உலகத்தில் இராணுவ சீரழிவால் சிதைக்கப்பட்டு அவலப்பட்ட மக்கள் வாழும் நாடுகளாக ருவாண்டா மற்றும் பலஸ்தீனம் போன்றவை சிலகாலங்களுக்கு முன் அறியப்பட்டிருந்தது.

இன்று அதேபோன்ற இராணுவப்படுகொலைகளும்  அராஜக இனவாதிகளின் அவஸ்த்தைக்குள்ளும் சிக்குண்டு மக்கள் சிதைந்து சீரழிந்துபோன நாடாக ஸ்ரீலங்கா இருந்து வருகிறது.

உலக மாற்றங்களும் வரலாற்று நிகழ்வுகளும் எத்தகைய அறிவுரையை இடித்துரைத்தாலும் செக்கு மாட்டின் சுழற்சியிலிருந்து ஸ்ரீலங்காவின் சிங்கள ஆதிக்கவாதிகள் மாறவுமில்லை, ஏதாவது மாற்றம் நிகழ்வதற்கு உவப்பாக அயல் நாடான மேய்ப்பன் இந்தியா விட்டுவிலகவுமில்லை.

மனித அழிவுகளுக்கிடையே தொடங்கப்பட்ட அதிகாரப்பகிர்வு என்ற பஞ்சாயத்து படலம் 30 ஆண்டுகளை தாண்டி வெற்றி நடை போட்டு முடிவுக்கு வராமல், மீண்டும் மீண்டும் தயாரிப்பு தரப்பாலும், பல நாடுகளின் இயக்குனர்கள் தரப்பாலும் காட்சி தணிக்கை மட்டும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இந்திய இயக்குனர் தரப்பான  கிருஷ்ணரின் வருகைக்குப்பின் தமிழர்களுக்கான தீர்வு பேச்சுவார்த்தை முன்னேற்றத்துடன் தொடரும் எனவும் 13வது திருத்தத்திற்கு மேலே சென்று தீர்வு காணப்படும் எனவும் பிரசங்கம் செய்யப்பட்டது. அது காலத்தை இழுத்தடிக்க போடும் திட்டமென பொதுவாக நம்பப்பட்டாலும், யுத்த குற்றத்தை ஞாபகப்படுத்தி மேற்குலகம் கொடுக்கும் அழுத்தம் காரணமாக சிங்கள அரசு ஏதாவது ஒரு முடிவுக்கு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் ஒரு சிலரிடம் இருந்தது.

இந்திய கிருஷ்ணரின் வருகையும், அடுத்து வந்துபோன அப்துல் கலாமின் மும்மொழி கனவுத்திட்டமும், இலங்கை அரசின் கடந்தகால செயற்பாடுகளை வஞ்சகமில்லாமல் அங்கீகரித்து வழிமொழிந்திருக்கிறது. இந்தியா தமிழர்களை ஏமாற்ற உதவிய உற்சாகத்தால் உலக அரசியல் மாற்றங்களை புறந்தள்ளி பழைய பாதையை செப்பனிட்டு ஸ்ரீலங்கா பயணிக்க இருப்பதாக தெரிகிறது.

நல்லிணக்கம் என்ற பெயரில் சிங்கள இனநலன் காக்கும் நல்லிணக்கமும், இனப்படுகொலையிலிருந்து ராஜபக்க்ஷவை பாதுகாக்க புதிய புதிய திட்டங்களும் இந்திய ஆலோசனையுடன் வகுக்கப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக அரசியல் ரீதியான தீர்வுத்திட்டம் எதுவுமே ஸ்ரீலங்காவில் சாத்தியமில்லை என்பதை மீண்டும் மஹிந்த ராஜபக்க்ஷ பகிரங்கமாக தெரியப்படுத்தியிருக்கிறார்.

அரசியல் தீர்வொன்றை வழங்குவதில் நாடாளுமன்றத்தின் சிங்கள பெரும்பான்மையின் விருப்பமே எனது விருப்பம். 13 பிளஸ் என்ற எனது நிலைப்பாடு புதிய தீர்மானமல்ல. இதனை நான் அன்றிலிருந்து கூறிவருகிறேன். தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பினருக்குத் தனிநாடு ஒன்றே தேவையாக இருக்கிறது. தனிநாடு ஒன்றுக்குரிய அதிகாரத்தை நாம் கொடுக்கவே மாட்டோம். அது தான் எமது நிலைப்பாடு. இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழுத்தமாக தெரிவித்திருக்கிறார்.

ஒரே மொழி ஒரே மத மக்கள் வாழும் உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள்கூட மாகாண, மானில, வாரியாக அதிகாரங்களை பிரித்து வழங்கியிருக்கின்றன. அந்த நடைமுறையே அந்த நாடுகளின் வளர்ச்சிக்கும் உதவியிருக்கின்றன. கடைக்கோடியில் இருக்கும் மக்களையும் மனிதர்களாக ஏற்றுக்கொண்டு மாகாண, மானில, ரீதியாக அதிகாரங்களை பகிர்ந்து அளித்துவிட்டாலே பிரச்சினையும் பிரிவினையும் இல்லாமல் போய்விடுவதற்கு நிறைய சந்தற்பங்கள் உண்டு.

ஆனால் சிங்கள அரசு அதிகார பகிர்வு என்ற பதத்தை தேவையற்று பூதாகரமாக்கி தனிநாடு என்று மிகைப்படுத்தி உலகுக்கு காட்டி ஏமாற்றுவதற்கே விழைகிறது.

நியாயமான அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான ஆணையை மக்கள் எனக்கு வழங்கியுள்ளனர் என்றும், மஹிந்த சிந்தனையின் 54ஆம் பிரிவில் நாம் இதனைத் தெளிவாகக் கூறியுள்ளோம் என்று ஒரு கருத்தையும், மறுபுறம், அரசாங்கம் ஒரு திட்டத்தை முடிவு செய்தால் மக்கள் எதிர்ப்பார்கள், என்று முரண்பட்ட விதமாக திசைதிருப்பும்  இன்னொரு கருத்தையும் ராஜபக்க்ஷ  கூறியிருக்கிறார்.

மஹிந்த சிந்தனையில் தெளிவாக வரையறுத்ததாக கூறும் ஜனாதிபதி, மஹிந்த சிந்தனை வரைவுக்கு முன் அனைத்து மக்கள் கருத்துக்களை இவர்கள் பெற்றபின்தான் மஹிந்த சிந்தனை வரையப்பட்டதா என்ற கேள்வி எழும்புகிறது.  நியாயமான அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான ஆணையை மக்கள் எனக்கு வழங்கியுள்ளனர் என்றும்,, ஜனாதிபதி கூறுகிறார். பிறகு மக்கள் எதிர்ப்பார்கள் என்ற பதம் எங்கிருந்து வந்தது.

ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரும் இதே கருத்தைத்தான் கொண்டிருந்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணர், அண்மையில் கொழும்பு வந்து திரும்பியதை அடுத்து, 13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதாக மகிந்த ராஜபக்ச தம்மிடம் வாக்குறுதி அளித்துள்ளதாக கிருஷ்ணர் தரப்பில் கூறப்பட்டிருந்தது. அடுத்து ஏவுகணை விஞ்ஞானி அப்துல், வந்து ராஜபக்க்ஷ, டக்கிளஸ் ஆகியோருக்கு கைலாகு கொடுத்து சிங்கள பரிவர்த்தனைக்கு ஒப்புக்கொடுத்து,  நட்பை பாராட்டி திரும்பியதும் 13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்போவதாக இந்தியாவுக்கு வாக்குறுதி எதையும் கொடுக்கவில்லை என்று ராஜபக்ச கூறியுள்ளார்.

கிருஷ்ணா அரசியல் நோக்கத்தோடு இலங்கை சென்றதாகவும், விஞ்ஞானி அப்துல் சிங்கள மொழி வளத்தை தமிழர்களுக்கு பரப்ப வந்துபோனதாகவும் கூறப்பட்டது. ஆனால் காங்கிரஸ் அரசு மிக நுணுக்கமாக ஒரு விடயத்தை இரண்டு முகங்கள் மூலம் கையாண்டு உலகத்தை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது.

சமாதான தூதுவனாக தான் இலங்கைக்கு சென்றதாகவும் இனியும் தான் அந்த முயற்சியுல் தொடர்ந்து ஈடுபடப்போவதாகவும் அப்துல் கூறியிருக்கிறார். விஞ்ஞானி அப்துல் அவர்கள் அடிப்படையில் ஒரு அணு ஆயுத வடிவமைப்பாளர். பேரழிவை உண்டுபண்ணக்கூடிய அணு, இராசாயின ஆயுதங்களை தயாரிப்பவர். அவரால் எப்படி அகிம்சையை கையாள முடியும். அல்லது அகிம்சை பற்றி எப்படி அவரால் பிரசங்கம் செய்ய முடியும்.

ஒரு அஹிம்ஸாவாதி  அணுவாயுத தயாரிப்பாளனாக எப்படி இருக்க முடியும்.?

இந்திய கொள்கைவகுப்பாளர்களை பொறுத்தவரையில் நாட்டின் மூல முன்னேற்ற கூறுகளான கல்வி, மனித மேம்பாடு,உற்பத்தி, திட்டமிடல், இயற்கை வளம் ஆகியவற்றில் எக்கவனமும் செலுத்தப்படுவதில்லை. முற்று முழுதாக ஏவுகணை தொழில் நுட்பத்தில் முன்னேறிவிட்டால் அதுதான் நாட்டின் வளர்ச்சியென்றும் வல்லரசுக்கான தகுதியென நம்பிக்கொண்டிருக்கும் ஒரு விசித்திரமான வர்க்கம்.

இதை நன்கு அறிந்த சோவியத் யூனியன் அமெரிக்காவை எதிர்ப்பதற்காக ஒரு காலத்தில் மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியாவை தனது அணியில் சேர்த்துக்கொண்டது. நாளடைவில் வாகனம், விமானம் ஆகியவற்றுடன் சேர்ந்து அணு ஆயுத அறிவை, தொழில் நுட்பத்தையும் இந்தியாவுக்கு கொடுத்திருந்தது.

நாளடைவில் ஐந்து வல்லரசு நாடுகள், மற்றும் ஜப்பான் தவிர்ந்து. வடகொரியா, பாகிஸ்தான், ஈரான் நாடுகள் போல இந்தியாவும் அணுவாயுதத்தை தயாரித்துவிட்டது. அதில் அப்துல் அவர்களின் பங்களிப்பும் இருப்பதாக நம்பப்படுகிறது. இதே அப்துல் கலாமின் அணு ஏவுகணை ஆராய்ச்சியின் பின்னர்தான் தென்கிழக்கு ஆசிய பிராந்தியம் அணு ஆயுத களமாக மாறி பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் சரி அரைவாசிக்கு மேற்பட்ட மக்கள் துண்டற படிப்பறிவில்லாத அடித்தட்டு ஆதிகால குடிமக்கள் போல உள்ளனர். நகரங்களிலும் காடு சூழ்ந்த மலைகளிலும் கவனிப்பாரற்று பரதேசிகளாக, இவர்கள் தன்னிச்சையாக வாழ்ந்து வருகின்றனர். கிடைக்கும் தெருவோர இடுக்குக்கள், நீர் வற்றிய பாலங்கள் போன்றவற்றை புகலிடமாக்கி துணி உடமைகளை வைத்துவிட்டு பகலில் பாம்பாட்டி, குரங்காட்டி, பாசிமணி விற்று, ஜோதிடம் பார்த்து, ஏதாவது வயிற்றுப்பாட்டுக்கு பிழைத்துவிட்டு இரவில் கொசு  தெருநாய்  மனித மிருகம்களுடன் போராடி உண்டு உறங்கி வாழும் அவலம் இந்திய முழுவதும் உண்டு.

இவர்களுக்கு எந்த காப்பீடும் இந்த மேதாவிகளால் செய்து கொடுக்க முடியவில்லை, இம்மக்களுக்கு  முகவரியும் கிடயாது. நல் உணவுமில்லை மருந்துமில்லை. அழுக்குதான் இவர்களது பாதுகாப்பு. இதில் குறவர் இனத்தை சேர்ந்த பெண்கள் பாலியல் தற்பாதுகாப்பிற்கு தம் மேனியில் அழுகிய மிருக கொழுப்பினை பூசி கொண்டு இரவில் காமுகர்களின் இருந்து தன்னை பாதுகாத்து கொள்கிறார்கள் . (இந்த தகவல்   பல புள்ளி விபரங்களின் ஆதாரத்தின்படியும் ஊர்ஜிதம் செய்யப்பட்டது.)

இந்தியாவின் அவலநிலை இப்படியிருக்கும்போது அழிவுக்கு வழிவகுக்கும் அணு விஞ்ஞானியான ஸ்ரீமான் அப்துல் அவர்கள் ஈழத்தமிழர்கள் மத்தியில் உயர உயர பறவுங்கள் என உபதேசித்து கவிதை பாடி மகிழ்ந்திருந்தார். அவர் குடியரசு தலைவராக இருந்தகாலத்தில் இந்தியாவின் மக்களின் அவலத்துக்கோ, இலங்கை பற்றிய சங்கடங்களுக்கோ எந்தச்சந்தற்பத்திலும் ஆட்சியாளர்களுக்கு எதிராக கருத்து உதிர்த்து தலை நிமிர்ந்து வாய் திறந்து பேசியதில்லை.

எதைக்கொண்டு ஈழ மக்கள் உயர பறப்பது என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை.

இராணுவ சகதிக்குள் சிக்கியிருக்கும் மக்களை அவர் வெளியில் கொண்டுவருவது பற்றி ஏதாவது பேசினாரா.விதவைகளாக்கப்பட்டு வயிற்றுப்பிழைப்புக்காக பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டிருக்கும் தாய்மாரைப்பற்றி பேசினாரா, மரங்களின் அடியில் பொலித்தீன் கூடாரங்களில் காலம் கடத்தும் ஊனமுற்றவர்கள் பற்றி ஏதாவது பேசினாரா. படுகொலை செய்யப்பட்ட மக்களின் சார்பாக ஒரு கவலையையாவது சிங்களத் தலைவருக்கு அவர் தெரிவித்தாரா.

மொழி மனங்களை, சமுதாயங்களை, மதங்களை, நாட்டை ஒற்றுமைப்படுத்துகிறது. மும்மொழி அனைவரையும் வேறுபாடில்லாமல் செய்யும். பல்வேறு இனம், மொழி, கலாசாரத்தை கொண்ட மக்களின் வாழ்க்கை முறையை "சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக்கொண்டு" வாழக்கூடிய ஜனநாயக நாடாக இலங்கை மாற்றப்பட வேண்டும் என்றும்       மும்மொழித் திட்டத்தின் மூலம் சிங்களத்தை முழுமையாக இலங்கையின் அனைத்து பகுதிகளுக்கும் விளைவிக்க  "இந்தியாவின் ஆதரவை தெரிவித்தேன்" என்று கூறியிருந்தார்.

இலங்கையில் நடந்து முடிந்த பல இலட்சம் படுகொலைகளின் முதல்ப்பொறியாக மொழியே இருந்தது என்ற வரலாற்று உண்மையை  அப்துல் அறிந்திருக்கவில்லை என்றே படுகிறது.

இந்தியாவின் ஆதரவை தெரிவித்தேன் என்பதன் மூலம் தான் ஒரு இந்திய அரசின் ஏஜண்ட் என்பதையும் அவர் மறுக்கவில்லை.

ராஜபக்க்ஷவின் கபட இன அழிப்புத் திட்டங்கள் அனைத்துக்கும் பெரும் பணச்செலவுடன் இந்திய அரசு ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கிறது. தமது நாட்டின் வரிப்பணம் ஈழத்தமிழரை அழிக்க பயன்படுவதை முதலில் இந்திய மக்கள் உணரவேண்டும். இந்தியத்தலையீடு இல்லாவிட்டால் உலகநாடுகள் வெகுவிரைவில் ஸ்ரீலங்காவை நல்வழிக்கு கொண்டுவந்து அம்மக்களுக்கான அரசியல்த்தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான சகல தரவுகளையும் கையில் வைத்திருக்கிறது.

ஆனால் கெடுவாய்ப்பாக இந்தியாவின் தலையீடு தேவையற்று தொடர்கிறது. இந்திய மத்திய அரசின் தேவையற்ற தலையீட்டுக்கு தமிழ்நாட்டில் பிறந்த  அப்துல் போன்ற தமிழ் பேசுபவர்களும் சோரம் போவது  ஈழத்தில் வாழும் மக்களுக்கான அரசியல் தீர்வு அடிபட்டுப்போவதற்கு வழிசெய்து, மீண்டும்  மக்களை வேறு திசை நோக்கி திருப்பும் அபாயம் இருக்கிறது.

ஈழதேசம் இணையத்திற்காக
கனகதரன்.