிசம்பர் 10 ஆம் தேதி அன்று ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.   அரசியற் தீர்வு அதிகாரப் பகிர்வு என்பது ஒருபுறமிருக்க,  நடந்து முடிந்த மனித படுகொலைக்கான  சர்வதேச விசாரணை வேண்டும் என்பதே  மனித குலத்தில் மனிதாபிமானத்துடன் இருக்கும் அனைத்து தரப்பினரின் அறுதி விருப்பாக காணப்பட்டது.

ஆனால் தமிழர் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் திருவாளர் சம்பந்தன் சர்வதேச விசாரணை என்ற விடயத்தை புறந்தள்ளிவிட்டு இந்தியா ஶ்ரீலங்காவின் சப்பாணியாகி 13 வது திருத்த சட்டத்துக்குட்பட்ட தீர்வுத்திட்டத்தை முன்மொழிந்து ராஜபக்‌ஷ்வை காப்பாற்றுவதே குறியாகி அதையே ஜெனீவாவில் முன்னிலைப்படுத்துவதில் குறியாக நின்று தமிழர்களுக்கு துரோகமிழைத்து வருகிறார்.

வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு சிவாஜிலிங்கம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய தமிழ்ச் சமூகத்தின் சமூக அரசியற்போராளிகள் பல களங்களிலும் ஜெனீவாவின் விவாத அரங்கங்களிலும் பாதிப்புக்குள்ளான அனைத்து தமிழர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் விதமாக  போர்க்குற்ற விசாரணை முன்னிலைப்படுத்தி நகரவேண்டும் என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

இருந்தும் ஈழத் தமிழர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் போராளிகளாக தம்மை இனங்காட்டிக்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு  வீச்சு மிக்க அரசியற்போராளிகளான சிவாஜிலிங்கம், மற்றும் அனந்தி சசிதரன் அவர்களை மட்டந்தட்டும் விதமாக தேசியக் கூட்டமைப்பின் நியமன உறுப்பினர் சுமந்திரன் அவர்களை முதன்மைப்படுத்தி ஜெனீவாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்,

ஜெனீவாவின் பல்வேறு அமர்வுகளின்போது சக அரசியற் போராளியான அனந்தி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சுமந்திரன் இடையூறாக இருந்தார் என்று அனந்தி குற்றம் சாட்டியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த 17-03 2014 ஞாயறு அன்று தேசியக்கூட்டமைப்பின் நியமன எம்பி சுமந்திரன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பா உ ஶ்ரீதரனை அழைத்துக்கொண்டு ஜெனீவாவிலுள்ள ஶ்ரீலங்காவின் வதிவிடப்பிரதிநிதிகளின் அலுவலகத்துக்குச் சென்று அங்கு நடைபெற்ற விருந்து ஒன்றில் கலந்து பின் முக்கியமான கலந்துரையாடலில் பங்குபற்றி திரும்பியிருக்கிறார். 

அந்த கலந்துரையாடலின் போது ராஜபக்‌ஷ்வின் பிரதிநிதிகள் ஜனாதிபதி சார்பாக அரசியற் தீர்வுபற்றி  சுமந்திரனுடன் பேசியதாகவும் 13, வது திருத்த சட்டத்திற்கமைய அதிகாரங்களை வழங்குவதற்க்கு ஜனாதிபதி முன்வந்திருப்பதாகவும் இனப்படுகொலை பற்றிய சர்வதேச விசாரணையை விடுத்து உள்ளூர் விசாரணைக்கு சமரசப்பட்டுக்கொண்டதாகவும் உள்ளூர் விசாரணையை ஒரு கால் வரையறையை நியமித்து விசாரித்துக்கொள்ள உடன்பட்டுக்கொண்டதாகவும் தெரிகிறது.

அதன் பின்னணியில்
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள யோசனையில் இன்னும் ஒரு மாற்றம் செய்யப்படலாம் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனை கோடிட்டு ஆங்கில செய்தித்தாள் ஒன்று செய்தி ஒன்றை பிரசுரித்துள்ளது. 

இறுதிப்போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து நடத்தப்படும் விசாரணைகளுக்கு ஒரு காலவரையறை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே அந்த மாற்றமாக இருக்கும் என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாடுகளும், சர்வதேச தொண்டர் அமைப்புக்களும், சர்வதேச மனித உரிமை ஆணையமும் ராஜபக்‌ஷ்வுக்கு எதிராக மனித குலத்துக்கு எதிரான குற்றவாளியாக பிரகடனப்படுத்திய பின்னரும் காலம் தாண்டிய உள்ளூர் விசாரணைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு உடன்பட்டிருக்கிறது என்றால் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் மனித குலத்துக்கு எதிரான தீய சக்தியே.

உடனடியாக தமிழர்களுக்கான அரசியற் செயற்பாட்டில் நேரெதிரான மாற்றத்தை ஏற்படுத்தவேண்டிய பொறுப்பு தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மற்றய உறுப்பினர்கள் அனைவருக்கும் உண்டு.


ஈழதேசம் செய்திகளுக்காக   
கனகதரன்.

No comments: