Sunday, July 18, 2010

கட்டுரை

எங்கள் அன்புக்கும் அபிமானத்துக்குமுரிய நடிகர் சங்கத்தலைவர் ஐயா சரத்குமார் அவர்களின் பார்வைக்காக…..

நாங்கள் ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் இருந்துகொண்டிருக்கும் மிகமோசமாக பாதிக்கப்பட்ட ஈழத்தமிழினம், என்றவகையில் எமது மக்கள்பற்றிய சிறு பார்வை உங்களைப்போன்றவர்களுக்காக,

எங்கள் நீண்டநெடிய நெருக்கடிகள் உலகம் அறிந்தவை, நீங்களும் அறிந்திருப்பீர்களென நம்பியிருந்தோம், ஆனால் நீங்கள் எமதுநிலையை சரியாகப்புரிந்து கொள்ளவில்லை. அல்லது உங்கள் வேலைகாரணமாக மறந்தோ அறியாமலோ விட்டுவிட்டீர்களென நினைக்கிறேன்,

நாங்களும்தமிழர்கள், பேசுவது தமிழ்தான், கலாச்சாரத்தால், உறவால், சடங்கு சம்பிரதாயங்களால், தமிழ்நாட்டுத்தமிழரிலிருந்து பிரிக்க முடியாதவர்கள். ஆனால் அரசியலில் நங்கள் தமிழ்நாட்டிலிருந்து சற்று வேறுபட்டவர்களாக இருக்கிறோம்.

எங்கள் அரசியல்ச்சூழலும் அப்படித்தான் அமைந்துதிருந்ததுண்டு, அதனால்த்தான் தமிழன் என்றொரு இனம் பூமியில் இருப்பதையும் உலகம் அறிந்துகொண்டது என நினைக்கத்தோன்றுகிறது,

இன்று ஒரு நெருக்கடியான காலத்தில் உறவுகளை கண்முன்னே இழந்த எமது இனம். நிர்க்கதியாக நீதிக்காக நின்று போராடிக்கொண்டிருக்கிறது, எல்லோரும் கைவிட்டுவிட்ட நேரத்திலும். எங்கள் இனமல்லாத வேற்று இன வெள்ளையினத்தவர்கள், கரிசினையுடன் எடுக்கும்சில ஆக்கபூர்வமான முயற்சிகள். இழந்த உறவுகளை உடமைகளைத்திருப்பித்தராவிட்டாலும். மிச்சமாகவிருக்கும் எமதினம் நிமிர்ந்துநிற்பதற்கு பேருதவியாக அமையும் எனநம்புகிறோம், அதை சிலசக்திகள் சுய லாபத்திற்காக குளப்பிவிட எத்தனிக்கின்றன, சிங்கள் அரசின் திட்டமிட்டசதிக்குள் சிலர் வீழ்ந்து சொற்ப இலாபம் அடைவதால் பாதிக்கப்படுவது நொந்துபோன எங்களினமாக இருக்கிறது,

இலங்கையில் 60 ஆண்டு காலமாக அடக்குமுறைக்கு ஆளாகியிருக்கும் ஈழத்தமிழினம். எவ்வளவு நெருக்கடிகள் வந்தபோதும் உணவுக்கு உடைக்கு எவரிடமும் மண்டியிட்டு கையேந்தி நிற்கவில்லை. தமது கையைநம்பி உறுதியுடன் வாழ்ந்துவந்திருக்கின்றனர், அதற்கேற்ப சூழலையும் உருவாக்கிவந்திருக்கின்றனர்.

சுனாமியின் இயற்கை அழிவு, ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட பலவருடத்து படுமோசமான பொருளாதாரத்தடையையும். சந்தித்து வென்று உறுதியுடன் வாழ்ந்ததுதான் ஈழத்தமிழனின் வரலாறு.

சுனாமி அனர்த்தத்தின்போது உடனடிநிவாரணங்களாகவும். கட்டுமானப்பணிக்காகவும் பலமேற்கத்திய வளர்ந்தநாடுகள் கொடுத்த பல ஆயிரம் கோடி நிதியுதவியைகூட. இன்றுவரை தமிழனிடம் சென்றடையாமல் சிங்கள அரசாங்கம் செய்த சதிகளை உலகமறியும், அவற்றையும் மீறி எங்களுடன் எந்தத்தொடர்புமில்லாத வெள்ளைக்காரனின் தொண்டு நிறுவனங்கள். தமிழரின் பிரதேசங்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்களை லொறிகள் மூலம் கொண்டுசென்றபோது. ஸ்ரீலங்காஇராணுவம் இராணுவக்கடவைகளில் தடுத்துநிறுத்தி. பலநாட்கள் தாமதப்படுத்தி வெள்ளையரின் பெருத்த பிரயத்தனத்தின் பின். ஒன்றுஇரண்டு லொறிகளைமட்டும் அனுமதித்து மீதியை திருப்பியனுப்பிய அனாகரீகமும் உலகம் அறிந்தவிடையம்.

2009ம் ஆண்டின் பின்னுள்ள குறுகிய ஒருவருட இடைவெளியில். சில ஆண்டிப்பண்டாரங்கள் கட்டமுயலும் மடத்தின் அத்திவாரத்தின் கதைபோலல்ல எங்கள் வரலாறு.

ஈழத்தமிழனின் கதை இன்னும் முழுதாக முடிந்துபோகவில்லை, இருந்துகொண்டுதானிருக்கிறது. கடைசிவரையும் அவனே முகங்கொடுத்து அவனே முடிக்கவேண்டியதாகவே சூழ்நிலை காணப்படுகிறது, நடந்துமுடிந்த படிப்பினைகளும் அப்படித்தான் பதிவாகியிருக்கிறது,

2009 ம் ஆண்டு மே மாதம்வரை. தமிழர்களை பலவழிகளிலும் அழித்த சிங்கள அரசு, இறுதியில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் சிறுபகுதிக்குள் சுற்றிவளைத்து இராணுவம் கொன்றுகுவித்தபோது . சிங்கள இராணுவத்திற்கு முழு ஒத்தாசைபுரிந்து, ரேடர்களும், ஆயுதங்களும், கப்பல்களும், ஆளணிகளும், கொடுத்து, இன்று நடிகை அசினின் ஐம்பதுரூபா கண்சிகிச்சைமுகாமுக்கு தாலியறுந்த பெண்களை தள்ளக்காரணமகியிருந்தது, தமிழ்நாடு அரசும், மத்தியஇந்திய அரசும், என்பதுஎல்லோரும் அறிந்தவிடயம் நீங்களும் அறிந்திருப்பீர்களென நினைக்கிறோம்.,

தமிழ்நாட்டிலிருந்து ஒருபிடி அரிசி ஈழத்தமிழனுக்கு போய்விடக்கூடதென்பதில், உங்கள் தந்தை கருணாநிதியிலிருந்து சோனியா மன்மோஹன் சிதம்பரம் ஆகியோர் திடமாகவிருந்து, ஐயா நெடுமாறன் அவர்கள் தலைமையில் சேர்த்த பொருட்கள் பழங்கதையாகிப்போன கதை நீங்கள் மறந்திருக்கமாடீர்களென நம்புகிறோம்,

ஏனெனில் அந்தநேரத்திலும் எங்களுக்காக குரல்கொடுத்த திரையுலகத்தவர்களை ஒருங்கிணைத்து செயற்பட்டவர் நீங்கள், அந்த நன்றி பசுமையாக ஈரமாக என்றென்றும் ஈழத்தவர் மனங்களில் ஆணியடித்தாற்போலிருக்கிறது,

யுத்த இறுதிக்கட்டத்தில் ஒருவேளை கஞ்சிக்குவழியில்லாமல் கடற்கரையிலிருந்த அடம்பைக்கொடியின் இலைகளை உணவாக உண்டு பலபேர் இறந்தும். பலபேர் வாந்திபேதிக்குள்ளாகி மருத்துவவசதியில்லாமை மடிந்த சிறுமையும் எங்களுக்குண்டு.

தமிழினம் செத்துக்கொண்டிருந்தாலும் தப்பியிருந்த குழந்தைகளுக்கு ஒருவேளை கஞ்சியைக்கொடுக்க வழிதேடி வானத்தைப்பார்த்த தாய்மாரின் பரிதவிப்பும் எங்கள் பதிவிலிருக்கிறது, அந்தப்பரிதவிப்பின் தாக்கம் தமிழ்நாட்டின் உணர்வாளர்களை தட்டியெழுப்பி பாதித்த கொதிப்பும் கொந்தளிப்பும் எழுச்சியும் தமிழ்நாட்டில் அடக்கப்பட்டவிதமும் நாங்கள் அறியாததல்ல.

ஈகைச்சோதி முத்துக்குமார் தொடங்கி பதினெட்டுப்பேர் தீயில் கருகியசோகம். ஈழத்தமிழனுடன் மேற்கத்திய வெள்ளையரை பாதித்தளவு தமிழ்நாட்டு அரசை அசைக்கவில்லை, மேற்குநாடுகளில் புலம்பெயர் தமிழினம் வீதியிலிறங்கி போராடியபோது. ஈழத்தில் செத்துமடிபவர்களுக்காக இந்தியாவில் மக்கள் தீயில் எரிந்து சாம்பலாவதை, ஈழத்தமிழனுடன் சேர்ந்துபோராடிய வெள்ளையர் வியந்து இப்படிக்கேட்டிருந்தனர், ஸ்ரீலங்காவில் மக்கள் கொல்லப்படுவதற்கு ஏன் இந்தியாவில் மக்கள் தீக்குளித்துச்சாகின்றனர், இதற்கு என்னபதிலை சொல்லமுடியும்?. கருணாநிதியின் நிலைப்பாட்டை விளக்கி எங்கள் நாற்றத்தை வெள்ளையரிடத்தில் வெளிப்படுத்தாத நாகரீகமும் வெட்கக்கேடாக எங்களிடமுண்டு,

ஈழத்தின் இன்னலைத்தாங்கமுடியாத புலம்பெயர் சொந்தங்கள் புலம்பெயர் தேசங்களிலிருந்து வணங்காமண் கப்பலில் அனுப்பிவைத்திருந்த உணவுப்பொருட்கள் வந்தடையமுன் முள்ளிவாய்க்கால் சுடுகாடாகிவிட்டது , கப்பலில் வந்தஉணவுப்பொருட்கள் தப்பிவந்து முகாம்களில் இருந்தவர்களுக்காவது சேரச்செய்யுமாறு கோரிக்கைவைத்தபோதும் கப்பல் தமிழ்நாட்டின் கடற்கரையில் நம்பிக்கையுடன் நங்கூரமிட்டு பலமாதமாகியும் தமிழர்களின் மகாதலைவர் தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்தும், கப்பலிலிருந்த பொருட்களை பாவப்பட்ட மக்களிடம் கொண்டுசேர்க்க முயர்ச்சிக்கவில்லை, பலமாதங்களாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் போராடி உணவுப்பொருட்கள் பாவனைக்குதவாத அளவு காலாவதியானபின் கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டும் இன்னும்மக்களிடம் பொருட்கள் சென்றுசேரவில்லையென்பது தமிழினத்தின் இயலாமையின் வெளிப்பாடு.

சென்றவாரம் இந்திய சினிமாநடிகை அசின் தமிழுணர்வாளர்களின் உணர்வைமதிக்காமல் ஸ்ரீலங்காசென்று படுகொலைக்குற்றவாளியென்று ஐநா மற்றும் உலகநாடுகளால் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணைக்குட்படுத்த தயார்நிலையிலிருக்கும் இலங்கை அதிபரின் மனைவியுடன் இராணுவ விமானத்தில் யாழ்ப்பாணம் வவுனியா ஆகிய தமிழ்ப்பிரதேசங்களுக்கு சென்றுதிரும்பியிருக்கிறார், அசின் இலங்கைக்கு போய்வந்தது எவருடன் சேர்ந்து சுற்றினார் என்பது எமக்கு தேவையில்லாத அவரது தனிப்பட்ட பிரச்சினை, அதில் எவரும் தலையிடமுடியாது. ஆனால் அசின் தனது சொந்த தொழில்விடயத்தை பார்த்துத்திரும்பாமல், தான் தப்புவதற்காக தமிழ்த்திருநாட்டின் அரசியல்த்தலைவர்கள் நடத்தும் அதே இரட்டைவேட நாடகத்தை ஏதுமறியாத எங்கள் ஈழ மக்கள்முன் நடத்திவிட்டுவந்து கதைவிட்டுக்கொண்டிருக்கிறார்,

உலக நாடுகளின் தண்டனையிலிருந்து தப்புவதற்கு எதைக்குடித்தால் நிவாரணமாகுமென துடிக்கும் ராஜபக்க்ஷ, அசின் போன்றவர்களை பயன்படுத்துவதை வரவேற்கிறீர்களா, அவற்றை நியாயப்படுத்துவதுபோல நிறைந்த அனுபவமுள்ள சரத்குமார் அவர்கள் பேசுவது மக்களைக்குளப்பத்தில் தள்ளிவிடும் ஒன்றாக பாற்கப்படுகிறது,

இன்றயதிகதியில் வடபுலத்தில் ஆண்கள் அழிக்கப்பட்டு, மீதியுள்ள ஆண்கள் சிறையில்த்தள்ளப்பட்டு, நாதியிழந்தபெண்கள்தான் கிளிநொச்சி மாவட்டத்தின் மக்கள்தொகை , கிளிநொச்சியில் சரியான மருத்துவவசதியில்லாத காரணத்தால், மேலதிகசிகிச்சை தேவைப்படுபவர்கள் சென்றுசேர்வது யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலை, அல்லது வவுனியா மருத்துவமனை. அந்தமருத்துவமனைகளில் இருந்த சிலருக்கு இராணுவ காவலுடன் சென்று ஐந்துபேருக்கு கண்சொட்டுமருந்து கொடுத்துவிட்டு, படம்பிடித்து 150,பேரை தத்தெடுத்திருக்கிறேன் கண்சிகிச்சை முகாம் நடத்தினேன் என்றால் சரியா, ஒருகதைக்கு கேட்கிறேன் தத்தெடுத்த 150 எதிலிகளையும் அசின், கையோடு கேரளாவுக்கு அழைத்துச்சென்றுவிட்டாவா, ஈழத்தமிழினத்தின் அவலம் ஒருநாளையில் அசினால் தீர்க்கக்கூடிய விளையாட்டு பொருளா?

அசினைத்தொடர்ந்து சினிமாநடிகர் நடிகைகள் இலங்கைக்கு போகப்போவதாக அறியப்படுகிறது, சினிமாஉலகம் விடுமுறை கழிக்க இலங்கைக்கு செல்லுகிறார்களா, அல்லது அங்கேயேதங்கியிருந்து ஈழமக்களை வாழவைக்கப்போகிறார்களா. என்பதை நடிகர் சங்கத்தலைவர் என்றமுறையில் தயவுசெய்து சரத்குமார் அவர்கள் தெளிவுப்படுத்தவேண்டிய கட்டாயமுண்டு,

சிலமாதங்களுக்குமுன் சரத்குமார் அவர்களின் சக்குபாய் என்ற படத்தின் VCD திருட்டுத்தனமாக வெளியாகிவிட்டதென்று. கதறி கண்ணீர்விட்டு தற்கொலை செய்ய முயற்சிசெய்தார் என செய்திகள் வந்திருந்தன. நான்கு CD வெளியாகிவிட்டதை இட்டுக்கட்டி சமாளிக்க முடியாத சரத்குமார் அவர்கள். ஈழமக்களின் அரை நூற்றாண்டு இழப்பை எப்படி ஈடுகட்டும் திட்டம் வைத்திருக்கிறார். என்பதையும் அறிய ஈழத்தமிழினம் விரும்பும் என்பதை உணரக்கூடியவராக இருப்பார் என நம்புகிறோம்,

அத்துடன் சினிமா உலகம் ஈழத்துக்கு செல்வதால் ஏற்படப்போகும் நன்மை எப்படிப்பட்டது என்பதையும் தயவுசெய்து வெளிவிடவேண்டும்,

எத்தனைபேரை தத்தெடுத்து கூட்டிவரப்பொகிறார்கள் அதற்கு ஈழமக்கள் உடன்படுவார்களா, அல்லது எத்தனை ஆயிரம் வீடு கட்டிக்கொடுக்கப்போகிறார்கள், எத்தனை பள்ளிக்கூடங்களை கோவில்களை புதிதாக நிர்மாணித்துமுடித்து தொடக்கி வைத்து விட்டுத்திரும்பப்போகின்றனர், என்பதையும் தெரியப்படுத்தினால் நல்லது,

அசினை தமிழ்நாட்டில் படங்களில் நடிப்பதற்கு அனுமதி கொடுக்கவேண்டும் என்பதற்காக, அசினின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவது போல சரத்குமார் அவர்கள்பேசவேண்டியதில்லை, அதுகூட அவர்கள் தொழில்சார்ந்தவிடயம், ,

அக்கா சூர்யாவும் விஜயும் எப்போ வருவார்களென ஈழத்தில் வினவியதாக அசின் கூறியதாக சொல்லப்பட்டது ,விஜயும் சூர்யாவும் ஈழத்துக்குப்போவதால், நோர்வேயின் எரிக் சோல்ஹைம், ஹான்சன் பவர், ஜப்பனின் யசூசி அகாசி, அமெரிக்காவின் றொபேட் வூட், ரிச்சட் பெளச்சர், ஐரோப்பிய டொமினிக் ஷில்கோட், யூஜின வீத் இ, இவர்களால் முடியாத ராஜதந்திரம் முடித்துவைக்கப்படுமா,

சரத்குமார் பலகட்சிகளைச்சர்ந்து அரசியல் செய்த அனுபவமுள்ளவர், அவசரப்படாமல் உணர்ச்சிவசப்படாமல் மேடையில் பேசக்கூடிய ஆற்றலுடையவர், எனவே சரத்குமார் அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு உதவவேண்டுமென மனதார விரும்புகிறாராக இருந்தால், நடிகை அசினின் நடவடிக்கையை வழிமொழிந்து பிந்தொடர்வதை நிச்சியம் மறுபரிசீலனைக்குட்படுத்தப்படவேண்டும்.

அசினுக்கு முன் தமிழ்நாட்டின் இந்தியாவின் உணர்வுகளை எட்டியுதைத்துவிட்டு IFFA கலை நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய சல்மான்கான், விவேக் ஒபரோய் அவர்களின் தந்திர நழுவல் கொள்கையை அசினும் பின்பற்றியிருக்கிறார் அவ்வளவுதான், IFFAவிழாவுக்கு போகவேண்டாமெனத்தடுக்கப்பட்டு ஒப்புக்கொண்ட ஹிந்தி சுப்பஸ்ரார் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா, ஆகியோரை அவமதிப்பது போலாகும், அதுகூட எங்களுக்கப்பாற்பட்ட விடயம்,

ஒருதிட்டத்தை போடுமுன் அதன் தாக்கம் உணரப்படவேண்டும், இலங்கை அரசை வழிப்படுத்த ஐரோப்பிய யூனியன் GSP + வரிச்சலுகையை அகற்றுவதற்குமுன் எவ்வளவோ ஸ்ரெப் எடுத்து திடமாக அறிவித்தனர், அதேபோல கோரிக்கை நிறைவெறும் என்ற நம்பிக்கை எதிர்பார்ப்புடன் திடத்துடன் உண்ணாநோன்பிருந்த தியாகி திலீபன், அன்னை பூபதி, ஆகியோரின் திடம், ஈழத்தினுறுதியை உலகிற்கு பாடமாக்கி, மகாத்மா எனக்கூறப்படும், மோஹன்லால் கரம்சந்த் காந்தியையே வெற்றி கொண்டிருந்த வரலாறு ஈழத்திற்குண்டு,

கருணாநிதி ஈழத்தில் யுத்தம் நிறுத்தப்படும்வரை சாகும்வரை உண்ணாவிரதமென அறிவித்து 1/2 நாள் உண்ணாநோன்பிருந்தி உண்ணாவிரதத்தின் கெளரவத்தையே உலகப்பிரசித்திபெற்ற கேலிக்குள்ளாக்கினார், அதேபோல அண்மையில் கொழும்பு நகரத்தில் அரசாங்க அமைச்சர் விமல் வீரவன்ஷ அவர்களும் கருணானிதியின் அதே லிஸ்ரில் 2மிடத்தில் பதியப்பட்டிருக்கிறார்,

சரத்குமார் அவர்களே எங்கள் பிணக்குகளை பயன்படுத்தி உங்கள் வருவாய்க்காகவும் நலனுக்காகவும் தயவுசெய்து துர்ப்பிரயோகம் செய்யாதீர்கள் நீங்கள் ஏற்கெனவே பழக்கப்பட்ட கருணாநிதியின், அல்லது ஜெயலலிதாவின் சுயநலத்துக்கு துணைநின்று தாராளமாக அரசியல் செய்யுங்கள், உங்கள் அநாகரீகமான அரசியலை எங்கள் ஈழமக்கள்முன் தயவுசெய்து அறிமுகப்படுத்த விளையாதீர்கள், நீங்கள் நல்ல நடிகர் அது வேறுவிடையம்,

- நெருடலுக்காக கனகதரன்

No comments: