Thursday, July 22, 2010

ஈழமக்களுக்கான அடுத்த கொலைக்களம்-தயாரிப்போர்
த தே கூட்டமைப்பினர் ,கருணாநிதி,இந்தியா;-சமரன்

பல மாதங்களாக அவர்கள் சென்னையில் தங்கியிருந்தார்கள்.2006 செப்டம்பரில் ஈழத்தில் நிலமைகள் மோசமாகத் துவங்கிய போது சென்னையில் பல நாட்களாக கருணாநிதியைச் சந்தித்து ஈழ நிலமைகள் தொடர்பாகப் பேச முயர்சித்தனர். இந்த முயர்ச்சி 2006

ஜூலை முதல் வாரத்திலிருந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டது. கருணாநிதியை மட்டுமல்ல ஜெயலலிதாம் ராமதாஸ், விஜயகாந்த் என்று தமிழக கூத்தாடிகள் எல்லோரையுமே சந்திக்க நேரம் கேட்டு கடிதங்களைக் கொடுத்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் சந்திப்புகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் தமிழகத்தின் சகல கட்சிகளினதும் தலைவர்களுக்கு சென்னையில் நீண்டகாலமாகத் தங்கியிருக்கும் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தமிழரசுக் கட்சியின் கடிதத்தலைப்புகளில் தானே கையெழுத்திட்டு கடிதங்களை அனுப்பிவைத்திருந்தார். இப்படியான கடிதம் அனுப்பட்ட போதும் ஜெயலலிதா, சி.பி.எம், விஜயகாந்த் போன்றோர் எந்த ஒரு பதிலையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு வழங்கவில்லை. சம்பந்தன் சென்னை வந்துசேர்ந்த பின்னர் செப்டெம்பர் முதலாம் திகதி அவரும் மாவை சேனாதிராஜாவும் கூட்டாக கையெழுத்திட்ட கடிதத்தை சச்சிதானந்தன் மூலமாக முதலமைச்சர் கருணாநிதியின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் கையளித்திருந்தார். தங்களைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு சம்பந்தனும் மாவையும் அக் கடிதத்தின் மூலம் கலைஞரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். பின்னர் செப்டெம்பர் 4 ஆம் திகதியும் மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. மீண்டும் மீண்டும் கருணாநிதிக்கு நான்கு கடிதங்கள் எழுதப்பட்ட போதும் அவர் கண்டு கொள்ளவே இல்லை. இது போக சம்பந்தனும் மாவை சேனாதிராஜாவும் முதலமைச்சர் கருணாநிதியின் செயலாளர் சண்முகநாதனுடன் அடிக்கடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சந்திப்புக்கான நேரம் குறித்து வேண்டுகோள் விடுத்த வண்ணமிருந்தனர். 14 ஆம் திகதி நண்பகல் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியைச் சந்தித்து கலைஞருக்கான கடிதத்தின் பிரதியொன்றும் கையளிக்கப்பட்டது. தொலைபேசி மூலமான வேண்டுகோள்கள் சகலதுக்கும் முதலமைச்சரின் செயலாளரிடமிருந்து பல்வேறு சாக்குப் போக்குகள் கூறப்பட்டு காலம் இழுத்தடிக்கப்பட்டது. செப்டெம்பர் 19 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக் குழு புதுடில்லிக்கு புறப்பட்டுச் சென்று விட்டது. இக் குழுவினர் புது டில்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுச் செயலாளராகப் பதவியேற்கவிருக்கும் சிவ் சங்கர் மேனன், வெளியுறவு இணையமைச்சர் ஈ. அஹமட் ஆகியோர் உட்பட பல அதிகாரிகளை சந்தித்துப் பேசி நிலைவரங்களை விளக்கிக் கூறமுடிந்ததெனினும் பிரதமரரைச் மன்மோகன்சிங்கைச் சந்திப்பதற்கான வாய்ப்புக் கிட்டவில்லை.

தானும் சந்திக்க வில்லை பிரதமரையும் சந்திக்க விடவில்லை கருணாநிதி.

முதலில் டில்லியில் சந்திப்பு வேண்டி தொடர்பு கொண்ட போது நீங்கள் முதலில் மாநில முதல்வர் கருணாநிதியை சந்தியுங்கள் பின்னர் டில்லிக்கு வாருங்கள் என்று பிரதமர் அலுவலகம் கூட்டமைப்பிற்கு உத்தரவு போட்டது. ஆனால் கருணாநிதியோ கடைசி வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திக்கவே இல்லை. கருணாநிதியை சந்திக்க முடியாமல் அவமானப்பட்டு தோல்வியடைந்த கூட்டமைப்பினர் டில்லி போன போது அதிக பட்சம் அவர்கள் பார்க்க முடிந்தது. எம்.கே. நாராயணனையும், சிவசங்கரமேனனையும் மட்டுமே கடைசி வரை அவர்களை மன்மோகன் சந்திக்கவே இல்லை. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கருணாநிதியே சந்திக்கவில்லை மாநில முதல்வரே சந்திக்காதவர்களை பிரதமரும் சந்திக்கத் தேவையில்லை என்று அறிக்கை அனுப்ப பிரதமரும் சந்திக்கவில்லை. ஆனால் சந்திப்பதற்கு முன்னரே மிகக் கீழ்த்தரமாக இறங்கி இந்த அறிக்கையை டில்லியில் வைத்து வெளியிட்டனர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் “இலங்கை

விவகாரத்தில் இந்தியாவுக்கு முக்கியப் பங்கு உள்ளதாக நாங்கள் நம்புகிறோம். தமிழர்கள் நலனைக் கருதி இலங்கை பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும்.ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம் ஒரு துயரமான சம்பவம். அதை மன்னிக்க முடியாது. அந்த சம்பவத்திற்காக இலங்கை தமிழ் மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.இருப்பினும் இந்தியா இந்த துயரத்தை மறந்து விட்டு, மன்னித்து விட்டு தமிழர்கள் நலன் கருதி இலங்கை விவகாரத்தில தலையிட வேண்டும் என்றனர்“ இவ்வளவு கெஞ்சியும் எதிர்பார்த்த அளவுக்கு எந்த சந்திப்புகளும் நடைபெறாத நிலையில் சலித்துப் போன கூட்டமைப்பினர் இலங்கைக்குத் திரும்பினர்.இருக்கும் போது உதவாமல் அவர்கள் இலங்கைக்குச் சென்ற பிறகு கருணாநிதி ஆதரவாளரான சு,ப.வீரபாண்டியன் என்ன சொன்னார் தெரியுமா? “நானும் ராமதாசும் கலைஞரைச் சந்திக்க ஆவனச் செய்யும் முயர்ச்சிகளை மேற்கொண்டோம். ஆனால் அவர்கள் இலங்கை சென்று விட்டார்கள்” என்றார். எப்படி இருக்கிறது பாருங்கள் இந்தத் தந்திரம். பின்னர் மீண்டும் போர் மூண்ட போது தமிழக மக்கள் போர் நிறுத்தம் கேட்டுப் போராடிய போது கூட இதே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கருணாவைச் சந்தித்து போர் நிறுத்தம் கேட்க முயன்றனர். ஆனால் கடைசி வரை சந்திக்க முடியவில்லை. மிக மோசமான வரலாற்றில் கண்ணீரும் துயரமுமான அந்த 2009 ஆண்டு ஒரு வழியாக ஒரு இலட்சம் மக்கள் படுகொலையில் முடிந்து போனது. ” ராஜீவ் கொலை மன்னிக்க முடியாத குற்றம் அதை மன்னித்து மறந்து விட்டு இந்தியா உதவ வேண்டும்” என்று யாரிடம் சம்பந்தன் கெஞ்சினாரோ அவர்களே இக்கொலைகளின் நாயகர்கள். அன்றைக்கு சென்னையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை எந்த கருணாநிதி சந்திக்க மறுத்தாரோ அவரே இந்தியாவின் கொலைகளுக்கு துணை போன சூத்திரதாரி. யார் யார் எல்லாம் உங்களை கடைசி நேரத்தில் கழுத்தறுத்து கை கழுவினார்களோ அவர்களை இன்று மீண்டும் சந்திக்கிறீர்கள்.

இந்தியாவும் கருணாவும் சேர்ந்து தயாரிக்கும் சுருக்குக் கயிறு

அன்றைக்கு ஈழ மக்களுக்கும் இலங்கை தமிழ் எம்பிக்களுக்கும் உதவி வேண்டி கருணாநிதியைச் சந்திக்க வேண்டிய தேவை இருந்தது அப்போது சந்திக்க மறுத்தவர் கருணாநிதி. இப்போதோ ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலையில் தான் செய்த துரோகங்களை மறைக்கவும் தன்னை தமிழர்களின் தலைவன் என்று காட்டிக் கொள்ளவும் இலங்கை எம்பிக்களின் சந்திப்பு கருணாநிதிக்குத் தேவைப்படுகிறது. ஒரு துரோகியின் முகத்தை சாத்வீகமாகக் காட்ட உங்களின் கைகள் இன்று கருணாநிதிக்குத் தேவைப்படுகிறது. நீங்கள் கொடுக்கிறீர்கள். ஆனால் ஏற்கனவே நடந்து முடிந்து விட்ட அழ்விலிருந்து மக்கள் மீளாத போது இன்னொரு அழிவுக்கான அறிகுரியாக இதை நாம் காண வேண்டும். போரை நிறுத்த மாட்டோம், மக்களை அழிவைத் தடுக்க மாட்டோம். எல்லாம் செய்து முடித்து விட்டு நாங்கள் இடித்ததைக் மீண்டும் கட்டிக் கொடுப்போம். அதுதான் ஈழ மக்களுக்கு இந்தியா செய்யும் உதவி என்றால் இதைச் செய்ய இந்தியா எதற்கு தன்னார்வக்குழுக்களே போதுமே! மாறாக அரசியல் தீர்வுக்காக இந்தியா முயர்ச்சிக்கும் என்பதெல்லாம் இன்னொரு முறை ஈழ மக்களையும் புலத்து மக்களையும் முட்டாளாக்கும் முயர்ச்சிதான். அய்யா தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே அஞ்சிக் கெஞ்சி அண்டி கால்களை நக்கிப் பெற வேண்டியதல்ல ஈழ மக்களுக்கான அரசியல் தீர்வு. கால்களை நக்குவதும் கெஞ்சுவதும் இன்னமும் எம் மக்களை அழிவுக்கே இட்டுச் செல்லும். மக்களிடமிருந்து பிடுங்கப்பட்ட நிலங்களை அவர்களிடம் ஒப்படைத்து அவர்களை விவசாயம் செய்ய விட்டாலே போதும் சில ஆண்டுகளில் அவர்கள் தங்களை மீளமைத்துக் கொள்வார்கள். இனியும் இந்தியாவை நம்பி நீங்கள் இருந்தால் நீங்கள் சென்னையிலேயே உங்கள் அலுவலகத்தைத் திறந்து அங்கேயே இருங்கள். ஈழ மக்களை இனியும் உங்களுக்காக அரசியல் செய்கிறோம் என்று ஏமாற்ற வேண்டாம். ஏனென்றால் இனி கருணாநிதியின் ஈழ ஆர்வம் என்பது அவரது குடும்ப முதலாளிகள் சந்தை வாய்ப்புகளுக்காகவே அன்றி ஒரு போதும் ஈழத் தமிழர்களுக்கானதாக அது இருக்காது.

நன்றி இனியொரு,

No comments: